search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ள நிவாரணத்துக்கு கிடைத்த நன்கொடையை முறைகேடு செய்த கிராம அலுவலர் கைது- லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
    X

    வெள்ள நிவாரணத்துக்கு கிடைத்த நன்கொடையை முறைகேடு செய்த கிராம அலுவலர் கைது- லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

    • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.
    • பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.

    பல மாவட்டங்களில் ஏராளமானோர் தங்களின் உடமைகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.

    அவற்றை அதிகாரிகள் பெற்று முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பினர். பின்பு அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பாமல் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருக்கி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் சஜி வர்கீஸ். இவர் தனது அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுவதாகவும், சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

    அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் கடுத்துருத்தி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அதிடியாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீசிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்ட போது பேரிடர் நிவாரணநிதிக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீஸ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    சுமார் 9பேர் வழங்கிய தொகையை அவர் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10லட்சம் வரையிலான பணத்தை அவர் முறைகேடு செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வுசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்சீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பேரிடர் நிவாரணத்துக்கு பொதுமக்கள் நன்கொடை யாக வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×