என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நகரியம் பகுதியில் உள்ள கடற்கரையில் பழனியப்பன் பிணமாக கிடந்தார். அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமை ஆசிரியர் பழனியப்பன் கூவத்தூரில் இருந்து கல்பாக்கம் கடற்கரைக்கு எதற்காக வந்தார்? அவர் கடலில் இறங்கியபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந் தாரா? அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விமான நிலையம் அமைய உள்ள பகுதிக்கு மஞ்ச நாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்ய வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமக்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். திடீரென சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பாலாற்றுக்கு சிறப்பு தீபாராதனைகளை செய்தனர்.
    • தென்பாரத கும்பமேளா கும்பகோணத்தில் நடத்தப்பட்டது

    காஞ்சிபுரம் ஓரிக்கை மகா பெரியவர் சுவாமிகள் மணிமண்டபம் அருகே பாலாற்றங்கரையில் நதிகளை பாதுகாக்க வலியுறுத்தி பாலாறு ஆரத்தி விழா நடைபெற்றது. அகில இந்திய சன்னியாசிகள் சங்கம், பாலாறு பாதுகாப்பு இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இணைந்து காஞ்சீபுரம் ஓரிக்கை மகா பெரியவர் சுவாமிகள் மணிமண்டபம் அருகில் பாலாற்றங்கரையில் பாலாறு ஆரத்தி விழாவை துறவிகள் கொண்டாடினார்கள்.

    விழாவுக்கு சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமை வகித்து பாலாறு அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார். பின்னர் சன்னியாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாலாற்றுக்கு சிறப்பு தீபாராதனைகளை செய்தனர்.

    விழாவுக்கு உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கர்ஷினி அனுபவானந்த், சஞ்சீவி மடத்தின் நிர்வாகி அனுமன் மாதாஜி, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம், பாலாறு பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சன்னியாசிகள் சங்க இணைச் செயலாளர் சிவராமானந்தா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாநகர பா.ஜ.க. மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் உள்பட திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு பாலாறு அம்மனை தரிசித்தனர்.

    சுவாமி ராமானந்தா மகராஜ் இது குறித்து கூறியதாவது:-

    இந்தியாவில் உள்ள நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும், நதிகள் மாசுபடுவதால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் சுத்தமான தண்ணீர் பெறுவது சிரமமாக உள்ளது. நதிகளில் கழிவு நீர் செல்வதை தடுப்பது, குப்பைகளை கொட்டுவது, புனித தலங்களில் பரிகாரம் என்ற பெயரில் அணிந்திருக்கும் துணிகளை போடுவது போன்றவற்றில் இருந்து நதிகளைப் பாதுகாக்கவும், மாசடையாமல் இருக்கவும் சன்னியாசிகள் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    நதிகளை தெய்வங்களாக கருதி அவை ஒவ்வொன்றுக்கும் சிலைகள் உருவாக்கப்பட்டு நதிக்கரையோரங்களில் மக்களை திரட்டி அந்த சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்து நதிகளை வழிபட்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் 800 இடங்களில் நதிகளை பாதுகாக்க ஆரத்தி விழாக்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    தென்பாரத கும்பமேளா கும்பகோணத்தில் நடத்தப்பட்டது. ஆரத்தி விழா நடத்தப்படும் இடங்கள் அனைத்திலும் ரதயாத்திரை, பாதயாத்திரை போன்றவற்றின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இந்தியாவின் பிரதான நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்திரா, காலடி, பண்டரிபுரம் போன்ற இடங்களிலும் ஆரத்தி விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை குற்றாலம் பிரதான அருவி அருகில் உள்ள சித்ரா நதிக்கரையோரத்தில் ஆரத்தி விழா நடைபெறவுள்ளது.

    விழா நடைபெறும் 3 நாட்களும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 25-ந்தேதி முதல் 31 -ந்தேதி தேதி வரை கோவை பேரூராதீன மடத்தில் நொய்யல் நதிக்கான விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
    • விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது.

