என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து ராகுல் பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
    • சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார்

    காங்கிரஸ் எம்.பியும் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அடுத்தடுத்து உரை நிகழ்த்தி வரும் ராகுல் காந்தி கூறி வரும் கருத்துக்கள் பாஜவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    விர்ஜினியா மாகாணத்தில் ஹெர்ன்டன் பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ராகுல் காந்தி தனது உரையில், இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன் [தலைப்பாகை] அணிவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதற்கும் கதா [சீக்கியர்கள் அணியும் வளையம்] அணிந்து கொண்டு குருத்துவாராவிற்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்பதற்குமான போராட்டம் நடக்கிறது. இதுவே தற்போது இந்தியாவில் நடக்கும் போராட்டம், இது சீக்கியர்கள் பற்றியானது மட்டுமல்ல, எல்லா மதங்களையும் பற்றியது என்று கூறினார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் RP சிங், 1984 இல் டெல்லியில் வைத்து 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் டர்பன்கள் அவிழ்க்கப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டது. அவர்களின் தாடியும் மழிக்கப்பட்டது. இது அனைத்தும் ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது நடந்தது. சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். ராகுலின் கருத்துக்கு அவர் மீது வழக்கு தொடர்வோம் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குழந்தைகளை விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.
    • எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்படும்.

    ஆஸ்திரேலியா:

    குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:-

    குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.

    அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது.

    சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது.

    எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்படும்.

    இது உலகளாவிய பிரச்சனை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு வேட்பாளரின் மைக்ரோபோனும் அவர்கள் பேசும் முறை மட்டுமே நேரலையில் இருக்கும்.
    • கமலா ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ்-டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாத நிகழ்ச்சி இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடக்கிறது. பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடக்கும் இந்த விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி ஊடகம் ஏற்பாடு செய்து உள்ளது.

    விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி தொகுப்பாளர்கள் டேவிட் முயர், லின்சி டேவிஸ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். 90 நிமிட விவாதம் நடைபெறும். இடையில் 2 இடைவேளை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வேட்பாளரின் மைக்ரோபோனும் அவர்கள் பேசும் முறை மட்டுமே நேரலையில் இருக்கும். மற்ற வேட்பாளரின் நேரம் இருக்கும்போது அணைக்கப்படும் என்றும், எந்தவொரு தலைப்புகளும் கேள்விகளும் வேட்பாளர்களுடன் முன்கூட்டியே பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த ஜூன் 27-ந் தேதி ஜோ பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜோபைடன் மிகவும் திணறினார்.

    இதனால் அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.

    அதன்பின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள், தங்களது எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசி உள்ளனர்.

    • சிலர் செல்போன் ஒளியில் மணலை தோண்டுவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி மணலில் புதைந்தவர்களை மீட்டனர்.
    • மனிதாபிமான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனுஸ் நகர் அருகே அல்-மவாசி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 40 பேர் பலியானார்கள். 60 பேர் காயம் அடைந்தனர்.



    தாக்குதல் நடந்த இடத்தில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டு அதில் இடிபாடுகள், மணல் மூடின. மீட்புப் பணியாளர்கள் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி மணலை மாற்றினர்.

    சிலர் செல்போன் ஒளியில் மணலை தோண்டுவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி மணலில் புதைந்தவர்களை மீட்டனர்.

    மனிதாபிமான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மனிதாபிமான பகுதியில் ஹமாஸ் அமைப்பி னர் பதுங்கி இருந்ததாகவும் அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியாவில் நிச்சயமாக ஏதோ மாறிவிட்டது.
    • பா.ஜ.க.வும், பிரதமரும் ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் அழுத்தம் உள்பட பல பயத்தை பரப்பினர்.

    வாஷிங்டன்:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் பேசிய போது, பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சித்து பேசினார்.

    மேலும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. வெளிநாட்டு மண்ணில் ராகுல் காந்தி இந்தியாவை திட்டமிட்டு அவமதிப்பதாக குற்றம் சாட்டியது.

    இந்நிலையில் அமெரிக்காவில் வர்ஜீனியாவின் ஹெர்ண்டன் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது, பிரதமர் மோடி, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை மீண்டும் கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியாவில் நிச்சயமாக ஏதோ மாறிவிட்டது. பா.ஜ.க.வும், பிரதமரும் ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் அழுத்தம் உள்பட பல பயத்தை பரப்பினர். ஆனால் அனைத்தும் சில நொடிகளில் மறைந்து விட்டன. நிறைய திட்டமிடல் மற்றும் பணத்துடன் இந்த அச்சத்தை பரப்ப அவர்களுக்கு பல ஆண்டு ஆனது. ஆனால் அதை முடிவுக்கு கொண்டு வர ஒரு நொடி மட்டுமே ஆனது.

