என் மலர்
பொது மருத்துவம்
- அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.
- பெருங்குடல், சிறுகுடல் என ஒட்டுமொத்த வயிறும் சுத்தமாகும்.
உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கவழக்கங்கள் நவீனமாகி வரும் நிலையில், 'டயட்' முறைகளும் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உணவுப் பழக்கத்துடன், பருகும் தண்ணீர் வகைகளிலும் பலவிதமான டயட் முறைகள் வந்துள்ளன. குறிப்பாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டீடாக்ஸ் தண்ணீர் பழக்கம் அதிகரித்திருக்கிறது.

'டீடாக்ஸ் டயட்' என்றால் என்ன?
டீடாக்ஸ் என்பது, தண்ணீர் மூலம் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை, கொழுப்புகளை வியர்வையாக, சிறுநீர் வாயிலாக வெளியேற்றும் முறை. இந்த டீடாக்ஸ் டயட் தண்ணீரின் மூலமாக, உடலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

'டீடாக்ஸ் டயட்' எப்படி இருக்க வேண்டும்?
டீடாக்ஸ் டயட் என்பது மென்மையாக ஜீரணித்து, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு ஏதுவானதாக இருக்க வேண்டும். ஜீரண செயல்பாடு சீராக இருக்கும்போது கல்லீரலின் செயல்திறனும் அதிகரிக்கும். அதனால் கூடுதலாக உடலில் உள்ள 'டாக்சின்'களை வெளியேற்ற முடியும். டீடாக்ஸ் டயட் இருக்கையில், மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
எப்படி தயாராவது?
உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் டீடாக்ஸ் டயட்டை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் வழக்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவுகள், உணவுகள் அனைத்தும் மாறும் என்பதால் அதற்கு உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆல்கஹால், சிகரெட், காபி, சர்க்கரை, சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

டீடாக்ஸ் டயட்டின் நன்மைகள் என்ன?
* திட உணவுகள் தவிர்க்கப்பட்டு திரவ உணவுகளாக எடுக்கும்போது மிக எளிதில் ஜீரணமடைந்து சிறுநீர், வியர்வை வழியே கழிவுகள் முழுக்க வெளியேறும். நம்முடைய பெருங்குடல், சிறுகுடல் என ஒட்டுமொத்த வயிறும் சுத்தமாகும்.
* வயிற்றுப் பகுதியில் குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.
* உடலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாறும்.
* கடினமான மூலக்கூறுகள் கொண்ட கார்போஹைட்ரேட் உள்ளிட்ட திட உணவுகளை இந்த டயட்டில் தவிர்ப்பதால் மற்ற உணவுகள் மிக எளிதில் ஜீரணமாகும்.
* டீடாக்ஸ் டயட்டில் ஊட்டச்சத்துக்கள் செறிவாக உள்ள உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

எப்படி மேற்கொள்வது?
எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி, பெர்ரி பழ வகைகள் அல்லது ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் மற்றும் அன்னாசி பழம் இவற்றுடன் லவங்கபட்டை, துளசி விதை அல்லது ரோஸ்மெரி ஆகியவற்றை 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி அந்த தண்ணீரை 7 முதல் 10 நாட்கள் குடித்து வரலாம்.
சிலர், வெந்நீரில் பழங்களை போட்டும் தண்ணீர் பருகுவார்கள். விருப்பத்திற்கு ஏற்ப பழம், மூலிகை வகைகளை கலந்து சூடாக பருகும் டீடாக்ஸ் குடிநீர் வகைகளும் நிறைய இருக்கிறது.
- செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது.
- பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன.
ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகின்றன. வெள்ளை ரத்த அணுக்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. இதில் ரத்தத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது. இது மூன்று வகைப்படும்.

லுகேமியா:
எலும்புகளுக்குள் இருக்கும் பஞ்சுபோன்ற திசுக்களான எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்தத்தை உருவாக்கும் செல்களில் லுகேமியா தொடங்குகிறது.

