என் மலர்
திருநெல்வேலி
- போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
நெல்லை:
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை சென்னையில் இருந்து வழக்கம் போல் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு ரெயில் வந்தபோது அந்த முன்பதிவில்லாத பெட்டியில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சிலர் அதில் ஏறியுள்ளனர். அப்போது அவர்களுக்கும், ரெயிலில் ஏற்கனவே பயணித்த கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து 9 மணி அளவில் மீண்டும் புறப்பட்டது. அப்போது அவர்கள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் நெல்லை மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வந்ததும், ரெயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள்.
அதில் 2 வாலிபர், 2 இளம்பெண்கள் ஆகியோரும் திருச்சூரை சேர்ந்த நடன கலைஞர்கள் என்பதும், அவர்கள் கோவில்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுபோதையில் சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் ரெயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவர் தீபக்ராஜா கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்பதும், மற்ற 4 பேரும் சம்பவத்திற்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
- பிடிபட்ட 5 பேரையும் தனிப்படையினர் தனித்தனியாக அழைத்து சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இவர் கடந்த 20-ந்தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரது தோழிகளுடன் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தபோது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் நாங்குநேரி மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா இன்று 2-வது நாளாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்.
அதில் ஒருவர் தீபக்ராஜா கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்பதும், மற்ற 4 பேரும் சம்பவத்திற்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டார்களா? இதில் பின்னால் இருந்து இயக்கிய முக்கிய புள்ளிகள் யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரையிலான விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் முருகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாகவே இந்த கொலை சம்பவத்தை கும்பல் நிகழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் பல்வேறு கேள்விகளுக்கு முழுமையாக விடை கிடைக்காத நிலையில், வேறு சில கோணங்களிலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 12 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் மேலும் 7 பேர் கும்பலை தனிப்படையினர் தேடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து இந்த கொலையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட 5 பேரையும் தனிப்படையினர் தனித்தனியாக அழைத்து சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கொலையாளிகளை முழுவதுமாக கைது செய்த பின்னரே தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று 4-வது நாளாக அவர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.
- நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2-ந்தேதி உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 4-ந்தேதி காலையில் அவரது வீட்டின் பின்னால் இருக்கும் அவரது தோட்டத்தில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவரது மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு மர்மம் நீடித்து வந்தது.
இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த பல்வேறு தடயங்களின் அடிப்படையில் போலீசாரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகு பகுதியில் கடப்பாக்கல் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அதிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.
இதற்கிடையே அவரது டி.என்.ஏ. பரிசோதனை, உடல் எலும்புகள் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்ரக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளுக்காக போலீசார் காத்திருந்தபோதும் தொடர்ந்து வேறு பல கோணங்களிலும் தனிப்படையினர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் 3 வாரம் ஆகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலகராணி நியமனம் செய்யப்பட்டு, அவர் இன்று காலை மர்ம மரணம் என வழக்கினை பதிவு செய்துவிட்டு, விசாரணையை தொடங்கினார்.
- வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
- ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று அந்த பஸ் நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் அந்த பஸ்சில் ஏறி உள்ளார். இதனை அடுத்து பஸ் கண்டக்டர் அந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
அப்போது அந்த போலீஸ்காரர் அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21/5/24 அன்று நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட காவலர்.. pic.twitter.com/vwpUFsuzs1
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) May 21, 2024
- 11 பேரையும் மீட்டு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள தெற்கு புலிமான்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 42).
இவர் இறந்துபோன தனது தந்தை முருகேசனுக்கு திதி கொடுப்பதற்காக தனது தாய், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஒரு ஜீப் வாகனத்தில் இன்று அதிகாலையில் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றுள்ளார். அதனை உவரி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
கூடங்குளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தோட்டவிளையை கடந்து ஜீப் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக ஜீப்பின் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் ஜீப்பில் பயணித்த விஜயகுமாரின் மனைவி சந்தனகுமாரி (38), விஜயகுமாரின் சகோதரி முத்துச்செல்வி (32) ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
மேலும் அதில் பயணித்த விஜயகுமார், அவரது தாயார் சரஸ்வதி (60), இளவரசன் (14), சம்போ (8), தமிழ் செல்வி (46), ஹரினி (13), கனிஷ்கா (13), பாக்கியவதி (56), ராஜேந்திரன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 11 பேரையும் மீட்டு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சந்தனகுமாரியும், முத்துச்செல்வியும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 9 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜா (வயது 28).
பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது வருங்கால மனைவியுடன் பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தபோது 6 பேர் கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து போக்சோ வழக்கில் பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர் விடுதலையான நிலையில் அவர் வாகைகுளம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அவரை முன்விரோதத்தால் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தனர்.
அதில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீபக்ராஜா உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்து 2-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.
இதனால் தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தற்போது 5 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதால், அவரது உறவினர்களிடம் தீபக்ராஜா உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
- நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு பெங்களூர் செல்கிறது.
நெல்லை:
தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்று வருகின்றனர்.
இதனையொட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னக ரெயில்வே சார்பிலும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நெல்லையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 06045 மற்றும் 06046 ஆகிய எண்களுடன் இயங்கும் இந்த சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
வாரந்தோறும் புதன்கிழமை நெல்லையில் இருந்து பெங்களூருக்கும், மறுநாள் காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு அதே நாளில் நெல்லைக்கும் வந்தடையும் வகையில் இந்த ரெயிலுக்கான கால அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) நெல்லையில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் இந்த ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படுகிறது.
நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு பெங்களூர் செல்கிறது. இதேபோல் மறு மார்க்கமாக நாளை மறுநாள் இயக்கத்தை தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை பெங்களூரில் இருந்து நெல்லைக்கு இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மாலை 6.28 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரெயிலானது நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு மாநிலம் எலகங்கா வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
- கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாநகரில் சில நாட்களாக பெய்த மழையால் மேலப்பாளையம், சேவியர் காலனி விரிவாக்க பகுதியான பிரைட்காலனியில் உள்ள ராஜா நகரில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அங்குள்ள 4-வது தெருவில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 51.10 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.81 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 62.80 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரு அடி உயர்ந்துள்ளது.

கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நாலுமுக்கில் அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர், ஊத்து எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டரும், காக்காசியில் 7 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான சிவப்பு மழை எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு நிற எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்த நிலையில் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 11.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
செங்கோட்டை, ஆய்க்குடியில் தலா 5 மில்லி மீட்டரும், அணை பகுதிகளான ராமநதி மற்றும் கடனாவில் தலா 2 மில்லி மீட்டரும், குண்டாறு அணையில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில், சிவகிரி, புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சூரன்குடி பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
- சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருமுத்துசாமி. இவரது மகன் தீபக்ராஜா(வயது 30).
இவர் நேற்று மதியம் நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் பாளை கே.டி.சி.நகர் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது ஓட்டலில் இருந்து வெளியே வந்த அவரை 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது.
தகவல் அறிந்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, உதவி கமிஷனர் பிரதீப் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் புளூட்டோ வரழைக்கப்பட்ட நிலையில் அது திருச்செந்தூர் சாலையில் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது.
இந்த சம்பவம் குறித்து பாளை போலீசில் தீபக்ராஜாவின் அண்ணன் முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில் மர்ம நபர்கள் 6 பேர் தீபக்ராஜாவை கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவத்தை நிகழ்த்திய கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்த தீபக் ராஜாவுக்கு அவரது உறவினர் மகள் ஒருவருடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் நேற்று அவர் தனது வருங்கால மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பர்களை கே.டி.சி.நகர் தனியார் ஓட்டலுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். பின்னர் அவர்களை சாப்பிட சொல்லிவிட்டு தனது வருங்கால மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்து விட்டு சிவப்பு நிற காரில் தப்பியதும், அந்த காருக்கு பின்னால் சில மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் தப்பிச்செல்வதும் தெரியவந்தது. இதனால் அந்த சாலையில் உள்ள மற்ற கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் நெல்லை-குமரி நான்குவழிச்சாலை வழியாக காரில் தப்பிச்சென்றது தெரியவந்து.
