என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
    • மண்டபத்தின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடற்கரையையொட்டி காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளது. பிரதமர் வருகையையடுத்து காந்தி, காமராஜர் மண்டபத்திற்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    ஆனால் காந்தி மண்டபத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. காலை 10 மணிக்கு பிறகு காந்தி மண்டபத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மண்டபத்தின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    காமராஜர் மண்டபத்திற்குள் சுற்றுலா பயணிகள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். காமராஜர் மண்டபம் வளாகத்திற்குள் டவர் அமைக்கப்பட்டு போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகு படகு தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்கிறார். இதற்காக நேற்று மாலை கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வந்தார். இன்று 2-வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு உள்ளார்.

    பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ளதையடுத்து கன்னியாகுமரி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சன்னதி தெரு படகு தளத்திற்கு செல்லும் சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வருபவர்கள் முழுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு வழக்கம்போல் படகு இயக்கப்பட்டது. இன்று காலை விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் உடமைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகு படகு தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிகளில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி கடற்கரைக்கும் காலையிலேயே சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் வழக்கம்போல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். கடற்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

    • பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் இருக்கும்போது பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படமாட்டாது.
    • சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இரவு 9 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ் (வயது 32) என்பவரை பிடித்து அவரிடம் சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடம் இருந்தும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவரிடமும் சுமார் 3½ மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்ரோஸ் செல்போனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பல தகவல்கள் சிக்கி உள்ளது. மேலும் 2 ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ், உதவியாளர் மோகன் பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்ரோஸ் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது நாகர்கோவிலில் தங்கி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

    கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருந்த பிறகும் பொறுப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது ஏன் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் இருக்கும்போது பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படமாட்டாது.

    அதனால் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பகவதி அம்மனின் பாதம் பதித்த ஸ்ரீ பாதம் மண்டபத்தில் தரிசனம் செய்தார்.
    • மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்.

    கன்னியாகுமரி:

    பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார்.

    தற்போது மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். இதற்காக அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்து சேர்ந்த பிரதமர் மோடி, அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் குண்டு துளைக்காத காரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன் படம் வழங்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். அங்கு பகவதி அம்மனின் பாதம் பதித்த ஸ்ரீ பாதம் மண்டபத்தில் தரிசனம் செய்தார்.

    மேலும் விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவப்படங்களை வணங்கினார். விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் நின்றபடி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார். 

    அதன்பிறகு தியான மண்டபத்திற்கு சென்று பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார். இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவர் இன்று அதிகாலை வரை அவர் தொடர்ந்து தியானம் செய்தபடி இருந்தார்.

    மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து காலை 5:55 மணிக்கு சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தார். அங்கிருந்து கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

    அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அங்கு அமர்ந்திருந்தார். பின்பு காலை 7:15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார்.

    பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து அங்கு சுற்றுலா பணிகள் நேற்று மதியத்துக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று காலை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களின் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை போலீசார் பதிவு செய்து பலத்த சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தனர். பயணிகள் சென்ற படகிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானம் மேற்கொண்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற இடங்களுக்கு வழக்கம் போல் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.

    பிரதமர் தியானம் செய்யும் மண்டப பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு போலீசார் மட்டுமின்றி, கமாண்டோ வீரர்களும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி நாளை (1-ந் தேதி) மாலை வரை விவேகானந்தர் மண்டபத்திலேயே தங்கி தியானம் செய்கிறார். 3 நாட்கள் தியானத்தை முடித்துக்கொண்டு நாளை மாலை விவேகானந்தர் மண்ட பத்திலிருந்து தனி படகு மூலமாக புறப்பட்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு திரும்புகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

    காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல் படை போலீசார் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கிராம பகுதி சோதனை சாவடிகள் மட்டுமின்றி மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
    • ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை அவர் தியானம் மேற்கொள்வார்.

    மக்களவை தேர்தலின் சூறாவளி பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார்.

    இன்று தேர்தல் பிரசாரத்தை முடித்த அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்தடைந்த அவர், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். பின்னர் தனது தியானத்தை தொடங்கினார். இன்று தியானத்தை தொடங்கிய அவர் ஜூன் 1-ந்தேதி மாலை தியானத்தை நிறைவு செய்கிறார்.

    ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது, மோடி தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும். இதனால் தியானத்தை தடைவிதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
    • இன்று முதல் ஜூன் 1-ந்தேதி வரை மாலை வரை தியானம் செய்கிறார்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்வடைந்தது.

    பிராசரம் ஓய்ந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் இருப்பதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார்.

    கன்னியாகுமரி வந்த அவர் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ஜூன் 1-ந்தேதி மதியம் வரை இவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

    பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • இன்று முதல் 3 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார்.
    • பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தடைந்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று மாலை கவன்னியாகுமரி வந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு, படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    அங்கு, இன்று முதல் 3 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார்.

