என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
    • வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினரக பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய், நூலை வெளியிட்டார்.

    பிறகு, விஜய் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய விஜய், 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்றார்.

    2026 தேர்தல் கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸாகும் என விஜய் பேசிய நிலையில் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

    கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸூம் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை.

    நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சி தான் நடத்துகிறோம்.

    வாரிசு என்ற அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கவில்லை.

    வேங்கைவயல் விவகாரம் குறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.

    வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்எல்ஏவோ தலையிடவில்லை.

    சீமான் உடன் நேரடியாக மோத திமுகவுக்கு எந்த பயமுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதுகாப்புக்காக துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பழனிவேல் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது சகோதரர்கள் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், வெட்டன் விடுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.

    இவர்கள் 3 பேரும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்பட்டது.

    3 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் 2022 ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி முருகானந்தம் மற்றும் பழனிவேல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்தது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை வசம் இருந்து பெற்றது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணி முதல் 20 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து சென்று முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

    இதில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் முருகானந்தம் பா.ஜ.க. புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக உள்ளார். பழனிவேல் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தற்போது கரம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாடு அரசு திறந்த புத்தகம்; நாங்கள் தவறு செய்யவில்லை என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
    • அரசை குறை கூறுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும். தமிழ்நாடு அரசு திறந்த புத்தகம்; நாங்கள் தவறு செய்யவில்லை என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். ஊழல் குற்றச்சாட்டு கூறுவதை தவிர பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஞாபக மறதி அதிகம். தனது காலத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த இறப்பும் நேரவில்லை. எங்கு இறப்பு ஏற்பட்டாலும் அரசை குறை கூறுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு.

    புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டி னம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்க ளில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வசதி பெறுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வில்லை. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பருவ நிலை மாற்றம் குறித்து மீன்வளத் துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.
    • பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பால கிருஷ்ணன், சக்திவேல். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருவதோடு, ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பால கிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். 19 மாதம் தவணையாக அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். 15 மாத தவணை தொகை அவர் சரியாக செலுத்தி உள்ளார். ஆனால் கடந்து 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை.

    இதே போல சக்திவேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவரும் சரியாக தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.

    இதன் காரணமாக கடன் தொகையை வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்கள் பாலகிருஷ்ணன், சக்தி வேலுக்கு சொந்தமான வீட்டில் பெரிய அளவில் இந்த வீடு அடமானத்தில் உள்ளது. 3 மாத நிலுவை ரூ.45,204 செலுத்தப்படவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட அந்த கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.

    அவமானத்தால் மனமுடைந்த சக்திவேல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி புத்தி சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளனர். பால கிருஷ்ணனின் மனைவி அவமானம் தாங்க முடியாமல் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.

    இது குறித்து சக்திவேல் கூறும்போது, தவணை தொகையை சரியான காலத்தில் செலுத்தி வந்தோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக எங்களது தாயாரின் உடல் நிலை கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால், வைத்திருந்த பணம் மருத்துவத்திற்காக செலவிடப்பட்டு விட்டது. 3 மாத தவணையை எப்படியும் செலுத்தி விடுவோம் என்று நாங்கள் பணம் வசூலிக்கும் நிதி நிறுவன ஊழியரிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் இவ்வாறு எங்களை அவமானப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

    இவ்வாறு அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, தவணை தொகை செலுத்தவில்லை என்றால் நிதி நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற அநாகரீகமான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இது மிகவும் தவறு. சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்று அவர் கூறினார்.

    • கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.
    • 2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். சில கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரியதை அரசியலாகத்தான் பார்க்க முடியும். கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.

    2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். முதலமைச்சரை பொருத்தமட்டில் மது விலக்கு வேண்டும் என்று கூறுகிறோம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூட்டணி கட்சிக்கு வருபவர்கள் சீட்டுகளையும் கேட்கிறார்கள், பணத்தையும் கேட்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    • காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பிரத்யேக வார்டு திறக்கப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் 44 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில், மழை, குளிர் என்று சீதோஷ்ண நிலைகள் அடிக்கடி மாறி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 79 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பிரத்யேக வார்டு திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நரிமேடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அப்பகுதியில் நடமாடும் மருத்துவமனை மூலமாக சளி இருமல் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.

