search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி மாதம்"

    • தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்
    • நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது.

    ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து,

    சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

    மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

    இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும்.

    தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    • புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியே அஜா ஏகாதசி.
    • திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

    புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்வார்கள். நம்மில் பலரும் காரணம் இல்லாமல் துன்பங்களை அனுபவிப்பார்கள். மனக்கவலைகளுக்கு ஆளாவார்கள், அலுவலகங்களில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்குக் காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களே ஆகும்.

    என்னதான் நாம் இந்த ஜென்மத்தில் இறைவனை மனதார தியானித்து நல்லனவற்றையே பேசி, செய்து வந்தாலும் நமக்கு காரணம் இல்லாமல் ஏன் குழப்பங்களும் கஷ்டங்களும் வருகின்றன? அதற்கு காரணம் முன்வினைப்பயன். அதை சீராக்குவதுதான் அஜா ஏகாதசி விரதம்.

    இதற்கு ஆதாரமாக புராணக் கதை இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்த கதைதான்.

    அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை இழந்து, அரசப் பதவியை இழந்து காட்டில் கஷ்டப்பட்டான். அது மட்டுமா? காசுக்காக மனைவியை அடிமையாக விற்றான். கடுகாட்டில் பிணங்களை எரித்துப் பிழைத்தான்.

    அந்த சூழ்நிலையில் கவுதம முனிவர் அவனைச் சந்தித்தார். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை பரீட்சிக்கிறார் என்றாலும் அவனது இந்த துன்பங்களுக்குக் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே. அவைதான் விசுவாமித்திர முனிவருக்கு இத்தகைய எண்ணங்களை உருவாக்கின என்று ஞான திருஷ்டியில் அறிந்தார்.

    அரிச்சந்திரனை அழைத்து புரட்டாசி மாதத்தில் வரும் அஜா ஏகாதசி விரதத்தைப் பற்றி விவரித்தார். `மன்னனே நீ இந்த விரதத்தைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நன்மை கிடைக்கும்' என்றார்.

    அரிச்சந்திரனும் 9 ஆண்டுகள் தொடர்ந்து அஜா ஏகாதசி விரதத்தை அனுசரித்தான். அதன் பலனாக விசுவாமித்திரர் வைத்த பரீட்சையில் வென்றான். அது மட்டுமா? அவனுக்கு மும்மூர்த்திகளின் தரிசனமும் கிடைத்தது. மீண்டும் நாட்டை பெற்றதோடு உலகில் அழியாப் புகழோடு வாழ்ந்தான்.

    நமது முன்ஜென்ம பாவங்களை நீக்கி இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கக்கூடியது அஜா ஏகாதசி விரதம். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதையும் அனுசரிக்க வேண்டும். திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

    குறைந்தது பத்து நிமிடங்களாவது கண் மூடி அமர்ந்து பெருமாளை தியானித்து என் முன் ஜென்ம தகாத வினைப் பலன்களை அழிப்பாய் ஐயனே என்று வேண்ட வேண்டும். இரவில் விஷ்ணு புராணத்தை படிக்கலாம். நாம ஜபம் செய்யலாம். மறுநாள் காலை நீராடி பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்தி பின்னர் உணவு உண்ண வேண்டும். அப்படி செய்தால் முன்ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.

    • அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான்.
    • அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம்.

    ''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும்,

    நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...''

    திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள்.

    அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.

    ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது.

    உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?

    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார்.

    ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.

    அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.

    இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள்.

    அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.

    அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம்.

    பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கு இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

    புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    அக்காரவடிசல் எப்படி செய்வது?

    தேவையானவை: பச்சரிசி கால் கிலோ, பச்சைப் பருப்பு-100 கிராம், வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்) ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன்.

    இவை தவிர, நிறைய பால், நிறைய நெய், அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால் சேர்க்கலாம், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.

    அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது.

    கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்படித்துவிடும்.

    அக்காரவடிசலில் முந்திரி, திராட்சை போன்றவற்றை பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது.

    செய்முறை:

    அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள்.

    பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள்.

    அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள்.

    எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.

    வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள்.

    கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள்.

    ஒரு லிட்டர் பாலை சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள்.

    இறுக இறுக பால் சேர்த்து கிளறுங்கள்.

    பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள்.

    இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள்.

    அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான்.

    எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள்.

    கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.

    நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள்.

    சூப்பராக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒருதடவை செய்து பாருங்களேன்.

    • அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.
    • விநாயகர் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.

    கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி ஆனைமுகம் கடவுளை பல்லாண்டுகள் கடுமையாக தவம் செய்தான்.

    அவனது தவத்தை மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, 'மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்' என்றருளியதோடு

    அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் கொடுத்தார்.

    அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.

    ஆனைமுகக் கடவுள் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.

    அதாவது அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் அவனது முப்பட்டணங்களும் அழிவதோடு,

    அவனும் சிவபிரானால் அழிவான் எனவும் கூறினார்.

