என் மலர்
நீங்கள் தேடியது "விநாயகர்"
- ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
- விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள்.
அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும். நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.
அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும்.

கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்துவிட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
- விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்:
அவினாசி அருகே மேற்குபதி அபிஷேகபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜாப்பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில்களின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடந்தது. முன்னதாக இந்த விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், 108 சங்க பூஜை, மகாவிஷ்ணு ஹோமம், யாக பூஜை வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் 5 கிராமபொதுமக்கள் செய்து இருந்தனர்.
- விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.
புதுவை காந்திவீதியில் சின்னமணிக் கூண்டு அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் (வியாழக்கிழமை) நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி (திங்கட்கிழமை) விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்ற வந்தன. இன்று காலை 5 மணிக்கு சாமிக்கு ரக்ஷாபந்தனம் மற்றும் தேவதா பூர்ணா ஹுதி மற்றும் தத்வார்ச்சனையும், 8 மணிக்கு தீபாராதனை மற்றும் கலச புறப்பாடும் நடந்தது.
9 மணிக்கு கோவிலில் அனைத்து விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவகுமார், புதுவை பா.ஜனதா நகர மாவட்ட தலைவர் சக்தி.கிருஷ்ணராஜ், விஷகா ஜீவல்லரி உரிமையாளர் ஆனந்த், நியூ மெடிக்கல் சென்டர் செயல் இயக்குனர் அர்ஜூன் சுந்தரம், இயக்குனர் தாயுமான சுந்தரம், நிர்வாக இயக்குனர் நளினி சுந்தரம், அட்லாண்டா டிராவல்ஸ் உரிமையாளர் பிரவீன், என்.பி. ஆனந்தா நகை மாளிகை ஸ்தாபகர் பெருமாள் பிள்ளை உரிமையாளர் நாராயணன், என்.பி. ராஜராம் ஜூவல்லர் ஸ்தாபகர் பெருமாள் யாதவ், செல்வம் பேக்கரி மணிகண்டன் மற்றும் வியாபார பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.
- உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
- விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.
'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.
இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.

விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.
ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.
உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.
- சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது.
- உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கோவை:
விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, "விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் பருவமழை பொழிந்து முடித்து, கார்மேகங்கள் மறைய தொடங்கியவுடன், நாடெங்கும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் காற்றில் பரவ, லட்சக்கணக்கானவர்கள் அன்பிற்குரிய ஆனைமுகத்தானை கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பார்கள். இப்படி விழாக்கோலமும், பலகாரங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கதை ஒன்று வெறும் புராணமாக இருந்துவிடாமல், புத்தி, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்திற்கான மகத்தான அறிகுறியாக திகழ்கிறது.
கதை இப்படி ஆரம்பிக்கிறது. சிவன் - அவர் பரமயோகி - தன் இல்லத்தையும், மனைவி பார்வதியையும் விட்டு நீண்ட காலம் சென்றிருக்கிறார். தனிமையும், தாய்மைக்கான ஏக்கமும் அதிகரித்ததால் அவள் அசாதாரண படி ஒன்றை எடுக்கிறாள். தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை சேகரித்தாள். தனது தோலின் அம்சங்களை கொண்டிருந்த அந்த சந்தனத்தை மண்ணுடன் கலந்தாள், அதை ஒரு பிள்ளை வடிவத்தில் பிடித்து வைத்தாள். அவள் வடித்த இந்த உருவத்திற்கு உயிர் ஊட்டினாள்.
சிவன் பல வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார். தன் தாய்க்கு காவலாக வாசலில் ஒரு பாலகன் நின்று கொண்டிருந்தான். இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டிருக்கிறார்கள், ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. கோபத்தில் சிவன் பாலகனின் தலையை துண்டித்துவிடுகிறார். பார்வதியின் துக்கமும் ஆத்திரமும் தீவிரமாக இருந்தது. இந்த துன்பத்தை சரிசெய்ய நினைக்கிறார் சிவன். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் கணங்கள், அந்த கணங்களின் தலைவரான ஒருவரின் தலையை எடுத்து பாலகனின் தலைக்கு பதிலாக மாற்றிவைத்தார் சிவன்.
சிவ கணங்கள் - அவர்கள் விசித்திரமான வேற்றுகிரக வாசிகள் - இவர்களின் உடல் அமைப்பு மனிதர்களைப் போல் அல்லாமல் எலும்புகளற்ற கைகள் கொண்டவர்களாக கூறப்படுகிறார்கள். இதுவே ஓவியர்கள் விநாயகரை தும்பிக்கை கொண்டவராக, ஆனைமுகத்தானாக சித்தரிக்க காரணமானது. ஆனாலும், இன்றும் ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு பக்திப் பாடலும், அவரை கணபதி என்றுதான் சொல்கிறதே தவிர, கஜபதி என்று அல்ல.
விநாயகர் தோன்றியது இப்படித்தான்: பார்வதியின் உயிர்-படைக்கும் ஆற்றல் மூலம் தோன்றி, சிவகணத்தின் தலையை கொண்டவர் ஆனார் - புத்திசாலித்தனம், உயிர்மூலம் ஆகியவற்றின் அறிகுறி ஆனார். சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி.
