search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்"

    • சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
    • தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பினனர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதையொட்டி பஸ் , ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர். அப்போது தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையம், ஓமலூர், வாழப்பாடி, நத்தக்கரை, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம், கூடுதல் நபர்களை ஏற்றி சென்றது உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கூறி 40 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
    • ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதாலும் அதன்பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் மற்றும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்த நிலையில் சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    திருநெல்வேலிக்கு ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதேபோல் கோவை, மதுரைக்கு ரூ. 2 ஆயிரம், திருச்சிக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் விரைவான சொகுசு பயணம் என்பதால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    நாளை(வியாழக்கிழமை) சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 1500 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட உள்ளது.

    இதில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு மூலம் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 7,154 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர்
    • ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து அரசின் அனுமதியை பெற்றனர்.

    வார நாட்களில் ஆம்னி பஸ்கள் காலியாக ஓடுவதாகவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இடங்கள் நிரம்புவதாகவும் இதனால் ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்து கட்டணத்தை நிர்ணயித்தனர். ஏ.சி. இருக்கை, படுக்கை, ஏசி இல்லாத பஸ்களில் இருக்கை, படுக்கை என கட்டணங்களை பஸ்சின் வசதிக்கேற்ப நிர்ணயித்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தேவை அதிகரித்து வருவதால் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஏற்கனவே கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் தேவையை அறிந்து மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    ஒரு சில ஆம்னிபஸ் ஆபரேட்டர்கள் தாங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு புஷ்பேக் இருக்கை கட்டணம் ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலித்தனர். தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தினர். படுக்கை கட்டணம் ரூ.1,500 ஆக இருந்தது. அவை ரூ.2000 ரூ.2,500 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை ரூ.1,800 முதல் ரூ.2000 வரை வசூலித்த நிலையில் தற்போது ரூ.3000 வரை வசூலிக்கின்றனர்.


    ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.4000 வசூலிப்பதாக தென் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு அதை விட கூடுதலாக ரூ.4,500 வரை பெறப்படுகிறது.

    ஆனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.3,140 ஆகும். கூடுதலாக 1000 ரூபாய் வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதே போல திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ் ஆபரேட்டர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பண்டிகை காலங்களில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பு, சோதனையை தீவிரப்படுத்தி பொதுமக்களிடம் பல மடங்கு கூடுதாக வசூலிக்கும் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    ஆம்னி பஸ்களில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வெளிப்படையாக நடக்கும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

    இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் பஸ்களை பறிமுதல் செய்வதோடு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    • வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.
    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    சேலம்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி ரெயில்கள், பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி சேலம் சரகத்துக்குட்பட்ட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தொப்பூர், ஓமலூர், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. மொத்தம் 715 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா?, அதிக பயணிகள் உள்ளார்களா?, சாலை வரி கட்டுப்பட்டுள்ளதா?, உரிமம் பெற்று இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 78 பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    • ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும்.
    • ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும்

    சென்னை:

    பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அநியாய கட்டண வசூல் என்பது வாடிக்கையாக நடப்பதுதான்.

    மக்கள் 4 நாள் சத்தம் போடுவார்கள். அதன் பிறகு அவர்களுடைய கவனம் திரும்பிவிடும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் தான் அதிகமாகவே இருக்கும். இப்போது அதே நிலைக்கு அதிகாரிகளும் வந்து விட்டது துரதிஷ்டம். என்ன தான் அரசியல்வாதிகள் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் நிர்வாகத்தை சீராகவும், முறையாகவும் நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம் தான் இருக்கிறது. ஆனால் இவர்களும் இப்போது அரசியல்வாதிகளை போலவே மாறிவிட்டார்கள்.

    ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும். அது இரண்டு, 3 நாட்கள் பரபரப்பாக பேசப்படும். போக்குவரத்து துறை அதிகாரிகளும் அதிக கட்டணம் வசூலித்தால் பஸ் பறிமுதல் செய்யப்படும், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் பரபரப்பாக அறிவிப்பார்கள்.

