என் மலர்tooltip icon

    வழிபாடு

    • தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.
    • பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், புண்யாக வாஜனம், பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, மாலை முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது. முறையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு ஆகி கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து, கற்பக விநாயகர், மகா மாரியம்மன், முனீஸ்வரர், நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது.

    முடிவில் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ராயபுரம்:

    பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான மிதுன லக்னத்தில் பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    தேர்த் திருவிழாவை முன்னிட்டு காளிதாஸ் சிவாச்சாரியார் சாமிக்கு அபிஷேக, அலங்காரம் செய்து இருந்தார். அதை தொடர்ந்து காலை 7.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள் எஸ்.சர்வேஸ்வரன், வி.சீனிவாசன், இரா.இராஜேந்திர குமார், ஜெ.ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காளிகாம்பாள் கோவிலில் இருந்து 5 வண்ண குடைகளுடன் புறப்பட்ட தேர், 108 கைலாய வாத்தியம், தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க, 4 மாட வீதிகளை சுற்றி வந்தது.

    பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (ஞாயிற்று கிழமை) மாலை 7 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க கின் =னித்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • சிவதூதி தேவியை வழிபட்டு வந்தால், நமக்கு எதிராக நடைபெறும் அநீதியும், அதர்மமும் அழியும்.
    • குலசுந்தரி தேவியை வழிபட செல்வ வளமும், சொத்துக்களும் சேரும்.

    லலிதா பரமேஸ்வரியை, ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை 'ஸ்ரீவித்யை' எனப்படும். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக, லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை எனப்படும் கிருஷ்ண பட்சம் (அமாவாசையுடன் சேர்த்து 15 நாட்கள்), வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சம் (பவுர்ணமியுடன் சேர்த்து 15 நாட்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்ச பதினைந்து நாட்களில் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் அதிபதிகளாக வருவார்கள். ஒரு மாதத்தின் இரு நாட்களில் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கின்றனர். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இங்கே 5 நித்யா தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    மஹா வஜ்ரேஸ்வரி

    இந்த தேவி ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரெண்டாம் மதில் சுற்று, வஜ்ரமணியால் ஆனது என்றும், அதன் அருகில் வஜ்ரமயமான நதி ஒன்று உள்ளது என்றும், அதற்கெல்லாம் அதி தேவதை வஜ்ரேஸ்வரி என்றும், துர்வாச முனிவர் தன்னுடைய லலிதாஸ்தரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் இருக்கிறாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க விரைந்து வருவாள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை, செந்நிற பூக்களால் ஆன மாலையை அணிந்தவள். வைடூரியம் பதித்த கிரீடம், கைகளில் பாசம், அங்குசம், கரும்பு- வில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களை பார்க்கிறாள். இந்த அன்னையை வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சஷ்டி, தேய்பிறை தசமி.

    மந்திரம்:-

    ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே

    வஜ்ர நித்யாயை தீமஹி

    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    சிவதூதி

    சிவபெருமானையே தூதாக அனுப்பியவள் இந்த தேவி. சும்பன் மற்றும் நிசும்பன் ஆகியோருடன் போரிட அம்பிகை முடிவு செய்தார். போர் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முறை அந்த அசுரர்களிடம் சிவபெருமானை தூதாக அனுப்பியதாக தேவி மகாத் மியத்தில் கூறப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம், கோடை காலத்து சூரிய ஒளிபோல் மின்னும். நவரத்தினங்கள் இழைத்த மகுடமும், பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்வன. தன் திருக் கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள். இந்த தேவியை வழிபட்டு வந்தால், நமக்கு எதிராக நடைபெறும் அநீதியும், அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கைகள் எளிதாக நிறைவேறும். ஆபத்து நெருங்காது.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை சப்தமி, தேய்பிறை நவமி.

