என் மலர்
சிவகங்கை
- திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் செய்திருந்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அண்ணா சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒன்றிய தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக வி.பி. ராஜன், இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும் என்று பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் செய்திருந்தார்.
- திருப்புவனம் அருகே பால்குளிரூட்டும் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- தமிழரசி எம்.எல்.ஏ. உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் ஒதுக்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் அருகே கீழராங்கியம் கிராமத்தில் கிராமப்புற பெண்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலை யத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
விழாவில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், திருப்புவனம் கூட்டுறவு பால்பண்ணை செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆவின் நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் சனிபிரதோஷவிழா நடந்தது.
- 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்த ருளி கோவிலில் உள்ள பிரகாரத்தில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பள்ளியறை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை-பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர் திருலிங்க திருமேனிக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நாளை (திங்கட்கிழமை) காலை வருஷாபிஷேக மும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் மற்றும் பவுர்ணமி பூஜையும் இங்கு நடைபெறுகிறது.
இதேபோல் நாகலிங்கம் நகர் அருணாச்சலேஸ்வரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், மேலெநெட்டூர் சொர்ண வாரிஸ்வர் கோவில்களிலும் சனிபிரதோஷம் பூஜைகள் நடைபெற்றது.
- விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
- ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் விரிவாக்க கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவர் பேசியதாவது:-
பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அதிகமாக செய்துதர வேண்டும். பொதுமக்கள் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வகையில் நகராட்சிக்கு போதுமான கட்டிடங்கள், பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் முதல்கட்டமாக தற்போது ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவாக்க கட்டிடம் 4800 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இன்னும் பல திட்டங்கள் மானாமதுரை நகராட்சிக்கு வர உள்ளது.
கடந்த 1½ ஆண்டுகால முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் அமலில் இருந்த பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் தற்போது நகர்புறங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் எந்த திட்டங்களையும் ரத்து செய்யாமல் மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்து நிதி நெருக்கடியான இந்த கால கட்டத்திலும் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பொதுமக்கள் எப்போதும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அர் பேசினார்.
விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட விழிப்புணர்வுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியத்தலைவர் லதா அண்ணாதுரை, ஆணையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் இடைக்காட்டூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.
- காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார்.
- பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே அடகு கடை நிறுவனம் நடத்தி வந்தவர் நைனா முகமது (வயது 49). இவர் தனது நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக நகர் முழுவதும் விளம்பரம் செய்தார்.
இதை நம்பி காரைக்குடி, பழைய செஞ்சை, ரஸ்தா, அமராவதி, புதூர், தட்டடி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து நைனா முகமதுவிடம் பணம் பெற்று சென்றனர்.
வங்கிகளில் இருந்து நகைகளை மீட்கவும், நில பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டும் நைனா முகமது பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி (35) என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார். அதற்குரிய பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.
இதனால் சந்தேகம் அடைந்த சோமசுந்தரி இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் அடகு கடை அதிபர் நைனா முகமது, அவரது மனைவி சிந்துஷ் பானு, உதவியாளர் முத்துப்பட்டணம் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நைனா முகமதுவை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் நைனா முகமது 1000 பவுன் நகையை அடமானமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் முதியவர் ஒருவரிடம் 1½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அதை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமான காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்களது நகைகளை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
- பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதில் அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் காலை உணவு திட்டத்தை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
- தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றி மாணவர்களுடைய கருத்தை கேட்டறிந்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது எஸ்.புதூர் ஒன்றியத்தில் உலகம்பட்டி, கட்டையன்பட்டி, குளத்துப்பட்டி உள்ளிட்ட
47 அரசு ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் இடம், நேரம், சுகாதாரம், சுவை உள்ளிட்ட ஆய்வுகளை கோட்டாட்சியர் சுகிதா மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் முறை மளிகை பொருட்கள், காய்கறிகள், பராமரிக்கும் முறை, மாணவ- மாணவிகளுக்கு தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றிய மாணவர்களுடைய கருத்து ஆகியவற்றை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் ருசித்துப் பார்த்தார். அவருடன் மாவட்ட ஒன்றிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
- கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
சிவகங்கை
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் மு.சுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கியும் மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.
பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம்,நெற்குப்பை நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன், உலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா கருப்பையா, கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், முசுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, மின்னமலைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் ஆண்டிச்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் மென்னன், சங்க செயலாளர் செல்வம், வாராப்பூர் வி என் ஆர் நாகராஜன், கரிசல்பட்டி தலைமை ஆசிரியர் பால கணேசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
- கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
- கைதான 4 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே 3 நாட்களுக்கு முன்பு காமராஜர் காலனியை சேர்ந்த சித்திரைசாமி மகன் ஆகாஷ் (வயது 25) என்பவர் மட்டாகுளம் கிராமத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சிவகங்கை-மதுரை சாலையில் உள்ள வீரவலசை கிராம விலக்கு ரோட்டில் வாகன சோதனை நடத்திய தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மட்டாகுளத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் வினோத்குமார் (29), மானாமதுரையைச் சேர்ந்த முத்துமணி மகன் புலிப்பாண்டி என்ற முத்துக்குமார் (21), முத்துப்பட்டி கிராமத்தை முத்தையா மகன் கார்த்திக் ராஜா (25), கீரைத்துரை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்தகுமார் என்ற பாம்பு வசந்த் (23) என்பதும், அவர்கள் ஆகாஷை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மானாமதுரை அக்னிராஜ் கொலை வழக்கில் ஆகாசும் சம்பந்தப்பட்டவர் என்பதும், இது தொடர்பாக அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
முன் விரோதத்தில் அக்னிராஜ் தரப்பினர் 2 பேரை போலீஸ் நிலையம் முன்பு வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.இந்த சம்பவத்தில் அருண்நாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வினோத்கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்த வழக்கில் போலீசார் 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (19) 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தினசரி மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்துபோட்டு வந்தார்.
சம்பவத்தன்று காலை அவர் கையெழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீஸ்நிலையம் அருகில்ஆகாஷ் தரப்பினர், அக்னிராஜை மானாமதுரை கோர்ட்டு வாசல் முன்பு மறித்து கீழே தள்ளி அவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்கும் நிலையில் ஆகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 2 பேர் கூலி படையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான 4 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- அரசு பள்ளியில் பயில்வது பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- சிவகங்கை கோட்டையூர் தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்-ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார்அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
தற்போது அரசுப்பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தனியார்பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட அரசுப்பள்ளியில் 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து முதல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.
விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், மின்வாரியத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
- சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.
கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.
- மானாமதுரை பகுதியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வைகைஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- கண்மாய் கரை பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை பாசன பகுதியாகும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக வைகைஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கண்மாய் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் நிரம்பி வருகிறது. பார்த்திபனூர் மதகு அணையில் இடதுபுற கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் பெரிய கண்மாய்யாக உள்ள மேலெநெட்டூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்கிறது.
கண்மாய் கரை பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து செல்லும் கால்வாய்களிலும் தண்ணீர் அதிகம் அளவில் செல்கிறது. இப்பகுதியில் தொடர்ந்து பலகண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
வைகை ஆற்று கரை யோரம் உள்ள முத்தனேந்தல், கிருங்காகோட்டை, கீழமேல் குடி மானாமதுரை கண்மாய்களுக்கு வரும் கால்வாய், மதகுகள் பராமரிக்கப்படாதால் தண்ணீர் வராத நிலையும் உள்ளது. தற்போது தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் வீணாக சென்று கடலில் சென்று கலக்கும் தண்ணீரையும் விவசாயம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் வைகைஆற்றில் புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும். தண்ணீர் செல்லாத கால்வாய்களில் சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






