search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi dies"

    கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்காதது பா.ஜனதாவுக்குத்தான் இழப்பே தவிர தி.மு.க.வுக்கு இல்லை என்று திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin #BJP
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மறைந்த கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்ளாதது குறித்து பா.ஜனதாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் கலந்து கொள்ளாதது பா.ஜனதாவுக்குத்தான் இழப்பே தவிர தி.மு.க.வுக்கு இல்லை.

    பா.ஜனதா தலைவர்கள் வருகைக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி நன்றாகத்தான் உள்ளது.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று தனது முதல் உரையிலேயே மத்திய அரசின் காவி மயமாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.


    இதிலேயே பா.ஜனதாவுடன் ஸ்டாலின் எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லையா? தி.மு.க.வின் நிலை, பா.ஜனதாவின் காவிமயமாக்குதலை அகற்ற வேண்டும், மோடியை அகற்ற வேண்டும், இங்குள்ள ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் சார்பில் நான் வரவேற்கிறேன். பெரியார், அண்ணாவின் வழியில் ஸ்டாலின் வருகிறார்.

    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அவர்கள் பதவி ரத்தானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது, ஆட்சி கவிழும்.

    ஏப்ரல், மே மாதத்தில் வரவேண்டிய நாடாளுமன்ற தேர்தல் முன் கூட்டியே டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் வர வாய்ப்பு உள்ளது. அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாக வைக்க முடியாது, இது சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin #BJP
    குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் எந்த சூழ்நிலையிலும் பிரிந்து விடக்கூடாது என்றும் கருணாநிதி அடிக்கடி கூறுவார் என்று அவருடைய மகள் செல்வி கூறினார். #Karunanidhi #KarunanidhiDaughter #Selvi
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அப்பா எப்போதுமே குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் காட்டுவார். தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பேரக்குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார். அதனால் எல்லா குழந்தைகளுமே தமிழில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தன.

    வெளியூர்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு நானும் அம்மாவும், அப்பாவுடன் செல்வோம். கூட்டம் முடிந்தவுடன் என்னம்மா கூட்டம் எப்படி இருந்தது என்று கேட்பார்.

    அது தொடர்பாக ஏதாவது கருத்துக்களை கூறினால் கேட்டுக்கொள்வார். குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளிப்பார்.


    சினிமா பார்ப்பதற்கு பிரிவியூ காட்சிகளுக்கு அப்பா அடிக்கடி செல்வார். அப்போது குடும்பத்தில் உள்ளவர்களையும் அழைத்துச் செல்வார். நானும் அப்பாவுடன் சென்று படம் பார்த்துள்ளேன். வெளியூர்களில் நடக்கும் கூட்டத்துக்கு காரில் செல்லும் போது கட்சி தலைவர்களும் எங்களுடன் காரிலேயே வருவார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டே பயணிப்பார்.

    அப்பாவை சந்திக்க வரும் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பார்.

    ஒருமுறை அப்பாவை பார்ப்பதற்காக நாவலர் நெடுஞ்செழியன் வீட்டுக்கு வந்திருந்தார். நான் அப்பாவிடம் போய் நெடுஞ்செழியன் வந்திருக்கிறார் என்று கூறினேன். கோபத்தில் திட்டி விட்டார். அப்படியெல்லாம் பெயர் சொல்லக்கூடாது நாவலர் என்றே அழைக்க வேண்டும் என்றார். இதே போல அன்பழகனை பேராசிரியர் என்றே கூப்பிட வேண்டும் என்பார். மற்றபடி எந்த வி‌ஷயத்துக்கும் அப்பா எங்களை திட்டியது இல்லை.

    சிறு வயதில் சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க ஸ்டாலினையும், என்னையும் அழைத்துச் சென்றனர். ஸ்டாலின் என்கிற பெயருக்கு சீட் தர முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டது.

    இதுபற்றி அப்பாவிடம் கூறியதும், அப்படி ஒரு பள்ளியில் படிக்க வேண்டியதில்லை என்று கூறி வேறு பள்ளியில் சேர்த்து விட்டார்.

    தமிழ்நாட்டில் பெரியார் மண்ணான ஈரோடு, அண்ணா பிறந்த காஞ்சீபுரம், திருவாரூர் ஆகியவை கருணாநிதிக்கு பிடித்தமான ஊர்களாகும்.

