search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water open"

    • கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
    • ஏரியின் பாதுகாப்பைக் கருதி உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.

    பெரியபாளையம்:

    மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதற்கிடையே, பெரியபாளையம் அருகே மஞ்சங்காரனை ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்குப்பம் கிராமம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் 60 பேர் வசித்து வந்தனர். இதில், 42 பேர் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

    இந்நிலையில், கோட்டைக்குப்பம் பகுதியில் இருந்து 18 பேர் மட்டும் நேற்று வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பேரிடர் மீட்புப் படையினர் 10 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு மூலம் அங்கு சென்றனர். அவர்களை பத்திரமாக படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின், அவர்கள் அனைவரும் மஞ்சங்காரணையில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்க வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    கொசஸ்தலை ஆற்றை கடக்க முடியாமல் 18 பேர் அவதிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டார பெருங்குளம் கிட்டத்தட்ட 250 ஏக்கர் பாசன பகுதி பெறக்கூடிய குளமாகும்
    • தற்போது வரை தண்ணீர் வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டார பெருங்குளம் கிட்டத்தட்ட 250 ஏக்கர் பாசன பகுதி பெறக்கூடிய குளமாகும். இந்த குளத்திற்கு கொடுமுடி அணையிலிருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடபட்டது. தற்போது வரை 27 நாள் ஆகியும் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதனால் இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

    மேலும் இந்த தண்ணீர் முதல் குளமான பண்டாரப் பெருங்குளத்துக்கு தான் வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

    மொத்தம் 52 குளங்கள் இருக்கிறது அந்த குளங்களுக்கு வழங்கிய பிறகு கடைசியாக தான் இந்த பண்டார பெருங்குளத்துக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இது குறித்து ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. ஊடக பிரிவு தலைவர் ராதை காமராஜ் கூறியதாவது :-

    பண்டாரபெருங்குளம் ராதாபுரம் பகுதியில் மிகப்பெரிய குளம். இந்த குளத்தை நம்பி கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது.

    இந்த குளத்திற்காகவே கொடுமுடி அணையில் இருந்து வடமலையான் கால்வாய் என்ற தனி கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் இந்த குளம் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

    மேலும் புதிதாக 20- க்கும் மேற்பட்ட குளங்கள் இந்த வடமலையான் கால்வாயில் சேர்க்கப்பட்டு அந்த குளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் பண்டார பெருங்கு ளத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வழங்கப்படாமல் கிட்டத்தட்ட 27 நாட்க ளாகிறது.

    கடைமடை குளத்திற்கு தான் முதலில் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் உத்தரவு. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் வழங்க கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

    குளத்தின் மறுகால் மற்றும் மதகுகள் உடைந்து முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குளத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை போர் கால அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும். உடைந்த மறுகால் மற்றும் மதகுகளை சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலிங்கராயன் வாய்க்கால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி.

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் முதல் போக பாசன நிலங்களுக்கு, 16.06.2022 முதல் 13.10.2022 வரை 120 நாட்களுக்கு, தண்ணீர் திறந்த விட கோயம்புத்தூர் மண்டலம் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

    5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து ஆணையிடப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளதால் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் இந்த மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணையே பூர்த்தி செய்கிறது. மேட்டூர் அணையை பொறுத்தவரை முழுக்க முழுக்க கர்நாடக அணைகளையே நம்பி உள்ளன.

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பினால் மட்டுமே காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும்.



    ஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் மட்டுமே டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்த காலகட்டத்தில் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தாமதமாக அணை திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இன்னும் 21 நாட்களே உள்ளதால் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இந்தாண்டும் 12-ந் தேதி தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வழக்கமாக மே மாதம் 3-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். அந்த சமயம் கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை பெய்து அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணை நிரம்பி அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

    ஆனால் இந்தாண்டு பருவமழை அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு பிறகு தான் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்த குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 39 கன அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 48 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால் அடுத்த மாதம் கடைசி வரை குடிநீருக்கு மட்டும் தான் இந்த தண்ணீர் போதுமானதாகவும், இதனால் குறித்த காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டும் தாமதமாக ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியாகவும், நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

    சென்ற ஆண்டு கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. இந்தாண்டும் அதே போல மேட்டூர் அணை நிரம்புமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அணை கட்டியதில் இருந்து தற்போது வரை உள்ள 86 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்பாகவே 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர 58 ஆண்டுகள் மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமாக இல்லாததால் குறித்த நாளில் தண்ணீர் திறக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.



    மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. #ChithiraiThiruvizha #Vaigaidam
    ஆண்டிப்பட்டி:

    மதுரை சித்திரை திரு விழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை 2 முறை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 42.67 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 1176 மி. கன அடியாக உள்ளது.

    இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வருகிற 16-ந் தேதி மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் 17-ந் தேதி 850 கன அடியாகவும், 18-ந் தேதி 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். இதன் மூலம் அணையில் இருந்து 3 நாட்களில் 216 மி.கன அடி. தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அரசின் உத்தரவிற்காக பொதுப்பணித்துறையினர் காத்திருக்கின்றனர். #ChithiraiThiruvizha #Vaigaidam

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. அங்கிருந்து காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்றும் அதே அளவு நீர் மட்டம் உள்ளது. தற்போது வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 476 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake
    வீராணம் ஏரியில் இருந்து நாளை காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். விவசாயத்தின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 125 கனஅடி குறைவாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 46.25 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது.

    இதையடுத்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 900 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 274 கனஅடி அதிகமாகும்.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது.

    வீராணம் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. எனவே விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய்கள் தூர்வாரும் பணி முடிவடைந்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நாளை (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த ஏரியின் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். #VeeranamLake

    வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 55கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்குகிறது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் வசதிக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் வராததாலும் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்தது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து வடவாறு வழியாக 27-ந்தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 900 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.80 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உள்ளது. வீராணம் ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந் தேதி காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப அதிகாரிகள் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் வீராணம் ஏரி நிரம்பியதாலும், தண்ணீர் அதிக அளவு உள்ளதாலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது வீராணம் ஏரி பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்போதைக்கு ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் . பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முடிந்ததும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தற்போது விவசாயத்துக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று மேட்டூர், பவானிசாகர் அணைகளில் இருந்து பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
    கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் வருகிற 1-ந் தேதிக்கு பின்னர் வீராணம் ஏரிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது. #veeranamlake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளித்தது. பின்னர் தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து ஏரி வறண்டு காணப்பட்டது. சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக வீராணம் ஏரி காட்சியளித்தது. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அணைக்கரை பகுதிக்கு நேற்று காவிரி நீர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீரின் வேகம் குறைந்ததால் அந்த பகுதிக்கு காவிரி நீர் வரவில்லை. நாளை காவிரிநீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கிருந்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு காவிரிநீர் வந்து சேரும்.

    அதன்பிறகு கீழணையில் இருந்து செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வரும். இந்த பகுதிகளில் முட்புதர்கள் சூழ்ந்திருப்பதாலும், சரியாக தூர்வாரப்படாததாலும் வீராணம் ஏரிக்கு அங்கிருந்து காவிரி நீர் வேகமாக வருவது தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

    வருகிற 1-ந் தேதிக்கு பின்னர் காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

    ஏரியில் 37 அடி தண்ணீர் நிரம்பிய பிறகு தான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்படும் என தெரிகிறது. எனவே வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப 1 வாரத்துக்கு மேல் காலம் ஆகலாம்.
    மேட்டூர் அணைக்கு இன்று 32 ஆயிரத்து 284 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

    84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முழு கொள்ளவை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று 38 ஆயிரத்து 667 கன அடி திறந்து விடப்படுகிறது.

    124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.2 அடியாக உள்ளது. இன்று தண்ணீர் வரத்து 35 ஆயிரத்து 698 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 3658 கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஹேரங்கி அணைக்கு இன்று காலை 14 ஆயிரத்து 973 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 11 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல ஹேமாவதி அணைக்கு 20 ஆயிரத்து 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு செல்கிறது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 42 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வேகமாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதையும், அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையும் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 14 ஆயிரத்து 434 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 32 ஆயிரத்து 284 கன அடியாக அதிகரித்தது.


    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நீர்மட்டம் 68.42 அடியாக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளைக்குள் 70 அடியை தொட்டு விடும்.

    மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் 1அடி அதிகரிக்கும். தற்போது 32ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தினமும் 3அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ண ராஜசாகர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டி உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 40ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அந்த அணையும் நிரம்பி விடும்.

    அதன்பின்னர் அந்த அணையில் இருந்தும் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படும். தென்மேற்கு பருவமழை காலம் இன்னும் 2 மாதம் உள்ளது. இந்த 2 மாதங்களில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வரும்.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது, அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி மிகவும் தாமதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்மட்டம் 89 அடியாக இருந்தது.

    ஆனால் அதன்பிறகு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 100அடியைக்கூட எட்டமுடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக டெல்டா பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 21.75 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இன்று 68.42 அடியாக உள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது அணை நீர்மட்டம் அதிகமாக இருப்பதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam
    பாசனத்திற்காக கோதையாறு அணையிலிருந்து வரும் 9-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள நிலங்களின் பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள நிலங்களின் பாசனத்திற்கு ராதாபுரம் கால்வாய்க்கு 9.7.2018 முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி வீதம் மொத்தம் 194.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    ×