search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சி கூட்டத்தை கட்டுப்படுத்த போராடிய போலீசார்- அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
    X

    கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சி கூட்டத்தை கட்டுப்படுத்த போராடிய போலீசார்- அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

    கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் திரண்ட கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதற்கு உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #KarunanidiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் நேற்று வைக்கப்பட்டிருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனி வழியும், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது.

    அவர் சென்றதும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் ஆக்கிரமிக்க தொடங்கினர்.

    மேலும் பன்னோக்கு மருத்துவமனை வழியாகவும் ராஜாஜி அரங்குக்குள் ஏராளமான தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர்.

    இப்படி அத்துமீறி வந்தவர்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த மைக்கில் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் முன்னேறி வந்தனர்.


    அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது சிலர் ஏறி நின்று கொண்டனர். அவர்களையும் மா.சுப்பிரமணியன் எச்சரித்து கீழே இறங்க வைத்தார்.

    அத்துமீறி வந்தவர்களை பார்த்து வரிசையில் வந்து கொண்டிருந்தவர்களும் தங்கள் இஷ்டத்தக்கு செல்ல ஆரம்பித்தனர். இப்படி நுழைந்தவர்களை சமாளிக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தாலும் அவர்களால் கட்சி தொண்டர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியவில்லை. மேலும் அத்துமீறி நுழைந்தவர்கள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்று சூழ்ந்து நின்று கொண்டனர்.

    நுழைவுவாயில் படிகள் அனைத்திலும் ஆக்கிரமித்து உட்கார்ந்து கொண்டனர். இவர்களை அகற்ற முடியாமல் போலீசார் திணறினார்கள்.

    நிலைமை மோசமான பின்புதான் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இதேபோல் இறுதி ஊர்வலத்தின் போதும் அண்ணாசாலையில் இருந்து கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் ரோடுகளில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் ஊர்வலத்தை தொடங்கி விட்டனர். இதனால் வழி நெடுகிலும் கடும் சிரமத்துக்கு இடையே ஊர்வலம் சென்றது.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால் அஞ்சலி செலுத்த வந்த பலரும் சிரமம் அடைந்தனர்.

    இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த விசயத்தில் போலீசாரை குறை கூறக்கூடாது. அவர்கள் கால் கடுக்க நின்று பாதுகாப்பு கொடுத்தார்கள். தூக்கம் இன்றி, சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களாக கஷ்டப்பட்டார்கள். பெண் போலீசாரின் நிலைமை மிகவும் பரிதாபமானது.

    ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தகுந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

    ராஜாஜி ஹாலில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டும், எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போல்தான் காலை 11 மணி வரை நடந்து கொண்டனர்.

    நிலைமை மோசமான பிறகுதான் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக வந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த அலட்சியமும் உயிரிழப்புக்கு ஒரு காரணமாகும் என்றார். #DMK #Karunanidhi #KarunanidiFuneral
    Next Story
    ×