என் மலர்
விளையாட்டு
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து ராஜஸ்தான் 4-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 185 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.
ஜெய்ஷ்வால் 36 பந்தில் 49 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), மகிபால் லோம் ரோர் 17 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), லீவிஸ் 21 பந்தில் 36 ரன்னும் (7 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப்சிங் 5 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்தது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்னில் வெற்றி பெற்றது.
மயங்க் அகர்வால் 43 பந்தில் 67 ரன்னும் (7பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 33 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 22 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
கார்த்திக் தியாகி 2 விக்கெட்டும், சஹாரியா, ராகுல் திவேதியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற வேண்டியது. கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர் ஆட்டத்தை மாற்றியது. கடைசி 2 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசூர் ரகுமான் 4 ரன்னை கொடுத்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட் இருந்தது. கார்த்திக் தியாகி முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. 2-வது பந்தில் ஒரு ரன் கொடுத்தார்.
3-வது பந்தில் நிக்கோலஸ் பூரனை அவுட் செய்தார். 4-வது பந்தில் தீபக் ஹூடா ரன் எடுக்கவில்லை. 5-வது பந்தில் ஹூடா ஆட்டம் இழந்தார். இதனால் கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. கார்த்திக் தியாகியின் அபாரமான பந்து வீச்சால் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
எளிதில் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை பஞ்சாப் அணி கோட்டை விட்டது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-
முந்தைய தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிவரும் 5ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். சிறப்பாக ஆடியும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு ராகுல் கூறினார்.
பஞ்சாப் அணி 6-வது தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 4-வது வெற்றியை பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியது.
காபூல்:
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான்கள் அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஹமீது ஷின்வாரி செயல்பட்டு வந்தார். அவரை ஹக்கானிகள் பதவி நீக்கம் செய்து உள்ளனர். இவர்கள் தலிபான்களின் கூட்டாளி ஆவார்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஸீபுல்லா ஹக்கானி என்ற நஸீப்கான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.
டெல்லி அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகள் எடுத்து நல்ல நிலையை எட்டியது. தோள்பட்டை காயத்தால் போட்டிக்கு முன்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகியதால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்று கலக்கலாக செயல்பட்டார். இப்போது 4 மாதங்கள் கழித்து ஐ.பி.எல். மீண்டும் தொடங்கி இருப்பதால் அதற்குள் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். ஆனாலும் கேப்டன்ஷிப்பில் மாற்றமின்றி ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு வீரராக நீடிப்பார் என்று ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டு விட்டது.
ஷிகர் தவானும் (8 ஆட்டத்தில் 380 ரன்), பிரித்வி ஷாவும் (308 ரன்) முதல் சீசனில் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். தற்போதைய 2-வது கட்ட போட்டிகளிலும் அவர்கள் அதே போன்று விளையாடினால் சிக்கலின்றி ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிவிட முடியும். மற்றபடி ஸ்டீவன் சுமித், ரஹானே, ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோனிஸ், பந்து வீச்சில் காஜிசோ ரபடா, அஸ்வின், நோர்டியா, அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா என்று மிரட்டல் வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனாலும் ஸ்டீவன் சுமித், ரஹானேவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.
ஐதராபாத் சன்சரைசர்ஸ் அணி இந்திய மண்ணில் நடந்த முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தோற்று கடைசி இடத்தில் தவிக்கிறது. 21 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் ஐதராபாத் அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. இனி எஞ்சிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் பாதியில் 6 ஆட்டங்களுக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் ஒதுங்க, கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் புதிய சீசனில் ஐதராபாத் அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக பொருத்தமான தொடக்க ஆட்டக்காரரை அடையாளம் காண வேண்டி உள்ளது. அனேகமாக வார்னருடன், விருத்திமான் சஹா தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. பேட்டிங்கில் வார்னர், வில்லியம்சன், மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா, கேதர் ஜாதவ் ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், புவனேஷ்வர்குமார், காயத்தில் இருந்து மீண்டுள்ள டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, ஜாசன் ஹோல்டர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னையில் சந்தித்த லீக் ஆட்டம் சமனில் (டை) முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி கண்டது நினைவிருக்கலாம். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.










