search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malpractice"

    • 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.
    • மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை கோவில் அடிவாரப் பகுதியில் தனியார் தோட் டத்தின் காவலாளியாக இருப்பவர்கள் பரமசிவன்-காளியம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் கவுசிக்(வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

    கடந்த 7-ந்தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கவுசிக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை உறவினர் பூவையா அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுவனுக்கு தலைப்பகுதியில் சுத்தம் செய்யாமல் 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.

    இதன் தொடர்ச்சியாக மறுநாள் கடுமையான வலியில் துடித்த சிறுவனை அவரது தாய் காளியம்மாள் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தலையில் பட்ட காயத்திற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் தலையில் பட்ட காயத்தின் பகுதி புண் ஏற்பட்டு சீழ் வடிந்து பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது. சரியான நேரத்தில் சிறுவனை அழைத்து வந்ததால் அவரது தலையில் இருந்த மண் உள்ளிட்டவைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு மறு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அவரது தாயார் தெரிவிக்கும்போது, பண்பொழியில் உள்ள ஒரு மருத்துவமனையில் காயம்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யப்படாமல், வலிக்கு எந்த விதமான ஊசி உள்ளிட்டவைகள் செலுத்தாமல், முறையான சிகிச்சை அளிக்காமல் அவசர கதியில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரது உத்தரவுப்படி நேற்று இரவு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரேம லதா தலைமையில் மாவட்ட மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த மருத்துவமனையில் நெல்லையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பெயரில் போர்டு வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் அங்கு அவர் இல்லை.

    அவருக்கு பதிலாக மருத்துவமனை கட்டிடத்தின் உரிமையாளரான கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த அமீர் ஜலால் மருத்துவம் பார்த்து வருவதை கண்டு பிடித்தனர்.

    அப்போது மருத்துவ அதிகாரிகள் குழுவினர், அங்கு முதியவர் ஒருவருக்கு சிகிச்சையளித்ததையும் கண்டறிந்து அவர் மருத்து வம் படிக்காமல் மருத்துவம் பார்த்தத்தை அறிந்தனர்.

    தொடர்ந்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அளித்த புகாரை தொடர்ந்து அமீர் ஜலாலை கைது செய்தனர். விசாரணையில், அவர் மருத்துவம் படிக்காமல் 17 ஆண்டு காலமாக மருத்துவம் பார்த்தது தெரிய வந்துள்ளது.

    • தற்போதுவரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது
    • தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.

    இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் சமூக அமைப்புகளும் வீதிக்கு வந்து போராட்டங்ககளை முன்னெடுத்தது அரசுக்கு பெரும் தலவிவழியாக மாறியது. இதனைத்தொடர்ந்து 1000 துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது.

     

    வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட குற்றாலிக் குமபல்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தவழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது. இந்நிலையில் நீட் முறைகேடு விவகாரம் அரசியலிலும் பூதாகரமாக மாறியுள்ளது.நடந்து வரும் பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நீட் முறைகேடு பிரச்சனையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி வருகின்றன.

     

    இதற்கிடையில் கடந்த ஜூன் 22 , தேர்வு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்தான் அடுத்த வருடம் முதல் நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதுவரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. எனவே தற்போது பொறியியல் நுழைவுத்தேர்வுகளான ஜேஇஇ தேர்வுகள் கணினி மூலம் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படுவதை போல நீட் தேர்வுகளையும் அடுத்த வருடம் முதல் நடந்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.  

    • பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த நுழைவுத் தேர்வை நடத்தியது.

    வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் மற்றும் இந்தியாவில் 557 நகரங்கள் என மொத்தம 571 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 4,750 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதினார்கள்.

    கடந்த 4-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையே நீட் தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் கொடுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த 1,563 பேருக்கு நேற்று மறுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வை 813 பேர் தான் எழுதினார்கள். மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

    நீட் தேர்வு முறைகேடு களில் ராஜஸ்தான், மராட்டி யம், குஜராத், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பது விசா ரணையில் தெரிய வந்தது. குறிப்பாக பீகாரில் நிறைய பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் பற்றி விரிவாக விசாரணை நடத்த சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டத் தின் 120பி (குற்ற சதி), 420 (மோசடி) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    நீட் முறைகேடுகள் தொடர்பாக பீகார் மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதை அந்த மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபோல மராட்டியம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்களும் கைதாகி இருக்கிறார்கள்.

    இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு குழுக்களை சி.பி.ஐ. அமைத்து இருக்கிறது.

    அந்த சி.பி.ஐ. சிறப்பு குழுக்கள் குஜராத், பீகார் மாநிலங்களுக்கு விரைந்து உள்ளன. குஜராத் மாநிலம் கோத்ராவில் நீட் முறைகேடு தொடர்பாக கைதானவர்கள் மற்றும் விசாரணை வளையத்தில் இருப்பவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் வாக்கு மூலம் பெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    அதுபோல பீகாரில் பாட்னா நகரில் நீட் தேர்வு முறைகேடு நடந்த இடங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்து தகவல்களை திரட்ட உள்ளனர். இந்த முறைகேடுகளில் நடந்துள்ள ஆள் மாறாட்டம், நம்பிக்கை மீறல், ஆதாரங்கள் அழிப்பு ஆகியவை தொடர்பாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியிருந்தன.

    இதற்கிடையே ஜூன் 4 ஆம் தேதி அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது. வட மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஆர்.ஜே.டி ஆகியவற்றின் தயவுடனேயே பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதும் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மீதும் இந்த குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்டுகிறது.

    எனவே செபி அமைப்பு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

     

     தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா, அனைத்து வகையான விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துள்ள அவர் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது குழந்தைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 361 முதல் 401 இடங்களைக் கைப்பற்றும் என ஆக்சிஸ் மை இந்தியா கணித்தது.  முன்னதாக பிரதீப் குப்தா தேர்தல் ரிசல்ட் நாளன்று பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாததால் தொலைக்காட்சி விவாத மேடையில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் நிர்ணயித்துள்ளது.
    • வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்து மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைத்திருக்கும்.

    நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் இளநிலைத் தேர்வில் பலவேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.

    பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

     

    இந்த முறைகேடுகளில் முக்கிய மூளையாக செயல்பட்ட சால்வர் கேங்கை சேர்ந்த நபர்கள் கைது செயயப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் 'Solver gang' நிர்ணயித்துள்ளது. முன்னா பாய் சர்வீஸ் என்ற பெயரில் இந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹிந்தியில் கடந்த 2003 ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் 'முன்னா பாய் எம்பிபிஎஸ்'. இதில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் தனக்கு பதிலாக வேறொருவரை மிரட்டி அந்த பரீட்சையில் ரவுடியான முன்னா பாய்  வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்துவை மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைந்திருக்கும்.

     

     

    இதை பிரதி செய்யும் வகையில், தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யும் முன்னா பாய் சர்வீஸை சால்வர் கேங் அறிமுகப்படுத்தி முறைகேடு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் வட மாநிலங்களில் இயங்கி வந்த சால்வர் கேங்கின் முக்கிய மூளை ரவி ஆத்ரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ இன்று வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது. 

     

    • பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.

    வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

    திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக மாணவரணி சார்பில் கூறப்பட்டுள்ளது.

    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • வட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

    மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தைத் தழுவி நடத்தப்படும் நீட் தேர்வுகள் மாநிலப் பாடத்திட்டத்தைத் தழுவி பள்ளிப்படிப்பை மேற்கொள்ளும் பெரும்பான்மையான மாணவர்களை மருத்துவப்படிப்புகளில் சேர விடாமல் தடுத்து அநீதி  இழைக்கிறது என்ற எதிர்ப்புக்குரல் எழுந்தது.

    கோச்சிங் சென்டரிகளின் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காகவே நீட் திணிக்கப்பட்டது என்ற விமர்சனத்தை கல்வியாளர்கள் முனவிகின்றனர். நீட் தேர்வு அச்சத்திலும் தோல்வியிலும் ஏற்படும் தற்கொலைகள் இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆராம்பம் முதலே நீட் தேர்வை தமிழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல முறைகேடுகள் எழுந்துள்ளது என வட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

    கடந்த மாதம் 5 ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த வருட நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை மறு தேர்வு நடத்தப்படாது என்று அறிவித்தது.