விக்னங்களை, அதாவது தடைகள் அனைத்தையும் தகர்ப்பவர் - அதனால் விக்னேஸ்வரன் என்று வணங்கப்படுகிறார். அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தம் அல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் தாமாகவே கரைந்து போய்விடும். அவை இனி தடைகளாக இல்லாமல் படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித்தனம் என்பது தந்திரமாக இருப்பதையோ, சாமர்த்தியமான கணக்குகளையோ குறிக்கவில்லை - இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பதையே குறிக்கிறது - உள்ளுக்குள் அமையும் சமநிலை காரணமாக நமக்குள்ளும், வெளிபுறத்திலும் வாழ்க்கையை சுகமாக கடக்க முடிகிறது.
இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகமாக வெளிப்படுகிறது. பல நாட்களுக்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை வடிப்பார்கள், ஆடல் பாடலுடன் அவரை ஆராதிப்பார்கள், அவருக்கு உணவு படைப்பார்கள், பக்திப் பரவசத்துடன் அவரை கொண்டாடுவார்கள். அதேசமயம், அந்த மூர்த்தியை நீரில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது. நீரில் அமிழ்த்துவது - சிவன் நிகழ்த்திய செயலான அழித்தலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து ஒரே சுழற்சியை குறிக்கின்றன - உருவத்தைப் படைப்பது, அதன் மூலம் கற்றுக்கொள்வது, கடைசியில் அதை விடுவிப்பது.
விநாயகர் சதுர்த்தி மூலம் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். அதாவது, உண்மையான புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் இறுக்கமானது அல்ல, பற்றுகள் சார்ந்தது அல்ல. அது நீர் போல இளகிய தன்மை கொண்டது, கட்டுகள் அற்றது - அதாவது, தொடர்ச்சியாக படைப்பிற்கு உள்ளாகி, அதன்பின் கரைந்துபோகும் உயிர்த்தன்மையை போன்றதே புத்திசாலித்தனமும்.
பிள்ளையார் வடிவத்தை உருவாக்கி அதன்பின் அதை நீரில் கரைக்கும் வழக்கம் ஒருவிதத்தில் இந்த பிரபஞ்சத்தின் அறுதியற்று மாறக்கூடிய இயல்பை குறிக்கிறது - சும்மா கண்மூடித்தனமாக உருவங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த உருவத்தின் குணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறது.
மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது. உண்மையான புத்திசாலித்தனம் என்பது அறிவை சேகரிப்பது அல்ல, சாமர்த்தியமாக இருப்பதும் அல்ல; இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இசைந்து வாழும் திறனாகும் - எதிர்ப்பில்லாமல் மிதந்து வாழ்ந்து, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, நம் கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவது ஆகும்.
இப்படியாக, இந்த கோலாகலமான பண்டிகையை கொண்டாடுங்கள், கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளுங்கள், அழகு அழகான விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள். கூடவே கணபதி என்பவர் உணர்த்தும் ஆழ்ந்த உட்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் - தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
- பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக நடிகர் நடிகைகள் பலர் தங்களது வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது. நடிகர், நடிகைகள் பலர் பூஜை செய்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஹன்சிகா நேற்று மும்பை வீதிகளில் விநாயகர் சிலையை புதிதாக வாங்கி காரில் எடுத்துச் சென்றார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னாணியுடன் இன்று காலை விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதுபோன்று ஷ்ரத்தா கபூர், கத்ரீனா கைப் ஆகியோர் விநாயகர் சிலை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நடிகை ராதா இன்று காலை அவரது வீட்டில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி எங்கள் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
- விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
- காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர்.
கோவை:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களில் திரண்டு வழிபாடு செய்தனர்.
கோவை புளியகுளத்தில் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும். 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.
இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா தொடங்கி நடந்து வந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடந்தது. 4.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 4 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. முகத்தில் மட்டும் 40 கிலோ சந்தனத்தை கொண்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, அதிரசம், வடை, எள் உருண்டை, முறுக்கு என 36 வகையான நைவேத்ய பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. 5.45 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோல ஈச்சனாரி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் உள்பட கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
- அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
- வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
ஔவையார் அருளிய வினை தீர்க்கும் விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!
- ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார்.
- ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார்.
புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.
ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனை தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானை புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச்செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.
சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார். இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தை பார்த்தார். அவருக்கு சுந்தரரை பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் "சிவயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கி புறப்பட்டது.
இவ்வாறு ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி" என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பிராட்டி பதில் அளித்தார்.
ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.
ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை செய்வாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார்.
ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார். பூஜையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) ஔவையாருக்கு எடுத்துக் கூற, ஔவையார் அதனை "விநாயகர் அகவல்" என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார்.
இறுதியில் விநாயகர் தன் துதிக்கையினால் ஔவையாரை தூக்கி கைலையில் சேர்த்தார். ஔவையாரும் கயிலை காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் என புராண கதைகள் கூறுகின்றன.
- பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.
தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.
சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.
- அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.
இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
- வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.
சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.






