என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.
- லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அறிவுறுத்துதலின்பேரில் நேற்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.
லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின், தலைவர், முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன், பார் அசோசியேஷன் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் வித்தகவேந்தன், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வக்கீல்கள் பத்மநாபன், சத்தியமூர்த்தி, மூத்த காப்பீட்டு நிறுவன வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதில் காஞ்சிபுரம் வட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 130 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 236 இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதனை காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.
- அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது.
- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியின்போது பொதுப்பணித்துறை அனுமதியுடன், ஏரி மண்கள் ஏலம் விடப்படும். அந்த வகையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், உள்ள ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் ஏரி மண்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் ஏரி மண்கள் அவலூர்-வாலாஜாபாத் தரை பாலம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது. ஆனாலும், இந்த பாலத்தில் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் தினமும் சென்று கொண்டிருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்று வட்டார கிராம பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த தரைப்பாலம் வழியாக பள்ளிக்கு சென்று வருவார்கள்.
மாணவர்கள் செல்வதால் இந்த தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வப்போது, இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதாகவும், விபத்து ஏற்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில் மாற்று பாதையில் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழியில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல இருப்பதால், இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
- பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும் நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.
அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி திருவிழாவையொட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
- சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (26). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சந்தானம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதுமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று காலை மது குடித்துவிட்டு வந்த சந்தனத்துடன் தகராறு செய்த வேண்டா ஆவேசத்துடன் அங்கு இருந்த அம்மிக்கலை தூக்கி சந்தனத்தின் தலையில் போட்டார். மேலும் கோபம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்தார். இதில் சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சந்தானம் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட வேண்டா பின்னர் தன்னுடைய சேலையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.
- தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா. இவர்களது மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது6), சித்திக் வைபவ். சஸ்வின் வைபவ் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையை முன்னிட்டு அதே பகுதி சுந்தரம் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் சஸ்வின் வைபவ் நீச்சல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.
சிறுவன் சஸ்வின் வை பவ் நீச்சல் பழகிக்கொண்டு இருந்த போது தாரிகா தனது மற்றொரு மகன் சித்விக் வைபவுக்கு உணவு கொடுக்க நீச்சல் குளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு அழைத்து சென்றார்.
அப்போது நீச்சல் குளத்தில் இருந்த சிறுவன் சஸ்வின் வைபவ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் யாரும் கவனிக்க வில்லை. சிறிது நேரத்தில் சஸ்வின் வைபவ் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சிறிது நேரத்துக்கு பின்னர் தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான். அவனை தேடிய போது நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. அவனது உடலைபார்த்து தாரிகா அலறி துடித்தார்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
- வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகநாயகி (வயது 52). இவர் வாலாஜாபாத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோவிலில் துப்புரவு பணியாளராக பணி செய்து வந்தார். நாள்தோறும் அய்யன்பேட்டையில் இருந்து வாலாஜாபாத்திற்கு பஸ்சில் பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் லோகநாயகி வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்பி வந்து அய்யன்பேட்டையில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லோகநாயகியின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் சாலையில் விழுந்த லோகநாயகி படுகாயம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
- வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உலகப் பிரசித்தி பெற்றது. அத்தி வரதர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.
ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் தேரோட்டம் தொடங்கியது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர்.
இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியில் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேராட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கண்காணிப்பு படையினர் கேமிரா அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது.
- மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு படையினர் கேமிரா அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அங்கு கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும், காஞ்சிபுரம் தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற அறைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. மேலும் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள் அருகில் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
- கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராம ஜெயம் (வயது38). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரத்னா(30). இவர்களது மகள்கள் ராஜலட்சுமி(5), தேஜாஸ்ரீ(2), மற்றும் 4 மாத ஆண் கைக்குழந்தை இருந்தது.
ரத்னா தனது கடைசி மகன் பிரசவத்தையொட்டி 2 மகள்களுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி மற்றும் மகள்கள், குழந்தையை அழைத்து வர ராமஜெயம் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் என்பவருடன் சென்னைக்கு காரில் வந்தார். பின்னர் அவர்கள் ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தேரி மேடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் கார் சென்று கொண்டு இருந்தபோது சாலையோரத்தில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 4 மாத கைக்குழந்தை மற்றும் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
காரை ஓட்டி வந்த ராம ஜெயம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாலு செட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ராமஜெயத்தை மீட்பு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான ரத்னா உள்பட 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.மேலும் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிறுநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சரக்கு லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
- 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மணிமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவரது நண்பர்கள் குணா, விக்கி. இந்த நிலையில் தினேஷுக்கும் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் 28-ந்தேதி அன்று தினேஷ் வரதராஜபுரம் தாம்பரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தினேஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் வரதராஜபுரம் பி.டி.சி. குடியிருப்பு பகுதி அருகே பதுங்கி இருந்த 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் ( 23), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்கிற சந்துரு ( 21), முடிச்சூர் பகுதியை சேர்ந்த சரண்குமார் (21), 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. விசாரணையில் முன்விரோதத்தில் வெட்டியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் ஐஸ்வர்யாவை கீழே தள்ளி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.
மணிமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சி.ஐ.டி. அவென்யு பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஐஸ்வர்யாவை கீழே தள்ளிவிட்டு ஐஸ்வர்யாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக படப்பை பகுதியில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பப்லு (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஐஸ்வர்யாவை கீழே தள்ளி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பப்லுவை போலீசார் கைது செய்தனர்.
- அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.
- 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.
இனி வரும் காலங்களில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியிலும் மாதத்தின் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும் முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 போன்றவற்றுடன் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுங்கள்.