    எனது திருமணத்தை பொறுத்த வரையில் எனக்கு கணவர் யார் என்பதை நான் பிறந்தவுடனேயே அப்பா முடிவு செய்து விட்டார்.

    நான் பிறந்தவுடன், தனது அக்காவுக்கு எழுதிய கடிதத்தில் செல்வத்துக்கு செல்வி பிறந்து விட்டாள் என்று குறிப்பிட்டுள்ளார். பெரியவளானதும், இவர் தான் எனக்கு கணவராக வரப்போகிறவர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

    அண்ணா முன்பு எங்களையெல்லாம் வசனம் பேச சொல்வார். அழகிரி அண்ணன் நன்றாக வசனம் பேசி காட்டுவார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிரிந்து விடக்கூடாது என்று அடிக்கடி கூறுவார். அத்தையும் இதையே எங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அம்மா வைக்கும் மீன் குழம்பு அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.


    சில ஆண்டுகளாகவே நான் அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது என்னை பார்த்து நன்றாக ஊட்டி விடுகிறாயேம்மா என்று கூறி இருக்கிறார். (இப்படி கூறும்போது கதறி அழுதார்)

    பிற கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க வரும் போது அவர்களுக்கு பிடித்ததை செய்து தரச்சொல்லி கொடுப்பார். ஒருமுறை இந்திராகாந்தியை பார்க்க டெல்லி சென்றபோது எங்களையும் அழைத்துச் சென்றார். அவருடன் அமர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியாது.

    அப்பாவுக்கு எப்போதுமே வேட்டி-சட்டை அணிவது தான் பிடிக்கும். ஒரே ஒரு முறைதான் பேண்ட் அணிந்திருப்பார் என்று நினைக்கிறேன். அப்பாவின் மறைவை வெறுமையாகவே உணர்கிறேன்.

    இவ்வாறு செல்வி கூறினார். #Karunanidhi #KarunanidhiDaughter #Selvi
    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 5 ஊர்களில் "கலைஞரின் புகழுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. #DMK #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 5 ஊர்களில் "கலைஞரின் புகழுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 17-ந்தேதி திருச்சியில் “கருத்துரிமை காத்த கலைஞர்” என்ற தலைப்பிலும், 19-ந்தேதி மதுரையில் “முத்தமிழ் வித்தகர்” என்ற தலைப்பிலும், 25-ந்தேதி கோவையில் “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பிலும், 26-ந்தேதி நெல்லையில் “அரசியல் ஆளுமை, கலைஞர்” என்ற தலைப்பிலும் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    30-ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் “தெற்கில் உதித்தெழுந்த சூரியன்” என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய அளவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கருணாநிதி பற்றி பேச உள்ளனர். #DMK #Karunanidhi
    பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய கருணாநிதிக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர், கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்று விட்டார்கள்.

    ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் அணைந்து போனது. ஓயாத கடல் அலை போல உழைத்துக் கொண்டிருந்த ‘தமிழர்களின் சகாப்தம்’ தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.

    இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்த மக்கள் தலைவர் கலைஞர் ஒருவரே என்றால் அது மிகையல்ல.

    மேடையில் வீசிய மெல்லியப் பூங்காற்றாய், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவர், தன் ஈடற்ற எழுத்து வன்மையால் தமிழ் அன்னைக்கு முத்தாரங்கள் பலவற்றை அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்த வித்தகப் பெருமகன் கலைஞர்.

    வான்புகழ்கொண்ட வள்ளுவரின் குறளுக்கு அவர் தீட்டிய ‘குறளோவியம்’ தமிழரின் தொன்மைச் சிறப்பை இயம்பும் ‘தொல்காப்பியப் பூங்கா’, தமிழ் இனத்தின் பழைய பண்பாட்டின் புதிய வடிவத்தை கண்முன் நிறுத்தும் ‘சங்கத் தமிழ்’, கடலாண்ட தமிழனின் வரலாற்றைக் கூறும் ‘ரோமாபுரிப் பாண்டியன்’, தமிழ் மண்ணின் வீரம் மணக்கும் ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பொன்னர் சங்கர்’ போன்றவை கலைஞரின் சாகாவரம் பெற்ற இலக்கியப் படைப்புகள் ஆகும்.


    தமிழ்த் திரை உலகில் பேனா முனையில் புரட்சி கர வசனங்கள் தீட்டி, வண்ணத் தமிழுக்கு மேலும் அணிசேர்த்து காவியப் புகழ் கொண்டவர் கலைஞர்.

