என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    களம்பூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள களம்பூரையடுத்த கஸ்தம்பாடி குளத்து தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அய்யப்பன் (வயது 28). இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு போளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி கொசப்பாளையம் பங்களா தெருவைச் சேர்ந்த ராகவன் (54), போளூர் அருகே காந்தபாளையத்தில் உள்ள தனது நிலத்தை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

    வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அய்யப்பனும், ராகவனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அய்யப்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மற்றொருவரான ராகவனுக்கு ராணி என்ற மனைவியும், மோகனலஷ்மி என்ற மகளும், தனுஷ்ராஜ் என்ற மகனும் உள்ளனர். மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேத்துப்பட்டு அருகே விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை துணிகரமாக திருடிச்சென்றுள்ளனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே உள்ள சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் தினமும் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று பணிகளை கவனித்து வருகின்றனர். அதன்படி சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் காலையில் வீட்டை பூட்டி விட்டு நிலத்துக்கு சென்றனர்.

    அவர்களது 2 மகள்கள் அருகே உள்ள வீட்டில் விளையாடுவதற்காக சென்றிருந்தனர். அவர்கள் விளையாடி விட்டு திரும்பியபோது வீடு திறந்தே கிடந்தது. வயலுக்கு சென்றிருந்த பெற்றோர் வந்து விட்டார்கள் என கருதி உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் கீழே வீசப்பட்டு கிடந்தன. ஆனால் பெற்றோரும் வரவில்லை.

    இது குறித்து அவர்கள் பெற்றோரிடம் கூறினர். உடனே அவர்கள் பதற்றத்துடன் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும். இது குறித்து பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசாருடன் சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்துவர சென்றபோது கார் டயர் வெடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கத்தை அடுத்த வில்வாரணி பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகனுக்கும், செஞ்சியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்துவர தனது உறவினர்களுடன் காரில் செஞ்சியில் உள்ள மருமகள் வீட்டிற்கு சென்றார். காரில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் சென்று உள்ளனர். திருவண்ணாமலை-அவலூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுழன்றவாறு சென்று சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரி (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலசபாக்கம் பனமேடு பகுதியை சேர்ந்த ஆறுபடையப்பன் (50) என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மறுவீடு அழைப்பிற்காக சென்ற போது விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தண்டராம்பட்டு கீழ்ராவந்தவாடியில் உள்ள ஆயக்கலைகளை விளக்கும் குளத்தை தமிழக அரசு வரலாற்று சின்னமாக அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு தாலுகா சின்னியம்பேட்டை கிராமத்தில் ஆயக்கலைகள் 63-ரையும் விளக்கும் சிற்பங்கள் பொறித்த குளம் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த குளத்தை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதேபோன்ற குளம் ஒன்று தண்டராம்பட்டு அருகிலுள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ளது. இந்த குளத்தை மக்கள் அம்மா குளம் என்று அழைக்கின்றனர்.

    இந்த குளம் பராமரிக்கப்பட்டாததால் சிற்பங்கள் சிதலமடைந்து அழியும் நிலையில் காணப்பட்டது. இதனை சீரமைத்து வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் கந்தசாமி இந்த கோரிக்கையை ஏற்று குளத்தை சீரமைப்பதற்கு தொல்பொருள் துறைக்கு கோப்புகளை அனுப்பினார்.

    அதன் பின்னர் மத்திய தொல்லியல் துறை இயக்குனர் (ஓய்வு) வெங்கடேசன் மற்றும் பொறியாளர்கள் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதைத் தொடர்ந்து குளத்தை சீரமைக்க ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு குளம் சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

    கடந்த ஜூன் மாதம் மீண்டும் தொடங்கிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் தற்காலிகமாக புனரமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அபூர்வகலை சிற்பங்கள் கொண்ட குளத்தை தமிழக அரசு வரலாற்று சின்னமாக அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    கோவிலில் இலவச தரிசனத்தை தவிர்த்து, கட்டண தரிசனத்தில் டிக்கெட் ரூ.20-க்கும், சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.50-க்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தரிசனம் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பக்தர்கள் வரிசையாக சென்று சாமி மற்றம் அம்மன் சன்னதிகளில் மட்டுமே தரிசனம் செய்யலாம் என்றும், உள்பிரகாரங்களில் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து திடீரென கட்டண தரிசன டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தியுள்ளனர்.

    ஏற்கனவே, கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கூறியதாவது:-

    அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க முடியாமல் கட்டண தரிசனத்தில் வழிபாட்டுக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது கிடையாது. அமர்வு தரிசனமும் கிடையாது.

    கொரோனா வைரஸ் தாக்கம், வேலையிழப்பு காரணமாக வருமானம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில் திடீரென கட்டண தரிசன தொகையை உயர்த்தியிருப்பது வேதனையளிக்கிறது. கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.



