என் மலர்
நீங்கள் தேடியது "வேங்கைவயல் விவகாரம்"
- பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
- புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர்.
சோழவந்தான்:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுகளாகியும் இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, டி.என்.ஏ. பரிசோதனை, 5 பேரிடம் குரல் மாதிரி சோதனை உள்ளிட்ட அறிவியல் ரீதியான முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் மற்றொரு வேங்கைவயல் சம்பவமாக சோழவந்தானிலும் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மிகுந்த சேதமடைந்து இடியும் தருவாயில் இருந்தது. இதையடுத்து ஜல்ஜீவன் மிஷன் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பழைய தொட்டியின் அருகிலேயே புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதன் பேரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிய நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர். இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். நேற்று இந்த குடிநீரை குடித்த சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதற்கிடையே குடிநீர் தொட்டி பராமரிப்பு மற்றும் அதனை சுத்தம் செய்வதற்காக மருது பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வழக்கம் போல் நேற்று தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு ஏராளமானோர் திரண்டனர். மேலும் அவர்கள் குடிநீரில் மனித கழிவை கலந்த மர்மநபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஊராட்சி உதவி இயக்குநர் அரவிந்தன், தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தாா் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. மேலும் அதிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கிராம மக்கள் தேவைக்காக தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் வேன் மூலம் குடிநீர் சப்ளை செய்தார். மனித கழிவு கலந்தது குறித்து கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஹரிஷ்குமார், வட்டார சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தனர்.
மேலும் துர்நாற்றம் வீசிய குடிநீரை பருகியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் அம்மச்சியாபுரம் கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சோழவந்தான் போலீசார் கீழ்த்தரமான இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா? அல்லது சிறுவர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில், எங்கள் காலனி பகுதியைச் சுற்றி ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அதைதான் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையில் இவ்வாறு மலம் கலந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மேலும், சுத்தம் செய்வது மட்டுமல்ல, இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவிக்கையில், 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் வரவில்லை என கூறி, சில சிறுவர்கள் தொட்டியின் மேல் ஏறியதாக தகவல் உள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த சம்பவம் எங்களுக்குத் தெரிய வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி 5.10.2025 அன்று திறக்கப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் செய்த தவறான செயல் என தெரிகிறது. சிறுவன் வேடிக்கையாகச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். இருப்பினும், குற்றவாளி மீது போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பிற்காக பூட்டி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதிதாக திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பது மீண்டும் வேங்கைவயல் சம்பவத்தை நினைவூட்டுவதாகவும், இந்த பிரச்சனைக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை அனைத்து தரப்பினர் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
- சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று நீதிபதிபதிகள் கருத்து.
- சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.
இந்தநிலையில், வழக்குப் பதிவு செய்து 90 நாட்கள் ஆகியும் இதுவரை ஒருவரைக் கூட போலீசார் கைது செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவதாகவும், உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர்.
சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த டி.என்.ஏ. சோதனை வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கீழமுத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேரில் ஆஜரானார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த ஒரு அவலம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்து விட்டு சென்றனர். இதனை பருகிய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.
சம்பவம் நடந்த 20 நாட்களாக அங்கு முகாமிட்டு இருந்த தமிழக போலீசார் சுமார் 120 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனாலும் தற்போது வரை இந்த இழிவு செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைக்கவும் உத்தரவிட்டார். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுக்க தொடங்கினர்.
அதேபோல் போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வேங்கைவயல் கிராமத்தின் நுழைவு பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் டெண்ட் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவானது 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் இன்னும் ஒருசில நாட்களில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து, அதில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு, அரசு ராணியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் தலைமையில் இந்த டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்வதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்ற தகவல் வெளியாகும் என்றும், அதன் மூலம் இந்த பிரச்சினையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் உண்மை குற்றவாளிகளும் கைதாவார்கள்.
இந்நிலையில் சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த முரளி ராஜா, கண்ணதாசன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்று வருகிறது.
- வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீசார் விசாரணையை அடுத்து, வழக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக வாட்ஸ்அப் உரையாடல் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேரிடம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய அனுமதியை பெற்றனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்காக வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. பின்னர் அவை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க அவர்கள் கூடுதல் கால அவகாசமும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
- 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆயுதப்படை காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்துள்ளனர். மற்ற 8 பேர் ரத்தம் தர வரவில்லை. அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் இந்த பிரச்சினையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். மீண்டும் இதுபோன்ற சோதனை என்ற பெயரில் எங்களை குற்றவாளிகளாக ஆக்குவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி செய்கிறார்கள். எனவே நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரத்த மாதிரி கொடுத்தவர்களின் பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
- குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடிக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் என 11 பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து நேற்று புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த மாதிரி சேகரிப்புக்கு 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற 8 பேரும் ரத்த மாதிரி தர மறுத்துவிட்டனர். அவர்கள் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். எனவே சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மட்டுமின்றி நேற்று ரத்த மாதிரி தர மறுத்த 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
123-வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 153 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அதில் 7 போலீசாரும் அடங்குவர்.
நேரடி சாட்சிகள் இந்த வழக்கில் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சோதனையில் இறங்கிய போலீசார் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 119 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து அதனைக்கொண்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வேங்கைவயல், முத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்தனர். 8 பேர் வரவில்லை. தங்களை குற்றவாளிகளாக்க மாற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் 10 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க திட்டமிட்டு, அதில் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர், இறையூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மேலமுத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று முதலில் 8 பேர் வருகை தந்தனர்.
பின்னர் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் தாமதமாக ரத்த மாதிரி அளிக்க முன்வந்தனர். அதேபோல் முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேங்கைவயல் கிராமத்துக்கு வந்து களஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தார். மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
விரைவில் இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று வரை தொடர்ந்து 157 நாட்கள், 158 சாட்சிகளில் விசாரணை நடத்தி உள்ளனர்.
- முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டு அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவை கலந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் 20 நாட்கள் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று வரை தொடர்ந்து 157 நாட்கள், 158 சாட்சிகளில் விசாரணை நடத்தி உள்ளனர். இருந்தபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
அதேவேளையில் மரபணு சோதனை மற்றும் அறிவியல் பூர்வமான சோதனைகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டு அந்த அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மாதம் 6-ந்தேதி வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் சென்றார். அப்போது மனித கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் இன்று இரண்டாம் கட்டமாக தனிநபர் ஆணைய தலைவர் சத்தியநாராயணன் இன்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் தற்போது வரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன, பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள், தற்போது அந்த கிராமத்தில் அமைதி நிலவுகிறதா? உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். தற்போது வரை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அறிவியல் பூர்வமான சோதனை என்ற அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே இதற்கு கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். வேங்கைவயல் சம்பவம் நடந்து 177 நாட்களை கடந்துவிட்ட நிலையில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒரு நபர் ஆணையம் 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றக்கோரி திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம் 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐகோர்ட்டு நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம், இரு முறை நேரடியாக வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளது. இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, ஒரு நபர் ஆணையம் அமைத்து 3 மாதங்கள் கடந்து விட்டதாக கூறிய நீதிபதிகள், விசாரணை குறித்து ஆணையத்தின் அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்தனர். பின்னர், விசாரணையை தள்ளிவைத்தனர்.
- முதல்கட்டமாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் அனுமதி பெற்றனர்.
- இதுவரை 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் ரீதியான தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரிகளை சேகரித்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை மூலம் அறிக்கை பெறப்பட்டது. இதேபோல விசாரணை நடத்தியவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதல்கட்டமாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் அனுமதி பெற்றனர். பின்னர் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்து வந்தனர். அவர்களிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேர் வர மறுத்த நிலையில், அவர்கள் பரிசோதனைக்கு எதிர்ப்பு தொிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் வாதிட்டனர். இதில் 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் அனுமதி பெற சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேருக்கும் பரிசோதனைக்கு அனுமதி கோரி புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதன்படி அந்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவுபடி அந்த 8 பேரும் அதாவது சுபா, இளவரசி, ஜானகி, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை 11.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட மாதிரிகளை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வேங்கை வயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் அனுமதி பெற்றனர். இதையடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் 4 சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி முன்னிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.