லிம்போமா:
இது நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்போசைட்டுகள், வெள்ளை ரத்த அணுக்களில் தொடங்குகிறது. நிணநீர் மண்டலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மல்டிபிள் மைலோமா:
இது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களைப் பாதிக்கிறது. பிளாஸ்மா செல்கள் நோயெதிர்ப்பு அமைப்பு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
அறிகுறிகள்
லுகேமியாவின் அறிகுறிகள் அந்த நோயின் வகையைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். எளிதில் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு, அதிகப்படியான வியர்வை, இரவில் சோர்வு அல்லது பலவீனம், காய்ச்சல் மற்றும் குளிர், அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றுகள், பசியின்மை, குமட்டல் மற்றும் எடை இழப்பு, எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள், குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதிகளில் வீங்குதல், கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம், தோலில் சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்றவை இதற்கான அறிகுறியாகும்.

பரிசோதனைகள்
ரத்த சோகையால் வெளிறிய தோல், நிணநீர் கணுக்களின் வீக்கம் மற்றும் கல்லீரல், மண்ணீரலின் வீக்கம் இவற்றின் மூலம் இந்த நோயை அறியலாம். ரத்த பரிசோதனையில் அசாதாரண சிவப்பு அல்லது வெள்ளை ரத்த அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகள் உள்ளதா என்பதை பார்க்கலாம். இடுப்பு எலும்பில் இருந்து எலும்பு மஜ்ஜையின் மாதிரியை எடுத்து லுகேமியா செல்களைக் கண்டறியலாம்.
சித்த மருத்துவம்

நித்திய கல்யாணி:
இது எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தாவரம். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் வின்கிரிஸ்டின் மற்றும் வின்பிளாஸ்டைன் மருந்துகள் ரத்த புற்று நோய்க்கு மருந்தாக நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் கொடிவேலி மாத்திரை, சேராங்கொட்டை நெய் போன்ற மருந்துகள் ரத்தப்புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
துளசி
இதன் இலைகளில் உள்ள தைமோல் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இயற்கையிலேயே புற்றுநோய் எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
மஞ்சள்:
இதில் உள்ள குர்குமின் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
பூண்டு:
இதில் உள்ள அலிசின், டைஅலைல் சல்பைடுகள் அசாதாரண செல் பிரிவைத் தடுத்து புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை செய்கிறது.
இஞ்சி:
இதில் உள்ள ஜிஞ்சிரால், புற்றுநோய்க்கு எதிரான செயல்பாடுகளை கொண்டுள்ளது.

முள்சீத்தாப்பழம்:
இதில் உள்ள ரெட்டிகுலின், கோரெக்சிமைசின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பில் சிறந்த பங்காற்றுகிறது.
கருஞ்சீரகம்:
இது முழுமையாக புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதன் உயிர்வேதியியல் கலவையான தைமோகுவினோன் புற்றுநோய் செல்களை தடுக்கிறது, மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
வாழ்வியல் முறை
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது செய்ய முடிந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் நீங்க இறை பிரார்த்தனை, தியானம் செய்ய வேண்டும்.
நவீன மருத்துவத்தில் புற்று நோய்களுக்கு விரிவான சிகிச்சைகள் உள்ளன. நோயாளிகள் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே புற்றுநோய் என்ற உடன் நோயாளிகள் பயப்பட வேண்டாம். குணப்படுத்தக் கூடிய புற்று நோய்களும் உண்டு. எனவே நோயாளிகள் மனம் தளராமல் சிகிச்சை பெறுவது நல்லது.
- உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் ஏற்படுகிறது.
- ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.
மலஜலம் கழிக்கும் வயிற்று உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் இந்த பிரச்சினை உங்களுக்கு ஏற்படுகிறது.
மலக்குடலில் ஒன்றும் இல்லாதபோதும் கூட, மலக்குடலிலுள்ள நரம்புகளை தொந்தரவு பண்ண ஆரம்பிக்கும். உடனே நரம்புகள் மூளைக்கு செய்தியை அனுப்பி மலக்குடலில் உள்ள தசைகளை சுருங்கி விரியச் செய்து மலத்தை வெளியேற்று என்று தெரிவிக்கிறது.

