என் மலர்
திருவண்ணாமலை
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 75.63 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலி தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆரணி- 79.88%
செங்கம்-80.67%
செய்யாறு-81.67%
கலசப்பாக்கம்-79.69%
கீழ்பென்னாத்தூர்-67.66%
போளூர்-79.38%
திருவண்ணாமலை-71.77%
வந்தவாசி-76.47%
திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையம் மதுரா ஓமுடி கிராமம் கொல்லை கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் மீனா என்ற மீரா (வயது 16). இவர் போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் மழை வருவது போல் காணப்பட்டது. அப்போது மீனா வீட்டின் எதிரில் உள்ள தென்னை மரத்தின் அருகில் தங்களது வெள்ளாடுகளை மரத்தடியில் கட்டுவதற்காக சென்றார்.
இந்த நேரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் மின்னல் தோன்றியது. அப்போது ஆடுகளை கட்டச்சென்ற மீனா மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் மற்றும் போலீசார் தேசூரில் மழையூர் சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மினி வேன் வந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனைச் செய்தனர். அதில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
மதுபாட்டில்களை கடத்தி வந்த சாத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 32), ஜஸ்டின் (39), திருமலை (41) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 191 மதுபாட்டில்கள், மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சேத்துப்பட்டு;:
சேத்துப்பட்டை அடுத்த அரியபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). அவர் உடல் நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் மதுவில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார். தான் இறந்து விடுவோம் என பயம் ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு சென்றாா். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவர். இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார் .
அப்போது தனது செல்போனில் மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த மாணவி தனது தாயிடம் கூறினார்.
இது குறித்து மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டசபை தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து, தெள்ளாரில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார்.
அரசியல் வியாபாரம் செய்பவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். என்னுடைய அரசியல் என்பது புனிதமான சேவை. மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வந்துள்ளேன். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியலுக்கு வந்துள்ளார் ஸ்டாலின்.
ஒரு குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவா, தி.மு.க.வை தொடங்கினார் அண்ணாதுரை.
இப்போது, தி.மு.க.வை வழி நடத்துபவர் இந்திக்காரர் பிரசாந்த் கிஷோர். வேட்பாளர் உட்பட யாரை நியமிக்க வேண்டும் என அவர் முடிவு செய்கிறார். கட்சியில் ஸ்டாலின் முடிவு எடுப்பதில்லை. அவருக்கு எதுவும் தெரியாது.

எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அவர் சரியாக செயல்படவில்லை. சட்டசபையில் சட்டையைக் கிழித்ததை தவிர வேறு எதையும் கிழிக்கவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாவர்கள். முதலமைச்சரின் தாயை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களும் கண்டிக்கவில்லை.
ஆனால் பெண் விடுதலைக்காக போராடுகிறோம் என்பார்கள். ஒரு தாயை பற்றி பேசுபவன் மனிதன் இல்லை. நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து தலை தூக்கும். வணிகர்கள் மிரட்டப்படுவார்கள்.
10 ஆண்டுகளாக காய்ந்து போய் உள்ளனர். ஆட்சிக்கு வந்தால், அனைத்தையும் மேய்ந்துவிடுவார்கள். ஸ்டாலினுக்கு கொள்ளை அடிக்க மட்டுமே தெரியும்.
ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். முதல்வர் பழனிசாமி நன்றாக ஆட்சி செய்கிறார். ஒரு குறையும் இல்லை. பா.ம.க. நிறுவனர் ராமதாசின் 40 ஆண்டு போராட்டம், 21 உயிர்களின் தியாகம் ஆகியவற்றால், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்து இருக்கிறது. அதனை வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க முடியாது. மறக்கவும் மாட்டோம்.
வன்னியர்களை போல் பின் தங்கிய பிற சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் சமூக நீதி. அதனை பெற்று தருவேன் என உறுதியாக கூறுகிறேன். நமது கூட்டணியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. விவசாய கடன் ரத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று இரவு ராதிகா சரத்குமார் பிரசாரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை ராதிகா சரத்குமார் சாமி தரிசனம் செய்தார்.
எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, மக்கள் மவுனபுரட்சி செய்ய உள்ளனர். அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்றுதான் நானும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஒரு சரியான தலைமை இல்லாமல் செயல்படுகிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், கூட்டணி வைத்துள்ளதும் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் கலைத்துறையினருக்கு அ.தி.மு.க. ஆட்சி ஏதும் செய்யவில்லை. வருமான வரி சோதனை என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.
கடந்த முறை எங்களது இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த வருமான வரித் துறையினரின் சோதனையை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தகவலின் அடிப்படையில்தான் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
தி.மு.க.வினர் நல்லவர்கள் போல் போர்வையை போர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் கட்சியினரை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை தி.மு.க. தலைமைக்கு கிடையாது. தி.மு.க. நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் என அனைவருமே பெண்களை தரக்குறைவாக பேசுவது வருத்தம் அளிக்கிறது.இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
இது போன்றவர்கள் ஆட்சிக்கு வருவது நம்ப முடியாததாக இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. தமிழகத்தில் பா.ஜ.க. மீது மக்களுக்கு பெரிய அளவில் பற்றோ பிடிப்போ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார்.
“அ.தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள பழனிசாமி, ஒரு விவசாயி, தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள மு.க.ஸ்டாலின், ஒரு அரசியல் வியாபாரி.
இந்த தேர்தல் ஒரு விவசாயிக்கும், ஒரு அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். விவசாயிகள், பாட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் என நெற்றில் வியர்வையை சிந்தும் அனைவரும் நம் பக்கம் உள்ளனர்.
ஏசி அறையில் உள்ளவர்கள் தி.மு.க. பக்கம் உள்ளனர். அவர்கள் தொழிலதிபர்கள், முதலாளிகள். விவசாயி வெற்றி பெற வேண்டும். முதலமைச்சராக வர வேண்டும் என ஸ்டாலின் துடிக்கிறார். எனது தம்பிகள் விடமாட்டார்கள். முதலமைச்சராக வர தகுதி வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதிதான் ஸ்டாலினுக்கு உள்ளது. வேறு எந்த தகுதியும் இல்லை. விவசாயி என்ற தகுதி பழனிசாமிக்கு உள்ளது.
சமூக நீதி அடிப்படையில்தான், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தது. 40 ஆண்டுகால பா.ம.க. நிறுவனர் ராமதாசின் உழைப்பு, 21 பேரது உயிர் தியாகத்துக்கு வன்னியர் சமூகத்துக்கு முதற் கட்டமாக 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.
பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்து, அவருக்கு ரூ.700 கோடி கொடுத்து, என்னை எப்படியாவது முதலமைச்சராக்குங்கள் என ஸ்டாலின் கேட்கிறார்.
தனது கட்சியை வழி நடத்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வருபவர், தமிழகத்தை எப்படி வழி நடத்துவார்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய அலை வீசுகிறது. முதலமைச்சரின் தாயார் குறித்து ஆ.ராசா இழிவாக பேசியுள்ளார். முதலமைச்சரின் தாயாக இருந்தாலும், விவசாயியின் தாயாக இருந்தாலும் தாய் தாய்தான். ஒரு தாயை பற்றி தரக்குறைவாக எப்படி பேசலாம். அவருக்கு யார் தைரியம் கொடுத்தது. ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்கவில்லை.

நடிகை நயன்தாராவை பற்றி தவறாக பேசிய நடிகர் ராதாரவி மீது கோபப்பட்ட ஸ்டாலின், அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
ஆனால், தாயை பற்றி கொச்சையாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழ் மண் இது. தி.மு.க.வை தாய்மார்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.






