என் மலர்tooltip icon

    விருதுநகர்

    கர்நாடகாவில் இருந்து கூடலூரில் உள்ள மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இன்று மார்க்கெட்டில் தக்காளி ரூ.55க்கு விற்பனையானது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து கூடலூரில் உள்ள மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இன்று மார்க்கெட்டில் தக்காளி ரூ.55க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

    ராஜபாளையத்தில் கழிப்பறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக கூறி வீட்டில் இருந்த 2½ பவுன் நகையை மர்ம நபர் திருடி சென்றார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் வசித்து வருபவர் முத்துக்கனி, வியாபாரி.

    இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் முத்துக்கனியின் தாயார் சுப்புலட்சுமியிடம் கழிப்பறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக கூறினார்.

    மகன் தான் அவரை அனுப்பி இருப்பார் என நினைத்த சுப்புலட்சுமி வீட்டுக்குள் உள்ள கழிவறைக்கு செல்ல அனுமதித்தார்.

    பணியை முடித்து விட்டு அந்த வாலிபர் சென்ற பிறகு வீட்டில் இருந்த 2½ தங்சச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு சுப்புலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து மகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் கழிவறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக வீட்டுக்குள் வந்த நபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே மழைநீரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் முப்புடாதி அம்மன் கோவில் பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது. வீடுகளுக்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வடக்கு தேவதானம் ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை மழை பெய்து கொண்டிருக்கும் போதே மழையில் நனைந்தபடி அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த சேத்தூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் மாணிக்கம், சி.த.பழனிச்சாமி மற்றும் சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிறுவனர்-பொதுச்செயலாளர் டாக்டர் ராஜசேகர், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு தலைவர் பிரவீன்குமார், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பி.ஆர். துரைபாண்டி, அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் கடலூர் பாலமுருகன் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    திருவொற்றியூரில் இருக்கும் தன் வீட்டை எப்படியாவது விற்று விட வேண்டும் என்று தீர்மானித்தார் அங்கம்மாள்.
    ஆனால், அந்த இடத்தில் குடி இருந்து வரும் பழைய பேப்பர் வியாபாரி காலி பண்ணாமல் சண்டித்தனம் செய்தார். இந்த நிலையில்தான் காஞ்சி சென்று பெரியவாளைத் தரிசித்து வரலாம் என்று சைதாப்பேட்டையில் இருந்து புறப்பட்டார் அங்கம்மாள்.
    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டு நடந்தே ஸ்ரீமடத்தை அடைந்தார்.

    ஆனால், அருகே செல்ல முடியாத அளவுக்குக் கூட்டம். ஸ்ரீமடத்தின் வாசலே தெரியாத அளவுக்குப் பக்தர்கள் கூட்டம் தெருவில் காணப்பட்டது.

    காரணம் என்ன தெரியுமா?
    அன்னை காஞ்சி காமாட்சி ஏதோ உற்சவத்தின் காரணமாக ஸ்ரீமடத்தின் வாசலில் அன்றைய தினம் எழுந்தருளி இருந்தாள்.
    காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் பெரும்பாலான திருவிழாக்களின்போது அம்பாள் உற்சவர் விக்கிரகம் வீதி உலாவாகப் புறப்பட்டு ஸ்ரீமடத்தை அடையும். சிறிது நேரம் அங்கேயே இருந்து விட்டு பக்தர்களுக்குத் தரிசனம் தந்து விட்டுப் புறப்ப டுவாள். இதனால்தான் அன்று ஸ்ரீமடத்தின் வாசலில் கூட்டம்.

    அன்னை காமாட்சியைத் தொலைவில் இருந்தபடியே தரிசித்தார் அங்கம்மாள். அம்பாள் அருகே நெருங்க முடியவில்லை. ‘சரி... வந்த காரியத்தைப் பார்க்கலாம்’ என்று ஸ்ரீமடத்தின் வாசலை நோக்கி நகர்ந்தார். அந்தக் கூட்டத்தில் மெள்ள மெள்ள நீந்திச் சென்றார்.
    ஸ்ரீமடத்தின் வாசலை அடைந்தபோது ஆச்சரியம். அங்கே கூட்டமே இல்லை. வந்திருந்த பக்தர்கள் அத்தனை பேரும் காமாட்சி தரிசனத்தில் வீதியில் மெய் மறந்து காணப்பட்டனர்.

