search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது விடுமுறை"

    • அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
    • ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 19-ந்தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

    பொது மக்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சென்னையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளன.

    தேர்தல் நடைபெறும் நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனை தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அதனால் தேர்தலையொட்டி 17,18 ஆகிய தேதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 7 ஆயிரம் சிறப்பு பஸ்களும் பிற நகரங்களில் இருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அரசு பஸ்களில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 728 இடங்கள் முன்பதிவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 18-ந் தேதி பயணம் செய்ய 13,800 பேரும், 17-ந்தேதி 3,075 பேரும், 16-ந்தேதி பயணத்திற்கு 633 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடைசி நேரத்தில் கூட்டமாக வந்தால் பஸ் வசதி ஏற்பாடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது என்றும் அதனால் முன்பதிவு செய்து பயணத்தை தொடர்ந்தால் உதவியாக இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக வைக்கப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் போது சிறப்பு பஸ்கள் திட்டமிட்டு இயக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
    • வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக நடக்கும் ஏப்ரல் 26-ந்தேதி, கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 20 மக்களவை தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறும் எனவும், வருகிற 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளான இன்று ஒரு சிலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

    வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந்தேதி நடைபெறுகிறது. அங்கு வேட்பு மனுக்களை வாபஸ் பெற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே வேட்புமனு பெற வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

    வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை ஊதியம் பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவ னங்கள் மற்றும்வணிக மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது.

    • மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
    • ராம நவமிக்கு மேற்கு வங்காள அரசு பொது விடுமுறை அறிவிப்பது முதல் முறை ஆகும்.

    கொல்கத்தா:

    ராம நவமி பண்டிகை அடுத்த மாதம் 17-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மேற்கு வங்காள ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராம நவமியான ஏப்ரல் 17-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ராமநாவமியின் போது ஹவுரா மற்றும் ஹுக்ளி மாவட்டங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

    மேற்கு வங்காள அரசு ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவிப்பது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது.
    • புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பொதுவிடுமுறை அளித்துள்ளன.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரமாண்டமான கோவில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    இந்த விழாவில் இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்த மிகப் பிரமாண்டமான திருக்கோவில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடெபெறும் நாளான 22-ந்தேதி (நாளை) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    • 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
    • அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி (நாளைமறுதினம்) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரமுகர்கள், பக்தர்கள் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அரைநாள் பொது விடுமுறை அளித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்திலும் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொது விடுமுறையை எதிர்த்து நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று நீதிமன்றம் நாளை இந்த மனுவை விசாரிக்கிறது.

    நான்கு மாணவர்கள் அளித்துள்ள மனுவில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சி அதன் விருப்பத்திற்கு ஏற்ப பொது விடுமுறை அளிக்க முடியாது. மத நிகழ்ச்சியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்தது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். ஒரு அரசு எந்த மதத்துடனும் தொடர்பு கொள்ளவோ அல்லது ஊக்குவிக்கவோ முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த மனுவை குல்கர்னி, நீலா கோகாலே நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரிக்கிறது.

    கோவா, மத்திய பிரதேச மாநிலங்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதி கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து இரு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயலால் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.
    • நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதப்பதால் நாளை சகஜ நிலை திரும்புவது கடினம்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்னும் மழையும், காற்றும் ஓய்ந்தபாடில்லை.

    இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. இன்று இரவு வரை மழையும், காற்றும் நீடிக்கும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

    இரவுக்குப்பின் மழை ஓய்ந்தாலும் தண்ணீர் வடிந்து நாளை உடனடியாக சகஜ நிலை திரும்ப வாய்ப்பில்லை. இதனால் நாளையும் நான்கு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக விடுமுறை அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு.
    • பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் இருந்தே பணி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மிச்சாங் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு- தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.

    இது மேலும் வலுவடைந்து 4.12.23 (திங்கட்கிழமை) முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை.
    • அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

    • உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு மட்டும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண் 4 மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய வி,களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண் 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (9ம்தேதி.) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது .

    இதன்காரணமாக தேர்தல் நடைபெறும் கிராம பகுதிகளுக்கு மட்டும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்நாளில் மேற்கூறிய கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    ×