என் மலர்tooltip icon

    தேனி

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ளகவி உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 13-ந்தேதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தே காணப்பட்டதால் கடந்த 8 நாட்களாக தடை தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கும்பக்கரை, சுருளி அருவியில் நீராடிச் செல்வார்கள். அவர்களும் அதிக அளவில் வந்ததால் கும்பக்கரை அருவியில் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது. 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4633 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது. 1808 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 43 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும் திறப்பும் 31.29 கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணை நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையில் மட்டும் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.
    • ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

    தேவதானப்பட்டி:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர் ஒரு காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் தங்களது காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கார் வந்து கொண்டு இருந்தது அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து போடி நோக்கி சரக்கு வேன் சென்றது. 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    இதில் காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் படுகாயமடைந்தார்.

    கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு வெவ்வேறு திசைகளில் விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களும் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களது பெயர் விபரம் தெரியவில்லை.

    இதனிடையே காரில் வந்தவர்களின் செல்போன் உதவியுடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    அதனைத் தொடர்ந்து நீர்மட்டமும் கிடுகிடு வென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. அணைக்கு 5531 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த வாரம் குடிநீருக்காக 105 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 4547 மி.கன அடியாக உள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூலவைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 59.02 அடியை எட்டியுள்ளது. விரைவில் 60 அடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 7787 கன அடி நீர் வருகிறது. 3424 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 55 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 665 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியான முழு கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. வரத்தும், திறப்பும் 665 கன அடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக நிரம்பி உள்ளது.அணைக்கு வரும் 45.03 அடி அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 15, அரண்மனைபுதூர் 9, வீரபாண்டி 10.8, பெரியகுளம் 31, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 21.6, வைகை அணை 17.2, போடி 11.2, உத்தமபாளையம் 7.8, கூடலூர் 15.6, பெரியாறு அணை 0.2, தேக்கடி 6, சண்முகாநதி அணை 8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • அணையின் நீர்மட்டம் 126.65 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணையின் மொத்த நீர் இருப்பு 4,190 மில்லியன் கனஅடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    வெள்ளப்பெருக்கு தொடர் மழை காரணமாக இன்றும் தேனி மாவட்டத்தில் 2-ம் நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சுருளி அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதுடன் மக்கள் நடந்து செல்லும் பாதையிலும் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேகமலை, சின்னசுருளி அருவியிலும், கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.

    பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சென்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 127.65 அடியாக உள்ளது. 2 நாட்களில் சுமார் 8 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு 17652 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4190 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடிக்கும் கீழ் இருந்த நிலையில் இன்று காலை 5 அடிக்கு மேல் உயர்ந்து 55.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10347 கன அடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2759 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 672 கன அடி. திறப்பு 566 கன அடி. இருப்பு 435.32 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.11 அடியாக உள்ளது. ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 666 கன அடியாகவும், திறப்பு 30 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 96.55 மி.கன அடியாக உள்ளது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 122.57 கன அடி. இருப்பு 79.57 மி.கன அடி.

    பெரியாறு 54, தேக்கடி 100, சண்முகாநதி அணை 84, ஆண்டிபட்டி 35, அரண்மனைபுதூர் 28.2, வீரபாண்டி 12.4, பெரிய குளம் 55.2, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 33, வைகை அைண 34, போடி 18.8, உத்தமபாளையம் 47.8, கூடலூர் 37.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
    • வல்லக்கடவு சோதனை சாவடி, தேக்கடி படகு இறங்குதளம் வழியே கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர்.

    அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளதாக கூறிய போதிலும் அந்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.

    இதனால் வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.

    இச்சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணி கட்டுமான பொருளை எடுத்து செல்ல கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து வானங்களில் கட்டுமான பொருட்கள் எடுத்து செல்வதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    வல்லக்கடவு சோதனை சாவடி, தேக்கடி படகு இறங்குதளம் வழியே கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
    • வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.

    கூடலூர்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக விடியவிடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் குமுளி-லோயர் கேம்ப் மலைச்சாலையில் அடுத்தடுத்து 2 மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    மரம் விழுந்ததால் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல அறிவுறுத்தினர். லோயர் கேம்புக்கு வந்த பல்வேறு வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர்.

