search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்நிலையம்"

    • போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
    • பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி, காட்டுப்பள்ளி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள்அதிகரித்து வரும் நிலையில் பொன்னேரி பகுதிகளில் வெளியூர்களில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தற்போது வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அதிகமானோர் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லையான, 8 கி.மீ., சுற்றளவு பகுதிக்குள், 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 44 பெரிய கிராமங்கள், 22 சிறு கிராமங்கள் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகள், ஆண்டார் குப்பம் மேட்டுப்பாளையம், ஆசான புதூர், பெரும்பேடு குப்பம். ஏலியம்பேடு, உள்ளிட்ட சுமார் 80 கிராமங்கள் வருகின்றன.

    பொன்னேரி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 33 காவலர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் என, மொத்தம், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீஸ் பற்றாக்குறையால், பொன்னேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு, குற்றசம்பவங்கள், சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே போலீஸ் பற்றாக்குறையை நீக்கி, இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே 27 சென்ட் இடத்தில் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய நகர போக்குவரத்து காவல் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது.

    கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய காவல் நிலையத்தை காணொலி காட்சி மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகள் நட்டார். அப்போது ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் லாவண்யா, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இரு வீட்டாருடனும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை.
    • திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக மணமகன் வீட்டார் உறுதி அளித்தனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஹேமகுமார் (வயது24) என்பவரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வினிதா(வயது21) என்ற இளம் பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இரண்டு வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி, ஐயர் கண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் இன்று முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், ஆரணி காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையிலான போலீசார் இரண்டு வீட்டாருடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடந்து மணமகன் ஹேமகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது மகனின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர் திருமண ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இப்பிரச்சினையால் ஆரணி காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×