search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vibrant Gujarat International Summit"

    • இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அல் நயான் நேற்று குஜராத் வந்தார்.
    • இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    துடிப்புமிக்க குஜராத் சர்வதேச உச்சிமாநாடு கடந்த 2003ம் ஆண்டு அம்மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. தற்போது அதன் பத்தாவது உச்சிமாநாடு காந்திநகரில் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்துக்கான வாசல் என்ற கருப்பொருளில் இந்த உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அல் நயான் நேற்று குஜராத் வந்தார். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கே சென்று நேரில் வரவேற்றார். முதல் மந்திரி பூபேந்திர படேல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் க்வத்ரா ஆகியோர் அதிபர் அல் நயானை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து அவர்கள் சென்றபோது சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு தலைவர்களை வரவேற்றனர். அதிபர் அல் நயானை வரவேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "எனது சகோதரர் முகம்மது அல் நயானை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். எங்களைப் பார்க்க நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த கவுரவம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தனது இந்திய வருகை குறித்து அல் நயான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் மேலும் வலிமையாக இணைக்கும் நோக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்தேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பும் வர்த்தகமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. இரு நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகள் குறித்து ஆராயப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி - அதிபர் அல் நயான் முன்னிலையில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, முதலீடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


    ×