என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
‘தமிழகம் காப்போம்’ என்ற தலைப்பில் மாவட்டங்கள் தோறும் காணொலி காட்சி மூலம் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தி பேசினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறும் போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் ஊராட்சியில் இன்று காலை கிராமசபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். முன்னதாக காரில் வந்த மு.க.ஸ்டாலின் கிராமத்தின் வழியாக நடந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
அவருக்கு வழிநெடுக தி.மு.க. நிர்வாகிகள், கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிராம சபை கூட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கிராமத்தின் வழிநெடுக வாழை மற்றும் கரும்புகளால் தோரணம் கட்டப்பட்டு இருந்தன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கிராம மக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றும் பாடுபடும் இயக்கம் தி.மு.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார். ‘நானும் ரவுடி ரவுடி’ என்று சொல்வது போல்தான் விவசாயி, விவசாயி என்று முதல்வர் கூறி வருகிறார்.
விவசாயி என கூறும் முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?
ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் கவர்னரிடம் அளித்துள்ளோம். இது பகுதி ஒன்றுதான்.
ஊழல் பட்டியலின் 2-வது பகுதி விரைவில் கவர்னரிடம் கொடுக்கப்படும். நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. முன்னாள் முதல்- அமைச்சரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் கொரோனா பேரிடர் நிதியிலும் அ.தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது.
கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை.
டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் சந்தித்து பேசாதது ஏன்? அ.தி.மு.க. வை நிராகரிப்போம் என்பதை மக்கள் வரவேற்று உள்ளனர். எனவே வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

* விசாரணை கமிஷனை நீடிக்கிறார்களே தவிர, முடிவு வரவில்லை
* ஜெயலலிதா எங்களுக்கு எதிரிதான் என்றாலும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.
* கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில ஆட்சியைப் பிடிப்போம் என சொல்கிறார்கள்.
* நானும் ரவுடி ரவுடி என சொல்வதுபோல் தான் விவசாயி விவசாயி என முதலமைச்சர் கூறி வருகிறார்.
* விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?
* ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த சையத் முசுரூதீன் (வயது 48), ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் பக்ரூதீன் (29), சாகுல் அமீது (38), பத்ரூதீன் (48), தூத்துக்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி (36) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடை மற்றும் சட்டை ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதேபோல் விளையாட்டு பொருட்களில் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 5 பேரிடம் இருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 350 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். மேலும், துபாயில் இருந்து வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சர்புதீன் அப்துல் மஜீத் (40), முகமது ரகமத்துல்லா (36) ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ கைப்பற்றப்பட்டது.
ஒரே நாளில் சுங்க இலாகா நடத்திய சோதனையில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கத்தை கடத்திய 5 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி மதுரையில் தொடங்கினார். 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று தனது 2-வது கட்ட பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சீபுரம் சென்றார்.
நேற்று மாலை காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு மாநில செயலாளர் எஸ்.கே. பி.பி. கோபிநாத், நிர்வாகிகள் பிரபாகரன், மயில்வாகனன், பிரதீப்குமார், ஏசு, சண்முகம், தொல்காப்பியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று காலை காஞ்சீபுரத்தில் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார். காலையில் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் 7 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மக்களை சென்றடைய வேண்டும்.
தொழிற்புரட்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பசுமை புரட்சியையும் செய்வேன்.
ஒருவனை வறுமை கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் அரசு வென்றுவிட்டது என்று பொருள் அல்ல. வாழ்க்கையில் பல சறுக்கல்கள் வரலாம். அப்படி வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் சறுக்கும் போது வறுமை கோட்டுக்கு கீழே தான் போவார்கள்.
செழுமை கோட்டுக்கு மேலே அவனை தூக்கி வைத்தால் சறுக்கல் நேர்ந்தாலும் வியாபாரத்தில் தோல்வி, எது நேர்ந்தாலும் அவன் வறுமை கோட்டுக்கு மேலேயே நிற்பான். இது பெரிய அல்ஜீப்ரா கணிதம் அல்ல. அப்படியே அண்ணார்ந்து பார்த்தால் உயரமான விஷயங்கள் தெரியும்.
கேள்வி:- ரஜினி கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நிற்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக உங்களை நிற்கும்படி ரஜினி கேட்டால் நிற்பீர்களா?
பதில்:- ரஜினி முதல்வர் வேட்பாளர் என்று என்னை அறிவித்தால் ஏற்பேன்.
கேள்வி:- மு.க.ஸ்டாலின் பேசும் போது 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறி இருக்கிறாரே?
பதில்:- அவர் கூட்டணி கட்சிகளுக்கு 34 இடங்கள் தான் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.
கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி சிறுபான்மையினர்களுடன் இணக்கமாக இருப்பதாக காட்டி உள்ளார்களே?
பதில்:- சிறுபான்மையினர் எனது தம்பிகள், அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
பதில்:- நான் நாத்திகர் இல்லை. பகுத்தறிவாளன். ஆனால் என்னை நாத்திகர் என்று முத்திரை குத்துகிறார்கள்.
கேள்வி:- ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2,500 ரொக்கப் பணம் அறிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்:- தேர்தலை மனதில் வைத்து அறிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கொடுக்கப்போவதாக தகவல் பரவுகிறது. ஆனால் நான் பணத்தை நம்பவில்லை. மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறேன்.
கேள்வி:- எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்கள்?
பதில்:- கூட்டணி பற்றி இப்போது எதும் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பான நிலைபாட்டை ஜனவரி மாதம் அறிவிப்பேன். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் தலை நிமிரும். அரசு திட்டங்கள் 30 சதவீதம் தான் மக்களுக்கு போய் சேருகிறது. மீதி 70 சதவீதம் அரசியல்வாதிகளுக்கே செல்கிறது.
கேள்வி:- தி.மு.க. ஆட்சி அமைவதை தடுக்க புதுப்புது கட்சிகள் உதயமாகின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? அவர் உங்களை சொல்லி இருக்கிறாரா?
பதில்:- அவர் எங்களை சொல்லவில்லை. வேறு யாரையாவது சொல்லி இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.
* நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.
* வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.
* பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. முன்னதாக விமான நிலைய ஊழியா்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு சிறிய பாா்சல் கேட்பாரற்று கிடப்பதை கண்டுபிடித்தனா். இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாா்சலை பரிசோதித்தனா்.
அந்த பார்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் 3 பற்கள் இருந்தன. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவற்றை ஆய்வு செய்தனர்.
அதில் அவை, பெரிய பூனை வகையின் பற்கள் போல் உள்ளது என்றனர். மேலும் அவை சிறுத்தை, புலி போன்றவற்றின் பற்களாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவற்றின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய தூள்களும் இருந்தன.
பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை பறிமுதல் செய்து வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறுத்தை, புலியின் நகம், பல் போன்றவைகளை சங்கிலியில் டாலர்போல் சேர்த்து அணிந்து கொண்டால் அதிா்ஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஒரு சிலரிடம் உள்ளது. அப்படிபட்டவா்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து இவைகளை வாங்குவாா்கள்.
அவர்களுக்காக இவை விமானத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