    அடுத்து, இன்னொரு ஆச்சரியம்.
    ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது’ என்று சொல்வார்கள் அல்லவா?
    எந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டும் என்று அங்கம்மாள் காஞ்சிக்கு வந்தாரோ, அந்த மகான் ஸ்ரீமடத்தின் வாச லிலே ஒரு சிறிய திண்ணையில் காணப் பட்டார்.

    அங்கம்மாள் ஸ்ரீமடத்தினுள் நுழைய முற்பட்ட வேளையில், அதுவரை தான் அமர்ந்திருந்த பலகையில் இருந்து எழுந்தார் மகா பெரியவா. திண்ணையில் நின்றார். வீதியில் தரிசனம் தந்து கொண்டிருக்கும் காமாட்சியைக் கண்ணாரக் கண்டு இன்புற்றார்.
    மிகச் சரியாக அந்த வேளையில்தான் பெரியவாளை நேருக்கு நேராகப் பார்த்தார் அங்கம்மாள்.

    சொல்லப்போனால் இந்த இடத்தில் பெரியவாளையும் அங்கம்மாளையும் தவிர, வேறு எவரும் இல்லை.
    தான் வந்திருக்கிற வேளையில் இப்படி ஒரு ஆனந்தமான தரிசனம் கிடைக்கிறதே என்று பூரித்துப் போனார் அங்கம்மாள்.
    வீடு விற்கப்பட வேண்டும் என்பதை விட கணவரின் மோசமான உடல் நிலைதான் அப்போது நினைவுக்கு வந்தது அங்கம்மாளுக்கு. உடனே பெரியவாளின் திருமுகம் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணங்கினார்.

    ‘பிரார்த்தனைகளைப் பெரியவாளிடம் வார்த்தைகள் மூலமாகத் தெரிவிக்கக் கூடாது... அதாவது, சொல்லக் கூடாது. பிரார்த்தனையை மனதுக்குள் நினைத்துப் பெரியவாளை வணங்க வேண்டும்’ என்பது அங்கம்மாள் குடும்பத்தில் இருக்கிற அனைவரும் பின்பற்றி வரக் கூடிய வழக்கம். இப்படித்தான் அங்கம்மாளின் தாயாரும் மாமியாரும் பிரார்த்தித்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

    அதன்படி, ‘பெரியவா... என் கணவர் வியாதியால் ஒண்ணேகால் வருடம் படாத பாடு படுகிறார். எந்த மருத்துவராலும் அவரை குணமாக்க முடியவில்லை. நீங்கள்தான் குண மாக்க வேண்டும்’ என்கிற பிரார்த் தனையை மனதுக்குள் முன்வைத்து வணங்கினார்.
    இரண்டு நிமிடம் அங்கம்மாளையே வைத்த கண் வாங்காமல் பரிதாபமாகப் பார்த்தார் மகா பெரியவா.
    பதிலும் இல்லை. அனுக்கிரகமும் இல்லை.

    இதை அடுத்து அடுத்த பிரார்த்தனையை மனசுக்குள் நினைத்தார் அங்கம்மாள். இது என்ன பிரார்த்தனை தெரியுமா?
    ‘பெரியவா... என் கையில காசு இல்லை. ரெண்டு குழந்தைகள் காலேஜ் படிச்சிண்டிருக்கா. படிப்புச் செலவுக்கு கஷ்டமா இருக்கு. வீட்டையாவது வித்து டலாம்... பணம் வரும்... அதை வெச்சு சமாளிக்கலாம்னு பார்த்தா, வீட்டை விக்கறதுக்கு குடி இருக்கிற பழைய பேப்பர் வியாபாரி ஒத்துழைக்க மாட்டேன்கிறார். நீங்கதான் பெரியவா எப்படியாவது வித்துக் கொடுக்கணும்.’
    - அங்கம்மாள் தன் மனசுக்குள் வைத்த இந்தப் பிரார்த்தனை தனக்கே கேட்டு விட்டது போல் அடுத்த கணம் ஒரு புன்னகையுடன் பார்த்தார் பெரியவா. தன் வலக்கையை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
    மனசுக்குள் வைத்த முதல் பிரார்த்தனைக்குப் பதில் இல்லை. ஆனால், அடுத்து வைத்த பிரார்த்தனைக்குப் பெரியவா அருள் புரிந்தார்.

    ‘சரி... பெரியவா நமக்கு நல்லதைத்தான் அருளுவார்’ என்று காஞ்சியில் இருந்து சைதாப்பேட்டை திரும்பினார் அங்கம்மாள்.
    அடுத்த நாள் மாலை அந்த ஆச்சரியம் நடந்தது. மாலை ஏழு மணி. சைதாப்பேட்டையில் தன் வீட்டில் இருந்தார் அங்கம்மாள்.
    திருவொற்றியூரில் குடி இருக்கும் பழைய பேப்பர் வியாபாரி திடீரென வந்தார்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    ‘இடத்தைக் காலி பண்ண மறுக்கிற இந்த ஆசாமி அடுத்து என்ன குண்டைப் போடப் போகிறாரோ’ என்ற கவலையுடன் வாசலுக்கு வந்து ‘என்ன?’ என்பதுபோல் அவரது முகம் பார்த்தார் அங்கம்மாள்.

    ‘‘அம்மா... எனக்கு வேற ஒரு இடம் கிடைச்சிடுச்சும்மா. இதுதான் என் புது இடத்தோட விலாசம். நாளைக்கு அங்கே வந்து சாவியை வாங்கிக் குங்கம்மா. என்ன செட்டில் பண்ணணுமோ, எல்லாத் தையும் பண்ணி டறேன்’’ என்று சொல்லி, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.

    அந்தத் துண்டு காகிதத்தைக் கையில் வாங்கிக் கொண்டார்.
    இதுவரை அடாவடி செய்த வியாபாரியின் முகம், அன்பு மயமாகக் காணப்பட்டது.
    ‘இதுநாள் வரை இவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து விட்டோமே’ என்கிற குற்ற உணர்வு அந்த முகத்தில் பிரதிபலித்தது.
    அங்கம்மாளால் நம்ப முடியவில்லை. தன்னைக் கிள்ளியும் பார்த்துக் கொண்டார்.
    அதன்படி அடுத்த நாள் தன் மகனுடன் திருவொற்றியூர் சென்றார். துண்டு காகிதத்தில் குறித்துக் கொடுத்திருந்த புது முகவரியை அடைந்தார்.

    பிரமித்துப் போனார் அங்கம்மாள். இதுவரை வியாபாரி இருந்த அங்கம்மாளின் இடம் எப்படி இருந்ததோ, அச்சு அசல் அதுபோன்ற இடம். முன்பக்கம் வீடு. பின்பக்கம் காலி இடம். வடிவுடையம்மன் ஆலய திருக்குளத்துக்கு அருகே இப்படி ஒரு இடம் கிடைத்திருந்தது.
    தன்னை நம்பிப் பிரார்த்தித்த பக்தையின் வேண்டுதலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரே நாளில் பேப்பர் வியாபாரிக்குத் தானே புது இடம் பார்த்துக் கொடுத்தது போல் அத்தனை கச்சிதமாக இருந்தது. வியாபாரிக்கு சந்தோஷமான சந்தோஷம்.

    சாவியைக் கொடுத்து விட்டு செட்டில் செய்ய வேண்டியதையும் கொடுத்து முடித்தார்.
    அடுத்த நாளே அங்கம்மாளின் இடத்தை ஒருவர் வந்து பார்த்து, விலையும் பேசி முடித்து விட்டார்.
    பணமும் கைக்கு வந்தது. கணவர் ராமபிரசாத்தை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ராஜ வைத்தியம் செய்யப்பட்டது.

    ராமபிரசாத்துக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மனைவி அங்கம்மாளைப் பார்த்து, ‘‘நீ ஒண்டிக்கட்டையாக இருந்து இத்தனை வேலைகளைச் செய்கிறாயே... அந்த வீட்டையும் விற்க முடியாமல் தவிக்கிறாயே என்று மகா பெரியவாளே துணைக்கு வந்து முடித்துக் கொடுத்திருக்கிறார்’ என்று பூரிப்போடு சொன்னார் மருத்துவமனையில்.

    இதன் பின் மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.
    1986 ஜூனில் காஞ்சி ஸ்ரீமடத்தில் பெரியவா தரிசனம். அடுத்த நாளே வீடு விற்பதற்கு உண்டான வேலைகள் துவங்கியாயிற்று. 1986 செப்டம்பர் மாதம் ராமபிரசாத் இறந்தார்.

    அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி புரிகிறபோது எவரிடமும் இருந்து ஒரு டீயைக்கூட இலவசமாக வாங்கிக் குடிக்க மாட்டாராம் அங்கம்மாள். அப்படியே யாரேனும் தவிர்க்க முடியாமல் ஒரு டீ வாங்கிக் கொடுத்து விட்டால், அடுத்து வருகிற நாட்களில் அவருக்கு இரண்டு டீயாக வாங்கிக் கொடுத்து விடுவாராம். அத்தகைய நேர்மையும் பெரியவா பக்தியும்தான் அங்கம்மாளை வழிநடத்தியது என்றே சொல்லலாம்.
    சாத்தூர் அருகே மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள வன்னிமடையை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 69). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு வீட்டிற்கு வந்து விட்டது. ஆனால் கன்றுக்குட்டி மற்றும் வேலுசாமி வீட்டிற்கு வரவில்லை.

    உடனே வேலுசாமியின் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது வன்னிமடையில் இருந்து நென்மேனி செல்லும் சாலை ஓரத்தில் மின்னல் தாக்கி உடல் கருகிய நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் அருகில் கன்றுக்குட்டியும் இறந்து கிடந்துள்ளது.

    இதுகுறித்து இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    மூலவர்     –  வில்வவனேசுவரர்
    அம்மன்     –  வளைக்கைநாயகி
    தல விருட்சம்  –  வில்வமரம்
    தீர்த்தம்     –  எமதீர்த்தம்
    பழமை     –  1000 வருடங்களுக்கு முன்
    புராணப் பெயர்     –  திருவைகாவூர், வில்வவனம்

    தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.

    அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

    சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எமதீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.

    இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.

    இந்த கோயிலில் உள்ள அம்பாள் “வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி)” மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.

    வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி, தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு “வில்வவனேசுவரர்” என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி, அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும்.

    சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக – திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.

    இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்குநோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் – வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், சுந்தரமூர்த்தி விநாயகர் சந்நிதியும், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரார்த்தனை:

    வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    நேர்த்திக்கடன்:

    வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்,
    திருவைகாவூர்,
    தஞ்சாவூர் மாவட்டம்.
    விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூடங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (65). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.58 ஆயிரத்துடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவல்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரது பேரன் கவுதம் (17). 10-ம் வகுப்பு படித்து முடித்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்த 17 வயது பெண் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமானார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது மகள் மொட்டையம்மாள் (26). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மொட்டையம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    பொதுஇடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் எனவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது.

    எனினும் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்ட, மாநகராட்சி சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 20-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

    நேற்று பாதிப்பு சற்று உயர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று அது மேலும் அதிகரித்துள்ளது.

    மாநகர பகுதியில் பெண் டாக்டர் உள்பட 8 பேர், பாளை, ராதாபுரத்தில் தலா 2 பேர், அம்பையில் ஒருவர் என இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 49,594 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,055 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 106 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 433 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பொதுஇடங்களில் மீண்டும் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் செல்வதையும் காண முடிகிறது.

    எனவே பொதுஇடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் எனவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
    ராஜபாளையம், சத்திரப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    அருப்புக்கோட்டை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.

    இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதலே வெயில் வாட்டி வந்தது. இதையடுத்து இரவு நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை புளியம்பட்டி, பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, காந்திநகர், ராமசாமிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் திடீர் மழை காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ராஜபாளையம், சத்திரப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அதேபோல வத்திராயிருப்பில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வத்திராயிருப்பில் தாழ்வான இடங்களில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். திடீரென பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் உடுமலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    திருப்பூர்:

    பேரூராட்சியாக இருந்த திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியாக மாற்றப்பட்டது. இதையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சியின் கமிஷனராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாநிலம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் உடுமலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி கமிஷனராக இருந்த முத்துக்குமார் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாகலாபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என 2 பேர் பேசி உள்ளனர்.

    தங்களது பெயர் அருண், ரமேஷ் என கூறிய அவர்கள் விருதுநகர், ராஜபாளையம், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் தங்களது நிதி நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரைகடன் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்பணமாக ரூ.2 ஆயிரத்து 400 செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய மாரியம்மாள் பலரிடம் பணம் பெற்று ரூ.24 ஆயிரத்து 900 கட்டி உள்ளார்.

    அதன் பிறகு பணத்தை பெற்ற 2 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களது செல்போன்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாரியம்மாள் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×