என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.

    இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    • குளோரின் கலனில் இருந்து திடீரென வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான குளோரின் கலனில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து குளோரின் கசிவால் 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் தகவல் அறிந்து மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர். 

    இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது.

    • பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.
    • கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    களியக்காவிளை:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.

    இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தொற்று கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பரவலாம் என்பதால், இதனை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் படந்தா லுமூடு சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழி முட்டை மற்றும் கோழி தீவணங்களுடன் வரும் வாகனங்களை கண்காணித்து அவற்றை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    • மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் இளையராஜா என்ற கணேஷ் ராஜா. இவர் நேற்று மதியம் கட்டிமாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் அவருக்கு பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நின்றார்.

    வாக்குச்சாவடிக்குள் சென்றதும் கணேஷ் ராஜா வாக்கு சீட்டை சரிபார்த்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அவர் மின்னணு எந்திரத்தில் வாக்களித்து திரும்பும் போது, அரவிந்தும் அங்கு வந்தார். அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கினை செலுத்துவதற்குள் அங்கு நின்றிருந்த கணேஷ் ராஜா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பட்டனை அழுத்தி விட்டாராம். பீப் சவுண்ட் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் இது குறித்து வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதற்குள் கணேஷ் ராஜா அங்கிருந்து நைசாக வெளியேறி விட்டார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் ராஜா மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.

    இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    • தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும்.

    தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

    குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் திடீரென டிரைவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை டிரைவர் மீது வீசினார். இதில் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.
    • குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைய உள்ளது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளைய தமிழகத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    மேலும் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போதும் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

    அதே போல் இந்த முறையும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.

    முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூரில் வசிக்கக் கூடியவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    நேற்றைய தினம் முதலே இதனை காண முடிந்தது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது.

    வழக்கமாக நாகர்கோவில் வரக்கூடிய ரெயில்களில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தான் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நாகர்கோவில் வரும் வரை கட்டுக்கடங்காத வகை காணப்படும். கடந்த இரு தினங்களாக அதேபோன்ற ஒரு கூட்டத்தை காண முடிந்தது.

    இன்றும் சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

    ஏராளமானோர் தங்களின் குடும்பத்துடன் வந்தனர். அந்த கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் காணப்பட்டனர். அவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் படிக்கக்கூடிய இளைஞர்கள் ஆவர். தேர்தல் நாளன்று பொது விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருக்கிறார்கள்.

    பலர் தேர்தலில் வாக்களித்துவிட்டு உடனடியாக திரும்பும் வகையிலும் திட்டமிட்டு வந்துள்ளனர். பல இளைஞர்கள் பயணத்தின்போது சக நண்பர்களுடன் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மிகவும் ஆர்வமாக பேசி வந்ததை காண முடிந்தது. அவர்களில் பல இளைஞர்கள் முதன் முதலாக தேர்தலில் வாக்களிப்பதாக பேசிக் கொண்டனர். அந்த இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து சக பயணிகளிடம் பேசியபடி இருந்தனர். அதே நேரத்தில் தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் வெளியூருக்கு செல்வதற்கான பயணத்திட்டத்தையும் நண்பர்களுடன் விவாதித்தனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது.

    மேலும் விளவங்கோடு சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் என இரண்டு ஓட்டுகள் போட வேண்டும். இதனால் மற்ற சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்களை காட்டிலும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

    அந்த தொகுதியை சேர்ந்த புதிய வாக்காளர்களான இளைஞர்கள், முதன் முறையாக சந்திக்கும் தேர்தலிலேயே இரு ஓட்டுகள் போடும் வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி பூரிப்படைந்துள்ளனர். 

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார். இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை, குளச்சல் கடற்கரை, கூத்தவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை திறந்த வாகனத்தில் சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குருந்தங்கோடு, கண்டன்விளை, பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம், பரசேரி, ஆளூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய தேர்தல். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை. மாறாக, ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர்.

    • நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

    நாகர்கோவில்:

    மது உள்ளிட்ட போதைப் பொருட்களால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனால் போதை பழக்கத்தை ஒழிக்க அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் போதை பழக்கமும் அதனால் பல பிரச்சனைகளும் தினமும் தொடர்ந்தே வருகின்றன.

    இந்த நிலையில் சினிமாவில் போதைக் கும்பல், யாரிடமாவது வம்பிழுத்து விரட்டி விரட்டி தாக்குவது போன்ற ஒரு காட்சி, சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு வாலிபரை, ஒரு கும்பல் மாறி மாறி தாக்குவதும் அந்த வாலிபர் கீழே விழுந்த நிலையிலும், அவரை தாக்கி சட்டையை கிழிப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளன.

    மது போதை தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. அதுவும் போலீஸ் நடமாட்டம் அதிகம் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு வட்டக்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்துள்ளது. வட்டக்கரை வாலிபர் மது வாங்கி விட்டு புறப்பட்ட போது, அந்தக் கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் இது மோதலாக மாறியது. மது அருந்திக் கொண்டிருந்த கும்பல், வட்டக்கரை வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது. அந்த வாலிபர் சாலையில் கீழே விழுந்தபோதும், கும்பல் விடாமல் தாக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் அவரது சட்டை கிழிந்தது. இருப்பினும் விடாமல் கும்பல் தாக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் சென்ற பலரும் இதனை கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது இது போன்ற தாக்குதல் இந்தப் பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் போதைக்கு அடிமையான கும்பல் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் தெரிவித்தனர். சம்பத்தன்று நடந்த தாக்குதல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மோதல் சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பது யார்? என்பது அதை விட பரபரப்பாக உள்ளது. சம்பவம் நடந்த பகுதி நேசமணி நகர் போலீசுக்கு உட்பட்டதா? கோட்டார் போலீசுக்கு உட்பட்டதா? என்பதில் ஒரு உடன்பாடு வராததால் வழக்கு பதிவு செய்வதில் தாமதமான நிலை நிலவுகிறது.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று அகஸ்தீஸ்வரம், காமராஜ் நகர், ராமன்புதூர், சந்தையடி, இலந்தையடிவிளை, சாமிதோப்பு, செட்டிவிளை, பொற்றையடி, வைகுண்டபதி, கொட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது விஜய்வசந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். மேலும் இன்று (அதாவது நேற்று) எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எனது அன்பு தந்தை எச்.வசந்தகுமார் பிறந்த நாள் ஆகும்.

    எனது தந்தை விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வதற்கு அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    குமரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற உங்களுக்காக இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும். இதற்காக நான் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினராக நான் வாங்கிய அனைத்து சம்பளப் பணத்தையும் கொடுத்துள்ளேன்.

    குமரி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் எனது தந்தை தொடங்கி வைத்த வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநகர மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குமரி மாவட்ட மக்களுடன் உரையாடுவது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில்) தயாரிக்கப்பட்ட காணொலியை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சகோதரர் வினோத் குமார், காமராஜ், எச்.வசந்தகுமாரின் தங்கை வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×