என் மலர்
சிவகங்கை
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.
- நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடை நெல் அறுவடைத்திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி சுற்று வட்டார கிராம விவசாயிகளை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கருணாநிதி பண்ணையில் பயிரிட்ட திருச்சி -1 மற்றும் திருச்சி-3 ஆகிய நெல் இரகங்களின் சிறப்புகளை விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நெல் அறுவடையில் கலந்துகொண்டனர். நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
இவ்விழாவில் நெல் சாகுபடி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். எஸ்.ஆர் பட்டினம், விசாலயன் கோட்டை, கலிப்புலி, காளையார்கோவில் மற்றும் புலிக்குத்தியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர், கல்லூரியின் இயக்குநர் கோபால் நன்றியுரை வழங்கினார்.
- சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு குடிமை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
- தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் ரேசன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் ரேசன் கடைகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 660 முழு நேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக, 4 லட்சத்து 20 ஆயிரத்து 792 குடும்ப அட்டைதாரர் களுக்கு குடிமைப்பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நியாய விலைக்கடை களுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்ட றியப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவவாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவரம்பூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
- விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தேவராம்பூர் கிராமத்தில், வருகிற (14-ந்் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில், ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல். நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, ஊடு அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அளிக்கப்படும்.
மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த 3 விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடாரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், தாது உப்புக்கலவைகள் கால்நடை வளர்ப்போருக்கு விநியோகிக்கப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- இணையதள குளறுபடியால் 5 மாதம் சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.
- கல்லல் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் இணைய தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:-
தமிழக அரசு காகித பயன்பாட்டை தவிர்க்கவும், விரைவான சேவை வழங்கும் நோக்கத்திலும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்திட்டம் இணையதளம் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதை நிறுவிய தனியார் நிறுவனம் அடிப்படை ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கவில்லை. இதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்பொழுது அதை சரிசெய்ய அலுவலக பணியாளர்களால் இயலவில்லை.
இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ராஜேஸ்வரி,என்.மேலையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியர் விவிலி ஆகிய இருவருக்கும் கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
2 பள்ளிகளிலும் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சிவகங்கை ஒன்றியத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
இதனால் கல்லல் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் இணைய தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்று வந்த ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக ரீதியில் அதிகாரிகளால் ஏற்பட்ட குளறுபடிக்கு எவ்வித காரணமும் இல்லாத ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது சராசரி குடும்ப வாழ்க்கை மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கருவூலக அலுவலர்களிடம் முறையிட்டதற்கு சென்னை இயக்குநர் அலுவலகம்தான் சரி செய்து தரவேண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்கள்.
இந்த நிலையே கடந்த 5 மாதமாக தொடருவதால் இந்த குளறுபடியை சரிசெய்து உடனடியாக ஊதியம் வழங்க வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குனரிடம் நேரடியாக முறையிட்டுள்ளோம். பல லட்சம் செலவழித்து உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் குறித்து முழுமையான பயிற்சியை அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் வழங்கி ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உரிய தேதியில் வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ராட்சத குழாயில் மோதியது.
- பலூன் வெளிவந்ததால் டிரைவர் உயிர் தப்பினார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 36). வாடகை கார் டிரைவர்.
காரைக்குடியில் இருந்து இவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கோவை சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிலநீர்பட்டி பிரிவில் இரவில் வந்த போது வளைவான சாலையில் கார் வேகமாக திரும்பியது.
அப்போது கட்டுப்பா ட்டை இழந்த கார் சாலையோரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாய் மீது மோதியது.
இதில் காரின் என்ஜின் பகுதி நொறுங்கியது. கார் வேகமாக மோதியதால் டிரைவர் சீட்டின் முன்பகுதியில் இருந்த பலூன் வெளி வந்தது. இதன் காரணமாக காரை ஓட்டிய செந்தில்முருகன் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
- சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது.
- இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய அளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதிவரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் வருகிற 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதி வரை 69-வது கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட உள்ளது.
கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பயிர்க்கடன் மேளா நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.200 கோடி அளவுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளும், இதுவரை உறுப்பினராக சேராத விவசாயிகளும் உடனடியாக புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர் கடன் பெற்று பயனடையலாம். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வோளண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் பயிர்காப்பீடு கட்டணத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்டவாறு உர இருப்பு உள்ளது.