இதனால் தான் இந்த வயித்தைக் கலக்குவது, உடனே பாத்ரூம் ஓடுவது எல்லாமே. இது வயிற்றில் உணவுப் பாதையில் ஏதாவதொரு நாள்பட்ட நோயினால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இது குணப்படுத்தக் கூடிய நோய்தான்.
மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 சதவீதம் பேருக்கு பெருங்குடலின் கடைசி பாகத்திலும், ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் மேலே கூறிய பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அதீத அமிலச் சுரப்பு இந்த பிரச்சனையை உண்டாக்கும் என்பது மிகமிகக் குறைவே.
மருந்துகளின் பக்கவிளைவுகள், செரிமானப் பிரச்சனைகள், உணவு ஒத்துக்கொள்ளாமல் போகுதல், உணவுக் குடலில் நோய்கள், உணவுப் பழக்க வழக்க மாற்றங்கள், உடலில் இருக்கும் மற்ற நோய்களினால் ஏற்படும் மன அழுத்தம், திடீரென்று ஒரு குறிப்பிட்ட உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அதிக கொழுப்பு நிறைந்த உணவைத் தொடர்ந்து பல நாட்கள் உண்ணுதல், அதிக காரம், அதிக மசாலா நிறைந்த உணவுகளை அடிக்கடி உண்ணுதல், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகுதல், ஹைப்பர் தைராயிடிசம் பிரச்சனை உள்ளவர்கள், நாள்பட்ட சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பெருங்குடல் நோய்கள், மலக்குடலில் கட்டி, திசு வளர்ச்சி, திசு திரட்சி, மூலம், ஆசன வாயிலுள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம், மலக்குடல் புற்றுநோய் இன்னும் பல பெருங்குடல் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு நோய்களினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனையால் மன இறுக்கம், கவலை, பதற்றம், எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை முதலியவைகளை உண்டாக்கும்.
வேளாவேளைக்கு சாப்பிடுதல், வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்த்தல், அதிக காரம் மசாலா உள்ள உணவுகளை தவிர்த்தல், உணவில் அளவுக்கட்டுப்பாடு, உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடுதல், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், அதிக அளவில் தண்ணீர் அருந்துதல், பதற்றம், டென்ஷன், கவலை இல்லாமலிருத்தல் போன்றவைகளை கடைப்பிடித்தால் பாத்ரூமுக்கு அவசர அவசரமாக ஓடும் பிரச்சனை இல்லாமல் வாழலாம்.
பிரச்சனைக்கு மூல காரணம் என்ன என்பதை உணவு மண்டல சிகிச்சை நிபுணரை (கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்) உடனடியாக சந்தித்து சிகிச்சை பெறுவது சிறந்தது.
- கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும்.
- உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.
'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும். இதை உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.

உலகளவில் ஏற்படும் மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவிகிதம் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி அல்லது இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தாடை போன்ற இடங்களில் வலியையும், வயிறு எரிச்சல், குமட்டல், வாந்தி, வியர்த்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் மேற்கூறிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலோ அல்லது மிக குறைவான அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படுவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வேறு காரணங்களுக்காக சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்யும் போது தான் தற்செயலாக கண்டறியப்படுகிறது.
இது ஏற்பட ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, உடல் பருமன், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், அதிக தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், பரம்பரை இதய நோய்கள் போன்றவை முக்கிய காரணிகளாகும்.

சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட முதன்மைக் காரணம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் கரோனரி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு.
சில சமயங்களில் கரோனரி ரத்த நாளங்களின் இறுக்கத்தால் கூட சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக இதயம் மற்றும் மார்பு பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சில சமயங்களில் மாரடைப்பின் அறிகுறிகளை அவர்களால் உணர முடியாமல் போகிறது. இவர்களுக்கு சோர்வு, வயிறு எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் அப்போது ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளின் அலட்சியத்தால் சில சமயங்களில் கண்டறிய தவறிய சைலன்ட் ஹார்ட் அட்டாக் தீவிர சிக்கலாக மாறி பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.
- ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது
- கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.
மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.
ரோமை சார்ந்த மல்யுத்த வீரர்கள் உடல் அழகு கூடும் என்பதற்காக வெங்காயத்தை அரைத்து உடலில் பூசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.
வெயில் காலம் வந்து விட்டது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வியர்வையுடன் வீடு திரும்பும் அனைவரும் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஒரு வெங்காயத்தை பொடிதாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீர்க்கடுப்பு வராது. குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலந்தும் நெய்யில் வறுத்தும் சாப்பிட கொடுக்கலாம். இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.
வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது.
பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது.
நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும்.

வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்.
நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.
- கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.
- ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான நோயாக புற்றுநோய் உள்ளது. ஆனால் புற்றுநோயை அதன் ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பலவித புற்றுநோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது இன்று வரை அறுதியிட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சில வகை உணவுகள், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த உணவுகள் பற்றி...

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்:
கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பிஸ்பெனால் ஏ என்ற வேதிப் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கார்பனேற்ற குளிர்பானங்கள்:
கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதனால் கணைய புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைட்ரஜனேற்ற எண்ணெய்:
உணவுகள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், பிரீ ரேடிக்கில்களை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
'மைக்ரோவேவ்' பாப்கார்ன்:
மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை:
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இன்சுலின் அளவை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டலாம்.

பதப்படுத்திய இறைச்சி:
பேக்கான், சாசேஜ் போன்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் அவை கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் பிரிசர்வேட்டிவ்களுடன், நைட்ரேட்கள் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.
சிவப்பு இறைச்சி:
'சிவப்பு இறைச்சி' எனப்படும் விலங்கு இறைச்சியை அதிகம் உட்கொள்வது. குடல் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்.
ஊறுகாய்:
ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. எனவே மிகக் குறைந்த அளவே ஊறுகாய் உபயோகிப்பது நல்லது. ஊறுகாய் அதிகளவு உட்கொள்வது, வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிட்ட இறைச்சி:
புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

கருவாடு:
உப்பிட்டு தயாரிக்கப்படும் மீன் கருவாட்டில், நைட்ரோசாமைகள் உள்ளன. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
மேற்கண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்வது புற்றுநோய் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது.
- சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது.
நன்னாரி சர்பத் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெயில் காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானம். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளது.

இதில் சபோனின், பிளவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ், பினோலிக் காம்பௌண்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. அது மட்டுமல்ல, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.
மேலும் இதிலுள்ள சபோனின் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட் தோலில் உள்ள அகநச்சுடன் கலந்து சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது. இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடுகள் உள்ளதால் நன்னாரி பல ஆண்டுகளாக தொழு நோய் மற்றும் சிபிலிஸ் நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பிளேவனாய்ட்ஸ் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க துணை புரிகிறது. நன்னாரி சர்பத் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, நன்னாரி சருமத்திற்கு பொலிவை தருவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது. நன்னாரி சர்பத்தை குடிப்பதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. எனினும் இதனை அதிக அளவு குடிக்கும் போது இதில் உள்ள சபோனின் சில சமயங்களில் வயிற்றில் எரிச்சல் அல்லது புண் போன்றவற்றை உண்டாக்க கூடும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பின்னரே நன்னாரி சர்பத்தை பருக வேண்டும். நன்னாரி சர்பத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், இதில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சர்க்கரை நோயளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகமாக்க கூடும்.
அதனால் சர்க்கரை நோயாளிகள் நன்னாரி சர்பத் குடிக்கும் போது சர்க்கரை சேர்க்காமலோ அல்லது சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளை கலந்தோ பருகலாம். நன்னாரியை சர்பத் வடிவில் குடிப்பதை விட வெறும் வேர்களை சுத்தம் செய்து, மண்பானை தண்ணீரில் போட்டு தினசரி தேவைகளுக்கு குடிப்பதற்கு பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
- சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும்.
- தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன.
வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் என்பது பொதுவான ஒரு இரைப்பை குடல் நோய் அறிகுறியாகும். வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தமும் அதிகரித்து வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது.

