என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பாச்சேத்தி அருகே கருப்பணசாமி கோவிலில் களரி திருவிழா நடந்தது.
    மதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும் களரிதிருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான  விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங் கியது. நேற்று களரி திருவிழாவை முன்னிட்டு காலை முதல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக மாரநாடு கோவிலில் குவிந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமிகும்பிட்டனர்.திருவிழாவை முன்னிட்டு இரவு கோவில் கோபுரம் மின்னொளியில் ஜொலித்தது.

    நேற்று இரவு விடிய விடிய மாரநாடு கருப்பணசாமி கோவில் திருவிழா களைகட்டியது. இரவு 9 மணிமுதல் பெண்கள், குழந்தைகள் என கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தவண்ணம் இருந்தனர்.

    இரவு நீண்ட நேரம் காத்திருந்து அதிகாலை 4 மணியளவில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழங்கிய மாலைகள் சன்னதி முன்பு குவிக் கப்பட்டன. இன்று அதி காலை சிறப்பு பூஜை முடிந்தவுடன் அந்த மாலையை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். 

    திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
    மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் திருவிழாவில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கைமாவட்டம் மானாமதுரை வைகைஆற்றின் கரையில் ஆனந்தவல்லி சோமநாதர், வீர அழகர்கோவில்கள் உள்ளன. 

    இங்கு ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறுவதுபோல் சித்திரைதிருவிழா நடைபெறும். கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் சித்திரை திருவிழா பக்தர் களின்றி நடந்தது.

    இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியதால் கடந்த 7&ந்தேதி  சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முதல்நாள் சிம்மம், கைலாசவாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது. 2ம் நாளான நேற்று  விழா குழுவினரால் புதிதாக  செய்யப்பட்ட அன்ன பறவை, பூதம் வாக னங்களில் ஆனந்தவல்லி-சோமநாதர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதை காண கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். வருகிற 14ந்தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 15ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 

    கடந்த 2ஆண்டுகளாக மானாமதுரையில்  சித்திரை திருவிழா நடைபெறாததால்  இந்த ஆண்டு நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள்காண வெளியூர்களில் இருந்து பக்த்தர்கள் வந்து சுவாமிதரிசனம் செய்து செல்கின்ற னர்.
    தேவகோட்டை அருகே மாமனாரை குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தாணிச்சாஊரணி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பாலமுருகன் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவருக்கும், செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு சித்தானூர் சமத்துவபுரத்தில் உள்ள தனது தந்தை பூமிநாதன் (65) வீட்டிற்கு வந்துவிட்டார்.

    நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி மாமனார் பூமிநாதன், மாமியார் முனியாத்தாள் (58) ஆகியோரிடம் வாக்கு வாதம் செய்தார். அவர்கள் நீ மது குடித்து வந்திருப்பதால் இப்போது அனுப்ப முடியாது, காலையில் வா பேசிக்கொள்ளலாம் என கூறினர்.

    ஆனால் இதனை பாலமுருகன் ஏற்க மறுத்தார். அவர் தொடர்ந்து மாமனார் மற்றும் மனைவியுடன் தகராறு செய்தார். இதனைத் தொடர்ந்து பூமிநாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்தார். அவர் வீட்டு வாசலில் தொடர்ந்து சத்தம் போடவே, பூமிநாதன் வெளியே வந்தார். அப்போது பாலமுருகன் கத்தியால் அவரை குத்தினார். இதில் பூமிநாதனுக்கு வயிறு, மார்பு உள்ளிட்ட 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி முனியாத்தாள், மகள் செல்வி ஆகியோர் ஓடி வந்தனர்.

    அவர்கள் பாலமுருகனை தடுக்க முயன்றனர். அப்போது 2 பேரையும் பாலமுருகன் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர்களும் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையில் இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனை பார்த்ததும் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிவிட்டார்.

