search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia ukraine war"

    • மேற்கத்திய துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதை புறந்தள்ளி விட முடியாது- மேக்ரான்
    • பிரான்ஸ் முடிவு தனக்குத்தானே பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதாகும்- ரஷிய மந்திரி

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.

    குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகின்றன. ஆயுதங்கள் கொடுத்து பக்கபலமாக இருந்து வருகின்றன.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதை புறந்தள்ளி விட முடியாது என தெரிவித்திருந்தார். இதன்மூலம் தேவைப்பட்டால் பிரான்ஸ் உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்கெய் சோய்கு, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி செபஸ்டியன் லெகோர்னு உடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.

    அப்போது செர்கெய் "பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஏற்கனவே அறிவித்தபடி, பிரான்ஸ் அதை பின்பற்றினால், அது பிரான்ஸ் தனக்குத்தானே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வதாகும்" என செபஸ்டியன் லெகோர்னுவிடம் எச்சரித்துள்ளார்.

    மேலும், "உக்ரைன் மேற்கத்திய நாடுகளில் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை. பிரான்ஸ் சிறப்பு துறைககள் ஈடுபடாது என நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷியா உடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ள  நிலையில் ரஷிய பாதுகாப்பு மந்திரி அரிதாக பிரான்ஸ் மந்திரியுடன் பேசியுள்ளார்.

    2022 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு மந்திரிகளும் முதன்முறையாக தற்போது பேசியுள்ளனர்.

    • கடந்த நான்கு நாட்களில் உக்ரைனை தலைநகரை நோக்கி ரஷியா ஏவுகணை தாக்குதல்.
    • ரஷியா ஏவுகணைகள் போலந்து நாட்டின் வான்வழி பகுதியில் செல்வதாக குற்றச்சாட்டு.

    உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு அதிகப்படியாக சேதம் ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மூன்று மிகப்பெரிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் உக்ரைன தலைநகர் கீவ் நகரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    இரு நாடுகளுக்கும் மிக அருகில் உள்ளது போலந்து. உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து நாட்டின் வான்வழியில் நுழைந்ததாக போலந்து குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், உடனடியாக இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், எஃப்16 போர் விமானத்தை செயல்படுத்த நேட்டோ உறுப்பினர் நாட்டை தூண்டுகிறது எனவும் எச்சரித்துள்ளது.

    • மாணவர், "வை ஃபை" தொடர்புக்கு உக்ரைனுக்கு ஆதரவாக பெயரிட்டிருந்தது தெரிய வந்தது
    • "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் 24 அன்று, ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் கடுமையான உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்ந்தாலும், 2 வருடங்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தனது "வை ஃபை" (wi-fi) தொடர்புக்கு, உக்ரைனை ஆதரிக்கும் வகையில் பெயரிட்டிருந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள், மாணவரின் பல்கலைக்கழக தங்குமிடத்தில் சோதனையிட்டனர். அங்கு அவரது கணினியையும் "வை ஃபை" (wi-fi router) கருவியையும் பரிசோதித்ததில் "ஸ்லேவா உக்ரைனி" என அந்த மாணவர் இணைய தொடர்புக்கு பெயரிட்டிருந்தது தெரிய வந்தது.

    "உக்ரைனுக்கு புகழ் சேரட்டும்" (Glory to Ukraine) எனும் பொருள்படும் வகையில் இப்பெயர் இருந்ததால், அவரை ரஷிய காவல்துறை கைது செய்தது.

    வழக்கு விசாரணைக்கு பிறகு, பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்த கூடிய குற்றச்செயலாக இதனை நீதிமன்றம் கருதியது.

    இதையடுத்து, நீதிமன்றம் அந்த மாணவருக்கு 10-நாள் சிறைத்தண்டனை வழங்கியது.

    ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் நடக்கும் போரை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" என்றுதான் ரஷியர்கள் அழைக்க வேண்டும் எனும் சூழ்நிலை ரஷியாவில் நிலவுகிறது. மாறாக, "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போரை எதிர்த்தும், உக்ரைனுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கருத்து தெரிவித்தும் வந்த நூற்றுக்கணக்கான ரஷியர்கள் அந்நாட்டில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

    • இரு நாடுகளும், தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை வெளியிட்டுள்ளன
    • இரு நாடுகளின் அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

    ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.