யூரியா-840 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி.500 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ்-283 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ்-787 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது.
எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
கடன் உறுப்பினராக சேர தேவையான ஆவணங்கள்:-
ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3
கடன் பெற தேவையான ஆவணங்கள்:-
1432 பசலி அடங்கல், 10(1) நகல் (பட்டா), ஆதார் அட்டை நகல், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கே.சி.சி. பாஸ்புக் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையான்குடி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்க புத்தாக்க பயிற்சி நடந்தது.
- செஞ்சிலுவை சங்க தலைவர் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புத்தாக்க பயிற்சி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் பகீரத நாச்சியப்பன் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார். பொருளாளர் ராமமூர்த்தி ''மனிதம் செம்மையுற மனவளக்கலை'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். செயலாளர் அனந்த கிருஷ்ணன் ''காலத்தால்' செய்யும் முதலுதவி'' என்ற தலைப்பில் பேசினார். இதில் செஞ்சிலுவைச்சங்க மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். செஞ்சிலுவைச்சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.
- மானாமதுரை பகுதியில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- இந்த முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் தொடங்கியது. இதை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி புதிய உறுப்பினர்கள் பெயர்களை எழுதி தொடங்கி வைத்தார். நகரசெயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். முத்தனேந்தல் பகுதியில் ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் வரவேற்றனர். திருப்புவனம் ஒன்றிய பகுதியில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். அனைத்து இடங்களுக்கு சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் பணியை தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
சிவகங்கை
சிகவங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படு த்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கையில் மத்திய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், மாநில சட்ட பணிகள் ஆணைகுழு வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா வழிகாட்டுதலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் குடும்ப நல நீதிபதி முத்துகுமரன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் அரசின் நலத்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார். இதில் நீதித்துறை தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்தியநாராயணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
- வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
- கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி யின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதன் காரணமாக அங்கு படித்த பள்ளி மாணவ-மாணவிகள் அருகாமையில் உள்ள எஸ்.புதூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இப்பள்ளி யில் கல்வி பயின்ற முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் சேதுராமன் பார்வைக்கு இதுகுறித்து வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர் மனைவி காமினி, சந்திரசேகர், மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன், கட்டிட பொறியாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, அரசு அதிகாரிகள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
- காரைக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- இந்த ஆய்வின் போது இணை இயக்குநர், தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, பரிசோதனை ஆய்வகம், இயன்முறை சிகிச்சை பிரிவு மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வருகை பதிவேட்டில் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, வருகைபுரிந்த மருத்துவர்கள், விடுப்பில் உள்ள மருத்துவர்கள், சிறப்பு பிரிவு மருத்துவர்கள் எண்ணிக்கை, குழந்தை களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்தும், புற நோயாளிகள் பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற வந்துள்ள பொது மக்கள், சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
மகப்பேறு பகுதியில் கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வெளிநோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 1200 பேருக்கும், உள்நோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 600 பேருக்கும், பிரசவிக்கும் தாய்மார்கள் மாதம்தோறும் 300 முதல் 400 பேருக்கும், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் தாய்மார்கள் மாதம்தோறும் 100 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் சிசு பராமரிப்பு பகுதியில் மாதம்தோறும் 300 வெளி நோயாளி குழந்தைகளுக்கும், 150 உள்நோயாளி குழந்தை களுக்கும் சிகிச்சை அளிக்க ப்படுகிறது.
பொது வெளி நோயாளி கள் பிரிவில் மாதம்தோறும் 20 ஆயிரம் பேருக்கும், விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவின் கீழ் மாதம்தோறும் 200 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் மாதம்தோறும் 25 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, கர்ப்பபை அகற்றும் சிகிச்சை, பித்தப்பை கல் அடைப்பு அகற்றுதல், கர்ப்பவாய் பரிசோதனை நுண்துளைகள் அறுவை சிகிச்சையும் நடைபெறு கிறது.
தொற்றுநோய் பிரிவு, மனநலபிரிவு, செவி திறன் ஆய்வு பிரிவு, குழந்தைகளுக்கான வெளிநோயாளி மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மற்றும் இதர நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் வலதுபுற பகுதியில் 300 மரக்கன்றுகளை நடும் பணியின் தொடக்கமாக கலெக்டர் மரம் நடும் பணியை தொடங்கிவைத்தார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவர் தர்மர், வட்டாச்சியர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.






