search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி இறுதி அஞ்சலி"

    ராகுல் பாதுகாப்பில் சென்னை போலீசார் கோட்டை விட்டு விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தமிழக போலீசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். #KarunanidhiFuneral #RahulGandhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 8-ந் தேதி சென்னை வந்தார்.

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நுழைவு வாயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. கலைவாணர் அரங்கம் பகுதி வழியாக முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நரேந்திர மோடி வரும் வரையிலும் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட ஏரியாவாகவே காணப்பட்டது. அதன் பின்னர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தி.மு.க.வினரும், பொது மக்களும் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியிலும் நுழைந்து விட்டனர்.

    இதனால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தியால் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு எளிதாக செல்ல முடியவில்லை. மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே இடிபாடுகளுக்குள் சிக்கி ராகுல் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.


    இதன் மூலம் ராகுல் பாதுகாப்பில் சென்னை போலீசார் கோட்டை விட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தமிழக போலீசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

    ராகுல்காந்தி செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் யார்? யார்? எதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது? என்பது போன்ற கேள்விகளை மத்திய உளவு பிரிவினரும், ராகுல் பாதுகாப்பு அதிகாரிகளும் கேட்டுள்ளனர்.

    இசட்பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அது எதுவும் ராகுல் பாதுகாப்பில் கடைபிடிக்கப்படவில்லை. இதுபற்றி மத்திய அரசுக்கு உளவு பிரிவு அதிகாரிகள் விரிவான அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். இதன் பிறகே மத்திய அரசு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    இதற்கிடையே ராகுல் பாதுகாப்பில் 3 துணை போலீஸ் கமி‌ஷனர்கள் கோட்டை விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    கலைவாணர் அரங்கம் வழியாக ராகுல் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வழியில் 3 துணை கமி‌ஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள்தான் ராகுல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர்கள். ஆனால் இந்த பாதை வழியாக ராகுல் வருவது தெரிந்தும், பொது மக்களையும், தி.மு.க.வினரையும், 3 போலீஸ் அதிகாரிகளும் எப்படி செல்ல அனுமதித்தார்கள்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் சென்னை போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. #KarunanidhiFuneral #RahulGandhi
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஒன்றை சொல்கிறேன்.

    மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நான் (தம்பித்துரை) ஆகிய 3 பேரும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். இதை இல்லையென யாராவது சொல்ல முடியுமா? தமிழக அரசின் சார்பில் என்ன மரியாதை செய்ய வேண்டுமோ? அது எல்லாம் கருணாநிதிக்கு செய்யப்பட்டது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? எனவே பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. புதைக்க இடம் கொடுக்காமலா? மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.


    அண்ணா, எம்.ஜி.ஆர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே காலி செய்ய வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆகவே சட்ட சிக்கல்கள் இருந்ததால் கிண்டியில் இடம் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மெரினாவில் அடக்கம் செய்தார்கள். அதற்கு மேல் தமிழக அரசும் ஆட்சேபனை செய்யவில்லை. எனவே கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள்.

    கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். உழைத்தார். அவரை கட்சியில் இருந்து தி.மு.க.வினர் நீக்கியதால் மக்கள் அவருக்கு முன்னும், பின்னும் இருந்து இயக்கத்தை உருவாக்கினார்கள். அ.தி.மு.க. தனிப்பட்ட ஒருவரால் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது மக்கள் இயக்கம். மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    கருணாநிதி உடல் அடக்கத்துக்கு வந்த ராகுலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #KarunanidhiFuneral #RahulGandhi #EVKSElangovan
    கோபி:

    முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று ராகுல்காந்தி சென்னை வந்தார். அவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை. பொதுமக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு ராகுல்காந்தி தள்ளப்பட்டுவிட்டார்.

    இந்தியாவிலேயே ராகுல் காந்திக்கு முதல்தர பாதுகாப்பு தர வேண்டியது சட்டமாக உள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான பாதுகாப்பையும் இந்த அரசு அளிக்கவில்லை. இது இந்த அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது.


    பிரதமர் மோடிக்கு கொடுத்த பாதுகாப்பை ராகுலுக்கு ஏன் அளிக்கவில்லை? நாங்கள் ராகுலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    இந்தியாவில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ராகுல் காந்திக்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை? என எழுதி வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளவருக்கு பாதுகாப்பு குளறுபடியா? இது சகித்துக்கொள்ள முடியாது. இதை உயர்மட்ட விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiFuneral #Congress #RahulGandhi #EVKSElangovan
    தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் இதுவரை 43 தொண்டர்கள் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.#DMKLeader #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

    அவரது மரணம் தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது.

    கருணாநிதி கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அதிர்ச்சியில் பலர் உயிர் இழந்துள்ளனர்.

