என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் அருகே மதுக்கடை பாரில் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 35), டிராக்டர் டிரைவர். அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஸ்வரன் (32).

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் ரெட்டியபட்டி பகுதியில் டிராக்டர் ஓட்டிச் சென்றபோது ராஜேஸ்வரனின் ஆட்டோ மீது மோதி விட்டது. இதையடுத்து அவர்களுக்கு இடையே தகராறு நடந்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்தநிலையில் அதே ஊரைச்சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் கருப்பசாமி (27) என்பவருடனும், ராமருக்கு பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 6-ந் தேதி மாரியப்பனின் பணத்தை காணவில்லை. இதனால் கருப்பசாமி அக்கம் பக்கத்தினர் மீது சந்தேகம் அடைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் மண்ணை எடுத்து எறிந்துள்ளார். அது அந்த வழியாக சென்ற ராமர் மீது விழுந்தது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கருப்பசாமி கத்தியை காட்டி ராமரை மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து அந்தப் பகுதியினர் இரு வரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமர் மற்றும் கருப்பசாமிக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு விருதுநகர்-தாதம் பட்டி ரோட்டில் உள்ள தனியார் மதுக்கடை பாரில் ராமர் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ராமருடன் முன்விரோதம் இருந்து வந்த கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரன் வந்தனர்.

    அவர்கள் இருவரும் சேர்ந்து ராமருடன் தகராறு செய்தனர். அப்போது கருப்பசாமி கத்தியாலும், ராஜேஸ்வரன் மதுபாட்டிலை உடைத்தும் ராமரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். கத்தி மற்றும் மது பாட்டிலால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த ராமரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராமர் பரிதாபமாக இறந்தார். ராமர் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி ரம்யா சூலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ராமரை குத்திக்கொன்ற கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரனை போலீசார் இன்று கைது செய்தனர். முன்விரோதத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் இனாம் ரெட்டியபட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் கூறியதாக நினைத்து தொழிலாளியை வாலிபர் வெட்டிக்கொன்ற சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சுனாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது52). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அதே ஊரைச்சேர்ந்தவர் முருகன்(35). சம்பவத்தன்று இவர் கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் இருந்து மணல் அள்ளி சாக்குமூட்டையில் கட்டி தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார், இருசக்கர வாகனத்தில் சாக்குப்பையில் மணல் கடத்திச்சென்றதாக முருகன் மீது வழக்குப்பதிந்தனர்.

    மேலும் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மணல் கொண்டு சென்ற தன்னைப் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தது மாரியப்பன் என்று முருகன் கருதினார். இதனால் மாரியப்பன் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன், அர்ச்சுனாபுரத்தில் உள்ள பழைய பள்ளிக்கூடம் அருகில் தனது மருமகன் சிங்கராஜ் (26)என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு முருகன் வந்துள்ளார்.

    சாக்குப் பையில் மணல் அள்ளிக் கொண்டு சென்றது குறித்து போலீசுக்கு தகவல் கூறியது நீதான் என்று கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் போலீசிடம் தான் ஏதும் கூறவில்லை என்று மாரியப்பன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியதை ஏற்காமல், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டினார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மருமகன் சிங்கராஜ் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்து கிடந்த மாரியப்பனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மாரியப்பன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

    மாரியப்பன் கொலை செய்யப்பட்டது குறித்து வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் சிங்கராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலாஜி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மாரியப்பனின் வெட்டிக் கொன்ற முருகன் தலை மறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முருகனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

     விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய&மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, டி.என்.பி. எஸ்.சி தொகுதி -2 மற்றும் தொகுதி -2ஏ பணிக்காலியிடங்களுக்கு  இலவச பயிற்சி வகுப்புகள் அரசின் உரிய வழிகாட்டுதல் நெறி முறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்கு ஏதுவாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் காலை 10.30மணி முதல் 12.30மணிவரையில் 7ந்முதல் நாள்தோறும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.  பயிற்சியின் போது மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

    பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன் னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கான தேர்வுக்கான பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.

    மேலும் மாணவர்கள் பயனடையும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலிகாட்சி மூலம் கற்பித்தல் மற்றும் இத்தேர் விற்கான பாடக்குறிப்புகள் புத்தகங்கள் மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்

    இப்பயிற்சிக்கு விருப்ப முள்ள வர்கள் 96777 34590, 9384135550 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாக தங்களது பெயரை குறுஞ்செய்தியாக அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கோட்டு கொள்ளப்படுகிறார்கள்.

       மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு துப்புரவு பணியை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் 

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் சுகாதார பிரிவு சார்பில் நகரில் உள்ள 33வார்டுகளில் காலை 6மணி முதல் மதியம் ஒரு மணி வரை இடைவிடாமல் நகராட்சி துப்புரவு ஊழியர்களால் சுத்தம் செய்யும் கூட்டு துப்புரவு பணி தொடக்கவிழா  நடந்தது. 5வது வார்டு அய்யம்பட்டி தெருவில் நகர்மன்றதலைவர் தங்கம் ரவி கண்ணன் இந்தப்பணிகளை தொடங்கி வைத்தார். ஆணையாளர் மல்லிகா முன்னிலை வகித்தார். 

    இதில் தலைவர் தங்கம்ரவிகண்ணன் பேசுகையில், சுகாதாரம் மிகவும் முக்கியமானது. பொதுமக்களாகிய நீங்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அதேபோல் அவர்களும் சிறந்தமுறையில் பணியாற்றுவார்கள் சுகாதாரம் நன்றாக இருந்தால்தான் வாழ்வு சிறக்கும் இதனை கருத்தில் கொண்டு நமது வீட்டையும் தெருக்களையும் சுற்றுப்புறங்களையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

    நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் ,சந்திரா, ஜஹாங்கீர் சுகாதார உதவியாளர் மோசஸ், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மாடசாமி, மாரியப்பன், ஜான், அய்யம்பட்டி சமுதாய நிர்வாகிகள் கவிமோகன், பரமன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கூட்டுதுப்புரவுபணி நடைபெறும் என்று நகர்மன்றத்தலைவர்ரவிகண்ணன், துணைத்தலைவர் செல்வமணி, ஆணையாளர் மல்லிகா ஆகியோர் தெரிவித்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திவ்யதேசமாகும். துளசிசெடிக்கு கீழ் அவதரித்த ஆண்டாள் இங்கு கோவில் கொண்டுள்ள வடபெருங்கோவிலுடையான் மீது தீராத பக்தி கொண்டு அவருக்கு சூட இருந்த மலர்மாலையை தான் சூடி அழகுபார்த்து மார்கழி நோன்பிருந்தார். ஆண்டாள் திருப்பாவை பாடல்கள்பாடி ஸ்ரீரங்கத்து ரெங்கநாதனை பங்குனிமாதம் முத்துப்பந்தலின் கீழ் கைத்தலம் பற்றினார். 

    இந்த விழா ஆண்டாள் திருக்கல்யாணம் என ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னதி முன்பு நடைபெறும். 

    இந்த ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண விழா  நாளை(9ந் தேதி) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா நடக்கும் நாள்களில் காலை இரவு வேளைகளில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆண்டாள் திருக்கல் யாணம் வரும் 18ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது. காலை 6 மணிக்கு ஆண்டாளும் ரெங்கமன்னாரும், திருத்தேரில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்கள். 

    தொடர்ந்து காலை 10மணிக்கு ஆண்டாள் கோட்டைத்தலைவாசல் சென்று மரியாதை பெறும் நிகழ்ச்சியும், மாலை 3மணிக்கு ரெங்கமன்னார் வீதிஉலாவும் இரவு 7மணிக்கு ஆண்டாள் சன்னதி முன்புள்ள பிரமாண்டமான பந்தலில் ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்படுகிறது. 

    திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, செயல் அலுவலர் எம்.கே.முத்துராஜா, ஆய்வாளர் பாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் புதர் மண்டிக்கிடக்கும் கண்மாயை சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் சுமார் 40கண்மாய்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் பெய்யும் மழைநீர் 40கண்மாய்களுக்கும் வருகிறது.  கண்மாய் தண்ணீர் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். 

    வத்ராயிருப்பு தாலுகாவுக்கு  உட்பட்ட வில்வராயன்குளம் கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால் விவ சாயப்பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கடந்து 20-21ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு பணி ரூ. 47லட்சத்திற்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால்  எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

    கண்மாய்கரையில் பராமரிப்புபணி பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றதாகவும், கண்மாயை ஆழப்படுத்த வில்லை. முட்புதர்களை அகற்றவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    மழைக்காலங்களில் கண்மாய்க்கு வரும் தண்ணீர் முட்புதர்களால் சேமிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள தாகவும், இந்த கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அவர்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வத்திராயிருப்பு வில்வராயன்குளம் கண்மாயில் செய்யப்பட்ட ரூ.47 லட்சத்திற்கான குடிமராமத்துபணி குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்மாய் முழுவதும் முளைத்திருக்கும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராஜபாளையம்அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ராஜபாளையம் ஏ.கே. டி.ஆர். தினசரி சந்தையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். 

