என் மலர்tooltip icon

    சேலம்

    • செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது.
    • மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் விஜய் (24). இவரது செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் அந்த குறிப்பிட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அந்த மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் ரூ.5 லட்சத்து 71ஆயிரத்து 280 பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தியுள்ளார்.ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி பணம் மீண்டும் இவரது வங்கி கணக்கில் வராததால் அதிர்ச்சி அடைந்த விஜய் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    கோட்டை பெருமாள்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூஜைகள் நடந்தது. இதேபோல் ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெருமாள்கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா.
    • வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது கணவர் ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இன்று காலை வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரமுத்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது.
    • பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை ஊத்தங்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது அந்தப் பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னுடன் பயணித்த சகநண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை கண்டித்த பெண்ணின் நண்பர்கள் பஸ் சேலம் புதிய பஸ் நிலையம் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.
    • அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன்(35), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வில்வேஸ்வரன் (22), தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் தெருவை சேர்ந்த நாகராஜன் (20) என்பது தெரியவந்தது.

    இவர்கள் போலீசார் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டு வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வாலிபர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார்.

    சேலம்:

    தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான ஜெகதீசபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா அம்மையப்பன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ரத்னா அல்லி முத்து, மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, நாடாளுமன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்புச் செயலாளர் நல்லான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    அப்போது கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வீரபாண்டி தொகுதி துணைத் தலைவர் எருமாபாளையம் சுரேஷ் மேற்கு தொகுதி செயலாளர் மணிகண்டன், தெற்கு தொகுதி செயலாளர் ஜனார்த்தனன், வடக்கு தொகுதி செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
    • ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    திருநங்கை

    அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சதீஷ்குமார் தனது நண்பரான வாழப்பாடி பாட்டப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கவியரசன் (34) என்பவருடன் குடிபோதையில் நவ்யாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அவரை அழைத்து பேசி விட்டு சதீஷ்குமாரும், கவியரசனும் அங்கிருந்து சென்று விட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஷ்குமார் கதவை தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அடித்து கொலை

    இதில் ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் கதறி துடித்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு வாழப்பாடியில் முதலுதவி சிகிச்சை அளித்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த சதீஷ்குமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    பரபரப்பு வாக்குமூலம்

    இதற்கிடையே நவ்யாைவ கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு எனது வீட்டிற்கு வந்து என்னை உல்லாசத்திற்கு அழைத்தார். அதற்கு நான்மறுத்ததால் தகாத வார்த்தையால் பேசினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் சாய்ந்தார். இதையடுத்து அங்கிருந்து நான் தப்பி ஓடினேன், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மருத்துவ பரிசோதனை

    இதையடுத்து சேலம் அரசு மருத்துவ மனையில் அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் பெற்று வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • முதியவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது.
    • முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் முதியவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முதியவர் கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    தொடர் விடுமுறை

    இதேபோல் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் முகாமிட்டு உள்ளனர். ஏற்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து சுற்றுலா பயணிகள் தங்கி வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது.

    விடுதிகளில் இடம் இல்லை

    இதனிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் அறைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் நேற்று இரவு முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதி அடைந்தனர். ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி அதில் உறங்கினர்.

    கடும் குளிர்

    தற்போது ஏற்காட்டில் லேசான சாரல் மழையுடன் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. அறை கிடைக்காமல் இரவு முழுவதும் காரில் தூங்கியவர்கள் குளிர் தாங்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில சுற்றுலா பயணிகள் திரும்பி ஊருக்கு சென்று விட்டனர்.

    3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிய வாய்ப்புள்ளது.

    • வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
    • அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

    அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தி உள்ளது.

    தனி வார்டுகள்

    இது ேபால கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.மேலும்டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது வரை 4 ஆயிரத்து 454 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சல்களை கட்டுப்படுத்தும வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் , நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000-த்திற்கும் மேற்பட்ட காயச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

    75 முகாம்கள்

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் சுகாதாரத்துறை சார்பில் 75 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களை பள்ளிகூடங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை களை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் காய்ச்சல், இருமல், சளி தொல்லை உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

    பொதுவாக கொசுக்கள் தண்ணீரில் அதிக அளவில் உற்பத்தியாவதால் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கா தவாறு பார்த்து கொள்ள வேண்டும், வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், குளிர் சாதன பெட்டியின் பின் பகுதிகள், ஆட்டு உரல், உரல் மற்றும் பாத்தி ரங்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த ஆணின் வலது கையில் சுமன் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் பச்சை நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட முழு கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். மேலும் இவர் இறந்து சுமார் 3 முதல் 5 வாரம் இருக்காலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
    • இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, செலவடை, வென்னானப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல், பாப்பாத்தியின் மகன் தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தாமரைச்செல்வன் மற்றும் திருமணம் செய்து வைத்த பெரியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×