    ஐந்துமுறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, மக்கள் பணி ஆற்றிய கலைஞர், ஆட்சித் துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்.

    இந்திய ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப்பேரவையில் ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கலைஞருக்கு மட்டுமே உரியது ஆகும்.

    திராவிட இயக்கத்தின் ஆணி வேரான ‘சமூக நீதி’ தழைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

    செம்மொழித் தமிழுக்கு சிறப்பான திட்டங்களால் பெருமை சேர்த்தவர். எண்ணிலடங்கா சமூக நலத் திட்டங்களுக்கு முன்னோடியான மாநிலம் தமிழ்நாடு என்ற கீர்த்தி கலைஞரால்தான் கிடைத்தது.

    பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கிட சட்டம், வேளாண்மை செழிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சி, தொழில் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, இவையெல்லாம் கலைஞரின் ஆட்சித் திறனுக்கு சான்று கூறும் சரித்திரச் சாதனைகள் ஆகும்.

    தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ கொண்டு வந்த பெருமை கலைஞரையே சேரும்.

    இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய கலைஞருக்கு இந்திய அரசு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #Karunanidhi #MDMK #Vaiko

    கருணாநிதி இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை கணபதி பாரதி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). தி.மு.க. தொண்டர். மேலும் தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாரதி நகரில் சாலை ஓரம் வி‌ஷம் குடித்த நிலையில் முத்துச்சாமி மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். முத்துச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி முத்துச்சாமி இறந்தார்.

    அவர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது பெயர், அவரது மகன் பெயர், செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அடிக்கடி தீ விபத்தில் சிக்கிய குடிசைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றியதற்கு கருணாநிதி தான் காரணம். அவர் கொண்டு வந்த பல திட்டங்களில் சில உன்னத திட்டமாக கருதப்படுகிறது. #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    சென்னை நகரில் ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகளாக இருந்தன. இன்று அவையெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறியிருக்கின்றன.

    இதற்கு கருணாநிதி தான் காரணம். அவர் கொண்டு வந்த பல திட்டங்களில் சில உன்னத திட்டமாக கருதப்படுகிறது. இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மத்தியில் கருணாநிதியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நந்தனம், டேங்க் பண்ட் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும் செங்குட்டுவன் இது பற்றி கூறும் போது, நான் 5 வயதாக இருந்த போது ஓலைக் குடிசையில் இருந்தோம். இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு அனைத்து குடிசைகளும் நாசமாகி விடும். எனது 12 வயது வரை இந்த நிலை தான் நீடித்து வந்தது. அப்போது தான் நாங்கள் இருந்த வீட்டை கான்கிரீட் கட்டிடமாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிக் கொடுத்தது. அதன் பிறகு தான் நிம்மதியாக இருக்கிறோம் என்றார்.

    1970-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது தான் குடிசைகளை கான்கிரீட் கட்டடிமாக மாற்றும் வகையில் குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தார்.

    இது பற்றி சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, முந்தைய காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எல்லா வருவாய் தரப்பினருக்கும் வீடுகளை உருவாக்கியது. கருணாநிதி தான் குடிசை வாழ் மக்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்ட வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை தனியாக உருவாக்கினார். அதே நேரத்தில் மக்களுக்கு தாங்கள் குடியிருந்த இடங்களிலேயே வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவை போதுமான அளவுக்கு நிலம் இல்லை என்பதால் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்தை உருவாக்கினார். இதனால் மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே குடியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்று கூறினார்.

    நொச்சிக்குப்பத்தில் அன்றை காலக்கட்டத்தில் 1200 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது 40) கூறும் போது, எத்தனையோ கட்சிகள் வந்தன. ஆனாலும் கருணாநிதிக்கு தான் இப்படியொரு திட்டம் தோன்றியது. அவர் எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார். அவருடைய மறைவு எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி தமிழ்நாடு என்ன ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது என்றார்.

    சூரியா நகரைச் சேர்ந்த தமிழரசி கூறும் போது, 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடிசைகளையெல்லாம் மாற்றி கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்தார். நாங்கள் புதிய வீட்டிற்கு வந்த போது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். கடந்த காலங்களில் மின்சாரம் கூட இல்லாமல் தவித்தோம். இப்போது பூங்கா, உடற்பயிற்சி கூடம், பள்ளி கூடம், குடிநீர் என அனைத்து வசதிகளுடன் வாழ்கிறோம் என்று கூறினார்.

