search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar chaturthi"

    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.
    • இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் 1519 விநாயகர் சிலைகளும், ஆவடி கமிஷனர் அலுவலக பகுதியில் 204 சிலைகளும், தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் 425 சிலைகளும் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2148 சிலைகளுக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

    இந்துமுன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரதிய சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைத்திருந்தனர்.

    இந்த சிலைகள் அனைத்தையும் ஒருவார கால பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். இதன்படி கடந்த 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகளை இன்றும் நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.

    இதன்படி சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நடபெற்றது. பாரதிய சிவசேனா அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பூஜைக்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர். இதையொட்டி சென்னை மாநகர போலீசார் 16,500 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆவடி கமிஷனர் அலுவலக போலீசார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தாம்பரத்தில் இருந்து 1,500 போலீசாரும் பாதுகாப்புக்காக ஊர்வலம் செல்லும் பாதைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

    இந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இதன் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

    நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புளியந்தோப்பு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

    அடையாறு, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நீலாங்கரையிலும், வட சென்னை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதியிலும் கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளில் கரைக்கப்பட்டது போக மீதமுள்ள சிலைகள் நாளை கடலில் கரைக்கப்பட உள்ளது.

    இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஊர்வல பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    • விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.
    • சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்திவிழா கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர், ஜனப்பசத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர், சோழவரம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரணி, மணலி, பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் பழவேற்காடு கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தடுப்பு அமைத்து ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

    டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் திருப்பாலைவனம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், பொன்னேரி இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    2 கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும், பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், சிலைகள் வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.

    • காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
    • இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் சதுர்த்தி பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக (விஜர்சனம்) நேற்று மாலை புதுவை சாரம் அவ்வை திடலிருந்து புதுவை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் நடந்து சென்றனர்.

    அதுபோல் மதுரை வீரன் கோவில் தெரு விநாயகர் சிலையின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர்.

    காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.

    இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க புதுவை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • விநாயகர் சிலையின் கையில் 11 கிலோ லட்டு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
    • வீடியோவில் வாலிபர் ஒருவர் விநாயகர் சிலை அருகே வந்து ஏலத்திற்கு விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த லட்டை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்-மியாபூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையின் போது லட்டு படைக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்படுகிறது. இதனை பல ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுப்பார்கள்.

    இந்த நிலையில் மியாபூரில் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலையின் கையில் 11 கிலோ லட்டு வைத்து வழிபாடு நடத்தினர்.

    இந்த லட்டு 7 நாட்களுக்கு பிறகு விசர்ஜனம் நேரத்தில் ஏலம் விட முடிவு செய்திருந்தனர்.

    நேற்று காலை விநாயகர் சிலை அருகே சென்ற பக்தர்கள் விநாயகர் சிலை கையில் இருந்த ராட்சத லட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர். அதில் வாலிபர் ஒருவர் விநாயகர் சிலை அருகே வந்து ஏலத்திற்கு விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த லட்டை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1,519 பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் நாளை (சனி) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 16 ஆயிரத்து 500 போலீசார், 2 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர்.

    மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சிலைகளை கரைக்கும் பணியில் ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வில் நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதில் சென்னை போலீசார் தனி கவனம் செலுத்தி உள்ளனர். அதன்படி, சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

    மேலும் தடையை மீறி யாரேனும் கடலில் இறங்குகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து போலீசார் 'பைனாகுலர்கள்' மூலம் கடற்கரை பகுதியை கண்காணிப்பார்கள்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், 'பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும்.

    கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வழிபாடு நடைபெற்றது. திருவள்ளூரில்-111, திருத்தணி-121, ஊத்துக்கோட்டை-209, பொன்னேரி-46, கும்மிடிப்பூண்டி-153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.

    நேற்று முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர் பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஆயில் மில் பகுதிக்கு டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்தனர். பின்னர் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அனுமதித்த குறிப்பிட்ட வழித்தடங்களில் விதிமுறைப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு கொண்டு சென்றனர்.

    திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மு.வினோத் கண்ணா தலைமை தாங்கினார். மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டு சென்றது. இந்த ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோவில் தேரடி, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, காக்களூர் சாலை வழியாக ஏரிக்கு மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல் பாடல்களுடன் கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து காக்களூர் ஏரியில் ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்த் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

    கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், வடமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு நேற்று துடியலூர் பஸ் நிறுத்தத்திற்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார்.

    அதன் பேரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜூ, கிருஷ்ணா மற்றும் பலர் மீது அனுமதியின்றி கூடியது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், சிலை எடுத்து செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
    • கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

    மாமல்லபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெருக்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நேற்றும் வருகிற 24 ந்தேதி (ஞாயிற்றுகிழமை) மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரம், பாலுசெட்டிசத்திரம், வாலாஜாபாத், செவிலிமேடு, கருக்குபேட்டை, முத்தியால்பேட்டை, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம், பாலூர், படாளம், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் 6 அடி, 10 அடி, உயரமுள்ள விநாயகர் சிலைகள் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    முதல் கட்டமாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினார்கள். இதையடுத்து ஒவ்வொரு சிலையாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு இடங்களில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் ஏற்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டார்கள். பின்னர் நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளும் நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. கடற்கரையில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் தலைமையில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
    • வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையை மூழ்க வைத்து கரைக்கலாம்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

    * சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள், பூ மாலைகள், அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடங்களில் கரைக்க வேண்டும்.

    * சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூ மாலைகள், இலைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும்.

    மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிவகைகள் இருப்பின், அதனை அனாதை இல்லங்களுக்கு மறு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். மேலும், மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் போன்ற பொருட்கள் இருப்பின் அதனையும் மறுபயன்பாட்டிற்கு அனுப்பலாம்.

    * சிலைகளில் இருந்து அகற்றப்பட்ட துணிகள், பூ மாலைகள், அலங்கார தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

    * வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையை மூழ்க வைத்து கரைக்கலாம். தெளிந்த நீரை வடிகாலில் வெளியேற்றலாம். சேற்றை உலர வைத்து தோட்டத்தில் மண்ணாக பயன்படுத்தலாம்.

    மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பாதுகாப்பாக கரைத்திட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விழாக்குழு இளைஞர்கள் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்த வேளையில் மர்மநபர்கள் சிலையை தூக்கிச் சென்றனர்.
    • வாழப்பாடியில் நள்ளிரவில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சடையப்பர் தெருவில் பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் குணா என்கிற குணசேகரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விழாக்குழு இளைஞர்கள் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்த வேளையில் அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் விநாயகர் சிலையை தூக்கிச் சென்றனர். பின்னர் அதனை சாலையில் போட்டு உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் பரவியதால் அப்பகுதியில் பா.ஜ.க. தொண்டர்களும் விழாக் குழுவினரும் குவிந்தனர். வாழப்பாடி போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையிலான போலீசார் விநாயகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    வாழப்பாடியில் நள்ளிரவில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 42 அடி உயரத்தில் முழுவதும் வெட்டிவேரால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.
    • சிக்ஸ் பேக் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், சைக்கிள் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன.

    சென்னை:

    இந்து பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விநாயகர், சிவன், அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1,500 இடங்களுக்கு மேல் பிரமாண்ட ராட்சத விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு சம்பவங்களை முன்னிறுத்தி விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, சென்னை புறநகர் பகுதியான கீழ்கட்டளை மற்றும் கொளத்தூர் விநாயகபுரம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 'சந்திரயான்-3' நிகழ்வை நினைவூட்டும் வகையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன.

    சென்னையை அடுத்த கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான்-3' விநாயகர் சிலையின் அருகில் ராக்கெட் ஏவுதளம் போல் வடிவமைக்கப்பட்டு அதில் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் ராக்கெட் புகையை கக்கியபடி மேலே செல்வது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகர், லேப்டாப் மூலம் 'சந்திரயான்-3' ராக்கெட்டை விண்ணில் ஏவுவது போன்று அமைந்துள்ளது.

    விநாயகர் சிலை அருகில் உள்ள டி.வி.யில் கவுண்ட்டவுன் ஒலித்ததும், விநாயகர் இயக்கும் இந்த ராக்கெட் புகையை கக்கியபடி விண்ணை நோக்கி சுமார் 40 அடி தூரம் மேலே எழும்பி, மீண்டும் பத்திரமாக தரையில் இறங்குவது போன்று மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    அதேபோன்று, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அண்டவெளி போல் கூடாரம் அமைக்கப்பட்டு அதில் சந்திரனின் மேல் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது போன்று பிளக்ஸ் பேனரால் வடிவமைக்கப்பட்டு, ராட்சத விநாயகரின் முன்பு பெரிய அளவிலான பிறை வடிவ சந்திரனை அமைத்து இருந்தனர். இதனையும் பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்.

    கொளத்தூர் விநாயகபுரத்தில் வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான்-3' விநாயகர் சிலையானது, தமிழ்நாடு அரசு சின்னம், தேசிய கொடி பொறிக்கப்பட்டிருந்த ராக்கெட் வடிவில் கூடாரம் அமைத்து அதற்கு உள்ளே பிரமாண்டமாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' படத்தின் கதாபாத்திர வடிவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

    இது தவிர, சென்னை வளசரவாக்கத்தில் செங்கோல் விநாயகர், கோடம்பாக்கத்தில் கருப்பு மற்றும் வெள்ளை எள்ளு விநாயகர், திருவல்லிக்கேணியில் உலகக் கோப்பை கிரிக்கெட் விநாயகர், தாதா விநாயகர், வீர விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. மணலி புதுநகரில் சுமார் 5 ஆயிரம் சோளங்களை கொண்டு 18 அடி உயரமும், 10 அகலமும் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

    கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 42 அடி உயரத்தில் முழுவதும் வெட்டிவேரால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

    கொளத்தூர், ராம் நகரில் 11 அடி உயரத்தில் முழுவதும் சந்தனத்தால் ஆன 400 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையும், மணலி சின்னச்சேக்காடு, காந்திநகர் பகுதியில் 5 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட பிள்ளையார் சிலையில், பூசணிக்காய், வாழைப்பூ, கேரட், அன்னாசிபழத்தால் தேசியக்கொடி போல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை பெரவள்ளூர் பகுதியில் முழுவதும் குபேரர் தகடால் ஆன 21 அடி விநாயகரும், திரு.வி.க. நகர் பகுதியில் தேங்காயால் வடிவமைக்கப்பட்ட விநாயகரும், கொளத்தூரில் 20 ஆயிரம் குபேர விளக்கு, 8 ஆயிரம் அரச இலைகளை கொண்டு 40 அடி உயரத்திலான பிரமாண்ட குபேரர் விநாயகரும், சென்னை சி.ஐ.டி. நகரில் 208 கிலோ அளவிலான மைசூர்பாகு கொண்டு 10 அடி உயர விநாயகர் சிலையும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இதே போன்று, சிக்ஸ் பேக் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், சைக்கிள் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த விநாயகர் சிலைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்ற இடங்களில் பக்தர்களுக்கு சுண்டல், பாயாசம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன் ஏராளமான இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை விநாயகரை பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிச்சென்று வழிபட்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • மணிமூர்த்தீஸ்வரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த நாளில் விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் துன்பங்களும், துயரங்களும் உடனே நீங்கி விடுவதாக நம்பி அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மணிமூர்த்தீஸ்வ ரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாரதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாரதனையும், அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் திருவீதியுலாவும் தீபாரா தனைகளும் நடைபெற்றன. கோவிலில் வழிபாடுகள் இன்று அதிகாலையில் யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு விநாயகர் மூலமந்திர ஹோமம் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் மாபொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், பஞ்சாமிருதம், தேன் என 16 வகையான அபிஷேக பொருட்களால் ஸ்ரீமூர்த்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது.

    தியாகராஜநகர் விக்னவிநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு விநாயகர் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. நெல்லை மாநகரத்தில் இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் கடந்த ஆண்டை போல் 76 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெறுகிறது. நெல்லை டவுன் ஈசான விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 242 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    களக்காடு, திருக்குறுங்குடி, மானூர், வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள பிள்ளையார் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பூ, பழங்கள், கொழுக்கட்டைகள் வைத்து பக்தி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

    மாநகர இந்து முன்னணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அருகே 9 அடி உயர பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் மாநகர இந்து முன்னணி நிர்வாகிகள் இசக்கிமுத்து, ராகவேந்திரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் பகுதியில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அருகில் சானாதன கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் கோவில்களில் நடந்த சதுர்த்தி விழாவில் பக்தர்கள் எருக்கம் பூ மற்றும் அருகம்புல் ஆகியவற்றை மாலையாக கொண்டு வந்து விநாயகருக்கு சூட்டினர். மேலும் அவர்கள் கொண்டுவந்த நைவேத்திய பொருட்களான சுண்டல், பிடி கொழுக்கட்டை, மோதகம், அப்பம், அவல், பொரி, உள்ளிட்டவற்றையும் விநாயகருக்கு படைத்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் மட்டும் வழக்கம்போல் இந்த ஆண்டும் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி அங்கு மட்டும் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் மொத்தம் 320 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாது காப்புக்காக போடப்ப ட்டுள்ளனர். இதுதவிர இன்று சதுர்த்தி விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் ஏராளமான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்கள் விழாக்கோலம் பூண்டன.

    ×