search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேப்பாக்கம் மைதானம்"

    • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.
    • எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் 2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கு வரும் மக்களின் நலன் கருதி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயண கட்டணம் பெற்று சில முன் ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.

    அதன்படி, பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணிநேரத்துக்கும் பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டிக்கும் மாநகர பஸ்களை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.

    இதற்காக பல பஸ்களைப் பயன்படுத்தியும் மைதானத்துக்கு வந்தடையலாம்.

    போட்டி முடிந்த பின்பு அடையாறு, மந்தவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பஸ்கள் அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோல பாரீஸ் கார்னர், சென்னை கடற்கரை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    ராயப்பேட்டை, மந்தவெளி, நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், எழும்பூர், கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவ்தத் படிக்கல் சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன்கள் குவிப்பு.
    • தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜெகதீசன் மட்டும் தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்தார்.

    தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் இடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் (151 ரன்) அடித்தார். அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 69.2 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இது கர்நாடகா அணியின் ஸ்கோரை விட 215 ரன் குறைவாகும்.

    தமிழக அணியில் பாபா அபரஜித் அதிகபட்சமாக 48 ரன்னும், என்.ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர். கர்நாடகா அணி தரப்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், சசிகுமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    215 ரன்கள் முன்னிலையில் கர்நாடகா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

    • உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது.
    • கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 2-வது போட்டி யில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.

    நேற்று 2 போட்டி நடைபெற்றது. தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், டெல்லியில் நடந்த 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தின.

    உலக கோப்பை போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. இதனால் வெற்றியுடன் தொடங்குவது அவசியமாகும்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியை பார்ப்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. பெரும் அளவில் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

    மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினார்கள். கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையானது. ரசிகர்-ரசிகைகள் தேசிய கொடியை ஆர்வத்துடன் வாங்கி உற்சாகத்துடன் மைதானத்துக்குள் சென்றனர். இதேபோல வீரர்களின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.

    மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர். இதற்கான பணியில் அதற்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். கிரிக்கெட் போட்டியால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

    கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    • எப்போதும் நெருக்கடியாகவே காணப்படும் பெல்ஸ்ரோடு சந்திப்பு பகுதி புதிதாக சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கிறது.
    • சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இரவில் இருந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் முதல்முறையாக டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறும் இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி வழக்கத்தைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக கிரிக்கெட் போட்டியை நடத்தும் அதிகாரிகள் குழுவினருடன் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இந்நிலையில், கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பணிக்காக சென்னையில் முதன் முறையாக டிரோன்களைப் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வானில் இரவிலும் படம் பிடிக்கும் வீடியோ உள்ள டிரோன்களைப் பறக்கவிட்டு, அதில் உள்ள கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதவிர, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி உள்ள அனைத்து சாலை சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் கையடக்க அதி நவீன 10 கேமராக்கள் மூலம் கிரிக்கெட் போட்டி தொடக்கம் முதல் முடியும் வரை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர். கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்கள், அவர்களின் வாகனங்களும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட உள்ளது.

    இந்த காட்சிகள் அனைத்தையும் போலீஸ் அதிகாரிகள் தங்கள் செல்போனிலேயே பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சென்னையில் நாளை நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

    கிரிக்கெட் மைதான வளாகத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தற்போது, போக்குவரத்து காவல் சார்பில் கையடக்க நவீன கேமராக்களும் தற்காலிகமாக பயன்படுத்தப்பட உள்ளன.

    மதியம் 2 மணிக்கு தொடங்கும் கிரிக்கெட் போட்டி, இரவு 10 மணி அளவிலேயே முடிவடைய வாய்ப்பு உள்ளது.