    பாராளுமன்றத்தில் நான் பிரதமரை நேரில் பார்க்கிறேன். 56 அங்குல மார்பு கொண்ட பிரதமர் மோடியின் எண்ணத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். அவர் கடவுளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்பதெல்லாம் போய்விட்டது. அது இப்போது வரலாறாகி விட்டது.

    சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட தாழ்ந்தவை, சில மொழிகள் மற்ற மொழிகளை விட தாழ்ந்தவை, சில மதங்கள் மற்ற மதங்களை விட தாழ்ந்தவை, சில சமூகங்கள் மற்ற சமூகங்களை விட தாழ்ந்தவை என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. நீங்கள் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தாலும் சரி உங்கள் அனைவருக்கும் வரலாறு, பாரம்பரியம், மொழி உள்ளது.

    அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை போலவே முக்கியமானது. ஆனால் தமிழ், மணிப்பூரி, மராத்தி, பெங்காலி எல்லாமே தாழ்ந்த மொழிகள் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம்.

    இந்தியாவை அவர்கள் புரிந்து கொள்ளாதது தான் இவர்களின் பிரச்சனை. இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள தவறிவிட்டது. இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை நமது அரசியலமைப்பில் தெளிவாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

    இந்தியா அல்லது பாரதம் மாநிலங்களில் ஒன்றியம் என்று அது கூறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புயலால் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.
    • பாலம் இடிந்து விழுவதை பார்த்து சுதாரித்துக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி புயல் கடந்த சனிக்கிழமை அன்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங்க் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    கடந்த 30 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல் இதுவாகும். இந்த புயலால் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    19 வினாடிகள் ஓடும் வீடியோவில், பாலத்தில் லாரி ஒன்று மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    மேலும், லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், பாலம் இடிந்து விழுவதை பார்த்து சுதாரித்துக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • இன்ஸ்டாகிராமில் வெளியாகி சுமார் 3.3 கோடி பேரின் இதயங்களை கவர்ந்துள்ளது இந்த பர்கர் வீடு.
    • பர்கர் பிரியர்களும், பிரபல உணவு நிறுவனங்களும் பாராட்டி கருத்து பதிவிட்டு உள்ளனர்.

    பர்கர் வடிவ வீடு வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அது எங்கே இருக்கிறது என்று கேட்டுவிடாதீர்கள். செயற்கை அறிவு தொழில்நுட்பத்தில் காட்சி விருந்தாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த பர்கர் வீடு. வெளிப்புற தோற்றத்தில் பார்க்க பிரமாண்டமாக இருக்கிறது இந்த பர்கர்வீடு. உள்ளே அலங்காரம் முழுவதும் பர்கரால் ஆனது என்பதுதான் வடிவமைப்பாளரின் கற்பனையை அனைவரையும் மெச்ச வைக்கிறது. வரவேற்பு அறையில் அமரும் ஷோபா, விளக்கு, மேஜை, தூண் என அனைத்தும் பர்கர் மயமாக உள்ளது.

    இன்னும் உள்ளே சென்றால் பர்கர் சமையலறை, பர்கர் குளியலறை பிரமிக்க வைக்கிறது. குளியல் தொட்டியில் நிரப்பப்பட்ட திரவம் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது பர்கர் தயாரிக்க உதவும் திரவ சீஸ் என்று கூறப்படுகிறது. அதேபோல பர்கர் நீச்சல் குளமும் மனம் மயக்குகிறது.

    இன்ஸ்டாகிராமில் வெளியாகி சுமார் 3.3 கோடி பேரின் இதயங்களை கவர்ந்துள்ளது இந்த பர்கர் வீடு. பர்கர் பிரியர்களும், பிரபல உணவு நிறுவனங்களும் பாராட்டி கருத்து பதிவிட்டு உள்ளனர்.





    • பயணிகள் பஸ் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது.
    • புதோ மாகாணத்தில் ஆற்றின் மீது இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது.

    ஹனோய்:

    வியட்நாமில் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை காரணமாக இன்று ஒரு பாலம் இடிந்து விழுந்தது. ஒரு பஸ்சும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வியட்நாமை சனிக்கிழமை தாக்கிய யாகி என்ற சூறாவளி புயல் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின்போது 50 பேர் இறந்தனர்.