    விநாயகரின் வரத்தைப் பெற்ற பலி நாட்கள் செல்ல செல்ல,

    உலகங்களையும் ஆட்டிப் படைத்து தேவர்கள் முதலிய எல்லோருக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்தான்.

    இதற்கு நிவாரணம் பெற தேவர்கள் அனைவரும் சிவபிரானை வேண்டி கொள்ள,

    அவர் பலியுடன் போரிட்டு அவரது திரி சூலத்தால் அவனை அழிக்கும்போது அவன் அவரது திருப்பாதங்களைப் பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான்.

    பலியை (திரிபுரன்) சிவபிரான் அழித்ததால் அவருக்கு திரிபுராரி எனப் பெயர் வந்தது.

    சிவனது பலி வதம் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் கிருஷ்ணரது நரகாசுரவதம் போன்றது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

    ஆம், வதைபடும் நேரத்தில் வீடு பேறு பெற்றான் பலி.

    இறையருளால் பலி வீடுபேறு பெற்ற நாள் ஒரு புரட்டாசி பவுர்ணமியாகியப் புனித நாளாகும்.

    இத்திருநாளில் சிவபிரானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும் நெய் அல்லது எண்ணை திருவிளக்கு ஏற்றினாலும் எக்காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம்.

    அன்று விரதமிருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிவதரிசனம் பெற்று வருவதோடு,

    சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவ பெருமானை தியானித்து வழிபட்டால்,

    இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

    புரட்டாசி பவுணர்மியன்று சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.

    மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும்.

    மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவதோடல்லாமல் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.

    • ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது.
    • புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது .

    ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது.

    அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம்.

    நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தாம் இழந்த நாடு , மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

    எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

    புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.

    • இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார்.
    • பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி.

    புரட்டாசியை ஏன் பெருமாளுக்கான மாதம் என்று சொல்கிறார்கள் தெரியுமா?

    பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன்.

    அந்த புதனுடைய வீடு கன்னி.

    இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார்.

    ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம்.

    அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.

    பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி.

    புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.

    ஆகவேதான் இந்த மாதத்தில் திருமாலுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகிறது.

    எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கான மாதமாகக் குறிப்பிடுகிறார்கள்.

    புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

    • பெருமாளின் ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது.
    • பொதுவாக, பெருமாள் கோவில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம்.

    கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார்.

    எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.

    அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகும்.

    கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

    முதல் வணக்கம் பத்மாவதி தாயாருக்கு

    திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள்.

    இந்த வழிபாட்டு முறை சரியானது அல்ல.

    முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான்.

    இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

    அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது.

    என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார்.

    திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள்.

    இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா?

    அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள்.

    பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளை வணங்க வேண்டும்.

    • திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள்.
    • ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள்.

    இல்லாள் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை

    திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மற்றும் இதர விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வருவார் அவரை மலையப்பன் என்று அழைப்பர்.

    துணைவியருடன் பவனி வரும் அவர்ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் இல்லறம்.

    மனைவியைப் பிரிந்து விட்டால் ஒருவனுக்கு மதிப்பு இல்லை என்று பக்தர்களுக்கு ஒரு செய்தி சொல்கிறார்.

    திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள்.

    ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள்.

    லட்சுமியை பிரிந்ததால் திருமால் செல்வ மெல்லாம் இழந்தார்.

    அவளைத் தேடி சீனிவாசன் என்ற பெயருடன் பூலோகம் வந்தார். மிகுந்த சிரமத்தின் பேரில் பத்மாவதியை மணந்தார்.

    அதன்பின் அவருக்கு எல்லா வளங்களும் வந்து சேர்ந்தன.

    மனைவியால் தான், ஒரு கணவனுக்கு மதிப்பு என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உலகுக்கு ஏழுமலையான் உணர்த்தினார்.

    அதை பக்தர்களுக்கு நினைவுபடுத்தவே திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    • நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு.
    • நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.

    நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது.

    நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.

    பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.

    நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு.

    இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.

    நாராயணன் என்பதை நாரம்+ அயணன் என பிரிக்கலாம்.

    நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.

    பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள்.

    நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.

    நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.

    இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம்.

    அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது.

    இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.

    நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும்.

    அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

    • கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.
    • திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.

    புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும்.

    இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.

    இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.

    ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.

    அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.

    கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

    கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.

    திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.

    முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம்.

    கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும்.

    கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு.

    ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.

    • இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    • இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.

    சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்த்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து,

    எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.

    துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானாமடைந்து சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும்.

    அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம்.

    இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

    சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5-&ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.

    இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாம்.

    இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.

    ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின்

    சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.

    • படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.
    • பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.

    பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில்.

    இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார்.

    இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.

    ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

    சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது.

    போனாலும் பூஜை முறையும் தெரியாது.

    தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

    ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

    பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.

    பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.

    படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.

    பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.

    எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.

    ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.

    பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.

    பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார்.

    அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார்.

    அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார்.

    அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

    பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

    புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார்.

    அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

    இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

    ×