என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உத்திரமேரூர் அருகே குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மேலும் கற்குவியலுக்குள் சிக்கி உள்ள 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மதூர் பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை குவாரியில் இருந்த கற்களை தொழிலாளர்கள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது ஏற்கனவே கற்கள் வெட்டப்பட்ட சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    காலை 9 மணியளவில் கல்குவாரியின் ஒரு பகுதியில் இருந்த கற்குவியல் திடீரென சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு பாறைகள் சரிந்து விழுந்து கிடந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    பெரிய அளவிலான கற்கள் வாகனங்கள் மீது குவிந்து கிடந்ததால் அதனை அப்புறப்படுத்துவதில் பெரும் சவால் ஏற்பட்டது. உடனடியாக கற்குவியலுக்குள் கிடந்தவர்களை மீட்க முடியவில்லை.

    கற்கள் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். அவர்கள் உடல் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

    மேலும் கற்குவியலுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    விபத்து நடந்த கல் குவாரிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    கற்கள் சரிந்து விழுந்த இடம் மிகவும் மேடாகவும் குறுகிய பாதையாகவும் இருப்பதால் மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. அங்குள்ள பாதையில் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்வதற்கு காத்திருக்க வேண்டும். அந்த வாகனம் வந்த பின்னரே கல்குவாரிக்குள் செல்ல முடியும்.

    இதனால் மீட்பு பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கற்குவியலுக்குள் 6 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையே படுகாயம் அடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கற்கள் சரிந்து விழுந்தபோது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அங்கு இருந்துள்ளனர். கற்கள் சரிவதை கண்ட அவர்கள் சிதறி ஓடியபோது 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

    இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் கல்குவாரி உள்ள மதூர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    உத்திரமேரூர் அருகே குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மாத்தூர் பகுதியில் கல் குவாரி உள்ளது.

    இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது கல்குவாரியில் இருந்த கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.

    இதில் மூச்சு திணறியும், படுகாயம் அடைந்தும் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் கற்குவியலுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த கற்குவியலுக்குள் மேலும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
    நசரத்பேட்டை அருகே லாரி டிரைவரை கடத்தியதாக மதபோதகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பூந்தமல்லி:

    வியாசர்பாடியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53). அந்த பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகே வந்த லாரி காரின் மீது உரசியதில் காரில் லேசாக சேதம் ஏற்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர் மணிகண்டன் தனது உரிமையாளரிடம் பேசிவிட்டு இழப்பீடாக ரூ.3 ஆயிரம் கொடுத்ததாகவும் அதனை அவர்கள் வாங்காமல் மாதவரத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் இடத்துக்கு வந்து செலவு ஆகும் தொகையை தருமாறு கூறினர்.

    மணிகண்டனை அழைத்து சென்றவர்கள் வியாசர்பாடிக்கு அழைத்து சென்று ரூ.30 ஆயிரம் கொடுத்தால்தான் மணிகண்டனை விடுவிக்க முடியும் என மோகன்தாஸ் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனை கடத்தி சென்று விட்டதாக லாரி உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை மீட்டனர். மேலும் போதகர் மோகன்தாஸ் அவரது டிரைவர் மற்றும் நண்பர்களான ஐசக், ஜீவா, அன்பு ஆகியோரை கைது செய்து நசரத்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 4 பேர் மீதும் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அங்கு கூடியிருந்த 50-க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். 
    காஞ்சீபுரத்தில் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 43). இவரது நண்பர் சின்ன காஞ்சீபுரம் ஐதர்பட்டரை தெருவை சேர்ந்த செந்தில்குமார் (30) இவர்கள் இருவரும் பேனர் வைக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சீபுரம் காந்தி ரோடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயன்ற போது, உயர் மின்னழுத்த கம்பியின் மீது பேனரின் கம்பி உரசியது. உடனே இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு கை, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமார் படுகாயங்களுடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர் அருகே டெல்லியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 நாளில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 26). இவர் 2016-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்தார். தற்போது தனது பெற்றோருடன் போரூரை அடுத்த முகலிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவரை உறவினர்கள் தொடர்பு கொண்டும் செல்போனை எடுக்காததால் அவரது உறவினர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    டெல்லியில் 8-வது சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னை ஆவடியில் உள்ள 5-வது சிறப்பு காவல் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். பெற்றோர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ஆல்பர்ட் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் காலை அவர் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவடியில் உள்ள அதிகாரி ஆல்பர்ட்டை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் என்பதும் மீண்டும் பணிக்கு வரும்போது உயர் அதிகாரியை பார்த்து விட்டு வருமாறு கூறியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    குன்றத்தூர் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி ஷீலா (வயது 29). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தனது அறைக்கு சென்றவர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் கதவை தட்டினார்கள்.

    கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது ப்ரீத்தி ஷீலா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ப்ரீத்தி ஷீலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் ப்ரீத்தி ஷீலா திருமணமாகி கணவரை பிரிந்து குன்றத்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தவர் தாய் மற்றும் அண்ணனிடம் அடிக்கடி கோபித்து கொண்டு வீட்டின் அறைக்குள் சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் அதேபோல் சம்பவத்தன்று சண்டை போட்டுக்கொண்டு அறைக்குள் சென்றவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர் என்று கேபி முனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு இருந்ததால், தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் 12 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்தார்.

    அவர் கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பல கார்கள் அணிவகுத்து வந்தன. சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியதாவது,

    அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குறியது. 
    சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி
    பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சி செய்து பார்த்தார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார். 

    அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் தர வேண்டும். மன்னிப்பு கடிதம் தந்தால் அதுபற்றி தலைமை பரிசீலனை செய்யும் என்றார்.
    செல்போனில் ‘கேம்’ விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம், உழவர் தெருவை சேர்ந்தவர் பத்மினி. இவரது மகன் மாதவன் (வயது 15). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர் 2-வது தெரு இருளர் பகுதியில் உள்ள உறவினரது வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்நிலையில், அந்த வீட்டில் நேற்று முன்தினம் மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மாதவன் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் மாதவன் காஞ்சீபுரத்தில் இருந்தபோது அடிக்கடி செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் பீர்க்கன்காரணையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

    இங்கும் செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடியதை உறவினர்கள் தடுத்ததால், மனமுடைந்த மாதவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருடியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    பம்மலை சேர்ந்தவர் விஜயகுமார் (61), இவர் தனது உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மாங்காடு, பரணிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் அறையில் பைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த 7½ பவுன் நகைகள், 2 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரிந்தது. இது குறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் மாங்காடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

    அந்த நபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். மேலும் விசாரணை செய்தபோது திருமண மண்டபத்தில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் பொழிச்சலூரை சேர்ந்த பன்னீர்தாஸ் (என்ற) பன்னீர்செல்வம் (வயது23), என்பது தெரிய வந்தது. அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 7½ பவுன் நகை மற்றும் 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.

    கொள்ளை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் பன்னீர்தாஸ் கைது செய்யப்பட்டார்.
    வருகிற சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று தொடங்கி இருக்கிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சீபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில், “மக்களை நோக்கி மக்கள் தளபதி வாசன்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தல் பயம் வந்து விட்டது. இதன் காரணத்தினால் மக்களுக்கான திட்டங்களுக்கு தடையாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தேர்தல் வாக்குக்காக எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை ஏழை எளிய மக்களுக்கு கூறி அதனால் வாக்கு பெற்று வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. கூட்டணியை வலுப்படுத்த உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும். வருகிற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு எத்தனை இடம் கொடுக்கப்படும் என்பது பேச்சு வார்த்தைக்கு பிறகே தெரிய வரும்.

    அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கட்சி முக்கியமான கட்சி. எனவே அவர்களின் கோரிக்கைகளை அ.தி.மு.க. பரிசீலினை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன், மாநில இளைஞர் அணி பொது செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், நகர தலைவர் சுகுமார், நிர்வாகிகள் கஜா, கோல்டு மோகன், முத்து, சசிகுமார், அஜித், தென்னவன், ராம்குமார், உமாபதி, யுவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உத்திரமேரூரில் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    சென்னை வளசரவாக்கம் அன்பு நகரை சேர்ந்தவர் கமல்தாஸ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள உறவினர் சிவகுமார் வீட்டு கிரகபபிரவேசத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். இவரது மகன் மோனிஷ் (வயது 10). நேற்று மாலை மோனிஷ் உத்திரமேரூர் ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக மோனிஷ் ஏரியில் மூழ்கினான். உடன் சென்ற சிறுவர்கள் கூச்சலிட்டனர். அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ஏரியில் குதித்து மோனிஷை மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நைனா முகமது (வயது 50), இப்ராகிம் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 9 விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றினார்கள். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தனர்.

    அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ×