என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Agaval"

    • அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    • வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

    ஔவையார் அருளிய வினை தீர்க்கும் விநாயகர் அகவல்

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்

    பாதச் சிலம்பு பலஇசை பாட

    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

    வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப

    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

    அஞ்சு கரமும் அங்குச பாசமும்

    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

    நான்ற வாயும் நாலிரு புயமும்

    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

    முப்பழம் நுகரும் மூஷிக வாகன

    இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

    தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி

    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

    திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்

    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்

    திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என

    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

    உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

    கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

    ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

    ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

    ஆறா தாரத்து அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

    கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி

    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி அதனில் கூடிய அசபை

    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி

    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

    உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

    சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

    எண்முக மாக இனிதெனக்கு அருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

    தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி

    கருத்தினில் கபால வாயில் காட்டி

    இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

    என்னை அறிவித்து எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து

    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

    தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

    இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன

    அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்

    எல்லை இல்லா ஆனந்தம் அளித்து

    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

    அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

    நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

    தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

    வித்தக விநாயக! விரை கழல் சரணே!

    • ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார்.
    • ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார்.

    புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.

    ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனை தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானை புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச்செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.

    சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார். இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தை பார்த்தார். அவருக்கு சுந்தரரை பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் "சிவயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கி புறப்பட்டது.

    இவ்வாறு ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி" என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பிராட்டி பதில் அளித்தார்.

    ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.

    ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை செய்வாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார்.

    ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார். பூஜையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) ஔவையாருக்கு எடுத்துக் கூற, ஔவையார் அதனை "விநாயகர் அகவல்" என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார்.

    இறுதியில் விநாயகர் தன் துதிக்கையினால் ஔவையாரை தூக்கி கைலையில் சேர்த்தார். ஔவையாரும் கயிலை காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் என புராண கதைகள் கூறுகின்றன.

    ×