    அதன் பிறகே குடும்பத்தோடு கிரிக்கெட் பார்ப்பதற்கு வருகை தந்தவர்கள் வீடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள். எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு சென்னை ரசிகர்கள் குடும்பத்தோடு செல்வார்கள். குறிப்பாக பெண் ரசிகைகள் அதிக அளவில் காணப்படுவார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கிரிக்கெட் மைதானத்தை சுற்றி இருள் சூழ்ந்து காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருட்டை பயன்படுத்தி திருட்டு, பாலியல் சீண்டல் போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். எரியாத மின்விளக்குகள் பழுது பார்க்கப்பட்டிருப்பதுடன் 50 இடங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கிரிக்கெட் போட்டியை காண வருபவர்கள் கார்-மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் இடத்திலும் கிரிக்கெட் போட்டியை பார்த்து முடித்து ரசிகர்கள் வீடு திரும்பும் சாலைகளை குறிவைத்து புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இதுபோன்ற முக்கிய சாலைகளில் மொத்தம் 55 புதிய கேமராக்கள் நிறுவப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டங்களை பயன்படுத்தி பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எப்போதும் நெருக்கடியாகவே காணப்படும் பெல்ஸ்ரோடு சந்திப்பு பகுதி புதிதாக சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் நடைமேடை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இரவில் இருந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    • நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    பெங்களூரு:

    பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.

    இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டங்களும், 'பிளேஆப்' சுற்றின் 2 போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி 'லீக்' ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்றில் தோற்றது.

    'பிளேஆப்' சுற்றின் 2 ஆட்டங்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) 23-ந்தேதியும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டி 24-ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-இரண்டாவது இடத்தை பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும்.

    புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன. லக்னோ 3-வது இடத்தை பிடித்து உள்ளது. 4-வதாக நுழையும் அணி இன்று இரவு தெரியும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத் தில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    • ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் கூறினர்.
    • குழந்தையின் தாயை காவல்துறையினர் கடுமையாக கண்டித்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையே ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் நேற்று நள்ளிரவு முதலாகவே ஏராளமானோர் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்தனர்.

    இந்நிலையில் டிக்கெட் கவுண்டருக்கு வெளியே மூதாட்டி ஒருவர் ஒரு கையில் 6 மாத கை குழந்தையும் மற்றொரு கையில், இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையும் பிடித்தபடி நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக பதட்டமாக யாரையோ தேடிக் கொண்டிருந்தார்.

    இதுபற்றி மூதாட்டியிடம் விசாரித்தபோது, டிக்கெட் கவுண்டரில் இருந்த ஒரு பெண் இந்த இரு குழந்தைகளும் அந்த மூதாட்டியிடம் சிறிது நேரம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் இரு குழந்தைகளையும் பெற யாரும் வராத நிலையில் மூதாட்டியின் கையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தை பசியால் அழுதது. மூதாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

    இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் காவல் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதனைக் கேட்டு அங்கு வந்த பெண் ஒருவர் மூதாட்டியின் கையில் இருந்த குழந்தையை பெற்றுக்கொண்டு இரு குழந்தைகளும் தனது பேரப்பிள்ளைகள் எனக்கூறி வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த பெண் காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை கோபமாக தலையில் தட்டினார்.

    மேலும் அந்த குழந்தையின் தாய் வந்தால் மட்டுமே குழந்தை ஒப்படைக்கப்படும் என அங்கிருந்த காவலர்கள் கூறியதை அடுத்து டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த இரு குழந்தைகளின் தாயை அந்த பெண்மணி அழைத்து வந்தார்.

    பின்னர் குழந்தையின் தாயை கடுமையாக கண்டித்த காவல்துறையினர் அந்த இரு பெண்களின் முகவரியையும் பெற்றுக் கொண்டு விசாரணைக்கு பின்னர் குழந்தையை ஒப்படைத்தனர்.

    • சேப்பாக்கம் மைதானத்தில் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சிஎஸ்கே இன்று விளையாட உள்ளது.
    • சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தோல்வியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    அந்த அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சேப்பாக்கத்தில் விளையாடுவது சென்னை அணிக்கு சாதகமானது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    அதே நேரத்தில் லக்னோ அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையில் இருக்கிறது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.

    சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலையில் உள்ளார். குஜராத்துக்கு எதிராக அவர் 50 பந்தில் 92 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 9 சிக்சர்கள் அடித்தார். 2021- ம் ஆண்டு சென்னை அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல ருதுராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக விளையாடுகிறார். அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கான்வே, ஜடேஜா, கேப்டன் டோனி, தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்களும் இருக்கி றார்கள. பந்து வீச்சு பலவீன மாகவே காணப்படுகிறது. அதை நிவர்த்தி செய்வது அவசிய மாகிறது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது. இதனால் மொய்ன் அலிக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பந்து வீசவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 56 ஆட்டத்தில் விளையாடி 40-ல் வெற்றி பெற்றது. இதனால் இங்கு இருந்து சி.எஸ்.கே. வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாட உள்ளது. அதேபோல சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    கடந்த 2008 முதல் சேப்பாக்கம் மைதானத்தில் 56 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது. அந்த 56 போட்டிகளிலும் ரெய்னா விளையாடி உள்ளார்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

    • ஏப்ரல் 3 -ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
    • இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை இன்றுடன் முடிவடைந்தது.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன். இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 -ம் தேதி நடக்கிறது.

    இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை முடிவடைந்தது.

    இந்நிலையில் சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதனை காண ரசிகர்களுக்கு கட்டணம் தேவை இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மைதானத்தில் சி, டி மற்றும் இ ஆகிய மூன்று கேலரிகளுக்கு மட்டும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். இதனால் ரசிகர்கள் சேப்பாக்கம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். 

    • அடுத்த மாதம் 3-ந் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
    • இதற்கு முன்பு பிராவோவுக்கு டோனி விசில் அடிக்க கற்றுக் கொடுத்த வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    அடுத்த மாதம் 3-ந் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    சென்னை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் சென்னை அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை அவ்வபோது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளது. முக்கியமாக தல டோனியின் வீடியோவை சென்னை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு டோனி பெயிண்ட் அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்பு பிராவோவுக்கு டோனி விசில் அடிக்க கற்றுக் கொடுத்த வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது. 

    • 1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்ததே சேப்பாக்கத்தில் அதிகபட்ச ஸ்கோராகும்.
    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் 51 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே (2011-இந்தியாவுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாகும்.

    இந்தியாவில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியமாகும்.

    2011 உலக கோப்பை போட்டியையொட்டி இந்த ஸ்டேடியம் ஒவ்வொரு கேலரியாக சீரமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 புதிய கேலரிகள் திறக்கப்பட்டன.

    சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி 1987 அக்டோபர் 9-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக கோப்பைக்கான அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது. கடைசியாக 2019 டிசம்பர் 15-ந் தேதி இங்கு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மோத உள்ளன. சேப்பாக்கத்தில் இதுவரை 23 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்திய அணி 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 7-ல் வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை. ஆஸ்திரேலியா 5 போட்டியில் 4-ல் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. இரு அணிகளும் 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. 2017 செப்டம்பரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்னில் வெற்றி பெற்றது.

    1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதே நேரத்தில் 2007-ல் ஆப்பிரிக்க லெவனுக்கு எதிராக ஆசிய லெவன் 7 விக்கெட்டுக்கு 337 ரன் குவித்து இருந்தது. இந்திய அணி சேப்பாக்கத்தில் அதிகபட்சமாக 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து இருந்தது. 2015 அக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த ரன்னை எடுத்து இருந்தது.

    2011 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கென்யா 69 ரன்னில் சுருண்டது குறைந்தபட்ச ஸ்கோராகும். அதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 103 ரன்னில் (2010) சுருண்டு இருந்தது.

    டோனி 6 ஆட்டத்தில் விளையாடி 401 ரன் எடுத்துள்ளார். சராசரி 100.25 ஆகும். 2 சதமும், ஒரு அரை சதமும் இதில் அடங்கும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக விராட் கோலி 283 ரன் (7 போட்டி) எடுத்துள்ளார். ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் அதிக ரன் எடுத்து சாதனை படைத்து இருந்தார். 1997-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி இந்தியாவுக்கு எதிராக அவர் 146 பந்துகளில் 194 ரன் குவித்தார். இதில் 22 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். அதற்கு அடுத்தப்படியாக டோனியும், ஹெட்மயரும் 139 ரன் எடுத்து இருந்தனர்.

    வங்காளதேச வீரர் முகமது ரபீக் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை (3 போட்டி) கைப்பற்றி இருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக அகர்கர், ஹர்பஜன்சிங் (இந்தியா), அல்பி மார்கல் (தென் ஆப்பிரிக்கா) தலா 7 விக்கெட் எடுத்து இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் 51 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே (2011-இந்தியாவுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாகும்.

    • இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மகிவும் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

    சென்னை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் இன்று மாலை சென்னை வருகிறார்கள். இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.

    பின்னர் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணி வீரர்களும் நாளை பயிற்சி பெறுகிறார்கள்.

    சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மகிவும் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×