search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூபேந்திர படேல்"

    • இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அல் நயான் நேற்று குஜராத் வந்தார்.
    • இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    துடிப்புமிக்க குஜராத் சர்வதேச உச்சிமாநாடு கடந்த 2003ம் ஆண்டு அம்மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. தற்போது அதன் பத்தாவது உச்சிமாநாடு காந்திநகரில் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்துக்கான வாசல் என்ற கருப்பொருளில் இந்த உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அல் நயான் நேற்று குஜராத் வந்தார். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கே சென்று நேரில் வரவேற்றார். முதல் மந்திரி பூபேந்திர படேல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் க்வத்ரா ஆகியோர் அதிபர் அல் நயானை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து அவர்கள் சென்றபோது சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு தலைவர்களை வரவேற்றனர். அதிபர் அல் நயானை வரவேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "எனது சகோதரர் முகம்மது அல் நயானை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். எங்களைப் பார்க்க நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த கவுரவம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தனது இந்திய வருகை குறித்து அல் நயான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் மேலும் வலிமையாக இணைக்கும் நோக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்தேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பும் வர்த்தகமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. இரு நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகள் குறித்து ஆராயப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி - அதிபர் அல் நயான் முன்னிலையில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, முதலீடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


    • உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். 27 பேர் காயம் அடைந்தனர்.

    உத்தர்காஷி:

    உத்தரகாண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கங்னானி என்ற பகுதியருகே சென்றபோது திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

    50 மீட்டர் ஆழத்தில் பஸ் விழுந்ததில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விசாரணையில், பஸ்சில் பயணித்தவர்கள் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. முறையான சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவுகளையும் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி பிறப்பித்துள்ளார்.

    இந்நிலையில், பஸ் கவிழ்ந்தவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை இரு நாட்டு பிரதமரும் நேரில் பார்க்கவுள்ளனர்.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் கவர்னர் மாளிகையில் அவர் ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்சும் நாளை அகமதாபாத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்கவுள்ளனர். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அங்கிருந்து மும்பை புறப்பட்டு செல்கிறார்.


    இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்தார்.

    • குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
    • பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி 156 இடங்களை கைப்பற்றியது. கடந்த முறையை விட கூடுதலாக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. 60 தொகுதிகளை அந்த கட்சி இழந்தது. புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 5 தொகுதிகளை வென்றது. பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் குஜராத் முதல்வரின் பதவி ஏற்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றப்பட்டு அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது.

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் மற்ற மந்திரிகளும் பங்கேற்றார்கள்.

    பா.ஜனதா ஆளும் முதல்-மந்திரிகளான யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), மனோகர்லால் கட்டார் (அரியானா), சிவ்ராஜ்சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), பசவராஜ் பொம்மை (கர்நாடகா), புஷ்கர்சிங்தாமி (உத்தரகாண்ட்) மற்றும் கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் சந்தோஷ், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    • அகமதாபாத்தில் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு.
    • குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது.

    குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 156 இடங்களை கைப்பற்றிய பாஜக 7-வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அந்த மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார். காந்தி நகரில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங்,அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் விழாவில் கலந்து கொள்ளும் நிலையில், பணி காரணமாக இதில் பங்கேற்க முடியவில்லை என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


    இந்நிலையில் குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நேற்றிரவு அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, சாலை வழியாக வாகனம் மூலம் சென்று, பொதுமக்களை சந்தித்தார். அப்போது இருபுறமும் திரண்டிருந்த மக்கள் கை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    • மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
    • முதல்-மந்திரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.

    ஆமதாபாத்:

    குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இதன்மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டை என நிரூபித்து இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் 64.33 சதவீத வாக்குகள் பதிவாகின. முந்தைய தேர்தலைவிட (68.41 சதவீதம்) இது 4.08 சதவீதம் குறைவு ஆகும்.

    இந்நிலையில், இமாலய தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராஜினாமா செய்த குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல், இன்று நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    முதல் மந்திரி பதவிக்கான தலைவரை தேர்வு செய்வதற்காக குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் கூட்டம் காந்திநகரில் இன்று நடைபெற்றது. பூபேந்திர படேலின் பெயரை கானு தேசாய் முன்மொழிந்தார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பார்வையாளர்கள் ராஜ்நாத் சிங், பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ×