search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கிழக்கு தொகுதி"

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    அவிநாசி:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வருகிற ஏப்ரல் மாதம் திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம் தேர்தல் பிரசாரத்தின் போது துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும் திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம் என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதி களையும் அவர்கள் அளிக்கக்கூடும்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

    • எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வினர் இந்த தொகுதியில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 6 மாத காலத்தில் 1973-ல் திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றி 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் ஆவார். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் துணிச்சலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    • அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்த ஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.

    ஈரோடு:

    அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி தொடங்கியது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மபடி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் தேர்தல் பணி தொடங்கி விட்டார்கள். கூட்டத்தில்கூட கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்தஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.

    அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதி ஜனதா ஆகிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 18 மாதமாக பல்வேறு பிரச்சினைகள் மக்கள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இந்த தேர்தலை பொருத்தவரை நாங்கள் அ.தி.மு.க. தலைமையில் தி.மு.க. அரசின் விரோத போக்கை எடுத்து கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

    • அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்னும் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் பூத்து கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் துர்திஷ்டவசமானது என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கை காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு என பல பொருட்கள் விலை உயர்ந்து விட்டன. இதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்றார்.

    இதில் பகுதிச்செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயராஜ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்கல் மாவட்ட இணை செயலாளர் மாதையன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.

    ஈரோடு:

    தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ந் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 23 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால் தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதன்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே மக்கள் மத்தியில் ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தி.மு.க. போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் பிரபலமான ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தற்போதே தங்களுக்கு தெரிந்த தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.

    அதேபோல் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதில் 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். ஆனாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் யுவராஜா கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

    எனவே இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்குதொகுதி மாநகராட்சி மற்றும் சில கிராம பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

    கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானி சாகர், பெருந்துறை, பவானி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.கவும் வெற்றி பெற்றது.

    மொத்தம் உள்ள 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை காட்ட அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என்று தெரிகிறது.

    அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்க்க தி.மு.க.வும் தயாராகி வருகிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கோட்டை அல்ல அது தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும்.

    அ.தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்கொள்ள தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர். இதனால் இந்த இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பா.ஜனதாவும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று கூறி வருகிறது. இங்கு தான் பா.ஜனதாவுக்கு 2 பெண் எம்.எல்.ஏக்கள் ( வானதி சீனிவாசன், சரஸ்வதி) உள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில் கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க., தனித்துப்போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில் மீண்டும் இதை செய்ய தயங்காது என்றும், தி.மு.க. கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி என்று பேசினார். மேலும் சில அ.தி.மு.க.வினரும் பா.ஜனதாவினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே அதற்கு முன்னோட்டமாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும் சரியான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்த பா.ஜனதா தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தங்கள் ஆட்சியின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே போல் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்பதை நிருபிக்க எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே தி.மு.க., அ.தி.மு.க.வே நேரடியாக மோதுமா? அல்லது கடந்த தேர்தல் போல் கூட்டணி கட்சிகளுக்கே போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்குமா? என்று தேர்தல் தேதி அறிவித்தப்பின் தெரியவரும்.

    இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரம் குறித்து உளவுப்பிரிவு போலீசாரும் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×