என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிகரெட் சூடு வைத்து சித்ரவதை... உடலில் 50 காயங்கள்... மூளையில் ரத்த கசிவு... அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை
- காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன.
- கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வருகிறார். வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில் 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.
ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும் அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன், மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம், மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்துள்ளது. இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால் ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது.
கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் இரு இடங்கள் மற்றும் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
தரையில் இழுத்துச் சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக்கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.