    போளூரில் லட்டரி சீட்டு, புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளூர் பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்ற போளூர் அல்லிநகரை சேர்ந்த செல்வம் (வயது 47) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அல்லிநகரில், புகையிலை பொருட்களை விற்பனை செய்த சர்தார்அலி (35) என்பவரையும் கைது செய்தனர்.
    மகா தீபத்தன்று கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் அனுமதிக்காததால் அன்று வரமுடியாத பக்தர்கள் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருகை புரிந்தனர்.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை அண்ணாமலையார் மலை என்று பக்தர்கள் அழைக்கின்றனர். மேலும் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த மலையின் உச்சியில் கடந்த மாதம் 29-ந்தேதி மகா தீபம் ஏற்பட்டது. மகா தீபத்தன்று கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் அனுமதிக்காததால் அன்று வரமுடியாத பக்தர்கள் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருகை புரிந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.

    பக்தர்கள் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அம்மன் சன்னதி முன்பு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ராஜகோபுரத்தில் இருந்து சாமி மற்றும் அம்மன் சன்னதி சென்று கோவில் பின்புறம் வழியாக திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வரும் வகையில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கோவிலுக்குள் விளக்கு ஏற்ற முடியாத பக்தர்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ராஜகோபுரத்தின் முன்பு விளக்கு ஏற்றி விட்டு செல்கின்றனர். இதனை அங்கு இருக்கும் பணியாளர்கள் உடனடியாக அகற்றினால் பக்தர்கள் கோவித்து கொள்கின்றனர்.

    எனவே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கு இடத்தில் விளக்கு ஏற்றுவதால் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறும் முன்பு கோவில் நிர்வாகம் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பெரணமல்லூர் அருகே கார் மோதிய விபத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே உள்ள மோசவாடி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். அவரது மகன் அபிமன்யு (வயது 5). இவன், கோழிப்புலியூர் செல்லும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான். 

    அப்போது அந்த வழியாக சென்ற கார் திடீரென அபிமன்யு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போளூரில் பெய்த தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    போளூர்:

    போளூரில் பெய்த தொடர் மழையால் வி.ஆர்.எஸ்.நகர், சாஸ்தா நகர் ஆகிய பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    துருகம் கிராமத்தில் நெசவுத்தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகில் உள்ள துருகம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் நந்தகுமார் (வயது 35), நெசவுத்தொழிலாளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி ஞானசவுந்தரியை நந்தகுமார் கடந்த 9-ந்தேதி பிரசவத்துக்காக வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அதைத்தொடர்ந்து 11-ந்தேதி நந்தகுமாரின் சித்தப்பா திடீரென இறந்து விட்டார். அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த நந்தகுமார், மதியம் 2 மணியளவில் கதவை திறந்துள்ளார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் வீட்டின் பின் பக்க கதவை திறக்கச் சென்றார். பின் பக்க கதவை யாரோ கடப்பாரையால் உடைத்து திறந்திருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பீரோவில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர், கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் சுரேஷ் கைரேகையை பதிவு செய்தார். மோப்ப நாய் ‘மியா’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்தவாறு ஓடியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் கொள்முதல் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது பால் வழங்கும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 6 பால் கொள்முதல் மையங்களில் திருவண்ணாமலை கூட்டுறவு துணைப் பதிவாளர் விஷ்வேஸ்வரன் தலைமையில் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) சந்தீப், ஆரணி சரக முதுநிலை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 3 பால் கொள்முதல்பணியாளர்கள் சங்கத்தில் கொடுக்கப்பட்ட பால் அளவை லிட்டர்செட்டை பயன்படுத்தாமல் கூடுதல் அளவு பிடிக்கும் லிட்டர் செட்டை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 3 முறை நடைபெற்ற ஆய்வின் போதும் அவர்கள் இவ்வாறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பால் கொள்முதல் பணியாளர்கள் 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

    பால் கொள்முதல் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது பால் வழங்கும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போளூரில் பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ஜேப்படி செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    போளூர்:

    போளூர் மாட்டுப்பட்டி தெருவில் வசிப்பவர் பழனி. இவர், திருவண்ணாமலைக்கு செல்ல பஸ் நிலையத்தில் பயணிகள் தங்கும் கூடத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு 2 பெண்கள் செல்போனில் பேசியபடி சுற்றி வந்தனர். அப்போது 2 பெண்களில் ஒருவர் திடீரென பழனி பாக்கெட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தை எடுத்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட பழனி அவரை பிடித்து கொண்டார். பின்னர் அந்த பெண், பணத்தை அவருடன் சுற்றித்திரிந்த பெண்ணிடம் கொடுத்தார். உடனே அந்த பெண் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார்.

    இதனால் பழனி கூச்சலிட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள், அந்த பெண்ணை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சாந்தி (வயது 42), நிர்மலா (35) என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    ×