    கடந்த 5-ந்தேதி மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருமங்கலம் எஸ்.பி.நத்தத்திற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து நேற்று மாலை மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. 

    பீரோ லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 26 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் மாரியப்பனின் வீட்டில் ஆள்இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மாரியப்பனின் வீட்டின் கதவு பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். 

    கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ 4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆள் இல்லாத வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராஜபாளையம் வந்து சேர்ந்த மாணவரை, தந்தை பால்சாமி, தாயார் சவுந்தரலதா ஆகியோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தென்றல் நகரைச் சேர்ந்த மாணவர் பெருமாவளவன். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள லுகான்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷிய எல்லை அருகே இவர் தங்கியிருந்தார்.

    சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் பெருமாவளவன் மிகுந்த கஷ்டப்பட்டார். பின்னர் நண்பர்கள் 6 பேர் சேர்ந்து தலா ரூ. 1½ லட்சம் பேசி 1500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹங்கேரி நாட்டு எல்லையில் உள்ள ஸோனி பகுதிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து ரெயில் மூலம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் வந்து சேர்ந்தார். பின்னர் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.

    கடந்த 27-ந் தேதி புறப்பட்ட பெருமாவளவன் 8-ந் தேதி ராஜபாளையம் வந்து சேர்ந்தார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்து அங்கிருந்து அரசு உதவியுடன் சென்னை வந்தார். தமிழக அரசு 6 பேரையும் காரில் அனுப்பி வைத்ததாக பெருமாவளவன் கூறினார்.

    மேலும் பல மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாகவும், உணவுக்கே வழியில்லாத நிலையில் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், அவர்களையும் விரைந்து அரசு முயற்சிகள் எடுத்து மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    ராஜபாளையம் வந்து சேர்ந்த மாணவரை, தந்தை பால்சாமி, தாயார் சவுந்தரலதா ஆகியோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். டெல்லியில் இருந்து மீட்க உதவி செய்த தமிழக அரசிற்கும், மத்திய அரசுக்கும் பெருமாவளவன் நன்றி தெரிவித்தார்.

    வெடி விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    சிவகாசி அருகே மேலஒட்டம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த கணேசன் என்பவர் பரிதாபமாக இறந்தார். ராமர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து சல்வார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அரிச்சந்திரன் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் பிரம்மன், மேலாளர் நாகராஜ், போர்மேன் கணேசன் ஆகிய 3பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரியாபட்டியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய பெண்  11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தை சேர்ந்த சூர்யா (22) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். 

    சம்பவத்தன்று இரவு அங்குள்ள முனியாண்டி கோவில் அருகே சூர்யா மாணவியை வரவழைத்துள்ளார்.  அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை சூர்யா பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் மாணவியை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி தனது நேர்ந்த கொடுமை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொடுமைப்படுத்தியதாக பெண் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த பூபதி என்பவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

    கணவர் இறந்ததையடுத்து பூபதி கூனம்பட்டியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருடன் வசித்து வந்தார். வீட்டில் இருந்த பூபதியின் மகளுக்கு பாண்டி முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. 

    இதனை அந்த சிறுமி தனது தாயாரிடம்  தெரிவித்துள்ளார். ஆனால் அதனை தடுக்க வேண்டிய  தாய் பூபதி கள்ளக்காதலன் ஆதரவாக பேசியுள்ளார். மேலும் பாலியல் தொல்லை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மகளை மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்த புகார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ஜானகி என்பவருக்கு தொலைபேசி மூலம்  வந்தது. உடனே அவர் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது-.

    இதுகுறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தாய் பூபதி, பாண்டிமுருகனை கைது செய்தனர்.
    வத்திராயிருப்பு அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி மேல தெருவை சேர்ந்த தர்மராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வத்திராயிருப்பு சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் மல்லிகாவுக்கு புகார் வந்தன. இதைதொடர்ந்து  சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு திருமணம் நடந் தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த தர்மராஜ், உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் ராமச்சந்திரன், புதுமாடத்தி, சிறுமியின் பெற்றோர் கண்ணன், மகேஸ்வரி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ×