என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், தனது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    அதற்கு உதவி பொறியாளா் ரமேஷ், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி சட்ட பஞ்சாயத்து அமைப்பிடம் தெரிவித்தார்.

    பின்னர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் இதுதொடர்பாக எழுத்து மூலமாக புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு லவக்குமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், மின்வாரிய அதிகாரியை கையும், களவுமாக பிடிப்பதற்காக சுப்பிரமணியிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.

    அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சுப்பிரமணி, மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.

    அந்த பணத்தை இருவரும் கையில் வாங்கியதும், அங்கு மறைத்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று இருவரையும் கையும், களவுமாக பிடித்தனா். மேலும் மின்வாரிய அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதனால் மின்வாரிய அலுவலக கதவுகள் மூடப்பட்டதால் மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சுமார் 6 மணி நேர சோதனைக்கு பிறகு, வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் சீனிவாசன் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    கொளப்பாக்கத்தில் ஆந்திர வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வண்டலூர்:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பாரெட்டி (வயது 30). வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் தங்கி ரத்தினமங்கலத்தில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த சுப்பாரெட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் என செய்தியாளர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

    காஞ்சீபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி மதுரையில் தொடங்கினார். 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

    இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று தனது 2-வது கட்ட பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சீபுரம் சென்றார்.

    நேற்று மாலை காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு மாநில செயலாளர் எஸ்.கே. பி.பி. கோபிநாத், நிர்வாகிகள் பிரபாகரன், மயில்வாகனன், பிரதீப்குமார், ஏசு, சண்முகம், தொல்காப்பியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று காலை காஞ்சீபுரத்தில் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார். காலையில் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் 7 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மக்களை சென்றடைய வேண்டும்.

    தொழிற்புரட்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பசுமை புரட்சியையும் செய்வேன்.

    ஒருவனை வறுமை கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் அரசு வென்றுவிட்டது என்று பொருள் அல்ல. வாழ்க்கையில் பல சறுக்கல்கள் வரலாம். அப்படி வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் சறுக்கும் போது வறுமை கோட்டுக்கு கீழே தான் போவார்கள்.

    செழுமை கோட்டுக்கு மேலே அவனை தூக்கி வைத்தால் சறுக்கல் நேர்ந்தாலும் வியாபாரத்தில் தோல்வி, எது நேர்ந்தாலும் அவன் வறுமை கோட்டுக்கு மேலேயே நிற்பான். இது பெரிய அல்ஜீப்ரா கணிதம் அல்ல. அப்படியே அண்ணார்ந்து பார்த்தால் உயரமான வி‌ஷயங்கள் தெரியும்.

    கேள்வி:- ரஜினி கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நிற்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக உங்களை நிற்கும்படி ரஜினி கேட்டால் நிற்பீர்களா?

    பதில்:- ரஜினி முதல்வர் வேட்பாளர் என்று என்னை அறிவித்தால் ஏற்பேன்.

    கேள்வி:- மு.க.ஸ்டாலின் பேசும் போது 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறி இருக்கிறாரே?

    பதில்:- அவர் கூட்டணி கட்சிகளுக்கு 34 இடங்கள் தான் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.

    கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி சிறுபான்மையினர்களுடன் இணக்கமாக இருப்பதாக காட்டி உள்ளார்களே?

    பதில்:- சிறுபான்மையினர் எனது தம்பிகள், அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

    பதில்:- நான் நாத்திகர் இல்லை. பகுத்தறிவாளன். ஆனால் என்னை நாத்திகர் என்று முத்திரை குத்துகிறார்கள்.

    கேள்வி:- ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.2,500 ரொக்கப் பணம் அறிவிக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- தேர்தலை மனதில் வைத்து அறிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கொடுக்கப்போவதாக தகவல் பரவுகிறது. ஆனால் நான் பணத்தை நம்பவில்லை. மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறேன்.

    கேள்வி:- எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்கள்?

    பதில்:- கூட்டணி பற்றி இப்போது எதும் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பான நிலைபாட்டை ஜனவரி மாதம் அறிவிப்பேன். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் தலை நிமிரும். அரசு திட்டங்கள் 30 சதவீதம் தான் மக்களுக்கு போய் சேருகிறது. மீதி 70 சதவீதம் அரசியல்வாதிகளுக்கே செல்கிறது.

    கேள்வி:- தி.மு.க. ஆட்சி அமைவதை தடுக்க புதுப்புது கட்சிகள் உதயமாகின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? அவர் உங்களை சொல்லி இருக்கிறாரா?

    பதில்:- அவர் எங்களை சொல்லவில்லை. வேறு யாரையாவது சொல்லி இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.

    * நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.

    * வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.

    * பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த சிறுத்தையின் பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை வனத்துறையினரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. முன்னதாக விமான நிலைய ஊழியா்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

    அப்போது விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு சிறிய பாா்சல் கேட்பாரற்று கிடப்பதை கண்டுபிடித்தனா். இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாா்சலை பரிசோதித்தனா்.