    பெரம்பூர் 46-வது வட்டத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் பரசுராமன் தலைவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டார்.

    முகலிவாக்கம் 156-வது வட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    அம்பத்தூர் பகுதி 84-வது வட்ட துணை செயலாளரான கொரட்டூரை சேர்ந்த குமரன் என்பவர் துக்கம் தாங்காமல் தீக்குளித்து இறந்தார்.

    அணைக்கட்டு தொகுதி தொரப்பாடி அரியூர் காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் டி.வி.யில் கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் இறந்து விட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி 7-வது வட்ட துணை செயலாளர் புஷ்பராஜின் தந்தை கோபன் என்ற மனோகரன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    மதுரை ரிசர்வ் லையன் காலங்கரையை சேர்ந்த அழகு ராஜா (27), தி.மு.க. இளைஞரணி உறுப்பினரான இவர் கருணாநிதியின் மரண செய்தியை டி.வி.யில் பார்த்த போது அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலை ஜெகதீஸ் கார்த்திக் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    கருணாநிதியின் உடலை சந்தன பெட்டியில் வைத்து குழிக்குள் இறக்கிய போது டி.வி.யில் செய்தி பார்த்து கொண்டிருந்த குன்றத்தூர் ஒன்றிய கழக நிர்வாகி அருணாசலம் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    இது தவிர கருணாநிதியின் உடலை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைத்திருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிர் இழந்து விட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்ததில் இதுவரை 43 தி.மு.க.வினர் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    செங்கல்பட்டு அருகே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    விருதுநகர் மாவட்டம் வீரசோழம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 50). தி.மு.க.வில் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார்.

    இவர் நேற்று நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதிஅஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதே பகுதியை சேர்ந்த கட்சி தொண்டர்கள் 7 பேருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். டிரைவர் ஜெயமுருகன் காரை ஓட்டினார். மதுராந்தகம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ஜெயமுருகனை ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு மணிவண்ணன் காரை இயக்கினார்.

    செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த டிரைவர் ஜெயமுருகன், பெரியசாமி, மாரிமுத்து, செல்லத்துரை, தங்கப்பாண்டியன், ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த 6 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பலியான மணிவண்ணனுக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் திரண்ட கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதற்கு உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #KarunanidiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் நேற்று வைக்கப்பட்டிருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனி வழியும், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது.

    அவர் சென்றதும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் ஆக்கிரமிக்க தொடங்கினர்.

    மேலும் பன்னோக்கு மருத்துவமனை வழியாகவும் ராஜாஜி அரங்குக்குள் ஏராளமான தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர்.

    இப்படி அத்துமீறி வந்தவர்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த மைக்கில் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் முன்னேறி வந்தனர்.


    அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது சிலர் ஏறி நின்று கொண்டனர். அவர்களையும் மா.சுப்பிரமணியன் எச்சரித்து கீழே இறங்க வைத்தார்.

    அத்துமீறி வந்தவர்களை பார்த்து வரிசையில் வந்து கொண்டிருந்தவர்களும் தங்கள் இஷ்டத்தக்கு செல்ல ஆரம்பித்தனர். இப்படி நுழைந்தவர்களை சமாளிக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தாலும் அவர்களால் கட்சி தொண்டர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியவில்லை. மேலும் அத்துமீறி நுழைந்தவர்கள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்று சூழ்ந்து நின்று கொண்டனர்.

    நுழைவுவாயில் படிகள் அனைத்திலும் ஆக்கிரமித்து உட்கார்ந்து கொண்டனர். இவர்களை அகற்ற முடியாமல் போலீசார் திணறினார்கள்.

    நிலைமை மோசமான பின்புதான் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இதேபோல் இறுதி ஊர்வலத்தின் போதும் அண்ணாசாலையில் இருந்து கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் ரோடுகளில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் ஊர்வலத்தை தொடங்கி விட்டனர். இதனால் வழி நெடுகிலும் கடும் சிரமத்துக்கு இடையே ஊர்வலம் சென்றது.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால் அஞ்சலி செலுத்த வந்த பலரும் சிரமம் அடைந்தனர்.

    இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த விசயத்தில் போலீசாரை குறை கூறக்கூடாது. அவர்கள் கால் கடுக்க நின்று பாதுகாப்பு கொடுத்தார்கள். தூக்கம் இன்றி, சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களாக கஷ்டப்பட்டார்கள். பெண் போலீசாரின் நிலைமை மிகவும் பரிதாபமானது.

    ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தகுந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

    ராஜாஜி ஹாலில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டும், எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போல்தான் காலை 11 மணி வரை நடந்து கொண்டனர்.

    நிலைமை மோசமான பிறகுதான் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக வந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த அலட்சியமும் உயிரிழப்புக்கு ஒரு காரணமாகும் என்றார். #DMK #Karunanidhi #KarunanidiFuneral
    ×