என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • புதிய எருசலேம் வடிவில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடிலினை கண்டுகளித்தனர்.

    உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு பாலனின் பிறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது

    .

    கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் சீரியல் குடில்கள் தெரு வீதிகளில் அலங்காரம் என களைகட்ட துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலப்பள்ளம் வின் ஸ்டார் போட்ஸ் கிளப் சார்பில் சுமார் 40 லட்ச ரூபாய் பொருட் செலவில் வைக்கோல் கம்பிகள் சிமெண்ட் போன்ற உபகரணங்களால் புதிய எருசலேம் வடிவில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய எருசலேம் குடிலின் உட்பகுதிகளில் இயேசு பாலனின் பிறப்பு முதல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்து நியாயவிசாரிப்பு வரையிலான சுருபங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குடிலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். மேலும் திறப்பு விழாவிற்கு வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பும் அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடிலினை கண்டுகளித்தனர்.

    • கக்கன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விடுதலை போராட்ட வீரர் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களுடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    அன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கக்கன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் (Racing)-ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் சென்ற மாதம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரக்கூடிய பண்டிகை நாட்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திட பெதுமக்கள் அனைவரையும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 5-ம் திருவிழாவான இன்று கருட தரிசனம் நடைபெற்றது.
    • ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 10 நாள் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மார்கழி விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்வான கருட தரிசனம் நடைபெற்றது.

    விழாவில், அதிகாலை 5 மணியளவில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது. வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.

    அந்நேரத்தில், அவர்களைச் சுற்றி கருடன் வலம் வரும் கருட தரிசனம் நடைபெற்றது. இதை காண்பதற்கு சுசீந்திரம் கோயில் வளாக பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    பின்னர், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி ரதவீதியை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கருட தரிசனத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

    தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது. அணைக்கு 906 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.30 அடியாக உள்ளது. அணைக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மேலும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சேதம் அடைந்த விளைநிலங்கள் கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே வீசிய சூறைகாற்றிற்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகளும் முறிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் நகர பகுதியில் ஏற்கனவே மீனாட்சி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் ஓரளவு வடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். அந்த பகுதியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பிளீச்சிங் பவுடர்களும் தூவப்பட்டு வருகிறது.

    • தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
    • நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்க உதவிகள் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.

    பின்னர் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதற்கான ஒரு முழு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்த வரை 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்று 17 மணி நேரம் தொடர்ச்சியாக மழையை சந்தித்த மாநிலம் கிடையாது எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. நாகர்கோவில் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    தோவாளை, அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்த நிலையில் தெருக்களிலும் வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.24 அடியாக உள்ளது. அணைக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 75.12 அடியாக உள்ளது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1- நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர் மழைக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 12 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் 605 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்துள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசி வருகிறது. அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதனையடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.12 அடியாக உள்ளது. அணைக்கு 1639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1550 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ளது. அணைக்கு 1849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1432 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 187 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 129 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணை நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளது.

    ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்கு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 18 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 8 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சூறை காற்றுக்கு அகஸ்தீஸ்வரம், வடுவன் பற்று பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்கம்பங்கள் சேதமானதையடுத்து நேற்று இரவு தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. நள்ளிரவு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

    • சுசீந்திரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்றும் வடியவில்லை.
    • குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளதையடுத்து வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.

    நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதி முற்றிலுமாக தண்ணீர் சூழ்ந்து தீவாக காட்சியளித்தது. அங்கு தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொண்டது.

    இந்த நிலையில் அங்கு தற்போது தண்ணீர் வடிந்து வருகிறது. ஆனால் தண்ணீர் முழுமையாக இன்னும் வடியாததால் கீழ் தளத்தில் உள்ள பொதுமக்கள் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் செய்து வருகிறார்கள்.

    ரெயில்வே குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளம் வடிந்ததையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. சுசீந்திரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்றும் வடியவில்லை. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    அந்த பகுதியில் உள்ள சாலைகளில் 2 நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல் தோவாளை அண்ணா காலனி பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது. ஈசாந்தி மங்கலம் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் முழுமையாக வடிந்ததால் சகஜ நிலை திரும்பி உள்ளது. திருவாழ்மார்பன் கோவிலை சூழ்ந்து இருந்த வெள்ளமும் முற்றிலுமாக வடிந்துள்ளது.

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து தாழ்வான பகுதியில் தேங்கிருந்த தண்ணீர் வடிந்தது. இருப்பினும் நிவாரண முகாம்களில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    சுசீந்திரம் பகுதியில் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேத மதிப்பீடு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை குறைந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

    • நிர்வாகிகள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் எங்கள் நன்றி.
    • கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நாம் நிருபித்துள்ளோம்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறையில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் நடைபெற்ற கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டிற்கு வருகை தந்து தலைமை தாங்கி சிறப்பித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களுக்கும், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அவர்களுக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. விஸ்வநாதன், திரு. தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், பிற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

    மழை என்று பாராமல் பெருந்திரளாக வந்து சேர்ந்த பூத் கமிட்டி முகவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டார, மண்டல தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், துணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் எங்கள் நன்றி. கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நாம் நிருபித்துள்ளோம்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அவருடன் மாநகர மேயர் மகேஷ் உடன் இருந்தார்.

    • கடல் சீற்றத்தினால் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன.
    • கனமழையின் காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் நீண்ட நெடிய கடற்கரை பகுதி கொண்ட மாவட்டமாகும். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கிலோமீட்டர் தூரம் உள்ள கடலோரப் பகுதியில் மொத்தம் 48 கடற்கரை கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை மழை ஓய்ந்த போதிலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. சூறாவளி காற்று காரணமாக, கடல் பயங்கர கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்படுகிறது. கடல் சீற்றத்தினால் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, புதுகிராமம், சிலுவைநகர், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை என குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் ஆயிரக்கணக்கான வள்ளங்கள், கட்டுமரங்கள், நாட்டுப் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பான மேட்டுப் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போல கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    அகஸ்தீஸ்வரம், லீபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம் உள்பட பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. கனமழையின் காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் அருகே ரோட்டின் இருபுறமும் குளங்கள் உள்ளன. இதில் ரோட்டின் வட புறம் உள்ள அச்சன்குளமும் அதையொட்டி ஓடும் நாஞ்சில் நாடு புத்தனாறும் நிரம்பி வழிகின்றன. இந்த தண்ணீர் அச்சன்குளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி தீவு போல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம், நூல் நிலையம் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அதுமட்டுமின்றி அச்சன்குளம் நிரம்பி கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் மறுகால் பாய்ந்து ஓடுகிறது.

    அதன் அருகில் உள்ள பில்லாகுளத்தில் தண்ணீர் செல்வதால், சாலை வெளியே தெரியாத அளவுக்கு ஆறு போல் காட்சியளித்தது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. கொட்டாரம்-அச்சங்குளம் பகுதியில் பழமையான ராட்சத புளியமரம் வேரோடு சாய்ந்தது. அந்தப் பகுதியில் 3 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீசார், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் கொட்டாரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரம் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    தொடர்மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அடியோடு குறைந்து விட்டது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதற்கிடையில் தொடர் மழையின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இன்று 2-வது நாளாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×