காரணங்கள்:
உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம்.
குடலில் உணவு செரிக்கும் போது, அங்கு இயல்பாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்களை நிகழ்த்தும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.
சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும். இவை ஏப்பம் மூலமாக வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறி விடும். சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது.
ஆனால் குடலில் 'பெப்சின்' போன்ற என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.

பொதுவாக வயிற்றிலுள்ள ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தமே இல்லாமல் வாயு வெளியேறும். ஆனால் இந்த கலவை அதிகமாகிவிட்டால் பக்கத்தில் உள்ளவர்கள் அதிரும் படியான சத்தம் கேட்கும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.
தீர்வுகள்:
மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு எடுப்பது நல்லது.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சீரகம் உடலின் அக உறுப்புகளை சீராக்கி, உடலைப் பலப்படுத்தும். சீரகத் தண்ணீர் தினமும் காலை, மாலை வேளைகளில் இளஞ்சூட்டில் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.
சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, தேவையானபோது சுடு சோற்றில் உப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும். மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.
வயிற்றுப் பொருமலுக்கு ஓமத் தண்ணீர் ஒரு அருமருந்து, பெரியவர்கள் 5-10 மி.லி. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.
பழைய சாதத்தில் சின்ன வெங்காயம், இஞ்சித் துண்டு, மோர், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்களான லேக்டோபேசில்லஸ், பிபிடோபாக்டீரியா, சக்காரோமைசஸ் இவைகள் சீரான அளவில் குடலில் இருந்து ஏராளமான நன்மைகள் செய்யும்.
தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல் உதட்டில் வைத்து குடிக்க வேண்டும். உணவை அவசரப்படாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும். காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவு கடுக்காய் இவைகளை முறையாக எடுத்து வந்தால் செரிமான மண்டல பிரச்சினைகள் சீராகி, வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் நீங்கும், மலச்சிக்கல் இராது.
- நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு தீவிரநோய் ஆகும்.
- சுமார் 3½ கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
'அல்சைமர் நோய்' என்பது படிப்படியாக வளரும் நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு தீவிரநோய் ஆகும். இதை 'மறதிநோய்' என்றே நேரடியாக சொல்லலாம். இது மூளையிலுள்ள நரம்பு செல்கள் சேதமடைவதால் ஏற்படுவதாகும்.
நேற்று நடந்தது இன்று ஞாபகமில்லை. இன்று நடப்பது நாளை ஞாபகத்தில் இருக்காது என்ற நிலை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், அவனது வாழ்க்கையில் ஒரு பிடிப்பு எப்படி இருக்கும்? வாழவே பிடிக்காது.

