என் மலர்
திருநெல்வேலி
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.
- ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கடந்த ஒரே வாரத்தில் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளில் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் பெய்தது. மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுகிறது.
எனினும் ஏற்கனவே பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 69.80 அடியை எட்டியுள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.
களக்காடு தலையணையில் ஓடிய காட்டாற்று வெள்ளம் குறைந்துவிட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். மாஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல 10 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
- சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்திலும் சென்று மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தோட்டத்தை முழுமையாக அளவீடு செய்தனர். பின்னர் ஆய்வு நடத்தி கிடைக்கப்பெற்ற தடயங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. நடத்திய விசாரணை மற்றும் தோட்டத்தில் நடத்திய ஆய்வுகளில் கிடைத்துள்ள சில தடயங்களையும், ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் தங்களது விசாரணையின்போது சேகரித்து ஒப்படைத்துள்ள தடயங்களையும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஒப்பிட்டு பார்த்து அதன்மூலம் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைக்குமா? என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட போலீசார் விசாரணையில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அவர்கள் செய்ய தவறியவற்றை குறிப்பெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை. தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிசெய்து வருகிறோம்.
அதன்பின்னர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புவதற்கு தேவையான பணிகள் நடக்கும். இன்னும் சில நாட்களில் சம்மன் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை ஒரு வாரத்தில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நெல்லை:
மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கடந்த 17-ந்தேதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி முதல் நேற்று வரை 10 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமை யர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,500 நாட்டு படகுகள் மூலம் மீன வர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை முழுமையும் காற்றின் வேகத்தால் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கேரளாவில் இருந்து தான் மீன் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளதால் இனி விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி, வேம்பார், பெரியதாழை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3,600 நாட்டுப் படகுகளில் 20 ஆயிரம் மீனவர்கள், 10 ஆயிரம் தொழிலாளர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.
- 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை தேடுதல், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சம்பவத்தன்று நடந்தவற்றை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலமாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று ஜெயக்குமார் மரண வழக்கில் ஏற்கனவே போலீசாரால் விசாரிக்கப்பட்ட அவரது உறவினர்கள், தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். இதற்காக ஒரு குழு கரைசுத்துபுதூருக்கு சென்று இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர்.
மேலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசி 2 நாட்கள் வந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை கேட்டறிய முடிவு செய்துள்ளனர்.
அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- மணிமுத்தாறு அணைக்கு 177 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- தென்காசி மாவட்டத்திலும் மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
குறிப்பாக மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 13 அடியும், சேர்வலாறு அணை 21 அடி வரையிலும் உயர்ந்தது. நேற்று மழை வெகுவாக குறைந்துவிட்டதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியது.
பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு 4 ஆயிரம் கனஅடி வரை வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 736 அடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 1/2 அடி உயர்ந்து 67.70 அடியை எட்டியுள்ளது. மற்ற அணைகளின் நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மணிமுத்தாறு அணைக்கு 177 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மலைப்பகுதியில் மழை பெய்யாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு இதமான காற்று வீசி வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. அவ்வப்போது வீசும் காற்றால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அக்னி வெயில் காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஒரு வழியாக முடிந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலும் மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து மகிழ்கின்றனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் ரம்மியமான காற்று வீசு வருகிறது.
வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி விடும். அதற்கு முன்னோட்டமாக மே மாதம் கடைசியில் இருந்தே கேரளாவில் மழை பெய்ய தொடங்குவதோடு, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசும். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் காற்று வீச தொடங்கி உள்ளது.
மாலையில் தொடங்கி இரவிலும் காற்று பலமாக வீசி வருகிறது.
ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து வீசிவரும் இந்த இதமான காற்றால் தென்மேற்கு பருவ காலம் தொடங்கிவிட்டதோ என்று மக்கள் எண்ண தொடங்கியுள்ளனர்.
- ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.
- முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கை கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தரின் ஆகியோர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வருமாறு அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மதியம் ஒரு காரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கேத்தரின் கை குழந்தையுடன் விசாரணைக்கு வந்திருந்தார். பின்னர் அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேரடி விசாரணை நடத்தினார்.
அதன்பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோர் முன்னிலையில் அவர்களது குடும்பத்தினர் சம்பவத் தன்று நடந்த நிகழ்வுகள், ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.
இந்த விசாரணையானது மாலை 6.45 மணி வரை அதாவது சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. அதன்பின்னர் ஜெயக்குமார் குடும்பத்தினர் காரில் ஏறி ஊருக்கு புறப்பட்டனர். தொடர்ந்து இன்று ஒரு குழு கரைசுத்து புதூருக்கு சென்று ஜெயக்குமாரின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். மற்றொரு குழு ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
- முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
- விசாரணை முழுவதும் சி.பி.சி.ஐ.டி. முத்தரசி முன்னிலையில் முழுக்க முழுக்க நடைபெற்று வருவதால் மர்ம மரண வழக்கு சூடுபிடித்துள்ளது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் சுமார் 3 வாரங்களாக எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அன்றைய தினமே தங்களது விசாரணையையும் தொடங்கினர். முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்பட பலரிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து 2-வது நாளான நேற்று அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் அதிகாரிகள் கரைசுத்துபுதூருக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களது சந்தேக கேள்விகளை கேட்டு அதற்கு விளக்கம் பெற்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் 2 வாகனங்களில் மீண்டும் கரை சுத்துபுதூருக்கு புறப்பட்டனர்.
ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மற்றும் அவரது மகன்களான கருத்தையா, ஜோ மார்ட்டின் ஆகியோரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் கூறும் தகவல்களை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டின் அருகே உள்ள அக்கம்பக்கத்தினரிடமும், நண்பர்களிடமும் விசாரிக்க உள்ளனர்.
