search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீசல் விலை உயர்வு"

    பிரான்சில் டீசல் விலை உயர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறைக்கு அடிபணிய மாட்டேன் என அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    பாரிஸ்:

    டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் நேற்று  மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    இதேபோல், பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் போராட்டம் வெடித்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


    இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வன்முறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பியுனஸ் அய்ரஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலமாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண அரசு தயாராக உள்ளது. வன்முறையை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

    கடமையாற்றும் அதிகாரிகள் தாக்கப்படுவதையும், பொது சொத்துகள் சேதமாவதையும், தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போவதையும்,பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதையும், யாரும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் எனவும் மேக்ரான் எச்சரித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் நாகை மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக கரைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் நாகை கடுவையாற்றுக்கரையில் ஏராளமான விசைப் படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர்.

    வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்திலேயே அடுத்த கட்ட போராட்டத்தினை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
    சென்னையில் 5 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ரூ.85.87-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 10 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.87-க்கு விற்பனை செய்யப்பட்டது. 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த டீசல் விலையானது நேற்று 10 காசு உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் பெட்ரோல், டீசல் விலையானது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டீசல் விலை மட்டும் கடந்த 18-ந் தேதி முதல் 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



    இந்த நிலையில் டீசல் விலையானது 5 நாட்களுக்கு பிறகு நேற்று 10 காசு அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையானது நேற்று 18 காசு அதிகரித்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் 85 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 85 ரூபாய் 87 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலையை பொறுத்தவரையில் இன்னும் 13 காசுகள் அதிகரித்தால் 86 ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது.

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் பயண திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி சொந்த வாகனங்களில் பயணிப்பதை குறைத்து, பொது வாகன பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #PetrolDieselPrice #PetrolPriceHike 
    முழு அடைப்பால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    இது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

    இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல், சில வணிக அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு - தனியார் அலுவலகங்களும், பள்ளி - கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. கடைகளும் அதிக அளவில் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    தலைநகர் சென்னையை பொறுத்தவரை, காலை முதலே வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. பஸ், ரெயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியா பாரிகளை வற்புறுத்தினர். ஆனாலும், வியாபாரிகள் கடைகளை அடைக்க வில்லை. சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அந்த வகையில், சென்னையில் 430 பேரும், காஞ்சீபுரத்தில் 550 பேரும், திருவள்ளூரில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்ற போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு அலைகள் இருந்ததையும் காண முடிந்தது.  #BharathBandh #PetrolDieselPriceHike
    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். #BharathBandh #PetrolDieselPriceHike #RahulJoinBandh
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.

    இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறு-குறு தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்பட பல தொழில்களில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த கோரியும் 10-ந்தேதி (இன்று) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத் தது. காங்கிரசுக்கு நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாட்டில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான வணிக-தொழில் அமைப்புகளும், வணிக சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. தொழிற்சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கின. வட மாநிலங்களில் சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட பல கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தன.

    எதிர்க்கட்சிகள் அறிவித்தப்படி இன்று (திங்கட்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. ஆனால் தமிழ் நாட்டில் முழு அடைப்பு போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், ஆட்டோ, தனியார் வாகனங்கள், பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    ஆனால் வடஇந்தியாவில் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு ஊர்வலம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். முன்னதாக காலை 8.25 மணிக்கு ராகுல்காந்தி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவர் மலர் தூவி காந்திக்கு மரியாதை செலுத்தினார்.

    பிறகு ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். ராகுலுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து முழக்கம் எழுப்பியபடி வந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி வந்தனர்.

    ஊர்வலம் ராம்லீலா மைதானத்தை அடைந்ததும் அங்கு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் மிக பிரமாண்டமான எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தின. இதற்காக தலைவர்கள் அமர பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி மேடையில் அமர்ந்திருந்தனர்.



    அவர்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், சரத்பவார், சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரண்டிருந்தனர். அவர்கள் பா.ஜ.க. அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

    டெல்லியில் பல இடங்களில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். மராட்டியம், குஜராத், பீகார் மாநிலங்களில் பெரிய அளவில் மறியல்கள் நடத்தப்பட்டன. மராட்டியத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மன் சேனா தொண்டர்களின் போராட்டம் போலீசாருக்கு சவால் விடும் வகையில் இருந்தது.

