search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் பாதுகாப்பு"

    • 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

     சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை மையங்களுக்கு ஒதுக்குவது, வாக்குச் சாவடி அலுவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது.

    இதில் வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னை தொகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும் கூடுதலாக வருகிறது.

    இதை சேர்த்து பார்க்கும் போது 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4,680 வாக்குச் சாவடி மையங்களில் 14,891 ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    வடசென்னைக்கு ராணி மேரி கல்லூரியிலும் மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியிலும், தென்சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    ஓட்டு எண்ணப்படும் கல்லூரிகளில் இதற்காக 2 பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டு பெட்டிகளை வைக்க வரிசைப்படி நம்பர் எழுதப்பட்டுள்ளது. இதே போல் ஓட்டு எண்ணுவதற்கு 2,500 முதல் 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    அங்கு சவுக்கு தடுப்பு கம்புகள், கம்பி வலைகள் கட்டப்பட்டு ஓட்டு எண்ணும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமர வசதி செய்யப்பட்டு வருகிறது. பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் போது அதை வைப்பதற்கான அறை தயார் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறைக்கு யார்-யார் பொறுப்பு அதிகாரிகள் என்று பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.


    இதே போல் அந்த அறையை பூட்டி யார் சீல் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க எந்தெந்த போலீசார் நிறுத்தப்பட வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதோடு ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் வளாகம் முழுவதும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இவற்றை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்குள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

    • பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது
    • வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும்

    பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், தனக்கு கொலை மிரட்டல் வருவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், வெங்கடேஷ் செம்மரக்கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது" என அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.

    இதனையடுத்து பேசிய நீதிபதி, பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது. ஆகவே பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.

    வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். குற்றச் செயலில் ஈடுபடும் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் என்று கூறி பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார். 

    • தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
    • தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.

    இதன்படி தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு 3,719 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 579 வாக்குச்சாவடிகள் பதட்டமான சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சாவடிகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 16 கம்பெனியை சேர்ந்தவர்கள் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் சென்னைக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மட்டுமே வந்து உள்ள நிலையில் மீதமுள்ள 14 கம்பெனி படையினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வர உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக பிரிந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களிலும் கடந்த 16-ந்தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் சிக்கியுள்ளன.

    தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பறக்கும் படை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன்மூலம் தேர்தலுக்கு முன்னர் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக பறக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகளை கண்காணித்து வரும் போலீசார் அவர்களின் செல்போன்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

    இதன்மூலம் தலைமறைவாக உள்ள ரவுடிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இப்படி தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.

    • மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தமிழக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 90 கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுதவிர 13 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும், மேலும் சில முக்கிய பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் துப்பாக்கியை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

    இவர்களை தவிர 10 ஆயிரம் பேருக்கு இது தொடர்பாக உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசாருக்கு இதுபற்றிய உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    • மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் தமிழகத்துக்கும் ஏற்கனவே 3 முறை வந்து ஆதரவு திரட்டி உள்ளார். தற்போது 4-வது முறையாக மீண்டும் நாளை (18-ந் தேதி) தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். நாளை கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.

    இதற்காக அவர் நாளை மாலை கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். அங்கு அவருக்கு மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் அவினாசி சாலை, புரூக்பாண்ட் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து வாகன பேரணி நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார்.

    அவர் செல்லும் வழிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு பா.ஜ.கவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



     மாலை 5.45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் சிக்னல் பகுதியில் இருந்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை தொடங்குகிறார். பேரணி நடைபெற உள்ள சாலையானது 2 வழிச்சாலையாகும். இந்த சாலையின் இடதுபுறம் வழியாக பிரதமர் மோடி பேரணியாக செல்கிறார். வலதுபுறம் பொதுமக்களும், தொண்டர்களும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியில் நின்றபடி அங்கு திரண்டு நிற்கும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    சில இடங்களில் பிரதமர் மோடி காரை விட்டு இறங்கி மக்களை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகன பேரணி மாலை 6.45 மணிக்கு ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேரை பா.ஜ.க.வினர் திரட்ட உள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசாரம் என்பதால் கோவை பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

    பிரதமர் மோடியின் வாகன பேரணி கவுண்டம்பாளையம் எரு கம்பெனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீ தூரம் வரை நடப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ரோடு ஷோவானது 2 கி.மீ தூரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