    மந்திரம்:-

    ஓம் சிவதூத்யை வித்மஹே

    சிவங்கர்யை தீமஹி

    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    த்வரிதா

    இந்த தேவிக்கு 'தோதலா தேவி' என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் 'த்வரிதா' என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். தன்னுடைய உடலில் எட்டு நாகங்களை சூடியிருப்பாள். கருநீல நிறமான இவள், முக்கண்களுடனும், நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் அருள்கிறாள். சலங்கை, இடை மேகலை, ரத்தின ஆபரணங்களுடன், மயில் பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார ரூபமாக தரிசனம் தருகிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்க காத்திருக்கின்றன. இத்தேவியை வணங்குபவர்களுக்கு, அஷ்ட சித்திகளும், ஞானமும் கைகூடும். பயம் விலகும். கலைகளில் தேர்ச்சி பெறலாம். அதோடு பூரண ஆயுளும் கிடைக்கும்.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை அஷ்டமி,

    தேய்பிறை அஷ்டமி

    மந்திரம்:-

    ஓம் த்வரிதாயை வித்மஹே

    மஹாநித்யாயை தீமஹி

    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    குலசுந்தரி

    குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியை குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இந்த தேவி. பன்னிரெண்டு திருக்கரங்கள், தாமரை மலரைப் போன்ற மலர்ந்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் இருக்க, கரங்களில் ஜெபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும் இவளைச் சுற்றி இருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும், அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர். இந்த தேவியை வழிபடுபவர்கள், சகல ஞானமும் பெறுவர். செல்வ வளமும், சொத்துக்களும் சேரும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை நவமி, தேய்பிறை சப்தமி

    மந்திரம்:

    ஓம் குலஸுந்தர்யை வித்மஹே

    காமேஸ்வர்யை தீமஹி

    தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

    சர்வாத்மிகா

    காலத்தைக் குறிப்பிடும் வடிவான தேவி இவள். 'சர்வாத்மிகா' என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். உதய நேரத்தில் இருக்கும் சூரியனின் நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தைக் கொண்டவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜெபமாலை, புஷ்பபாணம், கரும்பு - வில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபய -வரத முத்திரை தாங்கியிருப்பவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி.

    மந்திரம்:-

    ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே

    நித்யா நித்யாயை தீமஹி

    தன்னோ யோகிநி ப்ரசோதயாத்

    • இன்று வைஷ்ணவ ஏகாதசி.
    • திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீர ராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-24 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி காலை 6.45 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : சித்திரை காலை 11.34 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று வைஷ்ணவ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைரச்சப்பரத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. காட்டுபருவூர் ஸ்ரீ ஆதிகேசப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதியுலா. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீர ராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாசம்

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-உண்மை

    கடகம்-திடம்

    சிம்மம்-உறுதி

    கன்னி-வெற்றி

    துலாம்- விருத்தி

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- லாபம்

    மகரம்-செலவு

    கும்பம்-வரவு

    மீனம்-களிப்பு

    • வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்குகளாக பிறக்க நேர்ந்தது.
    • இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில், பாலாற்றின் தென்கரை பகுதியில் அமைந்துள்ளது, குரங்கணில் முட்டம் என்ற ஊர். பொதுவாக ஊர்களின் பெயர்கள், அந்த தலத்தை வழிபட்டவர்கள் பெயரைக் கொண்டு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையிலே குரங்கு, அணில், காகம் என மூன்று உயிரினங்கள் வழிபட்டு பேறு பெற்றதால், 'குரங்கணில் முட்டம்' என இந்த தலம் வழங்கப்படுகிறது.

    வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்குகளாக பிறக்க நேர்ந்தது. அதன்படி வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர். தங்களுடைய வினைப் பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர். காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள சிவாலயம் சென்று வழிபட்டால், அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்பலாம் என இறைவன் வழிகாட்டினார்.

    அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம். இப்படி குரங்கு, அணில், காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் எனும் சிவாலயமாகும். தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது. கிருஷ்ணதேவராயர், சம்புவராயர் எனப் பல்வேறு மன்னர்களாலும் போற்றப்பட்ட தலமாகவும் இது விளங்குகின்றது.

    திருமாகறலில் இருந்து கச்சியம்பதி நோக்கிச் செல்லும் வழியில், இத்திருக்கோவிலின் பெருமை அறிந்து வருகை தந்த திருஞானசம்பந்தர், இவ்வாலயம் பற்றி பதிகம் பாடினார்.

    இத்தல இறைவனான வாலீஸ்வரர், மேற்கு நோக்கியபடி எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே 'கொய்யாமலர்நாதர்' என்றும், மலைமீது சுயம்புவாக தோன்றியதால் 'கொய்யாமலைநாதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். கருவறையில் வழக்கமாக காணப்படும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, வலம்புரி விநாயகரும், முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால், முன்வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் திருப்பெயர், 'இறையார் வளையம்மை' என்பதாகும். அன்னை சிறிய வடிவில் எழிலான கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அன்னையின் பெயரை 'இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கி..' என்ற பாடல் வரிகளால் திருஞானசம்பந்நர் இதனை உறுதி செய்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தீர்த்தமாக பிறைச்சந்திர வடிவில் காகம் தன் அலகால் கீரிய 'காக்கை மடு'வும் விளங்குகின்றன.

    அமைவிடம்

    காஞ்சிபுரம் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் தூசி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் குரங்கணில் முட்டம் ஊர் இருக்கிறது.

    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.
    • லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-23 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி முழுவதும். பிறகு துவாதசி.

    நட்சத்திரம் : அஸ்தம் காலை 9.04 மணி வரை. பிறகு சித்திரை.

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை

    இன்று சுமார்த்த ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். மாயவரம் ஸ்ரீகவுரிமயூரநாதர் திருக்கல்யாணம். காஞ்சி குமரக்கோட்டம், ஸ்ரீமுருகப் பெருமான் ரதம், நாட்டரசன் கோட்டை, ஸ்ரீகண்ணுடைய நாயகி வெள்ளி விருஷப சேவை. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-சிறப்பு

    கடகம்-களிப்பு

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-லாபம்

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- உண்மை

    மகரம்-சாந்தம்

    கும்பம்-சாதனை

    மீனம்-பயணம்

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சூரிய சோம கும்ப பூஜை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருவேற்காட்டில் சிவன் கோவில் அருகே ஸ்ரீ ஆதி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 1-ந்தேதி விநாயகர் வழிபாடு, கிராம தேவதை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி விக்னேஸ் வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, லட்சுமி ஹோமம், பிரம்மச் சாரிய பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணா ஆகூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. சூரிய சோம கும்ப பூஜை ஹோமம், பவனாபி ஷேகம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலமூர்த்திக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிலையில் நான்காம் கால யாக பூஜை, சிறப்பு ஹோமம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் வேத சிவாகம வித்யாபூஷனம் ஸ்தானிகர் சந்திரசேகர சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கோபுர கலசங்கள் மற்றும் விமான கும்பாபிஷேகம், மூலவர் ஆதி கருமாரியம்மன், மற்றும் பரிவார மூர்த்திகள் விநாயகர், பாலமுருகன், பால சாஸ்தா, மகா கும்பாபி ஷேகமும், மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், திருவேற்காடு நகர மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், டி.ஜெயக்குமார், மற்றும் பல்வேறு மடங்கள், ஆன்மீக ஆதீனங்களைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள் மற்றும் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சாண்டி பி.செல்வராஜ், ஏ.நாராயணன், பி.கோவிந்தசாமி, கே.சந்துரு, ஏ.ஆர். பாலசுப்ரமணியன், டி.பாபுசேகர், இரா.சகா தேவன், ஏ.கே.சுப்பிரமணிய முதலியார், மீனாட்சி அம்மாள் குடும்பத்தினர், அரிமா ஆன்மீக அன்பர்கள் குழு, ஏ.கே.எஸ்.பிரதர்ஸ் குடும்பத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார்.
    • ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்று வருகிறது.

    இதற்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். இன்று அதிகாலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்கியது. இதனை தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-22 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி மறுநாள் விடியற்காலை 4.52 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரம் காலை 6.49 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம், இன்று சுபமுகூர்த்த தினம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி அனுமன் வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் பவனி. நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி கேடய சப்பரத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் காமதேனு வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலை யப்பன் புஷ்பாங்கி சேவை. திருக்கோஷ்டியர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப்பெருமாள் கோவிலில் ஸ்ரீகுரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிந்தனை

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-தாமதம்

    கடகம்-செலவு

    சிம்மம்-முயற்சி

    கன்னி-ஆதரவு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- நேர்மை

    மகரம்-நன்மை

    கும்பம்-உண்மை

    மீனம்-அசதி

    • வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.
    • தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன.

    வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி, மணிமேகலையிடம் ''வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத 'அமுத சுரபி' என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்'' என்று கூறி மறைந்தது, இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது, ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைஷாக பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும், யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சிதரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாக நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரூரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

    இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    • மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும்.
    • சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு சிறப்புவாய்ந்த நாளாகவும் அந்த தெய்வத்திற்கான வழிபாட்டு நாளாகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சாய்பாபா தான்.

    எந்த பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்குகிறார்களோ, சாய்பாபா அவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும்

    வியாழன் அன்று சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானதாகவும் மிகப்பெரிய நெருக்கடிகள் நீங்கி, பலன் தருவதாகவும் நம்பப்படுகிறது அல்லது கருதப்படுகிறது.

    சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.

    வியாழன் வழிபாடு:

    வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மத நம்பிக்கையின்படி, சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

    வியாழக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

    மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும். மனக்குறை நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பெருகும். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லி வர வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பது ஐதீகம்...

    1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

    சச்சிதானந்தாய தீமஹி

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    2. ஷீரடி சாய் பாபாவின் த்யான ஸ்லோகம்:

    பத்ரி க்ராம ஸமத் புதம்

    த்வாரகா மாயீ வாசினம்

    பக்தா பீஷ்டம் இதம் தேவம்

    ஸாயி நாதம் நமாமி.

    3.நினைத்த காரியம் நடக்க:

    "ஓம் சாய் குருவாயே நமஹ

    ஓம் ஷீரடி தேவாயே நமஹ

    ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ"

    தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி "ஸ்ரீ சாய் பாபாவை" மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும். இதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். உங்கள் மனதில் இருந்த இனம் புரியாத பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    சாய் பாபாவிற்கு உகந்த நிறம்:

    மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    குருவும், சாய் பாபாவும்:

    குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆனாலும் தினமும் குருவை வணங்குவது மகத்துவமானது என்கிறார்கள் சாய் பாபா பக்தர்கள். அதுபோல தினமும் சாய் பாபாவை ஒரு பத்துநிமிடமாவது வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது சாய் பக்தர்களின் நம்பிக்கை.

    • வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.
    • வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம்.

    வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாள் தான் வாஸ்து நாள் என்று அழைக்கப்படுகிறது. யார் அந்த வாஸ்து பகவான் அவர் எப்படி தோன்றினார் என்று பார்க்கலாம்.

    சிவ பெருமான் அந்தகாசுரன் என்பவனை வதம் செய்தார். அப்போது சிவன் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தியை பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

    வாஸ்து நாள் எப்போது வரும்:

    ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் எட்டு நாள்களிலும் வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

    வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார் என்கிறார்கள் ஜோதிடர்கள். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்வார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும்.

    வாஸ்து புருஷனை, கீழே தள்ளி அவன் மேல் 53 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது. வாஸ்து மண்டலம் சதுரமாக அமைந்திருக்கும். வாஸ்துவை பிரம்மதேவன் காப்பாற்றி அருளியதால், வீட்டின் நடு பாகம் பிரம்மாவுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. மனையடி சாஸ்திரம் இதனை பிரம்ம ஸ்தானம் என்றே விவரிக்கிறது.



    வாஸ்து சாஸ்திரம்:

    வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். முன்னர் சொன்னது போல் வாஸ்து பகவான் அந்த எட்டு நாள்களிலும் ஒன்றரை மணிநேரம் கண்விழித்திருக்கும் நேரம் தான் வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் ஆகும். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லவிதமாக வளர்ச்சி பெறும்.

    வாஸ்து பூஜை எப்போது செய்யலாம்:

    சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை. ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது.

    ஆகவே, வீட்டிற்கு வாஸ்து பூஜை செய்ய நினைப்பவர்கள் வைகாசி 21-ந்தேதி ஆன நாளை செய்யலாம். மேலும் புதன்கிழமையும் சேர்ந்து வருவதால் வாஸ்து செய்ய உகந்தநாளாகும். 

    ×