    மும்பை, செம்பூரில் கழுதை கழுத்தில் பிரதமர் மோடி படத்தை தொங்கவிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்களும், ஜன் அதிகார் கட்சி தொண்டர் களும் ரெயில்களை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

    மும்பையில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. ஆனால் ஆட்டோ-டாக்சி வழக்கம் போல ஓடின. சில இடங்களில் வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

    கேரள மாநிலத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

    திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை. பஸ் நிலையங்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படவில்லை.

    கேரளாவில் உள்ள கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருந்தது. முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இது போல ஆஸ்பத்திரி வாகனங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு பயணிகள் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    கர்நாடகத்தில் இன்று பெங்களூர், மங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடவில்லை.

    பெங்களூரு அரசு பஸ்கள் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் ஓட வில்லை. டாக்சிகள், ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை. தனியார் டாக்சி நிறுவனங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் வாடகை கார்களும் இயங்கவில்லை. வங்கி ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    கர்நாடகம் முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரு சில பெட்ரோல் பங்க்குகளை தவிர பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் செயல்படவில்லை.

    பெங்களூரு நகரில் முக்கிய வணிக வளாகங்கள் இன்று காலை 6 மணி முதல் திறக்கப்படவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இன்று செயல்படவில்லை.

    குஜராத் மாநிலத்தில் ஏராளமான இடங்களில் காலை மறியல் நடந்தது. முக்கிய சாலைகளில் காங்கிரசார் டயர்களை எரித்தனர். இதனால் குஜராத்தில் முக்கிய நகரங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியது.

    ராஜஸ்தான், அசாம், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா, ஒடிசாவில் காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாக பஸ் மற்றும் ரெயில் மறியல்களில் ஈடுபட்டனர். இதனால் வட மாநிலங்களில் பல நகரங்களில் சாலைப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது. பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.



    மராட்டிய மாநிலம் புனே நகரில் அரசு பஸ்சுக்கு நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தீ வைத்தனர். இதில் அந்த பஸ் எரிந்து நாசமானது. பெங்களூரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கிழக்கு ரெயில்வே மண்டலம் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களை ரத்து செய்தது.

    ஜெய்ப்பூர், சூரத், லக்னோ, பாட்னா, புவனேசுவரம், ஆக்ரா, சண்டிகர், கயா, கவுகாத்தி உள்பட பல நகரங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மைசூரில் சுற்றுலா பயணிகள் வருகையில் 60 சதவீதம் குறைந்திருந்தது.

    மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் வழக்கம் போல ஓடின. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. விஜயவாடாவில் பாதி கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    மும்பையில் 9.45 மணி அளவில் காங்கிரசார் அசோக் சவான் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    முழு அடைப்புப் போராட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனவே வட மாநிலங்களில் இன்று மாலை இயல்பு நிலை திரும்பும். #BharathBandh #PetrolDieselPriceHike #RahulJoinBandh
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், தமிழகம் - கர்நாடகம் இடையேயான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

    தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முழு அடைப்பு காரணமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நிறுத்தப்பட்டன. தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தமிழகம் - கேரளாவுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.



    இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ. 83.91-க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து ரூ. 76.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. #BharathBandh #PetrolDieselPriceHike 

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசு அதிகரித்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது. #PetrolPriceHike
    சென்னை:

    பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை மிகவும் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது.

    கடந்த 5-ந்தேதி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.82.51-க்கு விற்கப்பட்டது.  நேற்று லிட்டருக்கு 10 காசு உயர்ந்து ரூ.82.62-க்கு விற்கப்பட்டது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசு அதிகரித்து ரூ.83.13-க்கு விற்றது.  

    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசு அதிகரித்துள்ளது. இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது.



    இதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்தபடி  உள்ளது. கடந்த 3-ந்தேதி 1 லிட்டர் டீசல் ரூ.75.19-க்கு விற்கப்பட்டது. 4-ந்தேதி 20 காசு அதிகரித்துள்ளது. ரூ.75.39 ஆக உயர்ந்தது. 5-ந்தேதி அதே விலையில் நீடித்தது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61-க்கு விற்கப்பட்டது. நேற்று 56 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கு விற்கப்பட்டது. இன்று லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.76.64-க்கு விற்கப்படுகிறது. #PetrolPriceHike
    டீசல் விலை உயர்வால் ராமேசுவரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது.
    ராமேசுவரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலதரப்பினரை பாதித்துள்ளது. கடந்த மாதம் 75 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 83 ரூபாயை எட்டியுள்ளது.

