என் மலர்
நீங்கள் தேடியது "Vengaivayal Crisis"
- சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.
- சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.
சென்னை:
சென்னை மூலக்கொத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை ஏமாற்றத்தை தருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
* வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கும் என நம்புகிறோம்.
* சிபிசிஐடி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வேங்கைவயலில் போராட்டம் நடத்திய கிராமத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் அச்சுறுத்தி கைது செய்துள்ளனர்.
* சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.
* சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.
* தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
* தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாகவே விடுதலை சிறுத்தைகள் பார்க்கிறது, கண்டிக்கிறது என்றார்.
- சிபிசிஐடி விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- வேங்கைவயல் வழக்கில் மறுவிசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
- சாதியத்தோடு நடந்தேறிய குற்றத்தை தனிநபர் விரோதமாக திசைத்திருப்ப முயற்சி.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், "வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் சமூக நீதியா? திராவிட மாடலா?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியினைச் சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அதே மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தமிழகக் காவல்துறையின் போக்கு ஏற்கவே முடியாத கொடும் அநீதியாகும். சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என வாய்கிழியப் பேசும் திமுக அரசின் சமூக நீதி இதுதானா? பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் எல்லா மக்களுக்குமான திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்! அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.
ஆதித்தமிழ் குடிமக்கள் வசிக்கும் பகுதியில் நடந்தேறிய சாதிய வன்மம் கொண்ட இக்குற்றச்செயலினை முற்றிலுமாக மடைமாற்றி, தனிநபர் நோக்கம் கொண்ட மோதல்போல சித்தரித்து, அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய தம்பிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும்.
ஏற்கனவே, குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதில் உடல்நலக்கேடும், மன அழுத்தத் தாக்குதல்களுக்கும் ஆளான வேங்கைவயல் மக்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது வெட்கக்கேடானது.
முரளிராஜா எனும் ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த தம்பி, நீரின் தன்மை சீரழிந்தது குறித்து ஆராய்கையில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டதனைக் கண்டறிந்து புகார் அளித்தவராவார். மனிதக்கழிவு கலந்த நீரினை உட்கொண்டுப் பாதிக்கப்பட்ட அவரையே இறுதியில் குற்றவாளியாக மாநிலப்புலனாய்வுத்துறை வழக்கில் சேர்த்திருப்பது விசாரணையின் அடிப்படையையே கேள்விக்குறியாக்குகிறது. மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி, மிகுந்த முதன்மைத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கக்கூடிய இவ்வழக்கிலேயே புகார் அளித்த மக்கள் மீது காவல்துறை குற்றம் சுமத்தி இருக்கிறதென்றால், இனி எந்த வன்கொடுமைக்கு புகார் அளிக்க உழைக்கும் மக்கள் முன்வருவார்கள்? வேங்கைவயலில் நிலவும் சாதியச் சிக்கலினை மூடி மறைத்து, தனிநபர் பழிவாங்கல் போக்கலினால் இக்கொடுமை நடந்திருப்பதாக முடிவெழுதுவதுதான் பெரியார் வழியிலான ஆட்சியா பெருமக்களே? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அம்மக்களுக்கான நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் ஸ்டாலின் முன்வராததுதான் விளிம்பு நிலை மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையா?
சாதியத்தோடு இக்குற்றம் நடந்தேறி இருப்பது உறுதியாகத் தெரிய வந்திருக்கும் நிலையில், அதனைத் தனிநபர் விரோதத்தினால் விளைந்தது என திசைதிருப்ப முற்படுவது உண்மையானக் குற்றவாளிகளைத் தப்பவிடும் கொடுஞ்செயலாகும். இது குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்ததற்கு நிகரான வன்கொடுமையாகும். வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் அலைபேசி உரையாடல்களும், புகைப்படங்களும் வெளியே கசிய விட்டிருப்பது வெளிப்படையான மோசடித்தனமாகும். பாதிக்கப்பட்ட மக்களைக் குற்றப்படுத்த இந்த இழிவான செயலில் ஈடுபடுகிறதா காவல்துறையும், அதிகார வர்க்கமும்? எனும் ஐயம் எழுகிறது. வெளியே விடப்பட்ட ஒலிநாடாவை வைத்து வழக்கின் கோணத்தையே மாற்றி முடிவெழுத முற்படுவது மிக மோசமான அதிகார முறைகேடாகும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், ஒடுக்கப்பட்ட ஆதிக்குடி மக்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இதனைத் தடுத்து, அடித்தட்டு மக்களைக் காக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சுமத்துவது வரும் காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும் என்பது உறுதியாகும்.