    இதனைதொடர்ந்து தீவிரமடைந்துள்ள நீட் எதிரிப்பு போராட்டத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கி நியாயம் கேட்கத் தொடங்கியுள்ளனர். நீட் தேர்வை எதிரித்து சட்டப் போராட்டங்களையும் மாநில அரசுகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

     

    தமிழக அரசு நிறைவேற்றிய நீட் ரத்து மசோதா குடியரசுத் தலைவரின் மேஜையில் ஒப்புதலுக்கு காத்துக்கிடக்கிறது. இதற்கிடையில் இந்த வருடம் நடபதப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த கோரி தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆனால் முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிர அரசு நீட் தேர்வு தங்களது மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாவும் இந்த வருட தேர்வை செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    • வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    நீட் தேர்வில் நடந்த முறைகேட்டால் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடி இன்னும் பதவி ஏற்கவில்லை, நீட் தேர்வில் நடந்த முறை கேட்டால் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வு சீர் குலைந்துள்ளது.

    ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப் பெண்களைப் பெறுகிறார் கள். ஆனால் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    கல்வி மாபியா மற்றும் அரசு எந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்த வினாத்தாள் கசிவுவை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. சட்டம் இயற்று வதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.

    இன்று நாட்டின் அனைத்து மாணவர் களுக்கும் நான் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும், உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

    இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்கள் குரலை நசுக்க விடமாட்டோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.

    • கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது
    • டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    Collison டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகியவை உரிய முறையில் செய்யப்படாமல் அவற்றுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.

     

    இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று (ஜூன் 3) செய்தியாளர்களை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் தோன்றிய அவர், இந்த முறைகேடுகளுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் "I AM TRULY SORRY" என்றும் சில வினாடிகள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார். 

    • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமரின் அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தேன். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அதிகாரிகள் திட்டத்தின் கீழ் என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்தனர்.

    இந்த நிலையில் அந்த திட்டத்தில் எனக்கு வரவேண்டிய பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது உரிய பதிலளிக்காமல், காலம் தாழ்த்தினர். மேலும் இது குறித்து விசாரித்த போது அதே கிராமத்தில் எனது பெயரை கொண்ட வேறொரு நபர் இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்பட்டது தெரியவந்தது. என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்து விட்டு வேறொரு நபரை முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.

    எனவே எனக்கு அந்த திட்டத்தின் கீழ் வரவேண்டிய பணத்தை வழங்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,

    பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது.வறுமையில் உள்ளவர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த திட்டம் முறையாக வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைவதை அதிகாரிகள் தான் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடையும்.

    எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனு தாரர் லட்சுமிக்கு 12 வாரத்தில் மானிய தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

    • ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
    • சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    பீஜிங்:

    சீன ராணுவ மந்திரியாக இருப்பவர் லீஷாங்பூ. இவர் கடந்த இரண்டு வாரமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அரசு நிர்வாக விவகாரங்களிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த குயின் கேங் திடீரென்று மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங்யீ நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே சீன ராணுவ மந்திரி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணுவ மந்திரி லீஷாங்பு எங்கு உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் ரகசிய இடத்தில் சீன அதிகாரிகளால் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை லீஷாங்பு தலைமையிலான சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் ராணுவ மந்திரியாக நியமிக்கப் பட்ட லீஷாங்பு மற்றும் 8 அதிகாரிகள் மீதான விசாரணை ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஒழுங்குமுறை ஆய்வு குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. சீன ராணுவ மந்திரி லீஷாங்பு, ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    லீ ஷாங்பு, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். கடந்த மாத தொடக்கத்தில் ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.
    • பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.

    பல மாவட்டங்களில் ஏராளமானோர் தங்களின் உடமைகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.

    அவற்றை அதிகாரிகள் பெற்று முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பினர். பின்பு அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பாமல் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருக்கி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் சஜி வர்கீஸ். இவர் தனது அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுவதாகவும், சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

    அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் கடுத்துருத்தி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அதிடியாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீசிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்ட போது பேரிடர் நிவாரணநிதிக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீஸ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    சுமார் 9பேர் வழங்கிய தொகையை அவர் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10லட்சம் வரையிலான பணத்தை அவர் முறைகேடு செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வுசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்சீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பேரிடர் நிவாரணத்துக்கு பொதுமக்கள் நன்கொடை யாக வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×