    முன்பெல்லாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் குறைந்தது 10 ரூபாய் வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு மீனவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வாபஸ் பெற்றனர். வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட டீசல் விசைப்படகுகள் உள்ளன. ஒருமுறை கடலுக்கு செல்ல சிறிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.16 ஆயிரமும், பெரிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.40 ஆயிரம் வரை டீசல் செலவாகும்.

    ஆனால் தற்போது விலை ஏற்றம் காரணமாக மீனவர்களால் அதனை சமாளிக்க முடியவில்லை. இதனால் பலர் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

    இன்று காலை கடலுக்கு செல்ல 450 விசைப் படகுகளுக்கு மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.

    அதில் 100 முதல் 150 பெரிய அளவிலான விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. அனுமதி டோக்கன் பெற்ற மற்றவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். டீசல் போட்டு சென்றாலும் அதற்கேற்ற மீன்வரத்து கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். இதனால் தற்போது நாட்டு படகிலேயே மீன்பிடிக்க செல்கிறோம்.

    பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இஷ்டத்துக்கு உயர்த்தி வருகிறது. இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்ட 2-ம் பொருளாதார சீர்குலைப்பு போர் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். #PetrolDiesel #Narayanasamy
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த விண்ணைமுட்டும் விலை ஏற்றம் மத்திய அரசால் அனைத்து தரப்பு மக்களின் மீதும் கடுமையாக திணிக்கப்பட்டுள்ளது.

    இந்த விலை ஏற்றம் பால், காய்கறி என அன்றாட தேவைக்கான பொருட்கள் மற்றும் அனைத்து பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை உயர்த்தப்படாத போது, திடீரென இவ்வாறு பெட்ரோலிய பொருட்களின் விலை அவசியமின்றி தினந்தோறும் உயர்த்தப்படுவது நியாயமில்லாத ஒன்றாகும்.

    ஏற்கனவே பண மதிப்பிழப்பு எனும் தோல்வியுற்ற திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர இந்திய மக்களின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்தது.

    அதன் பாதிப்பில் இருந்தே இன்னும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீளாமல் இருக்கும் போது இப்போதைய பெட்ரோலிய பொருட்களின் தொடர் விலை உயர்வை, இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்ட 2-ம் பொருளாதார சீர்குலைப்பு போராகவே கருத வேண்டி உள்ளது.

    இதனால் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கும், கடும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளனர். மத சார்பற்ற கூட்டணி அரசின் ஆட்சியின்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர், உள்நாட்டு போர் ஆகியவற்றின் காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்த போதும், பொதுமக்களின் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

    பொதுமக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன், அதனை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolDiesel #Narayanasamy 

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உச்சத்தை எட்டி உள்ளது.

    டீசல் விலை ரூ.70-க்கு மேலும், பெட்ரோல் விலை ரூ.80-க்கு மேலும் அதிகரித்துள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை ரூ.35 அதிகரித்துள்ளது.

    இதை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும் புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காந்திவீதி அமுதசுரபி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் மது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சீனுவாசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டும், எலும்புக்கூடு போல வே‌ஷம் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.

    பெட்ரோல் டீசல் விலை இன்று மேலும் உயர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டதால் விற்பனை விலை சற்று குறைந்தது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி 3 காசுகள், 5 காசுகள் என தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 காசுகள் உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் 81 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோன்று நேற்று முன்தினம் 74 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை ஆனது.



    பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த வாகன ஓட்டிகள் வரலாறு காணாத இந்த விலை உயர்வை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.39 ஆக விற்பனை ஆகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.31-க்கும், டீசல் ரூ.71.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. #PetrolPrice

    நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselHike
    ராமேஸ்வரம்:

    இந்தியாவில் தினமும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால், நிர்ணயிக்கப்படும் விலைகள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர, விலை குறைக்கப்பட்டதாக வரலாறு கொஞ்சமே. இந்த சூழலில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82 ரூபாய் 24 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாய் 19 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரலாறு காணாத இந்த விலை உயர்வை பலரும் எதிர்த்துவரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என கூறும் அவர்கள், விலை குறைக்கப்படும் வரையில், போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது. #PetrolDieselHike
    ×