    அந்த பார்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் 3 பற்கள் இருந்தன. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவற்றை ஆய்வு செய்தனர்.

    அதில் அவை, பெரிய பூனை வகையின் பற்கள் போல் உள்ளது என்றனர். மேலும் அவை சிறுத்தை, புலி போன்றவற்றின் பற்களாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவற்றின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய தூள்களும் இருந்தன.

    பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை பறிமுதல் செய்து வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறுத்தை, புலியின் நகம், பல் போன்றவைகளை சங்கிலியில் டாலர்போல் சேர்த்து அணிந்து கொண்டால் அதிா்ஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஒரு சிலரிடம் உள்ளது. அப்படிபட்டவா்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து இவைகளை வாங்குவாா்கள்.

    அவர்களுக்காக இவை விமானத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    தமிழக சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
    காஞ்சிபுரம்: 

    நடிகர் கமல்ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியபோது ‘சட்டப்பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என்று உறுதி அளித்தார். மேலும் உப்பை சுவாசித்த மீனவர்களிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

    மேலும் இதுவரை மீனவர் ஒருவர் சட்டப்பேரவையில் இருப்பார் என்று எந்த அரசியல்வாதியும் கூறாத நிலையில் அதை கமலஹாசன் கூறியது புதுமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல் கமல்ஹாசன் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆதம்பாக்கம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மதன்குமார் (வயது 23). கடந்த சில தினங்களுக்கு முன்பு மதன்குமாரிடம் ரூ.48 ஆயிரம் பணத்தை அவரது பெற்றோர் கொடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பணத்துடன் என்.ஜி.ஓ காலனி பகுதியில் சென்ற போது, சிலர் வழிமறித்து பறித்து சென்றதாக மதன்குமார் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடமாக கூறப்படும் இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரியவந்தது. பணத்தை தவறவிட்டதால் மதன்குமாரை பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மது அருந்திய நிலையில், வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மாநகராட்சி பெண் ஊழியரான தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த சின்ன நீலாங்கரை மேட்டு காலனி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஹரி (வயது 36), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கோமதி (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கோமதி, சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். ஹரிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஹரி, தனது மனைவி கோமதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கோமதி நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது ஹரி மீண்டும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஹரி, வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இதில் படுகாயம் அடைந்த கோமதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அதே கத்தியுடன் ஹரி, நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கோமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு போலீசில் கணவர் சரண் அடைந்ததால் அவர்களது 2 பிள்ளைகளும் தாய்-தந்தை இன்றி பரிதவித்த காட்சி அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்தின்பேரில் சென்னையை சேர்ந்த முகமது ஜலாலுல்லா (வயது 46), திருச்சியை சேர்ந்த அப்துல் சலீம் (61), ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த காதர் மீரான் (45) ஆகிய 3 பேரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அட்டை பெட்டியில் ரகசிய அறைகள் அமைத்து பிளாஸ்டிக் சீட்டில் தங்க தகடுகள், கைப்பையில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    மேலும் இவர்களது உடைமைகளில் சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை கடத்தி வந்ததும் தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.34 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 667 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    நடிகை சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர் அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சித்ரா மீது சந்தேகம் அடைந்த ஹேம்நாத் அவரை துன்புறுத்தி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகே ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

    அதில், பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை சிறைத்துறை காவலர்கள் அழைத்து வந்தனர்.

    சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின்போது ஹேம்நாத் அளித்த தகவல்களை வாக்குமூலமாக ஆர்.டி.ஓ. பதிவு செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது.

    முழு விசாரணை முடிந்த பிறகு தான் ஆர்.டி.ஓ. விசாரணையில் ஹேம்நாத் என்ன சொல்லி இருக்கிறார்? என்பது தெரியவரும்.

    சித்ராவிடம் நெருங்கி பழகிய நடிகைகளிடமும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர்களிடமும் நாளை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.

    சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஏற்கனவே ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது வர்கீஸ் (வயது 25), முகமது யாசிர் கான் (23), திருச்சியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (34), பிலால் (33), புதுக்கோட்டையை சேர்ந்த மதன்குமார் (24), மதுரையை சேர்ந்த சையத் முகமது (30), ராமநாதபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (32), பசில் ரகுமான் (27), முகமது ரபீக் (21) ஆகிய 9 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் கைக்கடிகாரம், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இவர்கள் ஐபோன், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்களையும் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 9 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம், ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த ரசூலுதீன் (29) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் கைப்பையில் உள்ள ரகசிய அறைக்குள் இங்கிலாந்து பவுண்டு, சிங்கப்பூர் டாலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 10 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், உடற்பயிற்சிக்கான சத்துணவு பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 24). இவருடைய மனைவி கற்பகம் (22). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கணவன்-மனைவி இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை சண்முகா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அலெக்ஸ் பாண்டியன் படப்பையில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கற்பகம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது இறந்த கற்பகத்திற்கும் கணவர் அலெக்ஸ் பண்டியனுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. 

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
    ×