    சமூக ஆர்வலர் கீதா கூறும் போது, சென்னையில் தொழிலாளர் வர்க்கம் குடிசை பகுதிகளில் தான் வாழ்வதை அடையாளம் கண்ட கருணாநிதி அவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி வீடுகளை கட்டிக்கொடுத்தார். அவர்களின் குடிசை வீடுகள் மழையாலும், தீயாலும் அடிக்கடி பாதித்து வந்த நிலையில் அதில் மாற்றத்தை உருவாக்கும் வகையில் இந்த வீடுகள் அமைந்தன என்று கூறினார்.

    குடிசை மாற்று வாரியம் மூலம் சென்னையில் மட்டும் சுமார் 69 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #DMKLeader #Karunanidhi
    இன்று சென்னையின் முக்கிய அடையாளங்களாக அண்ணா நகர், அசோக் நகர், கே.கே. நகர் போன்ற இடங்கள் உள்ளன. இந்த நகரங்களை எல்லாம் கருணாநிதி தான் உருவாக்கினார். #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    1968-ல் அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவர் சென்னையின் பிரதான நகரை ஒட்டி உள்ள மற்ற பகுதிகளையும் புதிய நகராக உருவாக்க வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்தார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அப்போது அண்ணா நகர் உருவாக்கப்பட்டது. இந்த பகுதி அந்த நேரத்தில் செங்கல் சூளை நிறைந்த இடமாகவும், புதர்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது.

    இன்று சென்னையின் பிரமாண்ட நகரமாகவும், முதன்மையான நகரமாகவும் அண்ணா நகர் மாறி இருக்கிறது. இதை அண்ணா நகரில் வசிக்கும் மக்களில் பலரும் கருணாநிதியின் சாதனை என்றும் நினைவு கூருகின்றனர்.

    அண்ணா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறும்போது, இந்த பகுதி முழுவதும் செம்மண் நிறைந்த பகுதியாக இருந்தது. மேலும் சதுப்பு பகுதியாகவும் காணப்பட்டது. கருணாநிதி காலத்தில் தான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் இந்த நகரம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது.

    இன்று எல்லா வருவாய் தரப்பினரும் வசிக்கும் பகுதியாக அண்ணாநகர் இருக்கிறது என்று கூறினார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்ணாநகர் மட்டும் அல்ல சென்னையின் பல பிரதான நகரங்களை கருணாநிதி உருவாக்கினார். கே.கே. நகர், அசோக்நகர், கொளத்தூர், எம்.கே.பி. நகர், மணலி, சோழிங்கநல்லூர் மற்றும் பல இடங்களில் அவரால் நகரங்கள் உருவாக்கப்பட்டன.


    கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நகரங்களை உருவாக்கிய அளவிற்கு அவருக்கு பின்னால் வந்தவர்கள் உருவாக்கவில்லை என்று கூறினார்.

    கோவை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் திராவிடமணி கூறும்போது, 1970-ம் ஆண்டு வாக்கில் மாநிலத்தில் பல இடங்களில் குடிசை வீடுகள் தான் இருந்தன. அவை தீ பிடிப்பது, மழையால் கடுமையாக சேதம் அடைவது போன்றவற்றை சந்தித்தன.

    இதற்கு மாற்றாகத்தான் வளர்ச்சி அடைந்த நகரங்களை கருணாநிதி உருவாக்கினார் என்று கூறினார்.

    1972-ல் வீடுகள் கட்ட உதவும் வகையில் நிலக்கரி சாம்பல் மற்றும் பல்வேறு மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கும் செல்லுலர் கான்கிரீட் தொழிற்சாலையை கருணாநிதி எண்ணூரில் உருவாக்கினார். பின்னர் 1992-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அது மூடப்பட்டு விட்டது.

    சென்னையை சேர்ந்த தி.மு.க. தொண்டர் முருகன் கூறும்போது, கருணாநிதியின் திட்டங்களால் தான் சென்னை நகரம் விரிவடைந்தது. பல்வேறு துணை நகரங்களையும் அவர் கொண்டு வந்தார். அவர் சென்னையில் உருவாக்கிய அண்ணா நகர் போல எல்லா நகரங்களிலும் குறைந்த வருவாயினரும் வீடு கட்டி குடியிருக்கும் வகையில் நகரங்களை உருவாக்கினார் என்றார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் 2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வீட்டு வசதி திட்டங்களை நிறுத்திவிட்டார்கள் என்று கூறினார். #DMKLeader #Karunanidhi
    தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் இதுவரை 43 தொண்டர்கள் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.#DMKLeader #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

    அவரது மரணம் தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது.