    வீட்டு முன்பு கணவன்- மனைவி மற்றும் மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 3 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் பூமிநாதன் இறந்துவிட்டார். முனியாத்தாள், செல்வி ஆகியோர் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். செல்வியின் நிலை கவலைக்கிடமாக இருந்தால் முதல்உதவி சிகிச்சைக்கு பிறகு அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய பாலமுருகனை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையிலான போலீசார் தாணிச்சா ஊரணியில் உள்ள பாலமுருகன் வீட்டுக்கு விரைந்தனர்.

    அங்கு பாலமுருகன் இருப்பது தெரிந்ததும் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தி கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை அருகே பங்குனி நடந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள எஸ்.கரிசல்குளத்தில் பிரசித்திபெற்ற கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் பங்குனிதிருவிழா நடந்து வருகிறது.  

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற பொங்கல் வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கல்வைத்து முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். 

    அதைத்தொடர்ந்து இரவு கோவிலில் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தபெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஆடிவந்தும் தீ மிதித்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன

    . கோவில் முன்பு முளைப்பாரி சட்டிகளை வைத்து பெண்கள் கும்மி பாடல்களை பாடினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குவந்து முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். 

    பங்குனி திருவிழாவை முன்னிட்டு கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோவில்வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்து இரவு நேரத்தில் ஜொலித்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலல் டிரஸ்டி செர்டு பாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
    திருப்பத்தூரில் மாடு முட்டி டி.வி. மெக்கானிக் பலியானார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது இளைய மகன் சுப்பிரமணியன் (38). இவர் திருப்பத்தூர் தாலுகா அலுவலகவீதியில் தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் (டி.வி. மெக்கானிக்) செய்து வந்தார்.  

    கடந்த 3ந்தேதி  இவர் மதுரை ரோட்டில், பெட்ரோல் பங்க் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் திரிந்த மாடு இவரது வாகனத்தை முட்டிதள்ளியது. இதில் நிலைதடுமாறி கீழேவிழுந்த சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    திருப்பத்தூர் பகுதியில் மாடுகளை பிடிப்பதற்கு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்காத பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    காரைக்குடி பகுதியில் போலீசார் நடவடிக்கை இல்லாததால் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள ஒருசில அரிசி ஆலைகளுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேசன் அரிசியை கடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மினிவேன் மற்றும் 2  இருசக்கர வாகனங்-களில கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசி மூடைகளை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆட்டோவிலும், மினிவேனிலும் ரேசன் அரிசியை சிலர் கடத்தி வந்தனர். அந்த வாகனங்களை பொதுமக்கள் பிடித்தபோது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். வாகனங்களில் இருந்து சுமார் 2 டன்அளவில் கடத்தல் ரேசன்அரிசி பிடிபட்டது.

    இதுகுறித்து நகர காங்கிரஸ் தலைவரும், பேரூராட்சி உறுப்பினருமான கொத்தரி கருப்பையா கூறுகையில், கடந்த மாதத்தில் மட்டும் 4முறை கடத்தல் அரிசியை பொது-மக்கள்  ஒத்துழைப்போடு பிடித்துள்ளோம். சுமார் 25டன் அளவில் ரேசன் அரிசி மீட்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டாலும், வாகன பதிவெண்களை வைத்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரேசன்அரிசி கடத்தும் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால் விபத்து அபாயம் உள்ளது. குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் நிலையம் சிவகங்கையில் உள்ளதால் பொதுமக்களே களத்தில் இறங்கி தடுக்கி-றோம். 

    எனவே ரேசன்அரிசி கடத்துபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்படும் அச்சம் உள்ளதால் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்றார்.
    தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    தேவகோட்டை

    தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊரணி சாரதாநகரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவவிழா நடைபெறும். 

    அதேபோல் இந்த ஆண்டு விழா கடந்த 29ந்தேதி நவசக்திஹோமம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்புக்கட்டுதல் மாலை சக்திகரகம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது. ஒவ்வொருநாளும் அம்மனுக்கு மீனாட்சி, காமாட்சி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஐஸ்வர்யா லட்சுமி, அங்காள பரமேஸ்வரி, கனகதுர்க்கை என சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

    கரகம், மதுக்குடம், முளைப்பாரி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்-கடன் செலுத்தினர். மாலை-யில் கோவில்முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல்குத்தி பூக்குழி இறங்கினர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. 

    விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    திருப்பத்தூர் அருகே வீட்டில் தீ பிடித்து மூதாட்டி கருகி இறந்தார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே  தெக்கூர் கிராமத்தில் உள்ள மேல தெருவைச் சேர்ந்தவர் காசி (வயது 90). இவரது மனைவி வள்ளி (80). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தனியாக வசித்து வந்த கணவன்- மனைவி இருவரும் வயது மூப்பு காரணமாக சிரமப்பட்டு வந்தனர்.

    நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது சிறிது நேரத்தில் தீ பற்றி வீடு முழுவதும் பரவ தொடங்கியது. இதன் காரணமாக வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

    இதனால் திடுக்கிட்டு எழுந்த காசி, அவரது மனைவி வள்ளி ஆகியோர் இருட்டில் வெளியேற முடியாமல் அலறினர். வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததன் காரணமாக அவர்களால் வாசல் பகுதியை நெருங்கி கதவை திறக்க முடியவில்லை. இதனால் கூக்குரலிட்டபடியே செய்வதறியாது முதிய தம்பதியினர் தவித்தனர்.

    இந்த நிலையில் தீ வேகமாக பரவியதில் காசி-வள்ளியின் ஆடையில் தீ பற்றியது. சிறிதுநேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியது. வலியால் 2 பேரும் அலறித்துடித்தனர்.

    வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஆனந்த் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வள்ளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்திருந்தார். 

    தீக்காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காசியை வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. தீ விபத்தில் அவர்களது ஓட்டு வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

    இந்த சம்பவம் தொடர்பாக நெற்குப்பை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மருது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் கூறுகையில், மின் கசிவு ஏற்பட்ட உடனேயே கணவன், மனைவி  வெளியேறி இருந்தால் உயிர் பிழைத்து இருக்கலாம். ஆனால் வயது மூப்பு காரணமாகவும், இரவு நேரம் என்பதாலும் அவர்களால் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். எனவே வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் குடும்பத்தினர் தங்க வைக்க வேண்டும் என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பள்ளத்தூர் பேரூராட்சியில் நகருக்குள் உள்ள மதுபான கடை அகற்றப்படும் என நகராட்சி தலைவர் கூறினார்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சியின் முதல் கூட்டம் பேரூராட்சி தலைவர் சாந்தி சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.   துணைத்தலைவர் ருக்மணி செயல் அலுவலர் உமா-மகேஷ்வரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் 11வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் கொத்தரி கருப்பையா பேசுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் நிபந்த-னைகளை மீறி உள்வாடகைக்கு விட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.நிபந்தனைகளை மீறிய கடைகளை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    14வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சரோஜா பேசுகையில், இங்குள்ள அரிசி ஆலைகளால் காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்றார்.  இதற்கு பதிலளித்த செயல் அலுவலர் விரைவில் ஆலை அதிபர்களை அழைத்து  விதிமுறை-களின்படி சுத்திகரிப்பு செய்ய அறிவுறுத்துவோம் என்றார்.

    13வது வார்டு தி.மு.க. உறுப்பினர் வடிவேல் பேசுகையில், பேரூராட்சி சாலைகளில் அடிக்கடி விபத்து ஏறடுகிறது. எனவே தேவையான இடங்களில வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்.

    தலைவர் சாந்தி சிவசங்கர் பேசுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து பொதுமக்களின் நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவின்படி நகரின் உள்ளே உள்ள மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உடனடியாக சரி-செய்யப்படும் என்றார்.
    மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி -சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாஆண்டு தோறும் கொண்டாப்பட்டு வருகிறது. 

     இந்தஆண்டுக்கான விழா இன்று காலை 9மணிக்கு மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது‌. முன்னதாக நேற்று மாலை  விக்னேஸ்வர வாஸ்து பூஜைகள் நடைபெற்றன.   