இந்த 'குறுகிய கால நினைவு இழப்பு நோய்' நினைவை இழக்கச் செய்யும், சிந்தனையை மறக்கச் செய்யும். வயது கூடக்கூட இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. உலகமெங்கும் சுமார் 3½ கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மறதி என்பது குறைவான அளவில் எல்லோருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைதான். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பொருளை இங்கேதானே வைத்திருந்தேன் காணவில்லையே, நேற்று நான் அப்படி சொல்லவே இல்லையே, அந்த பேப்பரில் நான் கையெழுத்து போடவே இல்லையே, இப்படி தினமுமே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார், சொல்வார், செய்வார். இம்மாதிரி நபர்களுக்கு மதிப்பீடு என்றொரு சோதனையையும், அறியும் திறன் என்றொரு சோதனையையும் செய்து பார்த்தால் தெரிந்துவிடும்.
தூக்கம் வருவதில் சிக்கல், பேசுவதில் சிக்கல், ஒரே பேச்சை திரும்பத் திரும்ப சொல்லுவது, தன் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர்களையே மறந்துவிடுவது, தவறான நடத்தைகளில் ஈடுபடுவது, சித்தப்பிரமை என்று சொல்வார்களே அப்படி செயல்படுவது இன்னும் நிறைய வித்தியாசமான செயல்களை இவர்கள் தினமும் செய்வார்கள்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நல்ல ஆரோக்கியமான எல்லா சத்துக்களும் நிறைந்திருக்கக்கூடிய சரிவிகித சத்துணவாக தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். ஆரோக்கியமான, சத்தான உடலுக்கு தீங்கு விளைவிக்காத சமையல் எண்ணெய் வகைளை உபயோகிக்க வேண்டும். கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் கண்டிப்பாக சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி முதலிய ஏதாவதொன்றை தினமும் செய்ய வேண்டும். சிகரெட், மது உபயோகிப்பவர்களாக இருந்தால், அறவே தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி, தன்னை சுற்றி இருப்பவர்களுடன் நன்கு பேசிப் பழகுதல், மூளைக்கு வேலை இவைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் அல்சைமர் நோயின் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வெளியே வரலாம்.
சோம்பேறித்தனமாக எந்நேரமும் படுத்தே இருக்காமல் உடலுக்கு எப்பொழுதும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் தகுந்த சிகிச்சைகளை உடனடியாக ஆரம்பித்து நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
பழைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையே என்று நினைத்து சலிப்படைந்து அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. இரவு நாம் படுக்கப் போவதற்குள் எப்படியும் அதை யோசித்து திரும்பத் திரும்பக் கொண்டுவந்து பழைய விஷயத்தை கண்டுபிடித்து விடவேண்டும்.
மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். 100 வயதிலும் நல்ல நினைவாற்றலுடன் வாழலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே இந்நோயின் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது உங்கள் கையிலும், உங்கள் குடும்பத்தினர் கையிலும்தான் உள்ளது.
- தோலில் திட்டுத்திட்டாக சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உருவாகலாம்.
- தோல் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
சூரிய ஒவ்வாமை என்பது சூரிய ஒளியில் இருக்கும் அல்ட்ரா வயலட் என்ற புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோலில் ஏற்படும் பாதிப்புகளை குறிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் அதிக நேரம் நிற்கும்போது தோலில் 'பாலிமார்பிக் லைட் டெர்மடோசிஸ்' என்ற பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், தோலில் திட்டுத்திட்டாக சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உருவாகலாம். இந்த பாதிப்புகளில் கடுமையான அரிப்பு காணப்படும். இது பொதுவாக கழுத்து, மேல் மார்பு, மேல் கைகள், கைகளின் பின்புறம் அல்லது தொடைகளை பாதிக்கிறது. இது வெயில் காரணமாக ஏற்படும் பரவலான ஒரு பாதிப்பு.
ஆனால், சுட்டெரிக்கும் வெயிலின் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் மெலனோமா என்பது மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோய் ஆகும். புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோலில் வீரியம் மிக்க கட்டியாக இது ஏற்படுகிறது. இந்த தோல் புற்றுநோய் என்பது உடலில் புதிய மச்சமாக அல்லது பழைய புள்ளிகளில், மச்சங்களில் ஏற்படும் நிறம், வடிவம், அளவில் ஏற்படும் மாற்றங்களாகக்கூட இதன் அறிகுறிகள் தென்படும்.
பொதுவாக, இந்த மெலனோமாக்கள் என்பது ஒழுங்கற்ற திட்டு, நிறத்தை கொண்டிருக்கும். அரிப்பு என்பது பொதுவான அறிகுறியாகும்.
வெயில் காலத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்தில் கண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நிலையில் உயிருக்குக்கூட ஆபத்தான நிலை ஏற்படும் என்கின்றனர்.
குறிப்பாக, தோல் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இந்நோய் கடுமையான வெயில் காரணமாக ஏற்படுகிறது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளதாக இத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
- சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அசைவ பிரியர்கள் அனைவருமே சிக்கன் சாப்பிடுவது வழக்கம். அவர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த உணவாகவும் இருக்கும். ஆனால் தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்சனைகள் ஏற்படும் என்றும், இதய நோய் வர வாய்ப்புள்ளது என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
- வெண்ணெய் எப்படி சமையலில் அதிக அளவு புகுகிறது?
- பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம்.
வெண்ணெய்! ஆரோக்கியமான உணவுதான். ஆனால் அதே வெண்ணெயை அன்றாடம் 10 கிராம் அளவுக்கு சேர்த்தாலே உயிருக்கு உலை வைத்து விடும் என்ற ஆராய்ச்சி முடிவுகள் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2.21 லட்சம் பேரிடம் கடந்த 33 வருடங்களாக ஆராய்ச்சி செய்து உள்ளார்கள். அவர்களின் உணவு முறைகளில் வெண்ணெய் பயன்பாட்டை பகுத்து பார்த்ததில்தான் இதை கண்டுபிடித்து உள்ளார்கள்.
வெண்ணெயில் நிறைய கொழுப்பு சத்து அடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக லிப்போ புரோட்டீன் மற்றும் கெட்ட கொழுப்பு மிகுந்து உள்ளது. இவைகள் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் படர்ந்து ரத்த குழாய்களில் அடைப்பை உருவாக்கி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு 10 கிராம் வெண்ணெய் உடலுக்குள் தினமும் சென்றால் 7 சதவீதம் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதாக கண்டுபிடித்து உள்ளார்கள்.

இதற்கு நேர்மாறாக சமையலுக்கும், உணவிலும் தாவர எண்ணைகளை பயன்படுத்தினால் இதய நோய்க்கான வாய்ப்பு 6 சதவீதம் குறைவதாக தெரிய வந்து உள்ளது. அமெரிக்காவில் ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய், கனோலா போன்ற எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறார்கள். வட இந்தியாவிலும் கடுகு எண்ணெயை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் ஆபத்து குறைவு என்கிறார்கள்.
நம்ம வீடுகளில் வெண்ணெய் பயன்பாடு குறைவுதானே? சமையல் எண்ணெய் தானே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்க தோன்றும்.
சுத்தமான 'ரீபைன்டு சூரிய காந்தி எண்ணெய் என்று பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் நம் கண்ணில் படுகின்றன. நம்பிக்கையோடு மாதம் தோறும் வாங்கி வருகிறோம்.

வெண்ணை கலந்த உணவு வகைகள்
ஆனால் இந்த எண்ணெயும் சுத்தமானது இல்லை. நாட்டில் விளையும் சூரிய காந்தி விதையின் அளவையும் தயாராகும் எண்ணெயின் அளவையும் ஒப்பிட்டால் இந்த உண்மை தெரிய வரும். இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது அதிக அளவு ஆல்டிஹைடுகளை அதாவது நச்சு கலவைகளை வெளியிடுவதாக கண்டறிந்து உள்ளனர். இது உடலின் டி.என்.ஏ. மற்றும் செல்களை சேதப்படுத்தும். இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது தனிக்கதை.
இனி, வெண்ணெய்க்கு வருவோம்... வெண்ணெய் எப்படி சமையலில் அதிக அளவு புகுகிறது? பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம். நூடுல்ஸ், பாஸ்தா செய்யும் போது சுவைக்காக வெண்ணெய் சேர்க்கிறார்கள். கேக், பிரட் ஆம்லெட், பட்டர்நான், பன்னீர்பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் உள்பட சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளில் சுமார் 95 விதமான உணவு பொருட்கள் என்று அதிக அளவு வெண்ணெய் கலந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் மூலம் நமக்கு தெரியாமலே வெண்ணெய் அதிக அளவில் நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
பசும் பாலை காய்ச்சி உறைய வைத்து கடைந்து எடுப்பது தானே வெண்ணெய்... அதிலும் இவ்வளவு ஆபத்தா? இதற்கு அரசு இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியை டாக்டர் தீபா கூறியதாவது:-
மில்க் புரோட்டீன் நல்லதுதான். ஆனால் அவ்வாறு சுத்தமாக கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் விலைக்கு நிச்சயம் கொடுக்க முடியாது.
குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும். சுவையும் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக வெண்ணையில் சல்பர், விலங்கு கொழுப்புகள், மாக்ரைன் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான். இதனால் தான் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. சீஸ், மயோனைஸ் போன்ற உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தாவர எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது தான். அதையும் குறைந்த அளவு பயன்படுத்தலாம்.
பொதுவாக ஒரே எண்ணெயை நீண்ட நாள்கள் பயன்படுத்தக் கூடாது. வெவ்வேறு எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றார்.