    அதனை தொடர்ந்து வனத்துறையினருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் வாகனங்கள் சென்றன. அதிர்ஷ்ட வசமாக மரம் விழுந்த போது வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு மலைப்பகுதிகளிலும் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறைகள் உருண்டு சாலைக்கு வந்தது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தினர்.

    அதனை தொடர்ந்து ஊழியர்களின் உதவியோடு பாறைகளை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்தனர். இருந்தபோதும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யத் தொடங்கியது.

    தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைகை அணையின் பிறப்பிடமான வெள்ளியனை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தும்மக்குண்டு, வருசநாடு, முருக்கோடை, கடமலைக்குண்டு, மயிலா டும்பாறை, கண்டமனூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இப்பகுதி மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கும்படியும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தங்கமாள்புரம் பகுதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.


    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயரத்தொடங்கி உள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 49.67 அடியாக உள்ளது. வரத்து 1039 கன அடியாகவும், திறப்பு 69 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 1950 மி. கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக உள்ளது. வரத்து 3153 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 2756 மி.கன அடி.

    மஞ்சளாறு அைணயின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. இருப்பு 399 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.17 அடி. வரத்து 88.58 அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 83.57 அடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடி. வரத்து 103 கன அடி. திறப்பு 14.47 கன அடி. இருப்பு 67.14 மி.கன அடி.

    பெரியாறு 101., தேக்கடி 108, சண்முகாநதி அணை 51, ஆண்டிபட்டி 42.2, அரண்மனைபுதூர் 26, வீரபாண்டி 30.4, பெரியகுளம் 54.2, மஞ்சளாறு 31, சோத்துப்பாறை 24, வைகை அணை 39, போடி 30, உத்தமபாளையம் 18.4, கூடலூர் 33 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் விவசாயிகள் போராட்டம்.
    • அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுக்கப்படுகிறது.

    மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    பட்டா விவசாய பூமியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்யவும், பழுது அடைந்த குடியிருப்புகளை சரி செய்ய தேவையான உபகரணங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது, அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுப்பது, பட்டா விவசாயிகள் ஏலம், தேயிலை, காபி ஸ்டோர்களை பழுது பார்க்க தடை செய்வது உள்பட பல செயல்களை கண்டித்து மேகமலை விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். விடியலை மறைக்கும் மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

    • கடந்த 5 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
    • தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர்.

    அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளதாக கூறிய போதிலும் அந்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.

    இதனால் கடந்த 5 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இச்சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    ஆனால் 5 நாட்களாக அனுமதி கிடைக்காமல் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் அனுமதி கடிதம் தங்களுக்கு கிடைத்தால் மட்டுமே தமிழக வாகனங்களை அனுப்ப முடியும் என்று கேரள வனத்துறையினர் பிடிவாதமாக உள்ளனர்.

    இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், தமிழகத்துக்கு எந்தவித நன்மையும் தராத கேரள அரசால் உருவாக்கப்பட்ட மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் அனுமதியின்படி அணை பராமரிப்புக்கு அனுமதி அளிக்காவிட்டால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

    வல்லக்கடவு சோதனைச்சாவடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரியின் டயர் வெடித்தது. இதனால் அதன் டிரைவர் லாரியில் இருந்த தளவாடப்பொருட்களை சாலையிலேயே கொட்டி விட்டு திரும்பினார். அதன் பின் மற்றொரு டிரைவரும் எம்சாண்ட் மணல் உள்ளிட்ட பொருட்களை சோதனைச்சாவடியில் இருந்து 100 மீட்டர் முன்பாக சாலையோரம் கொட்டி விட்டு வேதனையுடன் திரும்பி வந்தார்.

    இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு விஷயத்தில் தமிழக அரசு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் மவுனமாக உள்ளது. இதனால் அணை பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முல்லைப்பெரியாறு அணை பலவீனமடைந்ததாக கேரளா வாதத்தை வைக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் இந்த வாரம் கேரள மாநிலம் செல்ல உள்ள நிலையில் அங்குள்ள அதிகாரிகளிடம் இது குறித்து இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர்.

    • கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கொண்டு செல்லப்படும் தளவாட பொருட்களை கேரளா தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து மத்திய கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியும் 7 மாதங்களாக அணைப்பகுதிக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு மறுத்து வருகிறது.

    முல்லை பெரியாறு அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் சென்றதால் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவும், துணைக்குழுவும் சமீபத்தில் கலைக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிக்காக எம்சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை 2 லாரிகளில் ஏற்றிக்கொண்டு இடுக்கி மாவட்டம் குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லை பெரியாறு அணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சோதனை சாவடியில் அந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் இன்று 4-வது நாளாக சோதனை சாவடியிலேயே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நவம்பர் தொடக்கத்தில் தளவாட பொருட்களை கொண்டு செல்வது தொடர்பாக கடிதத்தை தமிழக நீர்வளத்துறையினர் கேரள வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

    இச்சம்பவத்தை கண்டித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை லோயர் கேம்ப்பிலேயே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 4வது நாளாக பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் கேரள எல்லையில் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    நேற்று மாலை தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் 1 கி.மீ. தூரத்திற்கு 2 புறமும் அணிவகுத்து நின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின. இரவு 10 மணிக்கு பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் யாரும் இதுகுறித்து பேசாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில்,

    தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு அனுமதி வழங்காவிட்டால் குமுளியில் 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு இப்பிரச்சனையில் மவுனத்தை கலைத்து கேரளா அரசு மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையும். அணைப்பிரச்சனையில் சமரசத்திற்கே இடமில்லை என்றார்.

    விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் இருமாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.
    • மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.

    கூடலூர்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினந்தோறும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேரடி பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    ஆனால் ஆன்லைன் பதிவுதாரர்களில் தினமும் 15 ஆயிரம் பேர் வருவதில்லை. இதனால் நேரடியாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் புல்மேடு, முக்குழி உள்ளிட்ட வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகைபுரத்தம்மன் கோவிலில் மரக்கால் போன்ற பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நெல், அரிசி, சர்க்கரை, மஞ்சள், பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதில் நிரப்பி காணிக்கையாக தருகின்றனர். மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.

    இனிமேல் சபரிமலை சன்னிதானத்தில் நாணயங்களையும் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு

    உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் பலரும் நெல், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கலனில் நிறைத்து காணிக்கையாக தருகின்றனர்.

    சபரிமலை சன்னிதானத்தை பொறுத்தவரையில் நெல் மட்டுமின்றி நாணயங்களையும் இனிமேல் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம். மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.

    இதற்காக காலை 3.30 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் மாளிகைபுரத்தில் காலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இந்த காணிக்கையை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • கனமழையால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் தாக்கம் கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், 40 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது. நேற்றும் மழை நீடித்த நிலையில் பக்தர்கள் சன்னிதானம் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வழியோரம் உள்ள கடைகளில் ஒதுங்கி மழை நின்ற பிறகு பின்னர் மீண்டும் சென்றனர்.

    ஒரு சில பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் வானிலை மையம் அறிவிப்பின் காரணமாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    சாரல் மழை மற்றும் பனி மூட்டம் காணப்படுவதால் வண்டி பெரியாறு அருகே சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சன்னிதானத்துக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    இதே போல் பெரிய பாதை எனப்படும் எருமேலியில் இருந்து முக்குழி வழியாகவும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் எருமேலியில் இருந்து பம்பை வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து மரக்கூட்டம், நீலிமலை, சரங்குத்தி வழியாக சன்னிதானத்துக்கு சென்று வருகின்றனர்.

    இது குறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் புயல் காரணமாக இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே புல்மேடு வழியாக சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    கனமழையால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. எனவே நதியில் குளிக்கவும், இதனை கடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மறு உத்தரவு வரும் வரை இதனை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பம்பையில் நேற்று மதியம் நீர்வரத்து சீராகியதால் போலீசார் கண்காணிப்பில் பக்தர்கள் குளிப்பதற்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் வெள்ளம் ஏற்பட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். 

    ×