    கடந்த மாதம் 44 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    கிராமப்புறங்களில் பலரும் குடும்பம் குடும்பமாய் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். 10 நாட்கள் வரை பாதிப்பு நீளுவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள்தோறும் 44 மருத்துவ முகாம்கள் என்ற அடிப்படையில் ஆயிரத்து 237 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 34 ஆயிரத்து 142 பேருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் 100 நாள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் மேலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
    • பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் சுமார் 36 கிராம பஞ்சாயத்துகளும் அது சார்ந்த கிராமங்களும் உள்ளன.

    இந்த பகுதியில் ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டனர்.

    இதையடுத்து இதற்கு அனுமதி கோரி கடந்தவாரம் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் கொடியேற்று விழா நடத்த அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது.

    இதுபற்றி நிர்வாகிகள் கேட்டதற்கு இன்று, நாளை என்று தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடியேற்றுவது என்று முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை ஒன்றிய த.வெ.க. தலைவர் அருண்பிசாத், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் அய்யாதுரை ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்றினார்கள். தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

    இதுபற்றி நிர்வாகிகள் கூறுகையில், தமிழக வெற்றிக்கழக கொடி ஏற்று விழாவுக்கு முறைப்படி அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தனர்.

    பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும். வீடுகளில் ஏற்ற அனுமதி தேவை இல்லையே என எண்ணி எங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றியுள்ளோம். இதுவரை சுமார் 2 ஆயிரம் வீடுகளில் கொடி ஏற்றப்பட்டு உள்ளது என்றனர். 

    • கஸ்தூரிக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.
    • நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

    புதுக்கோட்டை:

    பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் எந்த கட்சியும் எங்களின் ஏ டீம் பி டீம் என்று கூறவில்லை. நாங்கள் அ.தி.மு.க.வை கூட்டணிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தால் தான் எடப்பாடி பழனிசாமி எங்களை புறக்கணிக்கிறார் என்ற சொல்ல முடியும்.

    எனினும் எங்களைப் பொறுத்தவரை இங்கு உள்ளவர்கள் யார் என்ன சொன்னாலும் கூட்டணி குறித்து எங்களது அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். அப்போது அகில இந்திய தலைமை எங்களிடம் பேசுவார்கள். யாருக்கும் கனவு காண உரிமை உள்ளது அதனை என்னால் தடுக்க முடியுமா?. திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். திராவிடம் என்பது தமிழ் சொல் அல்ல. அது சமஸ்கிருத சொல்.

    தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்களை தான் திராவிடர்கள். அதனை இங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது செய்ய முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தாமு. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால் கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர்.

    அவருக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

    திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தந்தது கிடையாது. 1967-ல் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தி.மு.க. இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை.

    அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு பாதுகாப்பில்லை. மருத்துவமனையில் டாக்டர் கத்தி வைத்துக் கொள்ளலாம். நோயாளி கத்தி எடுத்து செல்லலாமா? இந்த அரசாங்கம் எல்லாத் துறையிலும் தோற்றுபோன அரசாங்கமாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பத்தாயிரத்து 500 ஆசிரியர்கள் போலிகள். கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருந்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் ஒரு துறை கூட திறமையாக செயல்படவில்லை.

    எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டத்தான் முடியும். ஆனால் செயல்படுத்த வேண்டியது ஆளும் அரசாங்கம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது.
    • விபத்தில் பஸ்சில் வந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிக்க்கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. லாரியில் கிளீனராக மன்னார்குடியை சேர்ந்த துரைசாமி மகன் ஜீவா (வயது 24) என்பவர் இருந்தார்.

    லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே வந்தது. அப்போது லாரியில் திடீரென பழுது ஏற்பட்டது. உடனே டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார்.

    கிளீனர் ஜீவா லாரியின் சக்கரத்தை கழட்டிக் கொண்டு இருந்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது.

    இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்தில் பஸ்சில் வந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
    • 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நமண சமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை தனிப்படையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து தங்கம் மற்றும் வெளளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.

    விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தேவா (வயது58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெரு மீனாட்சி சுந்தரம் மகன் ஹரிஹரன் (44), ஆவுடையார்கோவில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகா் அலஞ்சரக்காடு கணபதி மகன் சொக்கலிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் தங்கபாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.

    இவா்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 5.750 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.1,500, 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.

    • இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அதனை தொடர்ந்த அவர்களை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 11 மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    11 மீனவர்கள் 2-வது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதால் சிறை தண்டனை விதிப்பதாகவும் புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

    ×