    இந்தநிலையில் காவ் பாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற பயணிகள் பஸ் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்புப் படையினர் குவிக்கப்பட்டனர், ஆனால் நிலச்சரிவுகள் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    அதுபோல புதோ மாகாணத்தில் ஆற்றின் மீது இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள் மற்றும் டிரக்குகள் ஆற்றில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேர் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 13 பேர் காணவில்லை. வியட்நாமைத் தாக்கும்முன், யாகி புயல் கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 உயிர் இழப்புகளையும், தெற்கு சீனாவில் நான்கு பேரையும் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பிலிப்பைன்ஸில் இந்த பாதிரியரை பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
    • போலி பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் நீண்டகால நண்பர் அப்போலோ குயிபோலொய் என்ற போலி பாதிரியார், பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஆள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் சிக்கினார். இதைத் தொடர்ந்து எஃப்பிஐ-இன் அதிகம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    இவர் மீது அமெரிக்க நீதித்துறை கடந்த 2021 ஆம் ஆண்டு 12 முதல் 25 வயதுடைய சிறுமிகள் மற்றும் பெண்களை தன்னுடன் கட்டாய பாலியல் உறவு வைத்துக் கொள்ள செய்ததாக குற்றம்சாட்டியது. மேலும் இவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், அமெரிக்க தேவலயங்களுக்கு மக்களை சட்டவிரோத விசாக்கள் மூலம் அழைத்து வந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

    இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்கா அழைத்து வரப்பட்டவர்களை கொண்டு தொண்டுபணிகள் மற்றும் தேவாலய நிர்வாகத்திற்காக நிதி திரட்ட வைத்தது, அந்த பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்தது போன்ற குற்றங்களில் அப்போலோ பாதிரியர் ஈடுபட்டு வந்துள்ளார். பிலிப்பைன்ஸில் இந்த பாதிரியரை பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

    தன்னை பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும், கடவுளால் நியமிக்கப்பட்ட மகன் என்றும் கூறிக் கொள்ளும் அப்போலோ பாதிரியார் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய 2 ஆயிரம் காவலர்கள், ஹெலிகாப்டர் மற்றும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    74 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் போலீசார் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடத்திய தேடுதல் வேட்டையில், போலி பாதிரியாரை போலீசார் கண்டுபிடித்தனர். அத்தனை பிரபலமாக இருந்த போதிலும், போலீஸ் தேடலுக்கு அஞ்சி பங்கர் ஒன்றில் மறைந்திருந்த போலி பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    • 532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும்.
    • கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசுக் கட்சியின் RNC ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும். ஒரு சராசரி அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்திற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஒரு அரசு ஊழியர் வருடத்திற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டும் தான் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது பதில் அளித்த வெள்ளை மாளிகை விடுமுறையின் போதும் பைடன் தனது ஜனாதிபதி கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாகக் கூறியது.

    • 251 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
    • தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 மில்லியன் டாலராக உள்ளது.

    உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் ட்ரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று இன்ஃபோர்மா கனெக்ட் அகாடமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110% அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது 251 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

    அதே போல், இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியனராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 மில்லியன் டாலராக உள்ளது. அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதம் 122.86% ஆக உள்ளது.

    இந்தப் பட்டியலில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் 2033க்குள் டிரில்லியனராக மாறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.
    • பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

    அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி டல்லாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இந்தியா ஒரே சிந்தனையை கொண்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. இந்தியா பல சிந்தனைகளை கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் சண்டை.

    பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும், அவர்கள் அதிகம் பேசக்கூடாது என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

    மக்களவை தேர்தல் முடிவு வந்த பிறகு பாஜக மற்றும் பிரதமரைக் கண்டு இந்திய மக்கள் பயப்படவில்லை என்பது தெரிந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தாக்குகிறார் என்பதை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புரிந்து கொண்டனர்.

    எங்கள் அரசியல் அமைப்புகளிலும், கட்சிகளிலும் அன்பு, மரியாதை மற்றும் பணிவு ஆகியவை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு மதம், ஒரு சமூகம், ஒரு சாதி , ஒரு மாநிலம் அல்லது ஒரு மொழி பேசுபவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து மனிதர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

    எல்லோரும் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவர்களின் சாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளது. ஆனால் உலகில் பல நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. சீனாவில் நிச்சயமாக வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. வியட்நாமில் வேலை வாய்ப்பு பிரச்சனை இல்லை. எனவே வேலையின்மை இல்லாத நாடுகளும் பூமியில் உள்ளன. இன்று உலக உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ராகுலின் பேச்சு பாரதத்திற்கு எதிரானது. இந்தியப் பெண்களுக்கு எதிரானது. அதனால்தான் இந்திய மக்கள் 2014 முதல் 2024 வரை ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் நிராகரித்தனர். 2029 ஆம் ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று தெரிவித்தார். 

    ×