search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.
    X
    விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.

    கார் டயர் வெடித்து 2 பேர் பலி - மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்துவர சென்றபோது பரிதாபம்

    மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்துவர சென்றபோது கார் டயர் வெடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கத்தை அடுத்த வில்வாரணி பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகனுக்கும், செஞ்சியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்துவர தனது உறவினர்களுடன் காரில் செஞ்சியில் உள்ள மருமகள் வீட்டிற்கு சென்றார். காரில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் சென்று உள்ளனர். திருவண்ணாமலை-அவலூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுழன்றவாறு சென்று சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரி (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலசபாக்கம் பனமேடு பகுதியை சேர்ந்த ஆறுபடையப்பன் (50) என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மறுவீடு அழைப்பிற்காக சென்ற போது விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×