search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aravakurichi"

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போட்டு விட்டு திரும்பிய 2 பேர் திடீரென இறந்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). தி.மு.க. கிளை செயலாளர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களித்து விட்டு சக்திவேல் வெளியே வந்தார்.

    அப்போது திடீரென அவர் நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக சக்திவேலை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60), கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் சிலோன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட சென்றார்.

    அவர் ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்தார். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்றபோது, திடீரென மாடசாமி மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் மாடசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.
    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்களிக்க 4 ஆம்னி பஸ்களில் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் தடுத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடை பெற்றது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணி மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 ஆம்னி பஸ்கள் வந்தன. அதனை வழிமறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, எஸ்.பி. விக்ரமன் ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பஸ்களில் முஸ்லிம்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளியூர் நபர்களுக்கு இங்கு அனுமதியில்லை என்றனர்.


    இதையடுத்து பஸ்சில் வந்தவர்கள், நாங்கள் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், பள்ளப்பட்டியை சேர்ந்தவரா? என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து விட்டு அனைவரும் செல்லும்படி அறிவுறுத்தினர்.

    இதற்காக அவர்களின் வாக்காளர் அட்டையை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொழில் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் முஸ்லிம் வாக்குகள் மட்டும் 30 சதவீதம் உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் வாக்களிக்க வந்த இஸ்லாமியர்கள் கூறுகையில், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நாங்கள் வாக்களிக்க வந்தோம். ஆனால் போலீசார் எங்கள் மீது சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். எங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை பார்த்த பிறகே வாக்களிக்க செல்ல அனுமதி அளித்தனர். நாங்கள் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க வரவில்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளோம். இருப்பினும் போலீசார் எங்களிடம் விசாரணை நடத்தியது வருத்தமளிக்கிறது என்றனர்.

    அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

    இதேபோல், மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
     
    இதற்கிடையே, அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 29-ம் தேதியாகும்.

    மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. மே மாதம் 2-ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

    மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில்,பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். #Bypolls #TNByelections

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் காலி இடங்கள் ஆனது.

    இதற்கிடையே டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, அரூர், மானாமதுரை ஆகிய 18 சட்டசபை தொகுதி இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, பழைய வழக்கு ஒன்றில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த ஓசூர் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 21 இடங்கள் காலி இடங்களாக இருந்தன.

    கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தி.மு.க., காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தி.மு.க. தரப்பில் புகார் கூறப்பட்டது. இதை மறுத்த தேர்தல் ஆணையம், “அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. இதற்கிடையே சூலூர் சட்ட சபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட 7-வது ஓட்டுப்பதிவு தினமான 19-ந்தேதியை 4 தொகுதி இடைத்தேர்தல் தேதியாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.

    4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந்தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற மே மாதம் 2-ந்தேதி கடைசி நாளாகும்.

    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. சூலூர் தொகுதியை காங்கிரசுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும் விட்டுக் கொடுத்திருந்தது.

     


    ஆனால் இந்த தடவை இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருப்பதால் 4 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களையே களம் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

    4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் உள்ளன. எனவே அதற்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களை களம் இறக்க இரு கட்சிகளிலும் இப்போதே விவாதமும், ஆலோசனைகளும் தொடங்கி விட்டது.

    மனுத்தாக்கல் தொடங்கும் 22-ந்தேதிக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிக்க அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தி.மு.க.வில் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகையா, சூலூர் தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வும் வேட்பாளர் தேர்வு ஆலோசனையை தொடங்கி விட்டன.

    வருகிற 18-ந்தேதி நடக்கும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குகளும், மே 19-ந்தேதி நடக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் மே 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த தேர்தல் முடிவுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தலைவிதியை நிர்ணயம் செய்வதாக இருக்கும். இதனால் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

    தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பட்சத்தில் தனிப் பெரும்பான்மை பெற 117 பேர் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே 22 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.

    அ.தி.மு.க.வின் தற்போதைய 114 எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூன்று பேரும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அது போல இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜன நாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.

    இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 108 ஆக குறைந்து விடும். இத்தகைய நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் 22 இடங்களில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வெற்றி பெற்றால்தான் அ.தி.மு.க.வின் நம்பகத்தன்மை பலம் 118 ஆக உயரும். எனவே 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றியை குறி வைத்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர்.

    சட்டசபையில் தற்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.

    தனி பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு உள்ளது. இந்த எண்ணிக்கையில் தி.மு.க.வால் வெற்றி பெற முடியுமா? என்பது மே 23-ந் தேதி தெரிந்து விடும். #Bypolls #TNByelections

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    சென்னை:

    தமிழ்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது.

    இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

    ஏப்ரல் 22-ம் தேதி - வேட்பு மனுதாக்கல் தொடக்கம், 29-ம் தேதி - வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

    மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும்  என தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டது. ஆனால், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.



    ஏப்ரல் 18ம் தேதிக்குப் பிறகு வேறு தேதிகளில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் என திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்றும், சரியான நேரம் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள திமுக, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.



    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #ByElection2019 #SatyabrataSahoo
    சென்னை:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. #ByElection2019 #SatyabrataSahoo
    அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத்தயார் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji
    கரூர்:

    கரூர் க.பரமத்தியில் அ.தி.மு.க. ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

    1½கோடி பேரை உறுப்பினர்களாக கொண்ட அ.தி.மு.க. பல சோதனைகளை தாண்டி வந்துள்ளது. இந்த ஆட்சி எப்போது எத்தனை நாள் நீடிக்கும் என ஏங்கியவர்கள் நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த 85 வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை செந்தில்பாலாஜி நடத்தியுள்ளார்.

    கடந்த 4½ ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்தார்? மாறாக இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க செய்தது யார்?. கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



    அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 249 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வெளியிடப்பட்ட புத்தக வடிவிலான ஓட்டு சீட்டில் இரட்டை இலையினை தேடிப்பிடித்து மக்கள் ஓட்டு போட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் உல் ஆசியா வென்றார்.

    அப்படிப்பட்ட இந்த தொகுதியில் மீண்டும் செந்தில்பாலாஜி நின்று வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரவக்குறிச்சி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அரவக்குறிச்சி:

    மதுரை மாவட்டம், கருப்பம்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது 35). ஆட்டோ டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த மகேஷ்(32) மதன்குமார்(24), பழனி(22) ஆகியோரும் ஒரு காரில் மதுரையில் இருந்து கரூரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை மகேஷ் ஓட்டி வந்தார். 

    கார் மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே உள்ள தகரக்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சோலைமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×