    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், கடல் பகுதி முழுவதும் இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக் கூடாது.
    • விடுதியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கன்னியாகுமரி விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று அதை கட்சியினர் ரத்து செய்துள்ளனர். இது பற்றி கேட்ட போது, பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக் கூடாது. கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க.வினருக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

    அதன் பேரிலேயே விடுதியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
    • தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர்.

    நாகர்கோவில்:

    பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டப தியான மண்டபத்தில் இன்று மாலை முதல் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும், இது தேர்தல் பரப்புரை என்பதால் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது, பிரதமர் மோடி வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    பாரதப் பிரதமர் வருவது இந்திய அளவில் பிரதிபலிக்கும். இது ஒருவித தேர்தல் பரப்புரை யுத்தி என்றும், கோடை விடுமுறை நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் நிலையில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இன்னொரு விஷயம், பாதுகாப்பு என்ற பெயரில் அரசின் வரிப்பணம் வீணாகும் என்பதால் மோடி வருகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


    கலெக்டர் ஸ்ரீதர்


    இதே போல் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பிரதமர் மோடி வருகைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமர் வருகை விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. அவரது வருகை விதிமீறலா? என்பதற்கு குமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர். ஆனால் பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் யாரும் அனுமதி கோரவில்லை. நாங்களும் அனுமதி கொடுக்கவில்லை. அவரது வருகை தேர்தல் விதிமீறலுக்கு உட்பட்டது அல்ல.

    இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

    • இன்று காலையில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
    • காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். அங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். வரும் 1-ம் தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு நேற்று முதலே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலையிலும் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் முகவரிகளை குறித்துவிட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி படகு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கடலின் நடுவே பாறையில் 3 நாட்கள் தவம் இருந்த சுவாமி விவேகானந்தர்

    சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி வந்தார். அவர் குமரிக்கடலின் நடுவே இருந்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காக அவர் அங்கிருந்த மீன்பிடி படகோட்டியிடம் அங்குள்ள பாறையில் இறக்கிவிட முடியுமா? என்று கேட்டார். அதற்கு பணம் கொடுத்தால் படகில் ஏற்றி பாறையின் அருகில் கொண்டு விடுகிறேன் என்று படகோட்டி கூறியுள்ளார்.

    பணம் இல்லாததால் கடலுக்குள் அப்படியே குதித்த சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்திச்சென்று அந்த பாறையில் அமர்ந்து தவம் செய்தார். அதாவது டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 3 நாட்கள் தவம் இருந்தார். அப்படி சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில்தான் தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. கடற்கரையில் இருந்து நேராக 1,350 அடி தூரத்தில் இந்தப் பாறை அமைந்துள்ளது.

    இந்த தியான மண்டபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தியானம் இருக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • கன்னியாகுமரியில் பிரதமர் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு இன்று மாலை வரும் பிரதமர் நரேந்திர மோடி, கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்கு உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். வருகிற 1-ந்தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு நேற்று முதலே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையிலும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் முகவரிகளை குறித்து விட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி படகு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை விவேகானந்தர் மண்டபத்திற்குள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிரதமர் வருகையை அடுத்து கடற்கரை பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    அதேபோல கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல் இயக்கப்படும். கன்னியாகுமரியில் பிரதமர் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலை மார்க்கம் மட்டுமின்றி கடல் மார்க்கத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வானில் ஹெலிகாப்டர் சுற்றி வந்த படி உள்ளது.

    • ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.

    கன்னியாகுமரி:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது பிரசாரம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் முடிவடைந்த போது அவர் தியானம் மேற்கொண்டார்.

    அதேபோல் தற்போதும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவர் கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார்.

    இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.

    அங்கு முதலில் விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.


    வருகிற 1-ந்தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்து பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவதால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.

    ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.

    ஜூன் 1-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு வருகிறார்.


    அங்கிருந்து கார் மூலமாக ஹெலிகாப்டர் தளத்திற்கு மாலை 3:25 மணிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 4:05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், 4 டி.ஐ.ஜி.கள் மற்றும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    களியக்காவிளை, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

    கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    விவேகானந்தர் மண்டபத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் கடல் பரப்பளவு பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் மற்றும் கப்பற் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயமும், சத்தியமூர்த்திப் பெருமாள் கோவிலும் மிகவும் புகழ்பெற்ற தலங்களாகும்.

    இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப்பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்ட பைரவர் தலம் இது ஒன்றே ஆகும்.

    இந்த கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவருக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் விலகும்.

    பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எலுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    இன்று (வியாழக்கிழமை) தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் இருந்து மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.

    பின்னர் அவர் மாலை 3.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருமயம் காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணி அளவில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு செல்கிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டை கால பைரவர் கோவில் மற்றும் சத்தியகிரீசுவரர் கோவிலில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×