    இரு நாடுகளும், ரஷியாவில் வாழும் தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


    அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    அடுத்த 48 மணி நேரத்தில் ரஷியாவில் பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்.

    பலர் ஒன்று கூடும் இடங்கள், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    எனவே, ரஷியாவில் வாழும் அமெரிக்க குடிமக்கள், பொதுவெளியில் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.


    இதே போன்று இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, 2 வருடங்கள் ஆன நிலையில், ரஷியாவில் ஆபத்து அதிகரித்துள்ளது.

    ரஷியாவில் மக்களுக்கு பாதுகாப்பு உறுதியாக இல்லை.

    எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷியாவிற்கு செல்லும் இங்கிலாந்து நாட்டினருக்கு பயண காப்பீடு ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இரு நாடுகளின் இந்த அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், அமெரிக்காவும், இங்கிலாந்தும், தங்கள் எச்சரிக்கைக்கான காரணங்களை இதுவரை வெளியிடவில்லை.

    • அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • சர்வதேச சட்டங்களை மீறி ஐரோப்பா வலிமை இழப்பதை விரும்பவில்லை என்றார் மேக்ரான்

    2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron), "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்திருந்தார்.

    மேக்ரானின் கருத்திற்கு பிரான்சிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக இருந்தது.

    இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசிற்கு (Czech Republic) சென்றிருந்த மேக்ரான், அந்நாட்டின் அதிபர் பீட்டர் பவெலை (Petr Pavel) சந்தித்தார்.

    இச்சந்திப்பிற்கு பிறகு மேக்ரான் தெரிவித்ததாவது:

    ரஷியாவை எதிர்க்கும் உக்ரைனை நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

    ஆதரவு அளிக்கும் நாடுகள் கோழைகளாக கூடாது.

    நாம் கோழைகள் அல்ல என உறுதியாக உலகிற்கு தெரிவிக்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.

    இது நமது போர். நடப்பது நடக்கட்டும் என நாம் கண்டும் காணாமல் எவ்வாறு இருக்க முடியும்?


    அதனால்தான் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் துருப்புகளை இறக்க வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக அதை செய்வோம் என நான் முன்பு கூறினேன். அந்த நிலையில் நான் பின் வாங்க மாட்டேன்.

    நாம் ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இல்லை.

    உக்ரைனில் நிலைமை சீரடைவதையே நாம் விரும்புகிறோம்; மோசமடைவதை அல்ல.

    சர்வதேச சட்டங்கள் எதையும் மீறி அதனால் ஐரோப்பாவின் நிலைமை வலிமை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு மேக்ரான் தெரிவித்தார்.

    • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ளது
    • மின்சார கிரிட்-களை நாசமாக்கிய குற்றத்திற்காக "கைது வாரண்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு போரிட்டு வருகிறது.

    இப்பின்னணியில், பல்வேறு போர் குற்றங்கள் புரிந்ததாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் (Hague) நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) வழக்கு நடைபெற்றது.

    இந்நிலையில், ரஷிய நீண்ட தூர ராணுவ விமான சேவையின் தலைவரான செர்ஜி கொபிலாஷ் (Sergei Kobylash) மற்றும் கருங்கடல் படை (Black Sea Fleet) ஆணையர் விக்டர் சொகோலோவ் (Viktor Sokolov) ஆகிய இருவரும் 2022 அக்டோபர் தொடங்கி 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பல மின்சார உற்பத்தி கிரிட்-களை முற்றிலும் நாசமாக்கிய குற்றத்திற்காக ஐசிசி (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    மின் கட்டமைப்பை நேரில் கண்டறிய நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் கரிம் கான் (Karim Khan) உக்ரைனுக்கு சென்று ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) ரஷியா உறுப்பினர் இல்லை.

    எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தின் வசம் ரஷியா ஒப்படைக்காது என தெரிகிறது.


    இந்த தீர்ப்பை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) வரவேற்றுள்ளார்.

    கடந்த வருடம், ஐசிசி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மற்றும் வேறொரு அதிகாரி ஆகியோர், உக்ரைனிலிருந்து அந்நாட்டு சிறுவர்களை ரஷியாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தி "வாரண்ட்" பிறப்பித்தது.

    ஆனால், இதனை புறக்கணித்த ரஷியா, பதிலடியாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், அரசு வழக்கறிஞருக்கும் "வாரண்ட்" பிறப்பித்தது.

    நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து விசாரிக்கும் ஐ.நா.வின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வேறு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    • வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா சார்பில் போரில் ஈடுபட்ட இந்தியர் உயிரிழந்தார். இதனை ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷியா - உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர், ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் ஆவார். ஆனால், அவர் எதற்காக ரஷியா சென்றார், அங்கு அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    "இந்தியர் ஸ்ரீ முகமது அஸ்ஃபான் என்பவர் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் ரஷிய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று ரஷியாவுக்கான இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.



    அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவர் அஸ்ஃபான் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அஸ்ஃபான் உயிரிழந்த தகவல் அவர்களுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஒவைசி மூலமாக தெரிந்து கொண்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஒவைசி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்த விவகாரம் தொடர்பாக ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல் போரில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஒவைசி எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், ரஷியாவில் சிக்கி தவிக்கும் 20 இந்தியர்கள் உதவி கோரியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. துபாயை சேர்ந்த ஃபைசல் கான் என்பவரே இந்தியர்களை அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

    • படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லை என கூற முடியாது என மேக்ரான் கூறியிருந்தார்
    • நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை என்றார் மேக்ரான்

    2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்தும் தொடர்கிறது.

    உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று, உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல், மாநாட்டிற்கு பிறகு நிருபர்களிடம், "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்தார்.

    மேக்ரானின் கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலர் கருத்து கூறி வந்தனர்.

    மேற்கத்திய துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் நிராகரித்தன. ஆனால், எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் நிராகரிக்கவில்லை.

    பிரான்சிலும் எதிர்க்கட்சிகளால் மேக்ரான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

    மேக்ரானுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷிய பாராளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர், "உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்பும் முடிவை மேக்ரான் எடுத்தால், அவரது படைக்கு நெப்போலியனின் ராணுவத்திற்கு ஏற்பட்ட கதிதான் நேரும்" என எச்சரித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான பணிகளை காணச் சென்ற மேக்ரானிடம் உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது குறித்து மீண்டும் கேட்கப்பட்டது.


    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உக்ரைன் ஆக்கிரமிப்பு ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சனை.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் குறித்த எனது கருத்துகள் சிந்தித்து கூறப்பட்டவை.

    நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சரிபார்க்கப்பட்டு, ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை.

    இவ்வாறு மேக்ரான் கூறினார்.

    ஆனால், தனது நிலை குறித்து மேலும் விவரங்கள் அளிக்கவோ அல்லது கருத்துகள் கூறவோ மேக்ரான் மறுத்து விட்டார்.

    நேட்டோ நாடுகளின் துருப்புகள் உக்ரைனில் இறங்கினால், உலகம் ஒரு அணு ஆயுத போரைக் காண வேண்டி வரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்
    • ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

    இன்னும் சில வாரங்களில் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்.

    இந்நிலையில், இன்று, ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    மேற்கத்திய நாடுகள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது வளர்ச்சியை முடக்க முயன்று வருகின்றன.

    அது மட்டுமல்ல, அவர்கள் நம்மை அழிக்கவும் பார்க்கின்றனர்.

    அவர்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் நமது நாட்டையும் உக்ரைனையும் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்வதில்தான் முனைப்பு காட்டுகின்றனர்.

    நமக்கிடையே பிளவு ஏற்படுத்தி நம்மை வலிமை குறைந்தவர்களாக உருவாக்க முயல்கின்றனர்.

    பெரும்பாலான ரஷிய மக்கள் உக்ரைனில் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எடுக்கப்பட்டதை வரவேற்கிறார்கள்.

    ரஷிய குடிமக்கள்தான் நமது சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

    நமது எதிர்காலம் செல்லும் திசை குடிமக்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது.


    அரேபிய நாடுகள் மற்றும் லத்தீன் நாடுகளுடன் நமது உறவை நாம் வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.

    நேட்டோ (NATO) நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் துருப்புகளை அனுப்பினால், அணு ஆயுதப் போர் துவங்கும்.

    நேட்டோவில் பின்லாந்தும், சுவீடனும் இணைவதால் ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    எந்த எதிரி நாட்டின் எல்லைக்கு உள்ளேயும் சென்று அழிக்க கூடிய ஆயுதங்கள் நம்மிடையே உள்ளன.