    மீனம்பாக்கம்:

    இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு நகருக்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே தமிழர்கள் அதிக அளவு வசிக்கக்கூடிய யாழ்ப்பாணம் நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து ஏர்-இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டில் இருந்து சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டபோது, சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.

    கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அதன்படி சென்னை- யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவையை 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் என மீண்டும் தொடங்கியது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் இந்த விமானத்தில் அதிக அளவில் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி விமானமாக சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

    இதையடுத்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16-ந்தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தினசரி விமான சேவையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் இலங்கை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது53).இவர் காஞ்சிபுரத்தில் உள்ள டாக்டர் பி.எஸ். ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று காலை அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். பின்னர் அவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆசிரியர்கள் விரைந்து வந்து சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆசிரியர் சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

    வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது ஆசிரியர் சக்திவேல் இறந்த சம்பவம் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்த ஆசிரியர் சக்திவேல் இதே பள்ளியில் தொழிற்கல்வி படிப்பு முடித்து 1994-ம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு முதல் அவர் நிரந்தர ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் 2 மகள்களும் உள்ளனர்.

    • பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் தச்சராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    • சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
    • விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆலந்தூர்:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன்(55). தொழில் அதிபர். இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு, ஐதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் காஜா மொய்தீன் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது காஜா மொய்தீனின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் மோசடி வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் காஜா மொய்தீனின் பயணத்தை ரத்து செய்து, அவரை கைது செய்து தனி அறையில் வைத்தனர். இதுபற்றி தஞ்சாவூர் மற்றும் தெலுங்கானா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    • தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    ஆரணி கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் கடன் வாங்கி, வார தவணையில் செலுத்தி வரும் காஞ்சிபுரம் உப்பேரிகுளத்தை சேர்ந்த அபிபுல்லா என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார். அப்போது அபிபுல்லா தான் செலுத்தவேண்டிய ரூ.1,340-க்கு பதிலாக ரூ.600 மட்டும் கொடுத்தார்.

    இதற்கு கணேசன் முழு பணமும் கொடுத்தால்தான் செல்வேன். இல்லையென்றால் நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அபிபுல்லா வீட்டுக்குள் சென்று தனது மகன் இலியாஸிடம் தெரிவித்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த இலியாஸ், நிதி நிறுவன ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார் இலியாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தபோது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் 216 மூட்டை ரேசன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.அதனை பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பிரித்திஷ்கா (வயது23). இவர் நேற்று மாலை நண்பர்களான அனகாபுத்தூரை சேர்ந்த செல்வன்(26),கோபிநாத்(23) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நண்பரை பார்க்க சென்றார்.

    பின்னர் இரவு 9 மணியளவில் அவர்கள் 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். பிரித்திஷ்கா நண்பர்கள் இருவருக்கும் நடுவே அமர்ந்து பயணம் செய்தார். மீனம்பாக்கம் விமானநிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது அங்கு பேக்கரிக்கு பிஸ்கட், பிரட் சப்ளை செய்யும் வேன் ஒன்று பஞ்சராகி நின்றது. அந்த வேன் மீது பிரித்திஷ்கா மற்றும் வரது நண்பர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரித்திஷ்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் வந்த செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
    • கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.19 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் தொடக்க விழா நடை பெற்றது. இதையொட்டி ராஜகோபுரம், ராஜகோபுரம் விநாயகர், ராஜகோபுரம் ஆறுமுகர், பல்லவ கோபுரம், விகட சக்கர விநாயகர், பல்லவர் கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர் ஆகிய சன்னதிகளில் திருப்பணிகள் செய்ய பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பாலாலய பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இதுவரை இந்து அற நிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பணிகள், திரு விழாக்கள், கும்பாபிஷேகம் என 788 விழாக்கள் சிறப்பாக நடைபெற்று உள்ளது. மேலும் 5001 ஏக்கர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4740 கோடி ஆகும்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழி பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழ்நாடு அரசும் செய்யும். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினை இல்லை. இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.

    ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகள் 2024 -ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் திருப்பணிகளை வேகப்படுத்தி குடமுழுக்கு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×