    இது ஒவ்வொரு பண்டிகைக்கும் நடக்கும். பண்டிகை முடிந்ததும் மறந்து போகும். இப்போதும் புத்தாண்டுக்காக ஊர் சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள். மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2500, நாகர்கோவிலில் இருந்து ரூ.3500 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதே நேரம் இதுபற்றி ஆம்னி பஸ் தரப்பில் கேட்டால் நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. இவ்வளவு கட்டணம் போட்டு இருக்கிறோம். விருப்பம் இருந்தால் வாருங்கள், விருப்பம் இல்லை என்றால் போங்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லுகிறார்கள்.

    இந்த கட்டண உயர்வு என்பது ஏதோ ரகசியமாக அவர்கள் வசூலிக்கவில்லை. ஆன்லைன் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். வெளிப்படையாகவே தெரிகிறது. இது தெரிந்த பிறகும் அதிகாரிகளால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? இதற்காக பஸ்சில் சென்று சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை.

    ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும். அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

    அதேபோல் இணைய தளத்திலும் அரசு நிர்ணயித்து இருக்கும் தொகை ஒவ்வொரு ஊருக்கும் இவ்வளவுதான். இதற்கு மேல் கட்டணங்களை வெளியிட்டால் அந்த இணைய தளமும் முடக்கப்படும் என்று அரசாங்கமும் எச்சரித்தால் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.

    திருவிழாக்களில் மட்டும் திறக்கப்படும் திடீர் கடைகளை போல பண்டிகை காலங்களில் மட்டும் ஓட்டுகின்ற பஸ்களும் இருக்கின்றன. நிரந்தரமாக தினசரி சர்வீஸ் பஸ்களும் இருக்கின்றன. அவ்வாறு தினசரி ஓடுகின்ற பஸ்களில் நிரந்தரமாக ஒரு கட்டணத்தை வைத்துள்ளார்கள். அதே நேரம் திருவிழாவுக்காக ஓட்டுபவர்கள் மனம்போல் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். நேற்று புத்தாண்டு தினம்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகமிக குறைவு. எனவே நேற்று ரூ.500 கட்டணத்தில் நாகர்கோவில் வரை இயக்கி இருக்கிறார்கள். இந்த பஸ்களில் இன்று அங்கிருந்து திரும்பி வர ரூ.3500 டிக்கெட் கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள். இந்த வாடிக்கையும் வேடிக்கையும் தொடர் கதைதான். ஆனால் மக்களை பற்றி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

    கடமைக்காக அவ்வப்போது சில பஸ்கள் மீது வழக்கு போடுகிறார்கள். எல்லா ஆவணங்களும் இருந்தாலும், ஏதாவது ஒரு குறையை சொல்லி அபராதம் விதிப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அப்படியானால் தகுதி சான்றுகளையும் போக்குவரத்துறை அதிகாரிகள் தான் வழங்குகிறார்கள். அதே அதிகாரிகள் தான் பின்னர் குறையையும் சொல்கிறார்கள். தகுதி சான்றிதழ் வழங்கும்போது குறைகளை பார்க்காமல் விட்டது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் அதிகாரிகள் பாராமுகத்தால் இந்த வாடிக்கையும், வேடிக்கையும் நிரந்தரமாகிவிட்டது. இதனால் சிரமப்படுவது மக்கள்தான்.

    • சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
    • பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.


    மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.

    விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
    • ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையும் வர இருக்கிறது.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிரம்பி விட்டன. இதன் காரணமாக சொந்த ஊர் செல்ல புற்ப்பட்டு வந்தவர்கள் ஆம்னி பஸ்களை நாடினார்கள்.