இந்த விசாரணை முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி முன்னிலையில் முழுக்க முழுக்க நடைபெற்று வருவதால் மர்மச்சாவு வழக்கு சூடுபிடித்துள்ளது.
ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை முடிந்த பின்னர், இறப்புக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நம்பியாற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. முன்கார் பருவ சாகுபடி பணிகளும் தொடங்கி உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 5 அடி அதிகரித்து 57.30 அடியாக இருந்த நிலையில், இன்று சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் மேலும் 7 அடி உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால் நேற்று 72.34 அடியாக இருந்த அந்த அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் 13 அடி உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அந்த அணை 85.46 அடியை எட்டியுள்ளது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த 2 அணைகளுக்கும் நேற்று 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று வினாடிக்கு 4,372 கனஅடி நீர் வருகிறது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ½ அடி உயர்ந்து 85.52 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 802 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைப்பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நம்பியாற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 14 அடியை எட்டியுள்ளது.
இதேபோல் கொடுமுடியாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் 52.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 31 அடியாக உள்ளது. நேற்று அந்த அணையில் 15.25 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது.
தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலைப்பகுதியில் தொடர்மழையால் களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் பணகுடி குத்திரபாஞ்சான் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. பெரும்பாலான காட்டுப்பகுதி ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் கனமழை பொழிந்து வருகிறது.
மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதி, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்தது. பணகுடி மற்றும் திசையன்விளை பகுதிகளில் பலத்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. ராதாபுரத்தில் நெடுஞ்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி நகர் பகுதி, செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், மேக்கரை, இலஞ்சி, வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக சிவகிரியில் 34 மில்லிமீட்டர் மழை பெய்தது.
அங்கு தலையணை, தேவிபட்டினம், விஸ்வநாதபேரி, கோம்பையாறு, வடுகப்பட்டி, தென்மலை, ராயகிரி பகுதிகளில் சாரல் மழை நேற்று மாலையில் தொடங்கிய நிலையில், இரவில் இடி-மின்னலுடன் கனமழையாக பெய்தது. இன்றும் காலை 6 மணி முதல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. தென்காசி நகர் பகுதியில் 27.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி, குண்டாறு, கடனா அணை, ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடனா அணை நீர்மட்டம் 1 அடி அதிகரித்து 36 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 6 அடி அதிகரித்து 52 அடியாகவும், கருப்பா நதி நீர்மட்டம் 2 அடியும் அதிகரித்துள்ளது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 4 1/2 அடி அதிகரித்து 55 அடியை எட்டியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கயத்தாறு, கடம்பூர், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கழுகுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக பெய்துவரும் மழையால் மானாவாரி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
- சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
நெல்லை:
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
20 நாட்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழவில்லை.
எனவே இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் மாவட்ட போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நேற்றே ஒப்படைத்தனர். உடனடியாக வழக்குப்பதிவு செய்த நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையையும் தொடங்கினர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா செல்வி, முனியாண்டி, சூர்யன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று திசையன் விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூருக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று ஆய்வு செய்த நிலையில், சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்களிட மும் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் ஜெயக்குமாரின் வீட்டில் பொருத்தியிருக்கும் கேமராக்கள், அவை எந்த திசையை பார்த்து இருக்கின்றன, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தோட்டதிற்கான வியூ பாய்ண்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
இதனிடையே ஜெயக்குமார் எழுதியதாக கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து நெல்லைக்கு வருகிறார்.
இதனால் அவரும் கரைசுத்துபுதூருக்கு சென்று விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
- கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
- ஊத்து பகுதியில் 78 மில்லி மீட்டரும் என கனமழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 464.2 மில்லி மீட்டர் அதாவது சுமார் 47 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும். அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நெல்லையின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை வனப்பகுதியிலும் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பலத்த மழை பெய்துள்ளது.
நாலுமுக்கில் 10.3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 43 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 66 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 78 மில்லி மீட்டரும் என கனமழை பெய்துள்ளது.
- அணையின் நீர்மட்டம் நேற்று 52.45 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 5 அடி அதிகரித்து 57.30 அடியானது.
- ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும், அம்பையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கோடை மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும் கனமழை பெய்து வருகிறது. பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்று காலை நிலவரப்படி 5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 52.45 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 5 அடி அதிகரித்து 57.30 அடியானது.
சேர்வலாறு அணையில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் 64.27 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று ஒரே நாளில் சுமார் 8 அடி அதிகரித்து 72.34 அடியானது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று அந்த அணையின் நீர்மட்டம் 10 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 5 அடி உயர்ந்து 15.25 அடியை எட்டியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்யும் இந்த கோடை மழையினால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் 17 மில்லிமீட்டரும், களக்காட்டில் 12.4 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 6.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும், அம்பையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
இன்று காலையில் மாநகரில் ஒரு சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வெயில் அடித்த நிலையில் மீண்டும் விட்டு விட்டு சாரல் அடிக்க தொடங்கியது. பாளையில் 5.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனா அணை நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 35 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 46.50 அடியாகவும் உள்ளது.
மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இன்றும் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக மணியாச்சியில் 40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கயத்தாறு, கடம்பூர், கழுழுமலை, சாத்தான்குளத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளிலும் சாரல் தொடர்ந்து வருகிறது.
- கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
- 5 பேர் கும்பலை பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர்.
இவர் கடந்த 20-ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரின் நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர்.
இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 5 பேர் கும்பலை பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பக்கப்பட்டியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது தீபக்ராஜா என்பதால் அவரை மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
அவர்களிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் மேலும் 8 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தனிப்படை போலீசார் அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறார்கள். விரைவில் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் தீபக் ராஜா கொலை வழக்கில் சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






