search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா வழக்கு"

    • தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது
    • இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது.

    இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கவர்னர் ஒப்புதல் அளித்தும் சிபிஐ இன்னும் பரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதால் கோபமடைந்த நீதிபதி வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • கவர்னரின் அனுமதியால் தற்போது விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இனி தடையின்றி விசாரணை நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
    • குற்றப்பத்திரிகை நகலை நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்வதற்காக சம்மன் அனுப்பப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் செங்குன்றம் பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இந்த குடோனை நடத்தி வந்த அண்ணாநகரை சேர்ந்த மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் சட்ட விரோதமாக குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் லஞ்சம் கொடுத்திருப்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர அப்போது டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரின் பெயர்களும் டைரியில் இடம்பெற்று இருந்தது.

    இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா மற்றும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2021-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


    குட்கா வழக்கில் தொடர்புடையதாக குற்ற சாட்டப்பட்ட முன்னணி அமைச்சர்கள் விஜய பாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து சி.பி.ஐ. கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் இருவர் மீதும் கோர்ட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு கவர்னரின் அனுமதி பெற வேண்டியிருந்தது. இதையடுத்து தமிழக அரசு, விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகிய இருவர் மீதான விசாரணைக்கு அனுமதி கேட்டு கடந்த செப்டம்பர் மாதம் கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி இருந்தது.

    இதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இருவர் மீதான அடுத்த கட்ட விசாரணைக்கான தடை நீங்கியுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதையடுத்து விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இருவர் மீதான தொடர் விசாரணைக்கு அனுமதி கிடைக்காமல் இருந்து வந்ததால் வழக்கு விசாரணை இதுவரை 20 முறை ஒத்திவைக்கப்பட்டு விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

    கவர்னரின் அனுமதியால் தற்போது விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இனி தடையின்றி விசாரணை நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    சி.பி.ஐ. அதிகாரிகளும் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர். தேவைப்பட்டால் விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    விசாரணையின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் பிறகு சி.பி.ஐ. கோர்ட்டில் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் வேகமெடுக்க உள்ளன. விஜய பாஸ்கர், பி.வி.ரமணா இருவருக்கும் கோர்ட்டில் இருந்து விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    குற்றப்பத்திரிகை நகலை நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்வதற்காக இந்த சம்மன் அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் சம்மனை ஏற்று இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள்.

    இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக முடங்கி கிடந்த குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் வேகம் எடுக்க உள்ளது.

    இந்த விசாரணையின் போது முன்னாள் போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராக வாய்ப்பு உள்ளது. வழக்கு விசாரணை தீவிரமாகி இருப்பதையடுத்து முன்னாள் அமைச்சர்களான விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் அதனை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

    • குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின.
    • 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.

    சென்னை:

    சென்னை செங்குன்றம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின. அதில், அப்போதைய அமைச்சர்கள், சென்னை போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இருந்தன.

    இதுகுறித்து, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்று 6 பேரை முதலில் கைது செய்தது.

    இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை முதலில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.

    இதன்படி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறைபாடுகள் இருப்பதாக கூறி திருப்பிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. அதிகாரி ஆஜராகி, "அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. அதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்டு 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி முதல் நேற்று வரை 11 முறை வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
    • கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் இணைந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரவு 8 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) என்பவர் டிரைவராகவும், சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) என்பவர் கிளீனராகவும் இருந்தது தெரிய வந்தது. வேனில் வெங்காய லோடு இருப்பதாகவும் அவை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு எடுத்து செல்வதாகவும் அவர்கள் கூறினர்.

    எனினும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெங்காய மூட்டை அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல் பாக்கு, பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,281 கிலோ புகையிலை பொருட்கள் வெங்காய லோடு அடியில் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன், பிரமோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,281 கிலோ போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இந்த போதைப் பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையத்திற்கு யார் சொல்லி அவர்கள் இந்த போதைப் பொருட்களை கடத்தி சென்றனர். இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மனுதாரர்கள் விற்பனை செய்துள்ளனர்.
    • பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தர், சிவக்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்ததாக எங்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மனுதாரர்கள் விற்பனை செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    மனுதாரர் தரப்பில் கோர்ட்டு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் சண்முக சுந்தர் ரூ.50 ஆயிரமும், சிவக்குமார் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் நெல்லை மருத்துவ கல்லூரிக்கு நலத்திட்ட உதவி தொகையாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2 பேருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
    • முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது

    சென்னை:

    சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

    2017ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    2018-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். 2-வது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய தயாராகிவருகின்றனர்.

    இந்நிலையில், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியது.

    இதையடுத்து, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்த ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் குட்கா வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    ×