    முதல்நாள் விழாவில்  இன்று அம்மன் பிரியாவிடையுடன் கற்பகவிருஷம்  சிம்மவாகனத்தில் வீதி உலா வரும்   நிகழ்ச்சியும்  அதைதொடர்ந்து  தினமும்  இரவு  பூதம், அன்னம் பறவை, கமலம், கைலாசம், யானை, கிளி ,இரண்டு குதிரை, இரட்டை சப்பரம்  ஆகிய வாகனங்களில் வீதி உலாவரும் நிகழ்ச்சியும்  நடைபெறுகிறது.  

    முக்கிய நிகழ்ச்சியான சுவாமி&அம்பாள் திருக்கல் யாணம் வருகிற 14ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விழா வரும் 17ந் தேதி  வரை நடைபெறுகிறது. 

    இதேபோல் வைகைஆற்று கரையில் உள்ள வீர அழகர் கோவிலில் வரும்14ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன்  சித்திரை திருவிழா தொடங்கு கிறது. 15ந்தேதி இரவு எதிர்சேவை நிகழ்ச்சியும்  16ந்தேதி வீர அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    திருவிழாவிற்காக மானாமதுரை வைகைஆறு முழுவதும் நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பால சுந்தரம், ஆனையாளர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் சீரமைக்கும்பணி முடிக்கப்பட்டுஉள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் மேற்பார்வை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
    தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம்- தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்திலுள்ள வேம்புடைய அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. 

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை மற்றும் இன்று காலை 4 பிரிவுகளாக வெளிமுத்தி விளக்கில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டிபந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, ராமநாத-புரம், தேனி, மதுரை, புதுக்-கோட்டை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    நேற்று மாலை நடைபெற்ற நடுமாடு பிரிவில்   மதுரை மாவட்டம் நம்பியூர் முத்துக்கருப்பன் முதல் பரிசையும், சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் பாலு 2வது பரிசையும், நல்லாங்குடி முத்தையா சேர்வை 2வது பரிசையும்,  வெளிமுத்தி வாஹினி 4வது பரிசையும்,  நல்லாங்குடி சசிக்குமார் 5வது பரிசையும் பெற்றனர்.

    இன்று காலை நடைபெற்ற பெரியமாட்டு பிரிவில்  ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர் அப்துல்காதர் முதல் பரிசையும்,   நல்லாங்குடி முத்தையா சேர்வை 2வது பரிசையும்,  ராமநாதபுரம் மாவட்டம் மணிகண்டி மகாலிங்கம் 3வது பரிசையும்,  மதுரை மாவட்டம் நம்பியூர் முத்துக்கருப்பன்,   தேவகோட்டை வீரசேகர் 5வது பரிசையும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாடுகளுக்கு மரியாதை செலுத்தி மாட்டின் உரிமையாளர்-களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை வழிநெடுகிலும் சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்
    சிவகங்கை அருகே திருப்பத்தூரில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள செவ்வூரில் அரண்மனை வம்சத்தை சேர்ந்த பரம்பரையினர் என்று அழைக்கப்படும் செந்தில்பாண்டியன் தலைமையில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

    முன்னதாக செவ்வூர் கிராமத்தில் உள்ள மந்தை முனீஸ்வரர், பொன்னம்பல விநாயகர், நாச்சியார் அம்மன், ஆதினமிளகி அய்யனார், பூசதோப்பு முருகன், பிரம்மஅய்யனார் கோவில் போன்ற வழிபாட்டு தலங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டது. 

    செவ்வூர் கிராமத்துக்கு உட்பட்ட சத்திரக்குடி, வலையன்பள்ளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான  வேலங்குடி, மலம்பட்டி, திருக்கோளக்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக் கானோர் மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்றனர். 

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்குும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு தொழுவத்தில் இருந்தும், கட்டுமாடுகளாகவும் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்கமுயன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உடனடியாக மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் செவ்வூர்கிராமத்தை சேர்ந்த நாட்டார் நகரத்தார்கள் மற்றும் அனைத்து சமு தாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகளில் பூலாங்குறிச்சி காவல்நிலைய காவலர்கள் ஈடுபட்டனர்.


    ×