இதையடுத்து நான்குவழிச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 15-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த கும்பல் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாமா? அல்லது போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிடுவதற்காக குமரி நோக்கி சென்றுவிட்டு பாதி வழியில் திரும்பி கிராமங்கள் வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு தப்பி சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட தீபக்ராஜா மீது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் குண்டு வீசி இரட்டைக்கொலை, முறப்பநாடு, தாழையூத்து, மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள், மதுரை மாவட்டத்தில் ஆயுதங்கள் பயன்படுத்திய வழக்கு என சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அவரது பெயரை ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சமூக ரீதியில் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாமா? என்று தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பவம் நடந்த நேரத்தில் ஓட்டலுக்கு சாப்பிட வந்த சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை தீபக்ராஜா உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று அவரது உறவினர்கள் தமிழர் விடுதலை களம் ராஜ்குமார் தலைமையில் நேற்று அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே திருச்செந்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்யும்வரை அவரது உடலை பெற்று கொள்ளப்போவதில்லை என கூறினார். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக தீபக் ராஜா உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 67.45 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 85. 40 அடியாக நீர் இருப்பு உள்ளது.
- மாவட்டத்திலும் அதே போல் வறண்ட கால நிலை இருந்தாலும் அவ்வப்போது சற்று இதமான காற்று வீசியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ள நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று மதியத்தில் இருந்து இன்று பிற்பகல் வரையிலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் இன்று காலை நிலவரப்படி மழை எதுவும் பெய்யவில்லை. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.40 அடியாகவும் இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 62.86 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 176 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 254 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 67.45 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 85. 40 அடியாக நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் நீர்மட்டம் இன்று 51.30 அடியாக இருந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் 25 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதியளவு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மாநகரப் பகுதியில் வறண்ட வானிலையே காணப்பட்டது. மாவட்டத்திலும் அதே போல் வறண்ட கால நிலை இருந்தாலும் அவ்வப்போது சற்று இதமான காற்று வீசியது. வெயில் தாக்கம் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்தாலும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கணிசமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் இதமான காற்று வீசி வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் நிம்மதியடைந்துள்ளனர். கருப்பா நதி அணையின் நீர்டிப்பு பகுதியில் 4.5 மில்லி மீட்டரும், அடவிநயினார் பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. விளாத்திகுளத்தில் 40 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 31 மில்லி மீட்டரும் மழை பெய்தது. எட்டயபுரம், வைப்பாறு, சூரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாத்தான் குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன் பட்டினத்தில் வறண்ட வானிலையே நிலவியது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் அடித்தது.
- மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
- போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, களக்காடு தலையணை உள்ளிட்ட பிரதான சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கும், நீர் நிலைகளில் பொது மக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்படையும் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த உதவி கமிஷனர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 90 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வர வழைக்கப்பட்டுள்ளனர்.
அதிவிரைவாக செல்லும் பைபர் படகுகள், வெள்ள பாதிப்புகளில் சிக்கி உள்ளவர்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள், மரங்கள் அறுவை எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மருந்து உபகரணங்கள் என அதிநவீன உபகரணங்களுடன் வந்துள்ள மீட்பு படையினர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
மாவட்டத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான இந்த குழு கண்காணித்து வருகிறது.
இந்த குழுவின் செயல் பாடுகளை இன்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் உதவி கமிஷனர் முத்து கிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு ஒரு குழுவை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து வகை உபகரணங்களுடன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரத்திற்கும், மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநகர் பகுதியில் உள்ள குழுவினர் பாதிப்பு குறித்த தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கட்டுப்பாட்டு மைய உதவி எண்களும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தவிர்த்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் வெள்ள பாதிப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை செய்து வருகின்றனர்.
- ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
- வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த 15-ந் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21, 22-ந் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் மட்டுமின்றி அணைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடியாறில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும்,பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் சேர்வலாறு, மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, ராதா புரம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பி ஆறு, அடவிநயினார், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மணிமுத்தாறு, தலையணை, மாஞ்சோலை, நம்பிகோவில், பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை மறு உத்தரவு வரும்வரை தொடரும்.
தாமிரபரணி ஆறு, கடனாநதி, சிற்றாறு, நம்பி ஆறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தற்காலிக நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும், வாகனங்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கடற்கரை யோரங்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர்.
வருவாய் துறையினரும் தயார் நிலையில் இருக்கவும், நீர் நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆறு ஆகியவற்கை கண்காணிக்க வும் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலோ, மின்வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடி யாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தையும், தீயணைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை யுடனும், பாதுகப்புடனும் இருக்கவும் கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1077, 04633-290 548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.