    ரஷியாவை ஆக்கிரமிக்க எவரேனும் முனைந்தால் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடுமையான பாதிப்புகள் உருவாகும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    • தளவாடங்கள் இல்லாததால் ரஷிய ராணுவம் முன்னேறுவதை உக்ரைனால் தடுக்க முடியவில்லை
    • ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம் என்றார் மேக்ரான்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.

    உக்ரைனிடம் போதுமான அளவு ராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷிய ராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

    மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷியாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் ராணுவ அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார்.


    இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.

    இதில் பேசிய பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் தெரிவித்ததாவது:

    இப்போரில் ரஷியா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷியா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.

    ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷிய மக்களுடன் அல்ல.

    குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.

    உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம்.

    இவ்வாறு மேக்ரான் கூறினார்.

    சில தினங்களுக்கு முன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "நேரடியாக மேற்கத்திய நாடுகளின் ராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷியாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் "என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய-உக்ரைன் போர் குறித்து இதுவரை டிரம்ப் உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை
    • பொய் தகவல்களை பரப்ப பில்லியன்களில் செலவு செய்கிறார் புதின் என்றார் ஜெலன்ஸ்கி

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்கள் கடந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி மற்றும் ராணுவ உதவியை தொடர்வதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய-உக்ரைன் போர் குறித்து தனது நிலைப்பாட்டையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

    தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவராக கருதப்படும் டிரம்ப், புதினின் ஆதரவாளராக விமர்சிக்கப்படுகிறார்.

    இந்நிலையில், புதின் மற்றும் டிரம்ப் குறித்து ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்தார்.

    அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது:

    இரண்டு வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்போரில் இதுவரை உக்ரைன் நாட்டு வீரர்கள் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்ப பில்லியன்களில் புதின் செலவு செய்து வருகிறார். தற்போது அவர் அந்த முயற்சியில் வெற்றி அடைந்தது விட்டாரோ என தோன்றுகிறது.

    ரஷியாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார்.


    டிரம்ப், புதின் பக்கம் நிற்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அமெரிக்க ராணுவம் ரஷிய ராணுவத்துடன் போர் புரிந்ததில்லை. அதனால் அவரது உண்மையான நோக்கங்களை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் புதினை எதிர்த்து போரிட்டு வருகிறோம்; எங்களுக்கு தெரியும்.

    நாங்கள் இப்போரில் வெற்றி பெறுவது எங்கள் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளின் கைகளில் உள்ளது.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    • 1984ல் வேல்ஸ் (Wales) பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்
    • தாக்கப்படும் அபாயம் இருந்தும் இங்கு வந்து உதவினர் என உக்ரைன் தொழிலாளர்கள் கூறினர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    நூற்றுக்கணக்கான உக்ரைன் சுரங்க தொழிலாளர்களும் ரஷியாவிற்கு எதிராக போரில் களம் இறங்கி உள்ளனர்.

    1984ல் ஐரோப்பாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உக்ரைன், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சுரங்க தொழிலாளர்களும் ஆதரவளித்தனர்.

    நீண்ட நாள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வருவாய் இல்லாமல் தவித்த அந்த தொழிலாளர்களுக்கு உலகெங்கும் இருந்து பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.


    அப்போது சோவியத் யூனியன் (Soviet Union) என அழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷியாவில், உக்ரைன் பகுதியில் இருந்த சுரங்க தொழிலாளர்களில் ஏராளமானவர்கள், வெல்ஷ் (Welsh) சுரங்க தொழிலாளர்களுக்கு பலவித உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தனர்.

    சுமார் 40 வருடங்கள் கடந்த பிறகும், தங்களுக்கு உக்ரைனியர்கள் செய்த உதவியை மறக்காத வெல்ஷ் பணியாளர்கள், தங்களின் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி, பல சரக்கு வாகனங்களில் மருந்து, மளிகை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை தெற்கு வேல்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு, சாலை வழியே கொண்டு சென்று வழங்கினர்.

    இது குறித்து உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள், "சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை 1984ல் நாங்கள் மறக்கவில்லை. அதே போல் அவர்களும் எங்களை இப்போது மறக்கவில்லை. குண்டு வீச்சில் தாக்கப்படும் அபாயம் உள்ளதை அறிந்தும் அவர்கள் துணிந்து வந்து எங்களுக்கு உதவினர்" என பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

    ×