ஆகவே, மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இவ்வழக்கில் சிறப்புக் கவனமெடுத்து, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை இவ்வழக்கிலிருந்து விடுவிப்பதோடு, மறுவிசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கடந்த 20-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த குற்றசெயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதில் முரளிராஜா வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 2 இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 3 பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவர்களை சம்பந்தப்பட்ட நபர்களாகக் கருதியுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் என கூறியுள்ளதை பல்வேறு தரப்பினர் எதிர்த்துள்ளனர்.
வேங்கைவயல் பகுதி மக்கள் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் வேங்கைவயலில் நேற்று முன்தினம் முதல் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 3-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தையொட்டி வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் சார்பில் வி.சி.க. வக்கீல் மலர்மன்னன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், புகார்தாரரை இதுவரை விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றம் சாட்டி உள்ளனர். எனவே சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குறப்பத்திரிகையை ஏற்க கூடாது.
சி.பி.ஐ. விசாரணை வேண்டும். 3 பேரின் பெயர்களையும் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர் தொட்டிமேல் ஏறும்வரை அதில் எவ்விதமான கழிவுகளும் கலக்கவில்லை.
- வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா அரசு சார்பில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
* வேங்கைவயல் சம்பவத்தில் 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 196 செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டது.
* குற்றவாளிகளின் செல்போனில் இருந்து எடுத்த புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
* நீர் தேக்க தொட்டியில் இருந்து குற்றவாளிகள் எடுத்த செல்பிகள், தொடர்பு கொண்ட எண்கள் ஆய்வு செய்யப்பட்டது.
* உண்மை குறற்வாளிகளை கண்டறிய 31 நபர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டது.
* குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உண்மையென உறுதி செய்யப்பட்டது.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர் தொட்டிமேல் ஏறும்வரை அதில் எவ்விதமான கழிவுகளும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
* சரியாக 7.35 மணிக்குதான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலந்த தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை.
* வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. வேங்கைவயல் சம்பவம் என்பது இருவருக்கு இடையிலான தனிமனித பிரச்சனையால் நடந்துள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் எஸ்.சி. மக்களுக்கான குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் 26-ந்தேதி மலம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் எதிரொலித்தது.
குடிநீர் அசுத்தப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குடிநீரை அசிங்கப்படுத்திய விவகாரம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை நியமித்து உத்தரவிட்டது. அவரும் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் கடந்த 24-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல் மணி, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் அஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் "வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான புலன் விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் அந்த ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டி கடந்த 20-ந்தேதி புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில், வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா என்பவர், குடிநீர் தொட்டி ஆபரேட்டரான சண்முகத்தை பணி நீக்கம் செய்துள்ளார்.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில் பஞ்சாயத்து தலைவரின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொய்யான தகவலை முரளிராஜா பரப்பியுள்ளார்.
இதையடுத்து முத்துக்கிருஷ்ணனும், சுதர்சனும் குடிநீர் தொட்டியில் ஏறிச்சென்று பார்ப்பதுபோல் குடிநீரில் மலத்தை கலந்து குற்றச் சம்பவத்தை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது'' எனக் கூறினார். இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே புகார் அளித்தவர்களையே குற்றவாளி என சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர். சிபிசிஐடி இந்த வழக்கை சரியாக கையாளவில்லை. இதனால் சிபிஐ விசாரணை தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.
- புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வழக்கு.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முதலில் வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.
இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேங்கைவயல் சம்பவம் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடு தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என சிபிசிஐடி வாதம் செய்தது. அதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
- சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முதலில் வேங்கைவயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற மாற்றப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியல் இனத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்த 2 வழக்குகளில் இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வசந்தி, வழக்கு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து இன்று காலை கோர்ட்டில் 2 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை வழக்கு இல்லை என கூறி புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.