என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஜனவரி 22-ந் தேதி முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்க உள்ளேன். அதன் பின்னர் அரசியல் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது மனைவி ராதிகா உடன் வந்து இருந்தார்.

    ரஜினிகாந்த் அவருடைய சொந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரின் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. அவரது உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்கவேண்டும். கலை உலக பயணமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் எடுத்து வைக்கின்ற அனைத்து பணிகளும் சிறப்பாக நலமாக என்றும் இருக்க வேண்டும்.

    வருகிற ஜனவரி 22-ந் தேதி முதல் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்கிறேன். அதன் பின்னர் அரசியல் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த புவியரசன் (வயது 25) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்த போது எதுவும் சிக்காததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து, ரூ.30 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல், ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் (52) என்பவரை நிறுத்திசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த கருப்பசாமி (60), சசிகுமார் (31) ஆகியோர் கடத்தி வந்த ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 4 ‘டிரோன்’ கேமராக்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

    ஒரே நாளில் 4 பேரிடம் இருந்து ரூ.41 லட்சத்து 65 ஆயிரம் 820 கிராம் தங்கமும், ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 4 டிரோன் கேமராக்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புவியரசனை கைதுசெய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் செல்ல வந்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த சையத் முகமது (வயது 35) என்பவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் அவர், வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி, போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சையத் முகமதுவின் விமான பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் முகமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக தனியார் விமான நிறுவன என்ஜினீயர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறைக்கு சந்தேகப்படும்படியாக சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அவர் வெளியே வந்ததும், மற்றொரு வாலிபர் கழிவறைக்குள் சென்றுவிட்டு வந்தார்.

    இதை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர், விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் நிழல் ரவி (வயது 29) என தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது, 2 பொட்டலங்களில் 27 தங்க கட்டிகள் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

    துபாயில் இருந்து அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நியாமத்துல்லா ஹாதி (35) என்பவர், சுங்க சோதனை இல்லாமல் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து தரவேண்டும் என்று கூறி கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றதாகவும், அதைதான் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல இருந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து நிழல் ரவியையும், தங்கத்தை கடத்தி வந்த நியாமத்துல்லா ஹாதியையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த அப்துல் நசார் உள்பட 5 பேரை பிடித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர்கள் 5 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.81 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தங்கம் கடத்தலுக்கு உதவிய தனியார் விமான நிறுவன என்ஜினீயர் நிழல் ரவி, தங்கம் கடத்தி வந்த நியாமத்துல்லா ஹாதி, அப்துல் நசார் ஆகிய 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 4 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    மாமல்லபுரம்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் தொடர் விடுமுறையால் நேற்று மாமல்லபுரம் கடற்கரை மற்றும் புராதன சின்னங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர்.

    இதனால் மாமல்லபுரம் கடற்கரை மற்றும் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட புராதன சின்ன மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    கொரோனா ஊரடங்குக்கு பிறகு நேற்று 30 ஆயிரம் பயணிகள் மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்ததாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் கண்டுகளித்த புராதன சின்னங்கள் முன்பு நேற்று வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததையும் காண முடிந்தது.

    சுற்றுலா பயணிகளிடம் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா வாகனங்கள் நேற்று அதிகமாக திரண்டதால் நகரப்பகுதியில் நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    குறிப்பாக நேற்று புராதன சின்னங்களை கண்டுகளிக்க தினமும் வழங்கப்படும் 2 ஆயிரம் ஆன்லைன் நுழைவு சீட்டுகள் காலை 10 மணிக்கே அனைத்தும் பதிவாகிவிட்டதால் கட்டண கவுண்ட்டர்களில் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி சென்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகையால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை பகுதிகளில் அனைத்து கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.
    அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 67). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவரது மனைவி, மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சூரியபிரகாஷ் மட்டும் தனியாக இருந்தார். அவரது மனைவி, செல்போனில் தொடர்பு கொண்டபோது சூரியபிரகாஷ் எடுக்கவில்லை.

    இதனால் அவரது மனைவி, வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கும் கணவர் சூரிய பிரகாசை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுடன் இணைந்து கணவரை தேடினார்.

    சந்தேகத்தின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியை(சம்ப்)திறந்து பார்த்தபோது அதன் உள்ளே சூரியபிரகாஷ் பிணமாக கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி போலீசார், சூரியபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சூரியபிரகாஷ், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்பு பணியை கவனித்து வந்தார். அவர், தரைமட்ட தண்ணீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்தபோது, தவறி உள்ளே விழுந்து இருக்கலாம். இது தெரியாமல் யாராவது தொட்டியை மூடி இருக்கலாம். இதனால் முதியவரான சூரியபிரகாஷ், நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடியே 86 லட்சம் மோசடி செய்ததாக முதன்மை நிதி அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் டயர் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் புதுச்சேரியை சேர்ந்த சிவஸ்ரீராமுலு (வயது 45).இவர் தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் ரூ.5 கோடியே 86 லட்சத்தை நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லாத சிலரது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு அதை அவர்களிடமிருந்து பொய்யான காரணங்கள் கூறி திரும்ப பெற்றுள்ளார்.இவரது மோசடியானது அநத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான அருளுக்கு தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவர் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவஸ்ரீராமுலுவை கைது செய்தனர்.பின்னர் அவரை காஞ்சீபுரத்திற்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் செல்ல வந்த சென்னையை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 30) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து துபாய்க்கு கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள யூரோ மற்றும் இங்கிலாந்து பவுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது அசாருதீனின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தயார் செய்து இருக்கிறார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சின்னத்திரை நடிகை சித்ராபூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 14-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயும் விசாரணை செய்து வருகிறார். சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர், ஹேம்நாத் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கியமாக சித்ராவுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததா? என்று விசாரிக்கப்பட்டது.

    மேலும் சித்ரா தங்கியிருந்த விடுதியின் ஊழியர்கள், சித்ராவுடன் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், வீட்டின் அருகில் வசிப்பார்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என இதுவரை 16 பேரிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி உள்ளார்.

    4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை தயார் செய்து இருக்கிறார். இந்த விசாரணை அறிக்கையை வருகிற திங்கட்கிழமை பூந்தமல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் சுதர்சனத்திடம் வழங்க ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ முடிவு செய்து உள்ளார்.

    இந்த அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    சோழிங்கநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 38) இவரது மனைவி கோகிலா (34). இவர்களது மகன் அபிஷேக் (10). அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பிற்பகல் வீட்டின் அருகே பிரகாஷ் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தான்.

    அப்போது அந்த வழியாக வந்த கழிவுநீர் லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரி டிரைரான பிரபாகரன்(26) என்பவரை பிடித்து அடித்து உதைத்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரி டிரைவரான பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 33). இவர் தனது மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பூரிவாக்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் காஞ்சீபுரத்திற்கு வந்தார். பரந்தூர்- மதுரமங்கலம் ரோடு வழியாக நாகப்பட்டு கிராமம் என்ற இடத்தில் இவர்கள் வந்த போது, வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்று விட்டார்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அன்புராஜ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அன்புராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மனைவி மற்றும் குழந்தை லேசான காயங்களுடன், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 52). நெசவு தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தன்னுடைய மகளுக்கு திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் விஜயராகவன் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் காஞ்சீபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் திராவகம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×