    வாகன அணிவகுப்பை முடித்து கொண்டு பிரதமர் மோடி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் காலை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கோவை விமானம் நிலையம் சென்று, கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலத்திற்கு வருகை தந்து அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளான சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், அவர் தங்க உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுதவிர ஓட்டல்கள், லாட்ஜ்கள், விடுதிகளிலும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி, கோவை சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    ஐ .எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாதோப்பு ஆகிய 7 உட்கோட்டத்தில் 107 அம்பேத்கர் சிலை உள்ளது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
    • ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் என்ற காலா ஜதேயிதி. பிரபல தாதாவான இவர் மீது 76-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரது தலைக்கு அரியானா போலீசார் ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த நிலையில், 2021-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் பெண் தாதாவான அனுராதா சவுத்ரி. இவரை அப்பகுதியில் மேடம் மின்ஸ் ரிவால்வர் ராணி என்றே அழைத்து வந்தனர். இவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் நடந்தது. அதன்படி கோர்ட்டில் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். திருமணத்திற்காக இருவருக்கும் பரோல் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டெல்லி துவாரகா செக்டார் 3-ல் சந்தோஷ் கார்டன் என்ற மகாலில் தாதா தம்பதியான காலா ஜதேயிதி-அனுராதா சவுத்ரியின் திருமணம் நடைபெற்றது.


    இதில் 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தாதாக்களின் எதிரிகளால் அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என கருதப்பட்டதால் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து தாதா தம்பதியினர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    • வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் இருந்து 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரம், 28 கிலோ மதிப்பிலான 468 வகையான தங்கம், வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு கர்நாடக வுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் மூலம் விற்று அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த பொருட்களை நாளை, நாளை மறுநாள் (7-ந் தேதி)தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி நாளை (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக மாநில அரசு தன்வசம் உள்ள பொருட்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக, உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூரு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் நகைகள் மற்றும் உடமைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 6 பெரிய டிரங்கு பெட்டிகளில் அந்த பொருட்கள் கண்டெய்னர் லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் பதிவு செய்ய வீடியோகிராபரும் அழைத்துச் செல்லப்படுகிறார்.

    இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.

    மதுரை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு 'என் மண், என் மக்கள்' என்ற யாத்திரையை தொடங்கினார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் நாளை (27-ந்தேதி) திருப்பூரில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதனை தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள மாதாப்பூரில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சூலூர் விமானப் படை தளத்திற்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் மாதாப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்கிறார்.

    கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 5 மணி அளவில் பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரும் மோடி பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் கருப்பாயூரணி அருகே உள்ள வீரபாஞ்சான் டி.வி.எஸ். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) காலை 8.40 மணிக்கு தனியார் ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.


    பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை விமான நிலையம், மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள தனியார் பள்ளி இடம், தங்கும் ஓட்டல் ஆகியவை மத்திய போலீஸ் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் நாளை இரவு மோடி தங்க உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த ஓட்டலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஆலோசனையின் பேரில் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு கருப்பாயூரணி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் சாலை மார்க்கமாக பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்ல இருப்பதால் வழி நெடுகிலும் பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வழியில் உள்ள கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். பசுமலை தனியார் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் அதிகாரிகள் நேற்று மாலை காரில் சென்று ஒத்திகை பார்த்தனர்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டல், கருப்பாயூரணி டி.வி.எஸ். பள்ளி மற்றும் பிரதமர் பயணிக்கும் சாலை, மாநகர, மாவட்ட எல்லைகளில் டிரோன்கள் பறக்க நாளை மற்றும் மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் மறுநாள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய பாதுகாப்பு பிரிவு தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மொத்தத்தில் 5 ஆயிரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.
    • நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.

    விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவையும் உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமானநிலையத்துக்கு முதல் கட்டமாக நிலம் எடுப்பதற்காக அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. பொடாவூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இடங்களில் 566 பனை மரங்கள் மற்றும் காட்டுவாமரம், அரசமரம், மாமரம், வேப்பமரம், தைலமரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பரந்தூர் விமான நிலைய பணிக்கு முதல் கட்டமாக பொடாபூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் தரப்படும். அவர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதன்மீது ஏப்ரல் மாதம் 4-ந்தேதி விசாரணை மேற் கொள்ளப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்கு வோருக்கு சந்தை மதிப்பை விடம கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    • காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம்.
    • ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.4.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர். ஆர்.கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில் பின் புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    • சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
    • “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது"

    பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

    பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது" என கூறி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து, வாடகை தராமல் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

    பாஜகவில் இணைந்த சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சூர்யா சிவா, பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.madurai highcourt dismisses trichy surya siva plea

    இதையடுத்து இருவரும் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். கடந்த நவம்பர் மாதம் மீண்டும் சூர்யா சிவா பாஜகவில் சேர்க்கப்பட்டு, முன்பு அவர் வகித்து வந்த ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக தொடர்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×