    இதை கருத்தில் கொண்டு நேற்று திடீரென்று ஆம்னி கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் விரைவு பஸ்களில் இருக்கைகள் ஏற்கெனவே நிரம்பி விட்டதால் நேரடி பஸ்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மதுரை சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,000 வசூலிக்கப்பட்டது. வழக்கமாக நெல்லைக்கு ரூ.2,000 கட்டணம் ஆகும். ஆனால் ரூ.1,000 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    இதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,100 வரை வசூலிக்கப்பட்டது. இது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாகும். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பலர் ஊருக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதால், மக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு என்று வரும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் கூறுகையில், ' ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். கூடுதலாக வசூலித்த உரிமையாளர்களிடம் இருந்து பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும்' என்றனர்.

    • காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • பத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    குன்னம்:

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த லத்தீஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார்.

    பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி-பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் கொண்டகாரபள்ளம் என்ற இடத்தில் வந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரம் சிந்தாமணி குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன்(31) என்பவர் ஓட்டினார்.

    எதிர்பாராத விதமாக ஆம்னிபஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    பஸ்சில் வந்த மற்ற பயணிகள் விருதுநகர் மாவட்டம் சிவந்திப்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(52), நெல்லை மாவட்டம் மதுராநத்தம் நெடுங்கல் பகுதியை சேர்ந்த ஞானராஜ்(38), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்த இசக்கியம்மாள்955), அவரது உறவினர்கள் லட்சுமி(45), ஜோதி(47), குமரன்(50), லாரி டிரைவர் சரவணன், ஆம்னி பஸ் டிரைவர் லத்தீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    பலியான பிரதீஷ், அந்தோணிராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பிரதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    காயம் அடைந்த ஞானசேகர் வள்ளியூரில் வேளாண் அதிகாரியாக உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.
    • 223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்களில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையின் போது விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.

    கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள் 6699 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 1223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது

    இதையடுத்து அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அபராதமாக ரூ.18 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    கூடுதல் கட்டணம் வசூலித்த எட்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதேபோல் ஊர்களுக்கு சென்றவர்கள் நாளை முதல் திரும்பி வர தொடங்குவார்கள். அப்போதும் ஆம்னி பஸ்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய ஆம்னி பஸ் கட்டணம் வெளியிடப்பட்டது. அதன் படி தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னை, கோவை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர், ஐதராபாத், விஜயவாடா, கேரளா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட ரூ.1000 முதல் ரூ.1500 வரை கூடுதால் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

    மைசூர், எர்ணாகுளத்துக்கு ரூ.3500 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏ.சி. இருக்கை மற்றும் படுக்கை உள்ளிட்ட வசதியை பொறுத்து பயணிகளிடம் ரூ.1250 முதல் ரூ.2,500 வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறோம். விதி முறைகளை மீறி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தால் உடனடியாக இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அவர்கள் இந்த கட்டணத்தை கடைபிடிக்க மறுக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
    • விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்வார்கள்.

    சொந்த ஊர்களுக்கு மக்கள் முண்டியடித்து செல்வதால் எவ்வளவு கட்டணத்தை நிர்ணயித்தாலும் அதனை செலுத்தி டிக்கெட் எடுத்து விடுவார்கள் என்று கணக்கு போடும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களை குறி வைத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

    இதன்படி போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல், அனுமதியின்றி பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கடந்த 18-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 5 ஆயிரம் பஸ்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 70 பஸ்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யபட்டிருந்தன.

    இந்நிலையில் இன்று காலையிலும் கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த 18-ந் தேதியில் இருந்து இன்று வரை 4 நாட்களில் 80 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இது போன்ற அதிரடி நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக மேற்கொள்ளவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தொடர்ச் சியாக மேற்கொண்டு பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.
    • வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    சென்னை போக்குவரத்து ஆணையர் ஆயுதபூஜை தொடர் உட்பட விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டு அதிககட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதை தொடர்ந்து 18ந்தேதி முதல் ஆம்னி பஸ் சிறப்பு தணிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடு சாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் தொடர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.

    இவ்வாகன சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500- (ரூபாய் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

    ×