    கருணாநிதி கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அதிர்ச்சியில் பலர் உயிர் இழந்துள்ளனர்.

    பெரம்பூர் 46-வது வட்டத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் பரசுராமன் தலைவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டார்.

    முகலிவாக்கம் 156-வது வட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    அம்பத்தூர் பகுதி 84-வது வட்ட துணை செயலாளரான கொரட்டூரை சேர்ந்த குமரன் என்பவர் துக்கம் தாங்காமல் தீக்குளித்து இறந்தார்.

    அணைக்கட்டு தொகுதி தொரப்பாடி அரியூர் காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் டி.வி.யில் கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் இறந்து விட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி 7-வது வட்ட துணை செயலாளர் புஷ்பராஜின் தந்தை கோபன் என்ற மனோகரன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    மதுரை ரிசர்வ் லையன் காலங்கரையை சேர்ந்த அழகு ராஜா (27), தி.மு.க. இளைஞரணி உறுப்பினரான இவர் கருணாநிதியின் மரண செய்தியை டி.வி.யில் பார்த்த போது அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலை ஜெகதீஸ் கார்த்திக் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    கருணாநிதியின் உடலை சந்தன பெட்டியில் வைத்து குழிக்குள் இறக்கிய போது டி.வி.யில் செய்தி பார்த்து கொண்டிருந்த குன்றத்தூர் ஒன்றிய கழக நிர்வாகி அருணாசலம் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

    இது தவிர கருணாநிதியின் உடலை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைத்திருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிர் இழந்து விட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்ததில் இதுவரை 43 தி.மு.க.வினர் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய ராமேசுவரம் பகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
    ராமேசுவரம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்தார். அவரது ஆத்மா சாந்தியடைய ராமேசுவரம் பகுதியில் தி.மு.க. தொண்டர்கள், முன்னாள் நகரச் செயலாளர் ஜான்பாய் தலைமையில் அக்னிதீர்த்தம் கடற்கரையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ராமேசுவரம் ராமதீர்த்தம் பகுதியில் தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    ராமேசுவரம் பகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் ராமேசுவரம் கோவில் காவல் நிலையம் முன்பிருந்து தொடங்கியது.

    திட்டகுடி, மேலவாசல், நகை கடைபஜார், தேவர் சிலை,ரெயில் நிலையம், காந்தி நகர், தீட்சிதர் கொல்லை வழியாக பஸ் நிலையம் வந்தடைந்தனர்.

    அங்கு அனைத்துக் கட்சியினர், ராமேசுவரம் நகர நிர்வாகிகள், கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை குறித்தும், சாதனைகள் குறித்தும் பேசினர்.

    அதன் பின்னர் தி.மு.க. தொண்டர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய முடி காணிக்கை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் நிர்வாகி கருணாகரன், டிடிவி கட்சியின் நகரத்தலைவர் பிச்சை, வக்கீல் சங்க தலைவர் ஜோதிமுருகன்,செயலாளர் பிரபாகரன், மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ் உள்பட 500-க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி பகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை தி.மு.க.வினர் மவுனமாக ஊர்வலமாக சென்றனர்.

    இதில் மாவட்ட பிரதிநிதி சவுந்திரபாண்டி உள்பட அனைத்து கட்சியினர், அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.
    திமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது வளரும் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். 

    இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான ‘அனைத்து மாணவர்களின் கழகம்’ என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. 

    கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசொலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். 



    கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, 1953-ம் ஆண்டு கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. 

    தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் ரெயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரெயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்

    1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் மத்தியஅரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1957-ம் ஆண்டு அக்டோபரில் அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. 



    1963-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று ஐகோர்ட் உத்தரவால் விடுவிக்கப்பட்டனர்.

    1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

    1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிய பிடித்தது. தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

    1969 - 1971, 1971 - 1976, 1989 - 1991, 1996 - 2001, 2006 - 2011  ஆகிய ஆண்டுகளில் அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார். இன்றளவும் பெருமையாக கூறக்கூடிய, இன்றைய தேதியிலும் மற்ற மாநிலங்கள் கொண்டு வராத பல முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை அவர் தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தினார். 
    ×